பானுதாச ருக்வேதி

பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைதான் என்னுமிடத்தில் பிறந்தவர். வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் வசித்த இடம். பானுதாசர் சிறுவயதில் படிப்பில் மிக மந்தமாக இருந்தார் எனவே தந்தையின் ஏச்சுக்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருந்தது. ஒருநாள் மனம் வெறுத்து அருகேயிருந்த சூரிய நாராயணன் கோயிலில் அன்ன ஆகாரமின்றி இரண்டு நாட்கள் அமர்ந்து விட்டார். மூன்றாம் நாள் ஒளிப்பிரகாசமாக வந்த ஒரு பெரியவர் சிறுவனிடம் பாலைக் கொடுத்து அருந்தச் சொன்னார். அவ்வாறு ஐந்து நாட்கள் பாலருந்தியவர் ஞானசூரியனாக வெளியே வந்தார். பகவத்பக்தி பஜனை என்று நாட்கள் நகர்ந்தன.

இளைஞனானதும் ஆடைகள் விற்கும் தொழில் புரிந்தார். நியாயமாக விற்றதால் நன்கு வியாபாரமானது. ஒருநாள் வாரச்சந்தையில் விற்பனையை முடித்து விட்டுத் திரும்பிய அவர் அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது பஜனை சத்தம் கேட்கவே சக வியாபாரிகளிடம் உடமைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு சென்று விட்டார். அவர்கள் பானுதாசர் மீது பொறாமை கொண்டவர்கள். எனவே அவரது குதிரையை அவிழ்த்துவிட்டனர். ஆடைப்பொதியை வேறிடத்தில் ஒளித்து வைத்தனர். பணத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு படுத்துவிட்டனர். அப்போது அங்குவந்த கொள்ளைக்கூட்டத்தினர். அவர்களை அடித்து இருந்த பொருட்கள் அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். பஜனை முடிந்து பானுதாசர் திரும்பிவர எதிரில் வந்த ஒருவர் உன் குதிரையும் பணமும் வைத்துக்கொள் என்று ஒப்படைத்துவிட்டு துணிப்பொதி மறைத்து வைக்கப்பட்ட இடத்தையும் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார். பானுதாசருக்கு எதுவும் புரியவில்லை. அவர் சத்திரத்துக்கு வந்ததும் சக வியாபாரிகள் நடந்ததையெல்லாம் கூற இறைவனே வந்தார் என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார்.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் சன்னதிக்கு வந்தபோது விட்டலனின் அழகில் மயங்கினார். அவரை எடுத்துச்சென்று தமது பிரதேசத்தில் அனகோந்தி என்னுமிடத்தில் (தற்போதைய ஹம்பி) பிரதிஷ்டை செய்துவிட்டார். பண்டரிபுரத்தில் உள்ளவர்கள் பானுதாசரிடம் விட்டலன் இல்லாக்குறையைச் சொல்லி மனம் வருந்தினார்கள். பானுதாசர் ஹம்பி சென்றார். ஒரு திருவிளையாடல் மூலம் இறைவன் பானுதாசரின் பெருமையை அரசனுக்கு உணர்த்த நெகிழ்ந்த கிருஷ்ணதேவராயர் விட்டலன் விக்ரகத்தை திரும்பக் கொடுத்ததோடு பிரதிஷ்டை வைபவத்திலும் கலந்து கொணடார். இன்றைக்கு பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் பானுதாசரால் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டவரே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.