ஏகநாதர்

பானுதாசரின் மகன் சக்ரபாணி. பேரன் சூரிய நாராயணன் ருக்மிணி தம்பதிக்குப் பிறந்தவர் ஏகநாதர். இளமையிலேயே கல்வியிலும் பக்தியிலும் சிறந்து விளங்கினார். அதில் முழுமைபெற ஒரு குருவைத் தேடி ஏங்கினார். ஒருநாள் தியானத்தின்போது தேவ்கட்டில் உள்ள ஜனார்த்தனரை அணுகு என்று வாக்கு கேட்டது. அப்படியே தேடிச்சென்று அவர் பாதம் பணிந்தார். குரு ஜனார்த்தனர் தத்தாத்ரேய உபாசகர் தத்தாத்ரேயரின் தரிசனமும் பெற்றவர் வீரத்திலும் சிறந்தவர். தன் பாதம் பணிந்த ஏகநாதரின் தகுதியைப் புரிந்துகொண்ட ஜனார்த்தனர் அவரை பரிவுடன் சீடனாக ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஆறு ஆண்டுகள் தங்கி தன் பக்தி ஞானத்தை வளர்த்துக் கொண்டார் ஏகநாதர். குருவின் அருளால் தத்தாத்ரேயர் தரிசனமும் பெற்றார். குரு ஜனார்த்தனர், தத்தாத்ரேயர், பாண்டுரங்க விட்டலன் மூவரும் ஒருவரே என்றுணர்ந்தார் ஏகநாதர். மராட்டிய மொழியில் பாவார்த்த ராமாயணம், ஏகநாத் பாகவதம் போன்ற நூல்களை இயற்றினார்.

இவருக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மகான் ஞானேஸ்வரர். அவர் ஆலந்தி என்னுமிடத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் ஏகநாதரின் கனவில் தோன்றி மரத்தின் வேர் வளர்ந்து என் உடலில் குத்துகிறது. அதனை அப்புறப்படுத்து என்றார். விடிந்ததும் ஆலந்தி சென்ற ஏகநாதர் சமாதியைத் திறந்துபார்க்க மரத்தின் வேர் ஞானேஸ்வரரின் உடலில் குத்தியபடி இருந்தது. அதை அப்புறப்படுத்தி மீண்டும் சமாதியை மூடினார் ஏகநாதர்.

12 ஜோதிர்லிங்கத் தலங்கள், மதுரா, கோகுலம், பிருந்தாவனம் உள்ளிட்ட பல தலங்களையும் தரிசித்து வந்தார். அந்த நிலையில் குரு ஜனார்த்தனரின் ஆணைப்படி கிரிஜா எனும் பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும் கங்கா, லீலா எனும் இரண்டு மகள்களும் பிறந்தனர். குடும்பமே பக்தியில் திளைத்தது. ஒருநாள் கண்டியா என்ற பெயருடைய சிறுவன் ஒருவன் ஏகநாதரின் வீட்டுக்கு வந்தான். அவன் ஏகநாதரை வணங்கி உங்களது பக்தி, பரோபகாரம், சாதிபேதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவும் தன்மை போன்ற உயர்குணங்களை அறிந்தேன். தங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன். எனக்கு உற்றார் உறவினர் எவருமில்லை. நான் செய்யும் பணிக்கு கூலி எதுவும் வேண்டாம். பசிக்கு அன்னமிட்டால் போதும் என்றான். சிறுவனின் வினயத்தைக் கண்டுவியந்த ஏகநாதர் அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதி தந்தார். சிறுவன் அங்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் உதவியாக இருந்தான் எதுவும் வேண்டுமென்று கேட்கவில்லை மனம் கோணவில்லை. அங்கு வரும் சாதுக்களும் அந்த சிறுவனின் தொண்டைக்கண்டு வியந்து அவன்மீது அன்பு செலுத்தினர் கண்டியா என்னும் அந்த சிறுவன் இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பணி செய்தான்.

இந்த நிலையில் துவாரகையில் மதன் என்பவர் துவாரகா கண்ணனை மிகுந்த பக்தியோடு வணங்கிவந்தார். கண்ணனின் தரிசனம் காண பலவாறு இறைஞ்சி வந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கண்ணன் நான் பைதானில் ஏகநாதர் எனும் பக்தன் வீட்டில் கண்டியா என்னும் பெயரில் இருக்கிறேன். அங்கு சென்றால் என்னை தரிசிக்கலாம் என்றருளினார். பிரமித்த மதன் உடனே புறப்பட்டு பைதான் வந்தார். கோதாவரியில் நீராடினார். அப்போது ஆற்றில் நீர் எடுப்பதற்காக காவடிபோல் இரு குடங்களை தோளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு சிறுவனைப் பார்த்தார். அவனை அழைத்து ஏகநாதர் வீடு எங்கே என்று கேட்க அவன் நீர் எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துச் சென்று ஏகநாதரின் இல்லத்தைக் காட்டினான். பின்னர் நீரை உள்ளே கொண்டு சென்றான்.

ஏகநாதரைப் பார்த்ததும் மதனின் மேனி சிலிர்த்தது. இவர் வீட்டிலல்லவா கண்ணன் இருக்கிறான். எத்தனை பாக்கியம் செய்தவர் என்று நெகிழந்து சுவாமி நான் துவாரகையிலிருந்து வருகிறேன். கண்ணன் கண்டியா எனும் பெயரில் தங்கள் வீட்டில் இருப்பதாக என் கனவில் வந்து கூறினார். அந்த கண்டியாவை தரிசிக்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார். அதைக்கேட்ட ஏகநாதரின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. துவாரகைக் கண்ணன் இங்குதான் இருக்கிறானா இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நான் அவனை அறிந்துகொள்ளவில்லையே என்று உருக அங்கே சிறுவன் அவ்விருவருக்கும் கண்ணனாகக் காட்சிதந்தான். பின் ஏகநாதரின் பூஜையறையில் சென்று மறைந்தான். இந்த சம்பவம் பலரும் எழுதியுள்ள ஏகநாதர் சரித்திரத்திலும் ஏகநாதர் பாடல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.