துக்காராம்

துக்காராம் 16 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புனேவிற்கு அருகில் உள்ள தேகு என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பாண்டுரங்கனின் தீவிர பக்தர். இவரது மனைவி பெயர் கமலாபாய். இவர் ஒரு சம்சார துறவி. மராத்திய கவிஞர் மற்றும் சமய சீர்திருத்தவாதி ஆவார். சமூக சமத்துவம் அன்பு மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பக்தி பாடல்களை இயற்றினார். அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சத்ரபதி சிவாஜி கோயிலுக்கு வந்த போது அவரை சிறைபிடிக்க அவுரங்கசீப் சுற்றி வளைத்தார். அப்போது துக்காராம் இறைவனை வேண்டிப் பாடல்கள் பாட இறைவனே சிவாஜியைப் போல குதிரையில் வந்து எதிரிகளுடன் சண்டை போட்டு அவர்களை ஓட வைத்தார். துக்காராமின் போதனைகள் மற்றும் பாடல்கள் மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகக் கருதப்பட்டார். துக்காராமின் படைப்பு நூல்களில் ஒன்று துக்காராம் கீதை ஆகும். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தில் ஒன்று.

கமலாபாய் தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி தனது கணவருக்கு சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியை வாங்கிக் கொடுத்தாள். வேலை நேரத்தில் பரண்மேல் ஏறி ஆனந்தமாக பஜனைப் பாடல்களைப் பாட பறவைகள் ஆனந்தமாக வந்து அத்தனை சோளத்தையும் கொத்திச் சென்று விட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கிவிட்டார். வருமானத்திற்கு வழியும் இல்லை. துக்காராம் உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவரை திட்டிக் கொண்டே இருப்பார்கள். சம்பாதிக்கா விட்டால் போகிறது. ஆனால் ஜாதி ஆசாரம் இல்லாமல் இருக்கிறாரே? கூடியிருந்த ரசிகர்களில் பலர் கீழ் ஜாதிக்காரர்கள் தான். என்ன இப்படிச் செய்கிறீர்களே என்று கேட்டாள். அதற்கு அனைவரும் ஒரே மனித ஜாதிதான் என்று சிரித்தார். ஊரில் நல்ல பெயரும் இல்லை. வருமானமும் இல்லை. ஒரு நாள் கோயிலுக்கு மாலை செல்ல வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள். நல்ல புடவையாக கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஒருவர் துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் தீவிர ரசிகர். அன்பளிப்பாகக் கொடுத்த புடவை ஒன்று இருந்தது. ஒருமுறை மட்டுமே கட்டிய அந்த புடவையை துவைத்து வீட்டின் பின்புறம் காய வைத்திருந்தாள்.

துக்காராம் வழக்கம் போல் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார் அவர். பலர் அந்த தேவகானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் குரலின் இனிமையும் பக்தியின் ஆழமும் கமலாபாயையும் உருக்கத்தான் செய்தது. இலட்சணமான ஒரு பெண் சிறிது தள்ளி நின்று பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கிழிசல் புடவை சிரமப்பட்டு அவள் மானத்தை மறைத்துக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே கீழ் ஜாதி பெண் என்று தெரிந்தது. அவளை பார்த்த துக்காராம் ஏன் அம்மா தள்ளி நிற்கிறாய்? இங்கே வந்து உட்கார் என்று அன்போடு அவளை உபசரித்தார். இதனைப் பார்த்த கமலாபாய் அந்தக் கிழிந்த புடவை கட்டியிருக்கும் கீழ்ஜாதிப் பெண்ணை நன்றாக சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கள் என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள். கச்சேரி தொடர்ந்தது. எல்லோரும் உருகினார்கள். கீழ்ஜாதிப் பெண்ணும் உருகினாள். ஜாதி வேறுபாடெல்லாம் கிருஷ்ணரிடம் கிடையாது. அனைவரும் கிருஷ்ணரைப் பக்தி செய்து வைகுண்டம் செல்ல வழி தேடுங்கள் என்று அறிவுறுத்திவிட்டு அன்றைய பக்தி இசையை முடித்துக் கொண்டார் துக்காராம். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். கீழ்ஜாதிப் பெண் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏன் அம்மா நீ புறப்படவில்லையா? என்று கேட்டார்.

அனைவரும் போகட்டும் சாமி. நான் கடைசியில் போகிறேன். முதலிலேயே போனால் என் பின்னால் வருபவர்கள் என் கிழிந்த புடவையை விமர்சித்துக் கொண்டே வருவார்கள் என்றாள். உன்னிடம் வேறு புடவை இல்லையா அம்மா? என்று கேட்டார். நிறையப் புடவை இருந்தது சாமி. ஆனால் யாரோ ஒரு பெண் மானத்தைக் காப்பாற்றப் புடவை தா என்று இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் என் கணவரிடம் கேட்டாள். என் கணவரோ தர்மப்பிரபு. என் புடவைகள் அனைத்தையும் வாரி வழங்கிவிட்டார். எனக்கு மிஞ்சியது இந்தக் கிழிசல் புடவை தான் என் கணவர் சின்ன வயதில் விளையாட்டாகப் புடவை திருடுவாராம். பெண்கள் குளிக்கும் இடங்களில் புடவையைத் திருடி வைத்துக் கொண்டு அவர்கள் கெஞ்சினால் தான் தருவாராம். அப்படிப் பெண்கள் மனத்தை நோக வைத்தார் இல்லையா? அதனால் அவர் பெண்டாட்டிக்குக் கிழிசல் சேலைதான் என்று விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று கவலையுடன் சொன்னாள். இதனைக் கேட்ட துக்காராம் வேகமாக கொல்லைப்புறம் சென்றார். கமலாபாய் உலர்த்தியிருந்த சேலையைக் கொடியிலிருந்து உருவினார். வாசலுக்கு வந்தார். அம்மா இனி இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இதில் கிழிசல் இருக்காது. பெண்கள் கிழிசல் சேலையை உடுத்தக் கூடாது என்று சேலையை அவள் கையில் கொடுத்தார். அவரையே கனிவுடன் பார்த்த அவள் ஐயா நீங்கள் எனக்குப் புடவை கொடுத்தது பற்றி உங்கள் மனைவி கோபித்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்டாள். அவள் கோபம் சிறிது நேரம் இருக்கும். பிறகு சமாதானமாகி விடுவாள். அவளிடம் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறது. ஆகவே நீ யோசிக்க வேண்டாம் இப்போது உனக்குத்தான் இந்த சேலை அவசியம் தேவை என்றார். துக்காராமின் பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவள் புடவையோடு விடை பெற்றாள்.

துக்காராம் ஒன்றும் தெரியாதவர் போல் அமர்ந்து கொண்டார். மாலைநேரம் வந்தது. கணவரோடு கோயிலுக்குப் புறப்பட்ட கமலாபாய் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக் கொள்ளலாம் என்று கொல்லைப்புறம் போய்க் கொடியைப் பார்த்தாள். புடவையைக் காணவில்லை. கோபத்தோடு துக்காராமிடம் வந்தாள். புடவை எங்கே? என்று கேட்டாள். கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள். அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்து விட்டேன். உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே? என்று குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சோற்றுக்கே திண்டாட்டம். ஆனால் இவரோ வள்ளல் ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர் என்று கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கணவரோடு புறப்பட்டாள். அழாதே கமலா நமக்குத் தேவையானவற்றைக் கிருஷ்ணர் கொடுப்பான் என்றார். கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள். கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றார்கள் இருவரும். என் கணவரை ஏன் இப்படிப் படைத்தாய்? என்ற கேள்வியுடன் கண்மூடிக் கண்ணீர் வழிய நின்றாள் கமலாபாய். இடுப்பில் கைவைத்து நின்றிருந்த பாண்டுரங்கனும் ருக்மிணியும் நகைத்துக் கொண்டார்கள். கமலாபாய் கண் திறந்து ருக்மிணி சிலையைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது. ருக்மிணியின் சிலை கட்டிக் கொண்டிருந்தது அவள் கொடியில் உலர்த்தியிருந்த அதே புடவை தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவள் புடவையே தான் அது. அப்படியானால் கீழ் ஜாதிப் பெண்ணாக வந்தது என் தாயார் ருக்மிணியா? தேவி என்னை மன்னித்துவிடு. என் கணவரது மகிமை தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். வறுமை என்னை அப்படியெல்லாம் பேசச் செய்துவிட்டது அம்மா கீழ்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களுமே உன் வடிவம் என்று என் கணவர் சொல்லும் உண்மையை இன்று உணர்ந்துகொண்டேன் என்று ஆனந்தக் கண்ணீருடன் வழிபட்டாள்.

கிருஷ்ணரையும் ருக்மிணியையும் விழுந்து வணங்கிய அவள் வாருங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று கணவரோடு பக்திக் கண்ணீர் வழிய வீடுநோக்கி நடந்தாள். வீட்டு வாசலில் ஒரு மாட்டுவண்டி நின்றிருந்தது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் அவர்களை நமஸ்கரித்தார். பிறகு கமலாபாயிடம் சொன்னார். அம்மா என்னை மறந்துவிட்டீர்களா? நான்தான் என் சோளக்கொல்லையைக் காவல் காக்கிற வேலையை இவருக்குக் கொடுத்தேன். வேலையை இவர் சரியாகச் செய்யவில்லை என்று இவரை வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்ன ஆச்சரியம் என் சோளக்கொல்லை முன் எப்போதும் இல்லாத அளவு பத்துமடங்கு விளைச்சல் கண்டிருக்கிறது. இவர் சாதாரண ஆள் இல்லை அம்மா. அதற்காக அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தனை தானியங்களையும் கொஞ்சம் தங்க நாணயங்களையும் காணிக்கையாக அளிக்க வந்தேன் என்றார். கமலாபாய் திகைத்துப் போனாள். கமலா நாம் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாளே ருக்மிணி. அவளைக் கட்டிக் கொண்ட அந்த கிருஷ்ணன் அந்த புடவைக்கு விலையாக என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா? என்று துக்காராம் சிரித்த போது கமலாபாயின் ஆனந்தமான சிரிப்பும் சேர்ந்து கொண்டது.

துக்காராம் நாற்பத்தைந்து ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த துக்காராம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தடியில் நின்று கொண்டு நான் போய் வருகிறேன் என்று கூறினார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு ரதவிமானத்தை அனுப்ப அதில் ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பூத உடலுடன் வைகுண்டம் கிளம்பினார்.

துக்காராம்

பக்த துக்காராம் 1608 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பூனா மாவட்டத்தில் உள்ள தேஹு என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது குல தெய்வம் பந்தர்பூரின் விதோபா. பின்னாளில் இவர் சாந்த் துக்காராம் மகாராஜ் என்று அழைக்கப்பட்டார். இவர் அபாங்கா எனப்படும் 4500 பக்தி பாடல்களை இயற்றினார். விட்டலருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்கள் அபங்கா பாடல்கள் ஆகும். கீர்த்தனைகள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டையும் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிராவில் கிருஷ்ணர் வழிபடும் வடிவம் விட்டல ஆகும். வேறு பெயர்கள் பாண்டுரங்கன் விதோபா மற்றும் பண்டரிநாதர் ஆகும். துக்காராம் பல வணிக முயற்சிகளில் ஈடுபட்டார். தனது வாடிக்கையாளர்களிடம் மிகவும் அன்பாகவும் நேர்மையாகவும் இருந்தார். கடன் வாங்கிய பணம் உட்பட தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். அதனால் ஆரம்பித்த அனைத்து வியாபாரத்திலும் தோல்வி அடைந்தார். 1629 1630 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் போது ​​அவரது முதல் மனைவி மகன் மற்றும் மீதமுள்ள சில கால்நடைகள் இறந்தன. இவரது குடும்பத்திடம் கடன் பெற்ற கடனாளிகள் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் பொருள் எதையும் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றினார்கள். மேலும் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டு அவரை வற்புறுத்தினார்கள். துக்காராமைக் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கி இறைவன் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டார். துக்கராமின் வாழ்க்கையில் உண்மையான பணி இந்தக் கட்டத்தில் தொடங்கியது.

துக்காராம் வாழ்க்கையின் வெறுமையில் அமைதியை நோக்கிய பயணத்தில் தனது வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேறி அருகிலுள்ள பாம்நாத் காட்டில் மறைந்தார். 15 நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் விட்டலரை நினைத்துக் கொண்டு அங்கேயே இருந்தார். 15 வது நாளுக்குப் பிறகு அமைதியின் உணர்வை உணர்ந்தார். அப்போது பகவான் விதோபா அவருக்கு காட்சி கொடுத்து தனது அருளாசியை வழங்கினார். இதற்குப் பிறகு பக்த துக்கராமுக்கு தனது குடும்பத்தினர் மனைவி அல்லது உறவினர்கள் மீது எந்த பாசமும் இல்லாமல் போனது. வீட்டில் இருந்த வியாபாரம் சம்பந்தமான அனைத்து பொருள்கள் கடன் பத்திரங்கள் மற்றும் கணக்கு புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து இந்திராயணி நதியில் வீசினார். பின்னர் தனது சொந்தக் கைகளால் பாழடைந்த குடும்பக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பினார். அவரது மனதில் நான் கடவுளே உன்னை ஒருபோதும் மறக்கக் கூடாது. இந்த உடல் இறைவனின் பஞ்ச பூதம் என்னும் 5 கூறுகளால் ஆனது. இறைவனைத் தவிர எனக்கு அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை ஆழமாகப் பதிந்தது. பின் தனது வாழ்க்கையை இறைவனை சிந்திப்பதிலும் பூஜைகள் செய்வதிலுமே செலவிட்டார். இதன் பலனாக ஒரு நாள் அவரது குரு அவரது கனவில் தோன்றி உபதேசம் வழங்கினார். இதனை துக்காராம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாக விவரிக்கிறார். தகுதியான எதையும் தான் செய்யவில்லை என்றாலும் சத்குரு ஒரு கனவில் என்னிடம் வந்து மிகவும் கருணை காட்டினார். நான் ஆற்றில் குளிக்கச் சென்ற போது அவர் என்னைச் சந்தித்து என் தலையில் கை வைத்து என்னை ஆசீர்வதித்தார். அவர் தனது பெயர் பாபாஜி சைதன்யா என்று கூறினார். (பாபாஜி சைதன்யா சாந்த் ஞானதேவின் நான்காவது தலைமுறை சீடர் ஆவார்.) மேலும் தனது இரண்டு முந்தைய குருக்களின் பெயர்களை ராகவ சைதன்யா மற்றும் கேசவ சைதன்யா என்று கூறினார். ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்ய அவர் எனக்கு அறிவுறுத்தினார் என்றார். இது ஜனவரி 1632 இல் நடந்தது.

துக்காராம் இப்போது தனது வாழ்க்கையை பக்திப் பயிற்சிகளில் அதிகளவில் செலவிடத் தொடங்கினார். ஞானதேவ் நாம்தேவ் மற்றும் ஏக்நாத் போன்ற சிறந்த துறவிகளின் கவிதைகள் மற்றும் படைப்புகளைப் படிப்பது பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைப் படிக்கத் தொடங்கினார். பின்னர் ஒரு நாள் அவர் ஒரு கனவில் பாண்டுரங்கன் தோன்றி அவரை எழுப்பி பக்திப் பாடல்களைப் பாடுமாறு அறிவுறுத்தினார். பாண்டுரங்கனின் அருளால் கவிதைகள் படைக்கும் தெய்வீகக் கலை துக்காராமுக்கு இயல்பாகவே வந்தது. இவரது பாடல்களில் மக்கள் ஈர்க்கத் தொடங்கினர்கள். அவரது புகழைப் பார்த்து சிலர் பொறாமையடைந்தனர். அக்காலத்தைச் சேர்ந்த கற்றறிந்த பிராமணரான ராமேஸ்வர் சாஸ்திரிக்கு இவருக்கு எதிராக ஒரு புகாரை அனுப்பினர்கள். துக்கராமிடம் வந்த ராமேஸ்வர் இவரது கவிதைகள் மற்றும் ஷ்ருதிகளின் கொள்கைகளை விளக்கிச் சொல்லுமாறு கேட்டார். சாஸ்திரி துக்கராமிடம் தனது கவிதைகளில் கொள்கைகளில் அனைத்து மனிதர்களும் சமம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்று விளக்கத்தில் பொருள் கூறினார். இதனை ஏற்றுக் கொள்ளாத ராமேஸ்வர் இனி துக்காராம் பாடல்கள் பாட எந்த உரிமையும் இல்லை. எனவே அவர் கவிதைகள் எழுதுவதை நிறுத்த வேண்டும். இவர் ஏற்கனவே எழுதிய கவிதைகளை இந்திராயினி நதியில் மூழ்கடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். அனைத்தும் விட்டலரின் லீலை என்று உணர்ந்த துக்காராம் உடனடியாக தனது வீட்டிலிருந்த அனைத்து கவிதைகளையும் வெளியே கொண்டு வந்து அவற்றை ஒன்றாகக் கட்டி ஒரு பெரிய கல்லை அதனுடன் சேர்த்து மூட்டையாக கட்டி ஆற்றில் எறிந்தார். பாண்டுரங்க பகவானே பாடல்கள் மூலம் மக்களிடையே பக்தியைப் பரப்பும்படி அவருக்குக் கட்டளையிட்டிருந்த படியால் துக்காராம் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் தனிமையில் தனது கவிதைகளில் கடவுளின் புகழைப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு தொடர்ந்து 13 நாட்கள் அவர் தண்ணீர் உணவு இல்லாமல் இருந்தார். 14 ஆம் நாளில் துக்கராமின் சீடர்களில் ஒருவரின் கனவில் தோன்றிய பாண்டுரங்கர் ஆற்றுக்குச் செல்லுங்கள். அங்கே துக்கராமின் கவிதைகள் மேற்பரப்பில் மிதப்பதைக் காண்பீர்கள் என்று கூறினார். உடனே அந்த சீடர் தீர்ப்பு கூறிய ராமேஸ்வரரையும் அழைத்துச் சென்று ஆற்றுக்குச் சென்று பார்த்தார். அங்கு கல்லோடு கட்டிய கவிதை மூட்டைகள் மிதந்து கொண்டிருந்தது. அதனை கரைக்குக் கொண்டு வந்தார் சீடர். துக்காராமின் மகிமையை உணர்ந்த ராமேஸ்வர் எத்தனை சிறப்பு வாய்ந்த பாடல்களாக இருந்திருந்தால் இறைவன் துக்காராம் கவிதைகளை 13 நாட்கள் தண்ணீரில் பாதுகாத்திருக்கிறார் என்று எண்ணி துக்காராமை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடர்ந்து பாடல்கள் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவரது மனதில் துக்காராமின் மீது வெறுப்பு இருந்தது. இதனை உணர்ந்த துக்காராம் ராமேஸ்வரின் வார்த்தையை மரியாதைக்குரியதாக கருதி தொடர்ந்து கவிதைகளை எழுதவில்லை.

ஒரு நாள் ராமேஷ்வர் ஒரு முஸ்லிம் பக்கீர் பக்கிரின் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்தபோது ​​அவர் உடல் முழுவதும் எரியும் உணர்வை உணரத் தொடங்கினார். இந்த நோயின் விரக்தியில் அவர் சாந்த் ஞானேஷ்வரின் சமாதி முன் அமர்ந்து உடல் எரியும் உணர்வு துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தார். அன்று இரவில் அவரது கனவில் ஞானேஷ்வர் வந்து விதோபாவின் மிகப் பெரிய பக்தரான துக்காராம் மீது உன் மனதில் வெறுப்பு இருக்கிறது. வெறுப்பை விட்டுவிட்டப் போய் துக்கராமிடம் சரணடை. உன் உடல் துன்பங்கள் அனைத்தும் போய் விடும் என்று அறிவுருத்தினார். காலையில் எழுந்த ராமேஸ்வர் துக்கராமிடம் சென்றால் அவர் தன்னை சபித்துவிடுவாரோ என்று பயந்தார். எனவே அவர் துக்கராமுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். துக்காராம் அந்த கடிதத்தைப் படித்ததும் ராமேஷ்வருக்கு ஒரு பதிலை அனுப்பினார். மனம் தூய்மையாக இருந்தால் உங்கள் எதிரிகள் கூட உங்கள் நண்பர்களாகி விடுவார்கள். புலிகள் அல்லது பாம்புகள் போன்ற கொடூரமான விலங்குகளால் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. விஷம் கூட சொர்க்கத்தின் அமிர்தத்தைப் போல உங்களுக்கு நன்மை பயக்கும். அனைத்து துரதிர்ஷ்டங்களும் மகிழ்ச்சியாக மாறும். மேலும் உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும். நீங்கள் உங்களை நேசிப்பது போல் அனைத்து உயிரினங்களையும் நேசிப்பீர்கள். அனைவரிடமும் சமமான பார்வையைப் பெறுவீர்கள். நாராயணன் என் மீது இந்த கருணை காட்டியுள்ளார். அதனால்தான் நான் அனைத்து உயிரினங்களிடமும் இப்படி உணர்கிறேன் என்று பதில் எழுதினார். துக்காராமின் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது உடல் எரிவதால் ஏற்படும் துன்பம் கூட மறைந்துவிடும் என்ற வார்த்தைகளை ராமேஷ்வர் படித்த போது ​​அவரது உடல் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டது. இதனால் துக்கராமுக்கு அவர் மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் என்பது அவருக்கு உறுதியாகப் பதிந்தது. அன்றிலிருந்து ராமேஷ்வர் சாந்த் துக்காராம் மகாராஜின் சிறந்த அபிமானியாகவும் தீவிர சீடராகவும் ஆனார். துக்காராமை சந்தேகித்ததால் தன்னைத்தானே குற்றம் சாட்டி 5 கவிதைகளை எழுதினார் ராமேஸ்வர். இந்த சம்பவத்திற்குப் பிறகு துக்கராமின் பெயரும் புகழும் எங்கும் பரவியது.

மராட்டியத் தலைவர் சிவாஜி மகாராஜ் துக்கராமைச் சந்திக்க வந்து அவருடன் பல நாட்கள் தங்கினார். துக்கராமின் பஜனைகளால் சிவாஜி மகாராஜ் மிகவும் ஈர்க்கப்பட்டு நெகிழ்ச்சியடைந்தார். சிவாஜி தனது ராஜ்யத்தை துறந்து விட்டு பஜனை செய்து துக்கராமைப் பின்பற்ற விரும்பினார். ஆனால் துக்காராம் அவரை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்தார். சிவாஜிக்கு தனது குடிமக்களுக்கான கடமையை நினைவூட்டி அறிவுறுத்தினார். கடவுளை உணர உணவையோ தண்ணீரையோ விட்டுவிட்டு காட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உலக இன்பங்கள் தாங்களாகவே உங்களிடம் வந்தால் அவற்றை எல்லா வழிகளிலும் அனுபவிக்கவும் ஆனால் நம் அனைவரிடமும் வசிக்கும் கடவுளின் பெயரால் மட்டுமே. எதையும் விரும்பாதீர்கள் எதையும் விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கு எனது எளிய மற்றும் ஒரே அறிவுரை என்றார். சிவாஜி தனது அரசவைக்கு மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான மனிதராகத் திரும்பினார். சமர்த் சுவாமி ராம்தாஸ் சிவாஜி மகாராஜின் குருவாக இருப்பார் என்பதை பக்த துக்காராம் உள்ளுணர்வாக அறிந்திருந்தார். இதனால் சுவாமி ராம்தாஸை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தினார் துக்காராம்.

துக்காராம் ஒருமுறை தேஹுவுக்கு அருகிலுள்ள லோஹாகான் என்ற கிராமத்தில் கீர்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் பஜனை செய்யும் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர்களில் ஜோஷி என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் தனது இறக்கும் நிலையில் இருந்த ஒரே குழந்தையை அதன் தாயிடம் விட்டுவிட்டு பஜனைக்கு வந்தார். குழந்தை இறந்து விட்டது. தாய் மிகவும் துயரமடைந்தாள். அவள் துக்காராம் பஜனையின் போது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து இறக்கும் நிலையில் இருந்த குழந்தையைப் பற்றி கூறி தனது கணவர் அலட்சியமாக இருந்தபடியால் குழந்தையின் மரணத்திற்கு அவர்தான் காரணம் என்றும் அவரைக் கடிந்து கொண்டாள். துக்காராம் உடனடியாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து ஒரு பாடலைப் பாடினார். துக்காராம் பாடி முடிக்கும் போது குழந்தை உயிர் பெற்று எழுந்தது. துக்காராம் எப்போதும் பஜனை மற்றும் கீர்த்தனைகளைச் செய்து வந்தார். எதையும் சம்பாதிக்கவில்லை. தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அவரது மனைவியின் மீது விழுந்தது. துக்காராம் தனது பஜனையில் மிகவும் மூழ்கியிருந்ததால் அவர் தனது உணவை மறந்துவிடுவார். அவரது மனைவி அவரைத் தேடிச் சென்று அவருக்கு உணவை பரிமாறினாள். பெரும்பாலும் அவர் பாம்கிரி மலையில் காணப்பட்டார். துக்கராமின் மனைவி குடும்பத்தை பராமரிப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. துக்கராமே அவரது பக்தியையும் தூய்மையையும் பாராட்டியிருக்கிறார்.

துக்கராமின் இறுதி காலத்தில் தனது நண்பர்களிடம் சில நாட்களில் தான் இங்கிருந்து விரைவில் புறப்படுவதாகக் கூறினார். புறப்படுவதற்கு முந்தைய இரவு அவர் ஹரிகதை என்ற ஒரு கீர்த்தனை செய்தார். அதில் ஹரிகதை என்பது மூன்று புனித நதிகள் போன்றது. கடவுள் பக்தர் மற்றும் இறைவனது பெயர் ஆகியவற்றின் சங்கமம் போன்றது. அதைக் கேட்பதன் மூலம் ஒருவரின் அனைத்து பாவங்களும் எரிந்து ஒருவர் சுத்திகரிக்கப்படுகிறார். சுற்றி கிடக்கும் கூழாங்கற்கள் கூட புனிதமாகவும் வழிபாட்டிற்கு தகுதியாகவும் மாறும் என்று பாடியிருந்தார். அவரது இறுதிநாள் நெருங்கி வருவதைக் கேள்விப்பட்டவுடன் முழு கிராம மக்களும் அவரைச் சுற்றி கூடினார்கள். அவர்களிடம் நீங்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமந்தாலும் பாண்டுரங்கனை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பந்தர்புரம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. அது இந்த பூமியில் உள்ள வைகுண்டம். அங்கு சென்று இறைவனை வணங்குங்கள். மரண நேரத்தில் இறைவனின் நாமம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பது எனது அனுபவம். நான் உங்கள் முன் சாஷ்டாங்கமாக விழுந்து இறைவனின் நாமத்தை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று கண்ணீருடன் மன்றாடுகிறேன். எப்போதும் பகவான் நாராயணனின் கீர்த்தனை மற்றும் பஜனை செய்யுங்கள். உங்கள் பொருள் நலனைப் பற்றி கவலைப்படாதீர்கள். இறைவன் அதைப் பார்த்துக் கொள்வார். இவை அனைத்தும் நிலையற்றவை. இறைவனின் நாமம் நித்தியமானது. ராமகிருஷ்ண ஹரியின் ஜபத்தைச் செய்யுங்கள் என்ற போதனையைக் கொடுத்தார். துக்கராமை அழைத்துச் செல்ல விஷ்ணு பகவான் ரதத்தை அனுப்பினார். இந்த ரதத்தில் துக்காராமை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இடம் இப்போது வைகுந்தநாதன் ஸ்தானக் கோயில் உள்ளது.

அஷ்ட சிரஞ்சீவிகள்

அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், கிருபாச்சாரியார், அசுவத்தாமன் ஆகியோர் அஷ்ட சிரஞ்சீவிகள் ஆவார்கள்.

அனுமன்: எந்த எதிர்பார்ப்புமின்றி ராமருக்கு தொண்டு செய்வது மட்டுமே தன் பிறவிக் கடன் என வாழ்ந்தவர். ராமரால் சிரஞ்சீவி பட்டம் அனுமனுக்கு வழங்கப்பட்டது. ராமாயணம் மட்டுமின்றி மஹாபாரதத்திலும் அனுமன் வருவதைப் பார்க்கலாம். இன்றளவும் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ அங்கு அனுமன் இருப்பேன் என்று அருள்வாக்கு கொடுத்திருக்கிறார்.

வியாசர்: வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதியது மகாபாரதம். படிப்போரின் பாவங்களைப் போக்கும் மகாபாரதம் படைத்த வியாசர் என்றென்றும் சிரஞ்சீவியா வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

விபீஷணன்: இராவணனின் தப்பியும் இலங்கையை ஆட்சி செய்தவருமான விபீஷணனும் சிரஞ்சீவிதான். அண்ணன் என்றாலும் அதர்மத்தின் பக்கம் நிற்காமல் ராமருடன் நியாயத்தின் பக்கம் நின்றதால் அவர் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.

மகாபலி: அசுரக் குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தவர் மகாபலி. அதனால் தங்கள் தேவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று தேவர்கள் அஞ்சினர். வாமன அவதாரத்தின் மூலம் மகாபலியை அழித்து பாதாள உலகத்துக்கு அவரை அனுப்பினார் விஷ்ணு. அவரும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்க அவர் வருகிறார். அதையே கேரள மக்கள் ஓணம் என்று கொண்டாடுகின்றனர்.

பரசுராமர்: பீஷ்மர் துரோணச்சாரியார் கர்ணன் ஆகியோரின் குரு. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு. தந்தை ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் பெற்ற தாயையே கொன்றார். மீண்டும் தவ வலிமையால் தாயை உயிர்ப்பித்தார். ராமாயணம் மகாபாரதம் என இரண்டு காவியங்களும் இவரை சிரஞ்சீவி என்று போற்றுகின்றன.

மார்க்கண்டேயன்: மிருகண்ட முனிவர் மருத்துவதி (மானஸ்வினி) தம்பதிகள் குழந்தைப் பேற்றுக்காக சிவனை நோக்கி தவம் இருந்ததின் பலனாக பிறந்தவர் மார்க்கண்டேயன். இவரது ஆயுள் 16 வயது என்று பெற்றோர்களுக்கும் தெரியும். அதன்படி 16வது வயதில் சிவபூஜை செய்த போது மார்க்கண்டேயனின் ஆயுளை முடித்து வைக்க எமன் பாசக்கயிற்றை வீசினார். அது சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் வெகுண்டெழுந்த சிவன் எமனை எட்டி உதைத்தார். மேலும் மார்கண்டேயனுக்கு என்றும் 16 என்ற சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார்.

கிருபாச்சாரியார்: பாண்டு வம்சத்தினருக்கு குலகுருவாக இருந்தவர். ஏட்டுக் கல்வி மற்றும் போர்த்திறனைப் பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு கற்பித்தவர். மகாபாரதப் போரில் கௌரவ சேனையிலிருந்து போரிட்டாலும் நடுநிலை தவறாதவர் என்று அறியப்பட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றினார்.

அஸ்வத்தாமன்: மகாபாராதத்தில் வரும் துரோணாச்சாரியரின் மகன் அஸ்வத்தாமன். குருச்சேத்திரப் போரில் உயிர் பிழைத்த சிலரில் இவனும் ஒருவர். தன்னுடைய தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டது மற்றும் நண்பன் துரியோதனன் அதர்ம வழியில் தாக்கப்பட்டதால் கோபம் கொண்ட அவன் பாண்டவர்களின் வம்சத்தை அழிப்பேன் என்று சபதம் ஏற்றுப் பாண்டவர்களின் புதல்வர்களை கொலை செய்தான். மேலும் பிரம்மாஸ்திரம் மூலமாக உத்தரயைின் கருவில் இருக்கும் குழந்தையைக் கொள்ள முயற்சி செய்தான். அதனால் அவனுக்கு சாவை விட கொடிய தண்டனையாக ஆறாத ரத்தம் வழிந்தோடும் காயங்களுடன் மரணமின்றி உலகை சுற்றி வரக் கூடிய தண்டனையை சாபமாக வழங்கினார் கிருஷ்ணன். அதனால் அவனும் சிரஞ்சீவியாக உலகைச் சுற்றி வருகிறான்.

இந்த அஷ்ட சிரஞ்சீவிகள் உள்ள சிற்பம் உள்ள இடம் நக்சல் பகவதி கோயில் காத்மாண்டு நேபாளம்.

போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்

போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் போதேந்திராள் என்றும் அழைக்கப்பட்டார். கிபி 1610 இல் கன்வ கோத்திரத்தில் பிறந்தார். அவரது தந்தை கேசவ பாண்டுரங்க யோகி. தாய் ஸ்ரீமதி சுகுணா பாய். இவர் பிறந்ததும் புருஷோத்தமன் என்ற நாமத்தை வழங்கினார்கள். காஞ்சி காமகோடி மடத்தின் 58 வது பீடாதிபதியான விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள் மடத்துக்கு பாண்டுரங்கன் புறப்படும் போது நானும் வருவேன் என்று புருஷோத்தமன் அடம் பிடித்தான். எனவே ஐந்தே வயதான புருஷோத்தமனை ஸ்ரீமடத்திற்கு அழைத்துச் சென்றார். பீடாதிபதியைக் கண்டவுடன் குழந்தை நமஸ்காரம் செய்தது. சுவாமிகளும் அதனுடைய தெய்வீகத் தன்மையைப் புரிந்துக் கொண்டு இந்தக் குழந்தை இங்கேயே இருந்து எல்லாம் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அன்றுமுதல் புருஷோத்தமன் காஞ்சி மடத்திலேயே வளர்ந்து வந்தாலும் தினமும் பெற்றோர்களை சந்தித்து நமஸ்காரம் செய்து ஆசிகளை பெறுவார். உபநயனம் வேதம் வேதாந்தம் இவைகளை திறம்படக் கற்றார். அனைத்தும் கற்ற பிறகு ராம நாம ஜபம் சிறந்தது என்று அறிந்தார். அன்று முதல் 1,08,000 நாம நாமத்தை ஜெபிப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டு தினமும் ஜெபித்தார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 58 ஆவது பீடாதிபதி விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1638 ஆம் ஆண்டு புருஷோத்தமனுக்கு ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி என்று பெயர் கொடுத்து இளைய பீடாதிபதி ஆக்கினார். கபீர்தாஸ், துளசிதாஸ், மீரா பாய், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நாம தேவா, ஸ்ரீ ஏக்நாத் மற்றும் ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ராமா நாமத்தைப் பரப்பும்படி ஸ்ரீ போதேந்திராளுக்குக் கட்டளையிட்டார். போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி மடத்தின் 59 ஆவது பீடாதிபதி ஆனார். ஶ்ரீ ராம நாம பாராயணத்தின் பலனை சாதாரண மக்களும் அடைந்து உய்ய வேண்டும். அதுவே இந்த கலியுகத்தில் மோட்ச சாதனம் என்று மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக 1685 ஆம் ஆண்டில் காஞ்சி பீடத்தை தனது இளைய பீடாதிபதிக்கு விட்டுவிட்டு பீடத்தையும் துறந்து சந்நியாசியாக கிராமம் கிராமமாகச் சென்று நாம பிரசாரம் செய்து வந்தார். அவரது குருவின் ஆணையின்படி ராம நாம சித்தாந்தம் செய்து அது மோட்சத்தை கொடுக்கும் என்று சொல்லி அதற்கு ஆதாரமாக நாம பிரபாவத்தை நிரூபிக்கும் விதமாக எட்டு கிரந்தங்களை அவர் செய்துள்ளார். தஞ்சாவூரின் அருகே பல கிராமங்களை ராம நாம ஜெபம் செய்யும் கிராமங்களாகவும் மாற்றியிருந்தார்.

ஒரு சமயம் மன்னார் குடியின் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் தங்கி இருந்தார் போதேந்திரர். அப்போது ஒருவர் இவரது தேஜசையும் காம்பீரத்தையும் கண்டு இவர் ஒரு உண்மையான மகாத்மா என்று உணர்ந்து வணங்கி நின்றார். நிமிர்ந்து பார்த்தார் சுவாமிகள். சுவாமிகள் எமது இல்லத்தில் உணவி சாப்பிட வேண்டும் என்றான். சுவாமிகள் அவரை ஏற இறங்கப் பார்த்தார். நான் எங்கும் உணவு சாப்பிட செல்வதில்லை. எமக்கு என்று விதிமுறைகளை வைத்திருக்கிறேன் என்றார். நீங்கள் உணவுவு சாப்பிட உறுதியாக வர வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் அப்படியே செய்கிறேன் என்றான். அதற்கு சுவாமிகள் நான் ராம நாம உணவுக்குத்தான் வருவேன் என்றார். புரியவில்லையே சுவாமி என்றான். ராமநாம ஜபத்தை செய்பவர்கள் வீட்டில் மட்டுமே உணவு சாப்பிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருக்கிறேன். நீ செய்வாயா என்றார். சுவாமிகள் நீங்கள் எனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்யுங்கள் உறுதியாக ஜபம் செய்ய ஆரம்பித்து விடுகிறேன் என்றான்.

ராமநாம உபதேசம் அவருக்கு செய்துவிட்டு நாளை உனது வீட்டிற்கு உணவிற்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தார் சுவாமிகள். மறுநாள் ஒரு பெரிய சந்நியாசி உணவிற்கு வருகிறார் என்று உறவினர்கள் நண்பர்கள் என்று வீடு திருவிழா போல் காணப்பட்டது. சுவாமிகள் வந்ததும் பூர்ண கும்பம் கொடுத்து பூஜைகள் செய்தனர். பிறகு உணவிற்கு இலை போடப்பட்டது. சுவாமிகள் அமர்ந்ததும் அங்குள்ளவர்களை கவனித்தார். 3 வயது நிரம்பிய ஒரு சிறு குழந்தை தாயின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் குழந்தைக்கும் ஒரு இலை போடுங்கள் குழந்தையும் எம்மோடு சாப்பிடட்டும் என்று சொல்லி விட்டுக் குழந்தையை இங்கே வா குழந்தாய் என்று அழைத்தார். குழந்தை எந்தச் சலனமும் இன்றி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று வர வேண்டும் அல்லது வரமாட்டேன் என்று சொல்ல வேண்டும். தலையையாவது அசைக்க வேண்டும். சலனமே இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வா குழந்தாய் என்றழைத்தார் சுவாமிகள். அழைத்தவர் சுவாமிகளை வணங்கிவிட்டுச் சொன்னார். சுவாமி அவனுக்குக் காதும் கேக்காது. வாயும் பேசமாட்டான் அவனுக்கு தாங்கள் சொல்வது எதுவும் புரியாது என்றார். சுவாமிகள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. அதைக் கண்டதும் அழைத்தவர் சுவாமி நீங்கள் மகா ஞானி அனைத்தும் தெரிந்தவர் உங்களது கண்களில் இருந்து கண்ணீர் வரக் கூடாது. சந்நியாசி கண்ணீர் பூமியில் விழுந்தா பூமிக்கே ஆகாது. எங்க வினை நாங்க அனுபவிக்கறோம். தயவு செய்து உணவை சாப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சுவாமிகள் அன்று காலைதான் ஒருவன் நாம நாமத்தைச் சொன்னாலும் கேட்டாலும் ஒரே பலன். எனவே நாமம் வாயில் வரா விட்டாலும் கூட பரவாயில்லை. யாராவது சொல்வதைக் கேட்டாலும் போதும். அந்த ஜீவனுக்கு நற்கதி நிச்சயம். காதுகளை பகவான் மூடி வைக்கவில்லை. எனவே யாரோ சொல்லும் நாமம் தானாய்க் காதில் விழுந்தாலும் போதும் என்று உபன்யாசம் செய்திருந்தார் சுவாமிகள். காதும் கேட்காது வாயும் பேசாது என்றால் தனது சித்தாந்தத்திலிருந்து இவனைப் போன்ற ஜீவன்கள் தப்பி விடுவார்களே அவர்களுக்கு நற்கதி கிட்டாமல் போய்விடுமோ என்று மிகவும் வருந்தி அந்த குழந்தைக்காக மானசீகமாக பிரார்த்தனை செய்தார் சுவாமிகள். அவருக்குள்ள நியமப்படி உணவை ஏழு கைப்படி மட்டும் சாப்பிட்டு கிளம்பிவிட்டார் சுவாமிகள். சுவாமிகளை வழி அனுப்புவதற்காக அவரோடு வீட்டிலிருந்தோர் அனைவரும் வீதி முனை வரை சென்றார்கள். வீட்டில் அந்தக் குழந்தை தனியாக விடப்பட்டான். குழந்தைக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து சந்நியாசி உணவருந்த வருவதால் வேலைப்பணியில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்கவில்லை. சுவாமிகள் உணவு சாப்பிட்ட இலையில் அவர் 7 கைப்பிடி சாப்பிட்டது போக மீதி அத்தனையும் அப்படியே இருந்தன. பசியினால் குழந்தை இலையிலிருந்த பதார்த்தங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தான். சுவாமிகளை வழியனுப்பிவிட்டு வந்த பார்த்தவர்களுக்கு தாங்கள் பார்ப்பது கனவா நினைவா என்று ஒன்றும்‌ புரியவில்லை. அவர்கள் கண்ட அந்த அற்புத காட்சி. வீட்டின் கூடத்தில் அந்தக் குழந்தை இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு நர்த்தனம் செய்து கொண்டே மதுரமான குரலில் ராம நாமத்தை இசைத்துக் கொண்டிருந்தான். இந்த சம்பவம் 1662 ஆம் ஆண்டில் நடந்தது. ஒரு உண்மையான ஞானி உண்ட அமுது அவரது ஸ்பரிசம் அவரது பிரார்த்தனை வாக்கு பார்வை அனைத்துமே மிகவும் புனிதமானவை. ஒருவருக்கு ஞானத்தை வழங்கவும் கர்ம வினைகளை முற்றிலும் அழித்து அகற்றவும் ஞானிகளுக்கு மகான்களுக்கும் சாத்தியம்.

போதேந்திரருக்குக் குழந்தைகள் என்றால் அளவில்லாத மகிழ்ச்சி. கோவிந்தபுரத்திற்கு அருகிலுள்ள காவேரியில் தினமும் நீச்சல் அடித்து சாகசங்களைச் செய்து காட்டிக் குழந்தைகளை மகிழ்விப்பார். ஒரு கோடைக்காலத்தில் 1692 ஆம் ஆண்டு பிரஜோத்பதி ஆண்டு புரட்டாசி மாத முழு நிலவு நாளில் போதேந்திரர் தஞ்சாவூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் காவேரி நதிக்கரையில் போதேந்திரர் ஆற்று மணலிலே ஒரு குழியைத் தோண்டி அதிலே அமர்ந்து கொண்டு சிறுவர்களைப் பார்த்து இதை மண்ணால் மூடிவிட்டு செல்லுங்கள். நாளை வந்து தோண்டிப் பாருங்கள். பிறகு நான் வருகிறேன் என்றார். குழந்தைகளும் விபரீதம் தெரியாமல் மண்ணைப் போட்டு மூடிவிட்டு சென்று விட்டார்கள். போதேந்திரரைக் காணவில்லை என்று ஊர் மக்கள் சொன்ன பிறகு தான் குழந்தைகள் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். குழந்தைகள் காட்டிய இடத்தை தேடி தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு அசரீரீ கேட்டது. நான் இங்குதான் மண்ணிலே ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்ய வெண்டாம். இதற்கு மேலே ஒரு பிருந்தாவனம் அமைத்து ஆராதனை செய்யுங்கள் என்று ராம நாமத்திலே ஐக்கியமாகி விட்டார். இது அவருடைய ஜீவசமாதியாகும். சிறிது வருடத்தில் காவேரி வெள்ளத்தில் பராமரிப்பு இன்றி இந்த இடம் மறந்து மறைந்து போனது. 1803 ஆம் ஆண்டில் மருதநல்லூர் சத்குரு சுவாமிகள் இங்குள்ள நீரில் இருந்து ராம நாமம் ஒலிப்பதைக் கேட்டு தனது சீடரான சரபோஜி மன்னரிடம் சொல்லி நதியைத் திசை திருப்பச் செய்து அந்த இடத்தைக் கண்டுபிடித்தார். இன்றும் இந்த ஜீவசமாதிக்கு ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானத்தில் சுவாமிகளின் ராம நாமம் தகுதியானவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. இவர் எழுதிய பகவன்நாம ரசோதயம், பகவன்நாம ரஸார்ணவம், பகவன்நாம ரஸாயனம் போன்ற நூல்கள் புகழ் பெற்றவை.

பிரேமா பாய்

ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு இசையை கற்றுக் கொடுத்தார். இதன் பின்னர் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தனது மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தார். அவன் நல்லவன் இல்லை என்பதை தாமதமாக உணர்ந்தார் பட்டர். இதனால் அவர் மனம் தவித்தார். பிரேமா மனம் தளராமல் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தியுடன் ராமாயணம் பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப்பெயரிட்டு வளர்த்தாள். இந்த நிலையில் மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவன் கணவன். மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ணபட்டர் இறந்து போனார். கணவனையும் தந்தையையும் இழந்த பிரேமா ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள். அங்கு தர்மசத்திரம் ஒன்றில் தொண்டாற்றி வந்தாள்.

காசியில் அனைவரும் அவளை பிரேமா பாய் என்றே அழைத்தனர். அப்போது அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன். தனது தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ்ணன் உபன்யாசம் கலாட்சேபம் போன்றவற்றைக் கேட்டு ஸ்ரீகிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான். ஒருநாள் சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர். அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமா பாய். இவர்களுக்கு உணவளித்து உபசரித்தால் கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது. உபன்யாசத்திற்கு சென்றால் அடிவர்களை உபசரிக்க முடியாது. என்ன செய்வது? என்று தவித்தாள். சிறிது நேரம் யோசித்தவள். அடியவர்களுக்கு தாம் உணவளிக்கலாம். பாகவதம் கேட்க மகன் ராமகிருஷ்ணனை அனுப்பி விடலாம். பிறகு அவனிடம் விவரமாய் தாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ராமகிருஷ்ணனை பாகவதம் கேட்க அனுப்பினாள்.

உபன்யாசம் முடிந்து வீடு திரும்பிய ராமகிருஷ்ணனிடம் உபன்யாசத்தில் இன்று பவுராணிகர் என்ன சொன்னார்? என்று ஆவலுடன் கேட்டாள். அம்மா கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு வளர்ப்பு லீலைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார். குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது வெண்ணெயைத் திருடி உண்டது யசோதா துரத்தியும் பிடிபடாமல் ஓடியது ஆகியவற்றை விவரித்தார். கோலைக் கையிலெடுத்து அடிக்கப் போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள். குழந்தைக் கண்ணன் அழத் தொடங்குகிறான். ஏதேனும் ஒரு வகையில் கண்ணனைத் தண்டிக்க எண்ணி அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால் குறும்புக்காரக் கண்ணனோ கட்டிய உரலையும் சேர்த்து இழுத்தபடி வீட்டின் பின்புறம் சென்று ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான் என்று நிறுத்திவிட்டு உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார் என்றான். இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரேமாபாய் மெய் மறந்தாள். தான் கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள். கண்ணா உன்னையா உரலில் கட்டிப் போட்டார்கள்? கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே நீ மர இடுக்குகளில் நுழைந்து செல்லும் போது ஏதாவது பூச்சிகள் உன்னைக் கடித்தால் என்னாவது? என்னால் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இப்போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன் என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள்.

அம்மா அம்மா என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும் அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின்தொடர்ந்தனர். பிரேமா பாய் கங்கை நதியில் குதித்தாள். அவள் விழுந்த இடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது. ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமா பாயை அனைவரும் வணங்கினர். தந்தையைக் காவிரியிலும் தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன் தான் பிறந்த பூமியான ஸ்ரீரங்கத்துக்கு வந்தான். அங்கு அரங்கன் சன்னிதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான். நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகாபிரபுவுடன் இணைந்து அவரைப் பின்தொடர்ந்தான். மொகாலய படையெடுப்பின் போது பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது பெர்ஷியன் சங்கீதத்தைக் கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன் திரும்பி வந்ததும் குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம் பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான். இந்த ராமகிருஷ்ணனே பிற்காலத்தில் தீட்சை பெற்று ஸ்வாமி ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ்பெற்றார். இவர் உருவாக்கியதே ஹிந்துஸ்தானி சங்கீதம். அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த தான்சேன் இவரிடம் தான் சங்கீதம் பயின்றார்.

சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள்

தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையில் ராமச்சந்திராபுரத்தில் 1551 ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வேங்கடய்யர் பத்மாவதி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் தத்தாத்ரேயர். வேத பாராயணங்களை பாலகனாக இருந்த போதே கற்று தேர்ந்தார். பரமக்குடி வேதாந்த மடத்தின் ஆச்சாரியர் இலட்சுமண அய்யரிடம் அதர்வண வேதத்தை முழுமையாக பயின்றார். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள் என்ற பெயர் நிலைத்தது. இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப் போற்றி பெருமைப் படுத்தும் விதமாக ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர்.

இவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டு காலம் மழை பொழியாததால் கடும் வறட்சியைச் சந்தித்தது தஞ்சை பூமி. தஞ்சையை ஆண்ட அரசர் அச்சுதப்ப நாயக்கர் கவலையுடன் அரசவையைக் கூட்டி மழை வருவதற்கான யாகங்களை நடத்த வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். மிகப் பெரும் வேத விற்பன்னர்களை எல்லாம் வரவழைத்து யாகங்கள் தொடங்கப் பட்டு ஏழுநாட்கள் ஆன பிறகும் மழை வருவதற்கான அறிகுறிகளே இல்லை.
அப்போது தலைமை வேதவிற்பன்னர் அரசரிடம் சென்று திருவரங்கப் பெருமாளின் சன்னதியில் தத்தாத்ரேயர் என்கின்ற 20 வயது இளைஞர் ஒருவர் தினம்தோறும் தீப தூபங்கள் காட்டி பாடல்களைப் பாடி கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார். இந்த யாக குண்டத்திற்கு முன் அவரை வரவழைத்து பாடச் செய்தால் நம் நோக்கம் நிறைவேறும் என்று கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார் மன்னர். புரோகிதர் குழு தத்தாத்ரேயரை அனுகி விபரத்தைச் சொல்லி யாகம் நடத்தும் இடத்திற்கு அழைத்தார்கள். அதற்கு அவர் மழைதானே வர வேண்டும் வரவைக்கிறேன் என்று சொல்லி யாகத்தில் வைக்கும் கலசம் போல் ஒரு கலசத்தை ஏற்பாடு செய்ய சொல்லி அந்த கும்ப கலசத்தை தலையில் வைத்துக் கொண்டு அரங்கனை நினைத்து காவிரி ஆற்றில் நின்று வருண ஜபம் செய்து காவிரி ஆற்றில் நின்ற நிலையில் மேகராகக் குறிஞ்சி ராகத்தில் அரங்கனை மனதில் நிறுத்தி வருணனை நோக்கி மனம் உருகிப் பாட ஆரம்பித்தார். காலை வேளையில் தொடங்கிய அந்த நிகழ்வை புரோகிதர்கள் உள்ளிட்ட மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். மாலைப் பொழுது வந்ததும் மேகக் கூட்டம் திரண்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவரித்தார்கள். மழை பெய்யத் தொடங்கியதும் கரைக்கு வந்தார் தத்தாத்ரேயர். மழை மாமழையாக மாறி மூன்று நாட்கள் இடைவிடாது பெய்தது. தஞ்சையைச் சுற்றி உள்ள ஏரி குளம் கிணறு என அனைத்துமே மழை நீரில் நிரம்பியது. இனியும் மழை தொடர்ந்தால் நாட்டிற்கே கேடாக முடியம் என்று எண்ணிய மக்கள் மீண்டும் தத்தாத்ரேயரை வணங்கி மழை போதும் என்று கேட்டுக் கொண்டார்கள். தத்தாத்ரேயர் மீண்டும் பாடலைப் பாடி மழைப் பொழிவினை நிறைவு செய்தார்.

தஞ்சை மன்னர் தத்தாத்ரேயரை அழைத்து அரச மரியாதையைச் செய்து தங்கக்காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். அனைத்தையும் புன்னகையுடன் மறுத்து அங்கிருந்து கிளம்பினார். அப்போது அரசர் தான் அணிந்திருந்த ரத்தின மாலையை அவரது கழுத்தில் போட்டு மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அவரது அன்புக் கட்டளைக்காக அதனை ஏற்றுக் கொண்ட தத்தாத்ரேயர் நேராக திருவரங்கக் கோயிலுக்கு வந்து மன்னர் அணிவித்த ரத்னமாலையை அரங்கனுக்கு அணிவிக்க அர்ச்சகரிடம் வழங்கினார். இதையறிந்த மன்னர் ஒருநாள் திருவரங்கக் கோயிலுக்கு வந்து என்னிடமிருந்து எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாத தத்தாத்ரேயர் அவர்களுக்கு முதல் மரியாதையாக அதிகாலையில் வழங்கப்படும் பிரம்ம துளசி தீர்த்தத்தை வழங்க வேண்டும் என்றும் தத்தாத்ரேயர் காலத்திற்குப் பிறகு அதிகாலை வேளையில் அரங்கனின் விசுவரூப தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் அவருடைய வம்சத்தினர் யாரேனும் இருந்தால் அவர்களுக்குத்தான் முதல் தீர்த்தம் வழங்கப்பட வேண்டும் என்று பட்டயம் எழுதி மன்னர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கினார்.

தண்டு முனிவர்

தண்டு முனிவர் என்பவர் சிவபெருமானின் பக்தராகவும் நாட்டியத்தின் முதல் ஆசானாகவும் கருதப்படுகிறார். சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கு நாட்டியத்தை கற்றுக் கொடுத்தார். தான் கற்ற நடனத்தை தண்டு முனிவர் பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்கு தாண்டவங்களை கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவ லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரத முனிவர் நாட்டிய சாத்திரத்தினை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் இறுதியான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன. இதனால் பரதரின் பெயரைத் தாங்கி நாட்டியமானது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. சிவன் நாட்டியத்தை தண்டு முனிவருக்கு கற்றுக் கொடுக்கும் இந்த சிற்பம் இருக்கும் இடம் மாமல்லபுரம்.

சங்கநிதி பதுமநிதி

பக்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவிக்கு உதவியாக சிவ பெருமானால் நியமிக்கப்பட்டவர் அழகாபுரிப் பட்டிணத்தைச் சேர்ந்த வைச்ரவணன். ஈஸ்வரன் பட்டம் பெற்ற இராவணனின் தம்பி. பல வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் அருளைப் பெற்றார். லட்சுமி தேவியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு லட்சுமி தேவியால் குபேர பட்டம் பெற்றார். சிறந்த சிவபக்தர். ஈசனின் கட்டளைப்படியும் லட்சுமி தேவியின் ஆசியுடனும் வைச்ரவணன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவி ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் வைச்ரவணன் என்பது மாறி குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால் அவருக்கு திருமகளின் வெண்சங்கும் கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன. அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன். வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. அறிவினை அருள்பவர்.

ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.

சங்கம் பதுமம் மகாபதுமம் மகரம் கச்சபம் முகுந்தம் குந்தம் நீலம் வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. சங்கநிதி பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ சற்று உயரமான இடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். அறிவுச் செல்வமாக இருந்தாலும் பொருள் செல்வமாக இருந்தாலும் கேட்டதை கொடுப்பவர் ஈசன். கோவிலுக்கு வந்து கேட்கும் பக்தர்களின் உணர்வுகளை மேலிருந்து கவனித்து பார்த்து பக்தரின் நடை உடை பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும் அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து எவ்வளவு அறிவுச் செல்வத்தையும் எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்கள் பணி. அதன்பின் ஈசனின் வரப்படி அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி.

இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர்த் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும் மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில் சங்கநிதி பத்மநிதி சிற்பங்கள் தவிர வேறு எந்த தெய்வத்தின் சிற்பமும் காண முடியாது. இதன் காரணமாகத்தான் கோவிலுக்கு வரும்போது குளித்து விட்டு தூய ஆடை அணிந்து வம்பு தும்பு பேசாமல் இறை சிந்தனையுடன் பக்தியுடன் கோவிலை வலம் வரவேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.

அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் துறவி மற்றும் கவிஞர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கைநெறி ஆகியது. அவர் தனது இளமைப் பருவத்தை வழிபாட்டில் கழித்தார். விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. மாறாக ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார். இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அக்கா மகாதேவி சிறு வயதிலேயே கவிதைகளை எழுதுவார். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பார். ஸ்ரீ சைலம் என்னும் ஊரைப் பற்றியும் அங்கு உறையும் இறைவன் சென்ன மல்லிகார்ச்சுனனைப் பற்றி கேள்விப்பட்டார். பின்பு சென்ன மல்லிகார்ஜுனாவை அதிகம் ஆராதித்துக் கொண்டே இருப்பார். பிறந்ததில் இருந்து இவரின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் பெரிய பெண்ணாகும் வரை வளர்ந்ததாக தெரிகின்றது. அக்கா மகாதேவி சில கன்னட புராணக் கதைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பார்வதியின் ஒரு ரூபமே எனக் கூறி இருந்தாலும் அவரது சன்யாச வாழ்க்கைக்கு முன்னர் வாழ்ந்த வாழ்கை வரலாறு குறித்த செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்படவில்லை. அவர் சன்யாசி ஆகி வீர சைவர்கள் குழுவில் சேர்ந்த அவரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே வாய் மொழிக் கதைகளாகவே இருந்து உள்ளன.

அக்கா மகாதேவி பெரிய பெண்ணானதும் அவருடைய பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அந்த ஊரில் இருந்த தனவந்தர் ஒருவர் அவள் மீது ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவளுடைய பெற்றோர்களும் அவருடன் அவளை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அக்க மகாதேவி அதை ஏற்கவில்லை. தன்னுடைய மானசீகக் கணவர் சென்ன மல்லிகார்ஜுனாதான் என்றே உறுதியாகக் கூறினாள். தன்னுடைய பெற்றோர்களிடம் மீரா எப்படி கிருஷ்ணரையே தன்னுடையக் கணவராக ஏற்று இருந்தாரோ அப்படித்தான் தனது கணவர் சென்னமல்லிகார்ஜுனாதான் என்றே அவர் கூறி வந்துள்ளார்.

அந்நாளில் அவ்வூரையாண்ட கெளசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கா மகாதேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி மணம் செய்து கொள்ள விரும்பினான். அரசனிடம் இந்த உடம்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பாத்திரம். எலும்புகளினால் செய்யப்பட்ட ஒரு பெட்டி. இது சீழ் மற்றும் துர்நாற்றம் கொண்டது. இதை ஏன் விரும்புகிறீர்கள் இறைவனை நினையுங்கள் என்று அறிவுறை கூறினாள். இதனை கண்டு கொள்ளாத அரசன் அவள் மணத்துக்கு ஒப்புக் கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்று மிரட்டினான். அதனால் சில நிபந்ததனைகளுடன் அக்கா மகாதேவி அரசனை மணக்க ஒப்புக் கொண்டார். தம் வழிபட்டுக்குத் தடை விதிக்கக் கூடாதென்றும் தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வேன். அதன் பின் உங்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள திருமணம் நிறைவேறியது. ஆனால் அக்கட்டுப்பாட்டின்படி அரசனால் நடக்க முடியவில்லை. எனவே அக்கா மகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கெளசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்துவிட்டு கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் தான் ஒரு சன்யாசினியாக போக விரும்புவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளை அவர்களால் தடுக்க முடியவில்லை. இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தபடி சிவபெருமானின் பெருமைகளை பரப்பி வந்தார். பசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் உள்ள அனுபவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

மகாதேவி நிர்வாணமாக வந்தபோது ​​​​அவளை மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று மிகவும் சந்தேகத்துடன் வரவேற்றார்கள். அப்போதைய வீரசைவத்தின் தலைவரான அல்லாமா பிரபு இளமை மலரும் பெண்ணே ஏன் இங்கு வந்தாய்? உங்கள் பெற்றோரைப்பற்றி அல்லது கணவரைப்பற்றி சொல். இல்லையென்றால் இங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுங்கள் என்றார். மகாதேவி பதிலளித்தாள். இந்த உலகில் உள்ள அனைவருமே என்னுடைய பெற்றோர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் என்று எனக்கு கணவனாக சேர்ந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவுடன்தான். அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பார்த்துக் கொண்டே இருக்க என்னுடைய குருநாதர் வந்து என் கையைப் பற்றிக் கொண்டார். லிங்கமான சிவனே மணமகனாகியது. நானோ அங்கு மணமகள் ஆனேன். ஆகவே என் கணவர் சென்ன மல்லிகார்ஜுனா. அவரை தவிர எனக்கு இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை என்றார். அல்லாமா பிரபு அவளை நீண்ட நேரம் விசாரித்து பின்பு சன்யாசி என்று ஒப்புக் கொண்டார். உடல் தோற்றத்தில் இவள் பெண் ஆனால் இவளின் மனம் கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து வீரசைவர்களும் மகாதேவியின் பெருமையை அறிவித்தார். அல்லாமா பிரபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்கா மகாதேவி தனது தவங்களை தொடர்ந்தார். அங்கு உள்ள சன்யாசிகளுடன் தம் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அக்கா மகாதேவியின் பக்தியைக் கண்ட வீர சைவ துறவிகளான பசவண்ணா சென்ன பசவண்ணா அல்லமா பிரபு கென்னாரி பொம்மையா போன்றவர்கள் அவளை புகழ்ந்து எழுதி உள்ளார்கள். அக்கா மகாதேவி தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கையில் தன்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே பெண் இனத்தை சேர்ந்தது. ஆனால் தன்னுடைய ஆத்மாவும் தானும் சிவனை சேர்ந்தவள் என்றே கூறிக் கொண்டார். ஒரு முறை அக்கா மகாதேவி ஒரு கூட்டத்தில் அல்லமா பிரபுவின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எல்லாம் சற்றும் தாமதிக்காமல் சரியான பதில் தந்ததைக் கண்டவர்கள் அவரை அக்கா என அழைக்கலாயினர். மகாதேவி என்ற பெயர் பின்பு அக்கா மகாதேவி என்று அழைக்கப்பட்டார். வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட பெரும் கவிகளான பசவன்னா சென்னா பசவன்னா கின்னாரி பொம்மையா சித்தாராமைய்யா அல்லமாபிரபு தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக் கொண்டார்.

அக்கா மகாதேவி சன்யாசினியாக மாறிய அவர் ஆடைகள் அணியாத நிர்வாண நிலையிலேயே இருந்தார். கடவுளின் அருளினால் அவளுடைய உடம்பு முழுவதையுமே நீண்டு வளர்ந்து இருந்த அடத்தியான தலைமுடி ஒரு உடுப்பு போல மறைத்து வைத்தே இருந்தது என்பதே அவர் எந்த அளவுக்கு தெய்வீக சக்தி பெற்று இருந்தார் என்பதை விளக்கும். அக்கா மகாதேவி பார்வதியின் ஒரு அவதாரம் என்றும் சாப விமோசனம் அவர் பூமியில் வந்து பிறந்து இருந்தார் எனவும் ஒரு கிராமிய கதையும் உள்ளது.

அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலையில் பெரும் பங்காற்றினார். அங்கும் இங்கும் நடந்த ஆன்மீக விவாதங்களில் கலந்து கொண்டு தன தரப்பு வாதங்களை ஆன்மீகத்தின் பக்கம் எடுத்து உரைத்து ஆன்மீகப் பாதைக்கு வலு சேர்த்தார். பல இடங்களிலும் சுற்றிக் கொண்டு இருந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவை போற்றித் துதித்த வண்ணமே இருந்தார். ஸ்ரீசைலம் பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சென்னமல்லிகார்ஜுனா ஆலயம் இருந்த காட்டுக்குள் சென்று அங்கிருந்த குகையில் தங்கி தவம் செய்தவாறு தனிமையிலேயே இருந்தார். அங்கு சில காலம் இருந்தப் பின் அவர் பானவாசிக்கே வந்து தங்கினார். அவர் புகழ் கன்னட நாடெங்கும் பரவியது. அந்த குகை தற்போது அக்கா மகாதேவி குகை எனப்படுகின்றது. அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக ஜாதி பேதங்களை உடைப்பது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை ஒழிப்பதுமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து அவர் அவற்றை பெருமையுடன் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி செய்துள்ளார். அவர் 400 க்கும் மேற்பட்ட கவிதைகளை இறைவன் மீது இயற்றி உள்ளார்.

சென்ன மல்லிகார்ஜுனா பற்றிய அவரின் கவிதை:

அம்மா கேள் நான் அவரை நேசிக்கின்றேன்
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே அவர்
அவருக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
அவருக்கு ஜாதியோ பேதமோ ஒன்றும் இல்லை
அவர் எங்கும் நிறைந்தவர் உருவமற்றவர் மாறாதவர்
நம் எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட அழகைக் கொண்டவர்
இந்த உலகில் உள்ள அனைத்துமே முடிவாக அழிந்து விடுபவை
எனக்கு அவர்களில் ஒருவரும் வேண்டாம்
என்னுடைய நாயகனாக என்றுமே இருக்க உள்ளவர்
ஒன்றே ஒருவரான சென்ன மல்லிகார்ஜுனா மட்டுமே.

பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும் குளங்களும் உள்ளன
படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன
ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க
சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார்.

தன்னுடைய நிர்வாண நிலையைப் பற்றி எழுதிய ஒரு கவிதை இது

இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ள போது
அவர் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ள போது
நீ உன்னிடம் உள்ள எதை நீ அவரிடம் மறைக்க நினைக்கின்றாய்.

பட்டு மற்றும் நகைகளின் மினுமினுப்பின் கீழ் என்னை என்ன மறைக்க விரும்புகிறீர்கள்?
முட்டாள்கள் நான் மல்லிகைப் பெருமானின் காலை ஒளியை உடையாக உடுத்தும் போது ​என்னால் வெட்கப்பட முடியாது.

இறைவனை அடைய எண்ணம் கொண்டவர்களுக்கு இவரின் அறிவுரைகள்:

அகந்தை கூடாது. பசிக்கும் போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும். மாயை உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது. இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும். குருவே உய்யும் நெறி காட்டுவார்.

வீரசைவர்களால் 20000 க்கும் மேற்பட்ட கவிததைகள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 300 அக்கா மகாதேவி இயற்றியுள்ளார். இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.