மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -34

தண்ணீர் தேடிச்சென்ற பீமன் சிறிது தூரத்தில் ஒரு தாமரைக் குளத்தைக் கண்டான். அதில் ஸ்படிகம் போன்ற குளிர்ந்த நீர் இருந்தது. திருப்திகரமாக அவன் அதில் நீராடி தெளிவு பெற்றான். அழகிய தாமரை இலைகளை கொண்டு அற்புதமான நீர் பாண்டம் ஒன்றை அவன் செய்தான். அதில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தன் தாயும் சகோதரர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். அவர்களோ அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். எனவே பீமன் அமைதியாக அவர்களுக்கு காவல் இருந்தான். பீமனுடைய உள்ளத்தில் சில எண்ணங்கள் தோன்றியது கொலை பாதகர்களான கௌரவர்களோடு ஒளிந்திருத்தல் கண்டுபிடித்தல் விளையாட்டு விளையாடுவது சரி. ஆனால் தனது தாய் குந்திதேவியையும் இந்த ஆபத்தில் அழைத்து செல்வது சரிதானா என்று எண்ணிக்கொண்டு இருந்தான்.

அப்போது கட்டழமே வடிவெடுத்திருந்த அழகிய பெண் ஒருத்தி பீமனின் அருகில் வந்தாள். பீமனை அவன் பார்த்த பார்வையில் காதல் இருந்தது. அவள் யாரென்று பீமன் மரியாதையாக கேட்டான். அதற்கு அப்பெண் இந்த இடத்திற்கு இடும்பவனம் என்று பெயர். எனது சகோதரன் பெயர் இடும்பன். அவனது சகோதரியாகிய எனது பெயர் இடும்பி. இந்த இடத்தை நாங்கள் ஆண்டு வருகின்றோம். நாங்கள் ராட்சஷ கணத்தைச் சேர்ந்தவர்கள். மனித மாமிசத்தை உண்பதில் எங்களுக்கு ஆசை உண்டு. உன்னை கொன்று உன் மாமிசத்தை தன்னிடம் கொண்டு வருமாறு என் சகோதரன் என்னிடம் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் உன்னை பார்த்ததும் நான் காதல் கொண்டேன். எனது உடலை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும் திறமை எனக்கு உண்டு. இப்பொழுது ஒரு அழகிய பெண்ணாக வடிவெடுத்து இங்கு வந்திருக்கின்றேன். அன்புடன் என்னை ஏற்றுக்கொள். இங்கிருந்து நாம் புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்று இன்பமான வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்போமாக என்று அவள் கூறினாள்

அதற்கு பீமன் எனது தாயும் சகோதரர்களும் உறங்கி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் அவர்களுக்கு காவல் இருக்கின்றேன். என் தாய் மற்றும் தமையன் உத்தரவு இன்றி நான் உன்னோடு வர இயலாது. தயவு செய்து இங்கிருந்து சென்று விடு என்றான். இடும்பி செய்த காலதாமதத்தை முன்னிட்டு பசியின் விளைவாக இடும்பன் கோபத்துடன் கர்ஜித்து கொண்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தான். தூரத்தில் அவன் வருவதை பார்த்த பீமன் அவன் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அவனை தூரத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான். தன்னுடைய தாய் மற்றும் சகோதரர்களின் உறக்கத்திற்கு இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது அவனுடைய நோக்கமாக இருந்தது.

சற்று தூரத்தில் பீமனுக்கும் இடும்பனுக்கும் சண்டை துவங்கியது. அப்போராட்டம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. இடும்பனும் பீமனும் சண்டையிடுவது இரண்டு யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடுவது போன்று இருந்தது. தூரத்தில் கிளம்பிய சண்டையின் சத்தம் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி விட்டது. எழுந்தவர்கள். தங்களுக்கு அருகில் பெண் ஒருத்தி பணிவிடை பண்ணும் பாங்கில் அருகில் அமர்ந்து இருந்ததைப் பார்த்தார்கள். பீமன் ராட்சஸனோடு தூரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தார்கள். என்ன நடந்தது என்று குந்திதேவி அப்பெண்ணிடம் கேட்டாள். நடந்தவைகள் அனைத்தையும் அப்பெண் குந்திதேவியிடம் கூறினாள். அல்லும் பகலும் ஓய்வில்லாமல் இருந்த பீமன் ராட்சஷனோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த அர்ஜுனன் அவனுக்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டு ராட்சஷனோடு சண்டையிட அந்த இடத்திற்கு விரைந்தான். ஆனால் அர்ஜுனன் அருகில் வருவதற்கு முன்பே பீமன் ராட்சசனை முதுகுப்பக்கம் இரண்டாக வளைத்து ஓடித்து அவன் தலையை உடலிலிருந்து திருகி எடுத்து ராட்சஷனை அழித்து விட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.