இராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன் குண்டுக்கரை முருகன் கோவிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள எனது பழைய சிலையை எடுத்து விட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி புதிய முருகன் சிலை பிரதிஷ்டை செய்து சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். முருகனுக்குரிய ஆறு முகம் மற்றும் சிவனுக்குரிய ஐந்து முகம் சேர்த்து மொத்தம் 11 முகங்களுடன் இவர் சிவமுருக அம்சமாக வீற்றிருக்கிறார். மற்ற கோவில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்து உள்ளது. இடம் இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்.


