பட்டினத்தார் வரலாறு

பட்டினத்தார் வரலாற்றை பார்ப்பதற்கு முன்னர் இவரது முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராவணனின் தம்பி முறை கொண்டவன் குபேரன். ராவணன் தன் தம்பிகளோடு சிவனை நோக்கி தவம்புரிய சிவபெருமானும் ராவணனின் கடும் தவத்தை மெச்சி வேண்டும் வரம் தருவதாக கூறினார். அதன்படி சிவனின் பக்தனான ராவணன் ஈஸ்வரர் பட்டம் பெற்று ராவணேஸ்வரன் என அழைக்கப்பட்டதோடு எப்படிபட்டவரையும் கொல்லும் இரண்டு நாகாஸ்திரத்தையும் சிவதனுசு என்ற வில்லையும் பெற்றான். கும்பகர்ணன் பிரம்மதேவன் சூழ்ச்சியால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வரம் பெற்றான். விபூஷ்ணனும் வரம் பெற்றான். கடைசியாக குபேரனுக்கு என்ன வரம் வேண்டுமென சிவன் கேட்டார். அதற்கு சிவனோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும் என குபேரன் கூறினான். சிவனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உன்னிடத்தில் என் சிவலோகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் காக்கும் பொருப்பில் அமர்த்துகிறேன் என கூறி செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.

குபேரன் ஒரு முறை பூமியை காண வலம் வந்தான். காவிரி வளம் கொழிக்கும் ஊரினை கண்டதும் குபேரனுக்கு நம் தேவலோகத்தில் இதுபோன்ற எழிலை காண முடியவில்லையே. குயில்களின் இசையும் மயில்களின் நடனமும் நதியின் இசையும் அழகிய மலர்களின் நறுமணமும் அழகிய வயலும் பொய்கையும் வாழை மா பலா என பழுத்த முக்கனிகள் அன்பான மக்கள் சிவனின் ஆலயம் இத்தனையும் அனுபவிக்க அப்பப்பா ஒரு பிறவி போதாதே என ஒருகணம் நினைத்தான் குபேரன். இதனை கண்ட சிவன் குபேரா நினைத்தது போலவே ஒரு பிறவி இப்பூமியில் பிறந்து உனது ஆசையை தீர்த்துகொண்டு வா என கூறிவிட்டார் சிவன். குபேரனும் பட்டினத்தாராக இப்பூமியில் அவதரித்தார். இதுவே பட்டினத்தாரின் முற்பிறப்பு வரலாறு.

காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். பிறந்த குழந்தைக்கு திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிட்டார்கள். பெரும் செல்வந்தர்களான வணிகக் குடும்பம் என்பதால் கடல் கடந்து வியாபாரம் செய்து பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க செல்வந்தராக இருந்தார் சுவேதாரண்யன். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் பட்டினத்தார் என்று அழைத்தார்கள். பட்டினத்தார் தனது 16 வது வயதில் சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார் பட்டினத்தார். அந்த ஊரில் இருந்த சிவசருமர் என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் குளக்கரையில் கண்டெடுத்த குழந்தை என்று கூறி பட்டினத்தாருக்கு குழந்தையை தத்து கொடுக்கும்படி கூறி மறைந்தார். சிவன் கூறியபடியே சிவசருமர் திருவெண்காடரிடம் குழந்தையை கொடுத்து விட்டார். மகிழ்ந்த பட்டினத்தார் இறைவன் அளித்த குழந்தையாக எண்ணி குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பட்டினத்தார் கடல் கடந்து நவரத்தினங்களை வாணிபம் செய்து வந்தார். மருதவாணருக்கு வாலிப வயது வந்ததும் தானும் வாணிபம் செய்ய கடல் கடந்து செல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்ய சென்றார்.

பட்டிணத்தார் குபேரன் அவதாரம் என்பதால் அவர் பிறக்கும் போதே மிகுந்த செல்வந்தர். அவரது வீட்டின் கதவும் வாயிற்காலும் வெள்ளியில் செய்யப்பட்டு இருக்கும். வாசலில் முத்துக்களால் ஆன பந்தல் அமைத்திருப்பார். அந்நாட்டு அரசர் நகர்வலம் வந்தபோது இதனை கண்டு திகைத்துபோய் பட்டினத்தாரை அழைத்து நாளை முதல் நீங்கள் வெள்ளிகதவை உபயோகிக்ககூடாது கழற்றிவிடவும் என கூறினார். மறுநாள் பட்டினத்தார் வெள்ளிகதவை கழற்றி தங்கத்தால் ஆன கதவை பொருத்தினார். மன்னர் நகர்வலம் வந்தபோது தங்ககதவை பார்த்து மேலும் அதிர்ந்துபோய் பட்டினத்தாரிடம் உங்களை வெள்ளிகதவை கழற்ற சொன்னேனே என கேட்டார். பட்டினத்தாரும் ஆம் மன்னா தங்கள் உத்தரவுப்படி வெள்ளி கதவை கழற்றி தங்ககதவை மாட்டியுள்ளேன் என கூறினார். இதனைக்கேட்ட மன்னர் பொறாமையால் முத்துப்பந்தலை எரிக்க காவலாளிகளுக்கு உத்தரவிட்டார். காவலாளிகள் முத்துப்பந்தலை எரித்துவிட்டனர். இதனைக்கண்ட பட்டினத்தார் அடுத்தநாள் வைரங்களால் ஆன பந்தலை போட்டுவைத்தார். இதனைக்கண்ட மன்னர் அதற்கு மேலும் பேச வழியின்றி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவ்வளவு பெரிய செல்வந்தராக வாழ்ந்திருந்தார் பட்டினத்தார்.

சில நாட்கள் கழித்து திரும்பிய மருதவாணர் வியாபாரம் செய்யும் இடத்தில் தந்தையிடம் பெட்டி பெட்டியாக கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மகன் சம்பாதித்து கொண்டு வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவரட்டி இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்பினால் தவிட்டு எருவைக்கொண்டு வந்திருக்கின்றானே என்று கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் வைரங்களும் வைடூரியங்களும் இருப்பதை பார்த்து அதிர்ந்த பட்டினத்தார் மகனைக்காண வீட்டிற்கு வந்தார். மருதவாணர் தனது தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து தந்தை வருவார் அவரிடம் இதனைக் கொடுத்துவிடுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். மருதவாணரை தேடி வீட்டுக்கு வந்த பட்டினத்தார் நடந்தவைகள் அனைத்தையும் கேள்விப்பட்டு மருதவாணர் கொடுத்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ஒர் ஓலைசுவடி இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்ததும் பட்டினத்தாருக்கு ஞானம் பிறந்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார்.

பட்டினத்தார் இல்லற வாழ்க்கையை துறந்து இடுப்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு ஆண்டி கோலம் பூண்டார். இதனைகண்ட அவரது தாய் எனக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது அக்கடமையை செய்யாமல் நீ செல்லவேண்டாம் என்று தடுத்தார். தாயாரிடம் தங்களுக்கான கடமை வரும் நேரம் நானே உங்களிடம் வந்து என் கடமையை செய்வேன் என்று உறுதியளித்துவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினார். பட்டினத்தாரின் செல்வத்தை காக்கும் பொருப்பில் இருந்தவர் சேந்தனார் என்பவர் பட்டினத்தாரிடம் வந்து உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்கு சொந்தம் இல்லை என்று எண்ணிவிட்டேன். எனக்கு சொந்தம் இல்லாத சொத்தை நான் எப்படி என்ன செய்யவேண்டும் என்று கூறமுடியும் என்று சொல்லி விட்டு ஊருக்கு வெளியே ஒரு கோவிலில் அமர்ந்துவிட்டார்.

அந்நாட்டின் மன்னர் பட்டினத்தாரின் செய்கையை கேள்விப்பட்டு அவரை தேடி சென்றார். மரத்தடியில் அமர்ந்தருந்த பட்டினத்தாரிடம் இந்நாட்டின் அரசன் நான் என்னுடைய சொத்துக்களால் வைத்து என்னால் கூட தங்களுடன் போட்டி போட முடியவில்லை. இவ்வளவு பெரிய செல்வந்தரான நீங்கள் சிறிய இடுப்பு வேட்டியுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் தங்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சி கிடைத்துவிட்டது. தாங்கள் மீண்டும் பழையபடி வீட்டுற்கு செல்லுங்கள் என்று சொன்னார். இதனைகேட்ட பட்டினத்தார் அன்று என்னுடைய வீட்டிற்கு தாங்கள் வந்தபோது நான் எழுந்துவந்து உங்கள் முன் நின்றுகொண்டு பேசினேன். நீங்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இன்று நான் அமர்ந்துகொண்டு இருக்கிறேன். மன்னராகிய தாங்கள் என்முன் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் இதுவே நான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி என்றார். இதனை கேட்ட மன்னன் தலைகுனிந்து அங்கிருந்து சென்றுவிட்டர்.

பெரும் செல்வந்தராய் இருந்த பட்டினத்தார் மாளிகையை இழந்து ஆடை அணிகலன் இழந்து ஒருவேலை உணவிற்கு அடுத்தவரிடம் யாசகம் பெற்று பரதேசி போன்று இருப்பதை கண்ட பட்டினத்தாரின் சகோதரி தனக்கு அவமானமாக இருப்பதால் அப்பம் செய்து அதில் கொடிய விஷத்தை கலந்து பட்டினத்தார் உண்பதற்காக கொடுத்தார். தன் ஞானத்தால் நஞ்சு கலந்திருப்பதை அறிந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை தன் சகோதரி வீட்டின் கூறைமீது வீசி எறிந்து தன் அப்பன் தன்னை சுட்டால் வீட்டப்பன் ஓட்டை சுடும் என கூறினார். சகோதரியின் வீட்டின் கூறையில் தீ பிடித்து மளமளவென எரியத்துவங்கியது. பட்டினத்தாரின் ஞானத்தை உணர்ந்த சகோதரி இவரிடம் மன்னிப்பு கேட்டார். மனம் அறிந்து திருந்தினால் நெருப்பு அணையும் என்று பட்டினத்தார் சொல்ல நெருப்பு உடனே அணைந்துவிட்டது. ஊரில் இருக்கும் அனைவரும் பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்து கொண்டார்கள். பட்டினத்தார் தான் வாழ்ந்த ஊரில் இருந்து கிளம்பி பல சிவ தலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது திருவெண்காடு என்னும் ஊரில் இருக்கும் திருவெண்காடரை தரிசித்து பாடல்கள் பாடினார். இத்தலத்தில் பட்டினத்தாருக்கு திருவெண்காட்டு நாதரே குருநாதராக வந்து சிவதீட்சை கொடுத்தார். இத்திருவிழா இகோவிலில் இப்போதும் நடைபெறுகிறது. திருவெண்காடர் என்ற பெயரை இக்கோவிலில் பட்டினத்தார் பெற்றார்.

மேலப்பெரும்பள்ளம் என்னும் ஊரில் வலம்புரநாதர் இறைவனை தரிசிக்க பட்டினத்தார் வந்திருந்தார். அவ்வூரில் இருந்த மன்னன் தனது தோசம் நிவர்த்திக்காக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்னதானம் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இங்கு வந்த பட்டினத்தார் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்டார். அன்னதானம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கிறது காத்திருங்கள் என்று அவர்கள் உணவு தர மறுத்தனர். உடனே பட்டினத்தார் மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்தார். கோவிலில் பல நாட்கள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்தது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பட்டினத்தார் அக்கோவிலில் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரை வணங்கி ஆசிபெற்றனர். மன்னனின் தோசமும் விலகியது.

உஜ்ஜனியின் மாகாளம் என்ற இடத்திற்கு வந்த பட்டினத்தார் அங்கு இருக்கும் ஒரு கோவிலில் அமர்ந்து தியானத் செய்து கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசனாக இருந்தவர் பத்ருஹரி சிவபக்தியில் சிறந்தவராக இருந்தார். அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். தங்கள் இருப்பிடம் செல்லும் வழியில் இருந்த கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை இறைவனுக்கு காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர். அந்த மாணிக்கமாலை இறைவன் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி அரசன் வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். அனைத்து இடங்களிலும் வீரர்கள் திருடர்களை தேடிச்சென்றனர்.

கோயிலில் தியானத்தில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து அவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்த வீரர்கள் அவரை அழைத்துச் சென்று அரசனின் முன்னிலையில் நிறுத்தினார்கள். மாணிக்கமாலை அவரின் கழுத்தில் இருந்ததை பார்த்த பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தானாக தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தன்னை மன்னித்து தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார். பத்ருஹரி அரசன் பட்டினத்தாரின் சீடராகி பத்திரகிரியார் என பெயர் பெற்றார்.

பட்டினத்தார் பத்ரகிரியாரிடம் திருவிடைமருதூர் கோவில் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் காலம் வரும் போது அங்கு வந்து சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பத்ரகிரியார் குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்து தினமும் பிச்சை ஏற்று மானசீகமாக குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்கு சிறிது உணவு கொடுத்தார். அன்று முதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. சில வருடங்கள் கழித்து பட்டினத்தார் திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்தார். பட்டினத்தார் வருவதை பார்த்த பத்ரகிரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். குரு தனக்கு இறைவனை அடையும் வழியை காண்பிக்க போகிறார். இறைவனிடம் செல்லப்போகின்றோம் என்று மகிழ்ச்சியில் பட்டினத்தாரை வணங்கி நின்றார்.

பத்ரகிரியாருக்கு ஆசி வழங்கிய பட்டினத்தார் மேற்கு வாசலில் அமர்ந்திருக்குமாறும் தான் கிழக்கு வாசலில் அமர்ந்திருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு கிழக்கு வாசலில் அமர்ந்துவிட்டார். சிலநாட்கள் சென்றபிறகு ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஓர் ஏழை வடிவத்தில் வந்து பட்டினத்தாரிடம் பசிக்கிறது உணவு இருந்தால் கொடுங்கள் கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே சென்று அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு உணவு கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை தங்களிடம் அனுப்பினார் உணவு ஏதேனும் இருந்தால் தாருங்கள் என்று கூறினார். பதறிப்போன பத்திரகிரியார் நாடு அரசபதவி சொத்துக்கள் என அனைத்தையும் துறந்த எனக்கு இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பிச்சை ஓடும் உடைந்து போனது. பத்ரகிரியாருக்கு இருந்த சிறிய பற்றும் போனது. மேலும் சில வருடங்கள் பட்டினத்தாரும் பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் கோவிலிலேயே ஆளுக்கொரு வாசலில் அமர்ந்திருந்தார்கள்.

ஞானியாகிய பத்திரகிரியாரிடம் உணவு சாப்பிட்டதன் விளைவாக இறந்த நாய் தனது அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்தது. தனது தந்தையிடம் அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவமுனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணை விசாரிக்க பெண் தான் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினாள். மேலும் பெண் பிறப்பதற்கு முன் தன் நாட்டில் நடந்த சம்பவங்களை சில கூறினாள். ஆச்சரியமடைந்த அரசரும் பெண் கூறுவதில் உண்மை இருப்பதாக நம்பினார். தவமுனிவரையே திருமணம் செய்து கொள்வேன் என்ற பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அரசர் தனது பெண்ணை அழைத்துச் சென்றார்.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் மேற்கு வாசலுக்கு வந்த இளவரசி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கினாள். தாங்கள் உணவு கொடுத்து பசி தீர்ந்த தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். நான் முதுமையில் இருக்கின்றேன். தங்களோ சிறு பிள்ளை. இறைவனை தேடி நாடு செல்வம் அரச சுகங்கள் அனைத்தையும் துறந்து சன்யாசியாகி இங்கு அமர்ந்திருக்கின்றேன். மீண்டும் உலக பந்த பாசத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை ஆகவே சென்றுவிடுங்கள் என்று கூறினார். இளவரசி பிடிவாதமாக இருந்தாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் வந்தார். குருவே எனக்கு என்ன சோதனை இது. எனக்கு முக்திநிலை கிடையாதா என்று கேட்டார்.

பட்டினத்தார் எல்லாம் மகாலிங்கன் செயல் அவரை தரிசியுங்கள் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் சென்றாள் அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் இளவரசியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முக்தி அளிக்காமல் தன்னுடைய சிஷ்யருக்கு முக்தி கொடுத்துவிட்டாய். தனக்கு எப்போது என்று முக்தி கிடைக்கும் என்று இறைவனை வேண்டினார். அப்போது அசிரிரியாய் இறைவன் குரல் கேட்டது. இறைவனை நம்புகிறவனை விட குருவை நம்பும் சீடன் மிகச்சிறந்தவர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி அளித்தோம் உமக்கு நுனிக்கரும்பு என்று இனிக்கிறதோ அன்று முக்தி கிடைக்கும் என்று இறைவன் கூறினார். மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருந்து கிளம்பினார். பத்திரகிரியார் பாடிய பாடல்கள் மெய்ஞானப் புலம்பல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

பட்டினத்தார் தனது தாயாரின் இறுதி காலம் வந்துவிட்டதை அறிந்து தாயார் இருக்கும் ஊருக்கு வந்தார். தாயின் இறுதி சடங்கின்போது மரத்திலான விறகில் தனது தாயார் உடலை வைக்க வேண்டாம் வாழை மர மட்டையில் வையுங்கள் என்றார். அவர் கூறியபடியே உறவினர்கள் பச்சை வாழை மட்டையில் வைத்து சிதை அடுக்கினார்கள். அப்போது அவர் தாயை எண்ணி பாடல்கள் பாடினார். உடனே பச்சை வாழை மட்டை எரியத்தொடங்கியது. தனது தாயாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது கடமையை நிறைவேற்றினார் பட்டினத்தார்.

சேந்தனார் என்பவர் பட்டினத்தார் செல்வந்தராக இருக்கும் போது அவருக்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர். ஊருக்குள் பட்டினத்தார் வந்திருக்கும் தகவல் அறிந்த சேந்தனாரின் மனைவியும் மகனும் பட்டினத்தாரிடம் வந்து அழுது தொழுது முறையிட்டனர். ஜயா தங்களிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த சேந்தனாரின் மனைவி நான். இவன் எங்கள் பிள்ளை. தங்களின் செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்த தங்களின் கணக்குபிள்ளை சேந்தனாரை மன்னர் சிறையில் அடைத்து விட்டார். தாங்கள்தான் சிறையில் இருந்து அவரை விடுவித்து அருள வேண்டும் என வேண்டினார்கள். அனைத்தையும் கேட்ட பட்டினத்தார் திருவெண்காடு சுவாமி சந்நிதிக்கு அனைவரையும் அழைத்துச் சென்று இறைவனை துதித்து பாடினார்.

பட்டினத்தாரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் வினாயகரை அழைத்து அரசனின் சிறையில் இருந்து சேந்தனாரை விடுதலை செய் என்றார். வினாயகர் துதிக்கையை நீட்டி சிறைச்சாலையில் இருந்த சேந்தனாரை விடுதலை செய்து பட்டினத்தார் முன் விட்டார். நடந்தது எதையுமே அறியாமல் தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல எழுந்த சேந்தனார் தன் எதிரில் பட்டினத்தார் இருப்பதைக் கண்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார். குருநாதா அரசர் வைத்த சிறையில் இருந்து விடுதலை அளித்ததைப் போல பிறவிப் பெருங்கடலில் இருந்தும் அடியேனை விடுவிக்க வேண்டும் என வேண்டினார். சேந்தனாரின் பக்குவ நிலையை அறிந்த பட்டினத்தார் சேந்தா குடும்பத்தோடு நீ தில்லைக்குப் போய் காட்டில் விறகு சேகரித்து வாழ்க்கை நடத்து. தினந்தோறும் ஒரு சிவனடியாருக்காவது உணவு அளித்து வா நீ நினைத்தது நடக்கும் என்று சொல்லி வழிகாட்டினார். குருநாதரையும் திருவெண்காட்டு ஈசனையும் வணங்கிய சேந்தனார் பட்டினத்தார் சொற்படி தில்லையை அடைந்து அதன்படியே வாழ்க்கை நடத்தி இறைவனடி சேர்ந்தார்.

சீடர் பத்திரகிரியார் முக்தி அடைந்த பிறகு பட்டினத்தார் சிதம்பரம் கனகசபையையில் நடராஜப் பெருமானின் நடனத்தை தரிசித்தார். அங்கிருந்து வெளிவந்ததும் பசி உண்டாயிற்று. பட்டினத்தாரின் பசியைப் போக்க அன்னை சிவகாமசுந்தரி பெண் வடிவில் வந்து உச்சிக்காலப் பிரசாதத்தை அவரிடம் தந்தாள். பட்டினத்தார் உண்டு பசியாறினார். பட்டினத்தார் பசியாறியதும் அம்பிகை அங்கிருந்து மறைந்தாள். அதன் பின்னரே அவருக்கு உண்மை தெரியவர உலகாளும் அன்னையே எதிரில் வந்து உணவு தந்தும் உணராமல் ஏமாந்து போனேனே என புலம்பி பாடல்கள் பாடினார்.

பட்டினத்தார் காஞ்சியை அடைந்து சுவாமி தரிசனம் செய்து கச்சித் திருவந்தாதி, திருவேகம்பமாலை, கச்சித் திருவகவல் முதலிய பாடல்களைப் பாடி சில நாட்கள் தங்கினார். ஒரு நாள் பசி தாங்காமல் இறைவனை நினைத்து பாடல்கள் பாட அம்பிகை காமாட்சி சுமங்கலி வடிவத்தில் வந்து அவருக்கு உணவளித்தாள்.

காளத்தி நாதனை தரிசிக்க காளாத்தி நோக்கி நடந்தார். இறைவனை தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் பகல் இரவு பாராமல் எப்போது உன்னைக் காணவல்லேன் காளத்தி ஈஸ்சுரனே என்றபடி காட்டிற்குள் நடந்து கொண்டிருந்த பட்டினத்தாருக்கு காட்டில் இருந்த கொடூரமான ஜீவன்கள் கூட உதவி செய்தன. காட்டு யானைகள் முன்னால் நடந்து போய் முள் சிறுகட்டைகள் முதலியவற்றை நீக்கி வழியை உண்டாக்கின. புலிகள் தங்கள் வால்களால் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தன. வாயில் புல் கொண்ட மான்கள் அணிவகுத்து நின்று வழி காட்டின. மயில்கள் தோகைகளாலும் பறவைகள் சிறகுகளாலும் விசிறியும் நிழல் தந்தும் உதவின. குரங்கு முதலான விலங்கினங்கள் உணவுக்கு காய் கனி கிழங்குகளைக் கொண்டு வந்து தந்தன. பட்டினத்தாரின் உள்ளம் நெகிழ்ந்தது. என்ன செயல் என்ன செயல் அனைத்து பெருமையும் காளத்தி ஈசனுக்கே உரியது என்று பாடல்கள் பாடி காளாத்திஸ்வரரை தரிசித்தார்.

கரும்பை காணும் போதேல்லாம் நுனிக்கரும்பு இனிக்கிறதா என்று சாப்பிட்டு பார்த்து ஊர் ஊராக சிவனை தரிசித்துக்கொண்டு வந்தார். சென்னையில் இருக்கும் திருவொற்றியூர் வந்த பொழுது அவருக்கு நுனிக்கரும்பு இனித்தது. முக்தி அடைய நேரம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருக்கும் கடற்கரைக்கு சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு தனது சித்துக்கள் மூலம் இனிப்புகள் கொடுத்து மகிழ்வித்தார்.
தன் அமர்ந்து கொள்கிறேன் என்னை ஒரு கூடை கொண்டு முடிவிடுங்கள் நான் வேறு இடத்தில் இருந்து வருகிறேன் இப்படியாக நாம் விளையாடலாம் என்றார். மகிழ்ந்த சிறுவர்கள் பட்டினத்தாரை ஒரு கூடையை வைத்து மூடிவிட்டு கூடையை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பட்டினத்தார் வேறு இடத்தில் இருந்து வந்தார். குழந்தைகள் வியப்போடு ஓடி வந்தார்கள். மறுபடியும் தன்னை மூடிவிட சொன்னார். வேறு இடத்தில் இருந்து வந்தார். பல தடவைகள் இவ்வாறு நடந்தது. சிறுவர்களுக்கு உற்சாகம் உண்டானது. ஒரு முறை மூடிய பொழுது வெளியில் எங்கும் இருந்து பட்டினத்தார் வராததால் கூடையை திறந்து பார்த்தார்கள் சிறுவர்கள். அதனுள் பட்டினத்தார் இல்லை. சிவலிங்கமாக காட்சியளித்தார்.

பட்டினத்தார் பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை

  1. கோயில் நான்மணிமாலை
  2. திருக்கழுமல மும்மணிக்கோவை
  3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி
  5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது

நமச்சிவாயக் கவிராயர்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் வைத்த பக்தியினாலும் பேரன்பினாலும் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையை தொழுது பாடினார். இரவு வரை தொடர்ந்து பாடியவர் கோவில் மூடியதும் அங்கிருந்து கிளம்பினார். இல்லத்திற்குத் திரும்பும் போதும் உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர் வெற்றிலை தரித்து போட்டுக் கொண்டு வாய்விட்டுப் பாடிக்கொண்டே வந்தார். மெய் மறந்து பாடியபோது அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து தெறித்த எச்சில் துளிகள் உலகம்மையின் மேல் பட்டது. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறுநாள் காலையில் கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர் உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார்.

இறைவழிபாட்டுக்கு அச்சமயம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் உடனே கண்டு பிடியுங்கள் என்று உத்தரவிட்ட அரசன் அரணைமனைக்கு திரும்பி இந்த வேதனையிலேயே இருந்தான். இரவு அரசன் இந்த யோசனையிலேயே தூங்கிய அரசனின் கனவில் வந்த உலகம்மை வருந்தாதே அரசனை என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவன் பின்னே நான் தான் சென்றன். பாடுவதில் தன்னை மறந்த நிலையில் இருந்த நமச்சிவாயக் கவிராயர் வாயிலிருந்த வந்த எச்சில் என் மீது பட்டது. அவனை விட சிறந்த பக்தன் கிடையாது. அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாய் என்று கூறி மறைந்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்த அரசன் அம்பிகையின் உத்தரவின் படி நமச்சிவாயக் கவிராயரை கௌரவிக்க எண்ணி அவரை கோவிலுக்கு வரவழைந்தான். நமச்சிவாயக் கவிராயர் உலகம்மையின் மீது வைத்திருக்கும் அன்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரசன் அவரிடம் சென்று தாங்கள் உலகம்மை மீது வைத்த அன்பு சத்தியமானால் இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான் அரசன். உலகம்மை அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார். நமச்சிவாயக் கவிராயர் அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.

விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே

எனும் பாடலை பாடி முடித்த சமயம் அனைத்து தங்க நாரும் அறுந்து தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாயக் கவிராயர் கரத்திற்கு தாவி வந்தது. அரசர் முதல் அனைவரும் நமச்சிவாயக் கவிராயர் பாதத்தில் விழுந்தனர். இப்பாடல் கொண்ட தொகுப்பு உலகம்மை கலித்துறை அந்தாதி என்று அழைக்கப்படுகிறது. இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

அவர் இயற்றிய கலித்துறை அந்தாதி கீழ் PDF நூல் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிள்ளை உறங்கா வில்லிதாசர்

வில்லிதாசர் என்பவர் அவருடைய மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் தனுர்தாசர். அவருடைய மனைவியின் கண்கள் மிகவும் பிரகாசமாக அழகுடன் இருந்தது. இதனால் தன் மனைவியிடம் மிகவும் அன்புடன் இருந்தார். பெரிய செல்வந்தரான இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராகவும் இருந்தார். அந்த ராஜ்யத்தில் வீரம் பொருந்தியவராக இருந்ததால் நாட்டில் நன்மதிப்புடன் விளங்கினார். ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களுடன் நடந்து சென்ற பொழுது வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சிக்கு வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு கையால் குடை பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் அவள் நடக்கும் பொழுது அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார். வில்லிதாசருடைய அன்யோன்யமான இச்செயலைக் கண்டு வியப்படைந்த ராமானுஜர் வில்லிதாசரை அழைத்து அந்த பெண்மணிக்கு சேவை செய்வதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு வில்லிதாசர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன். மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான் எதையும் செய்யத் தயார் என்றும் கூறினார்.

இதனைக் கேட்ட ராமானுஜர் அழியப்போகும் அழகின் மேல் இவ்வளவு ஆசையாய் இருக்கிறாரே என்று வில்லிதாசரிடம் உங்கள் மனைவியின் கண்களை விட வேறு ஒரு அழகான கண்களைக் காண்பித்தால் அதற்கு அடிமையாகி விடுவீர்களா என்று கேட்டார். வில்லிதாசரும் அத்தகைய கண்களை காண்பித்தால் அந்த கண்களுக்கு தான் அடியாமையாவதாக ஒப்புக்கொண்டார். ராமானுஜர் வில்லிதாசரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துச் சென்று திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் காட்டியருளிய அழகிய கண்களை வில்லிதாசருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார். ரங்கநாதரும் தம்முடைய அழகிய கண்களை வில்லிதாசருக்கு காட்டியருளினார். வில்லிதாசரும் அக்கண்களின் உண்மையான அழகை உணர்ந்து உடனே ராமானுஜரிடம் சரணடைந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார். வில்லிதாசருடைய மனைவியும் ராமானுஜருடைய பெருமையை உணர்ந்து ரங்கநாதரிடம் சரணடைந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டினாள். தம்பதிகள் இருவரும் தங்களுடைய உடைமைகளைத் துறந்து ரங்கநாதர் மற்றும் ராமனுஜருடைய திருவடித் தாமரைகளுக்குத் தொண்டு செய்வதற்காக ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். தன் சீடரான வில்லிதாசருக்கு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கருவறை மற்றும் கோயில் நகைகளை காக்கும் பணியை ராமானுஜர் ஒப்படைத்தார்.

ஸ்ரீரங்கநாதர் வில்லி தாசரை முழுமையாக ஆட்கொண்டார். ஸ்ரீ ராமரின் வனவாசத்தின் பொழுது லட்சுமணன் உறங்காமல் ராமருக்கு காவல் காத்தது போல் வில்லி தாசரும் ரங்கநாதரை இடைவிடாமல் துதித்துக் கொண்டிருந்தார். இதனால் அவருக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் என்ற திருநாமம் ஏற்பட்டது. வில்லிதாசரும் அவர் மனைவியும் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் ஆனர்கள். ராமானுஜருக்கு பணிவிடை செய்து தங்களுடைய எளிமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை ரங்கநாதரின் கடைசி நாள் உற்சவம் தீர்த்தவாரியன்று ராமானுஜர் வில்லிதாசரின் கரங்களை பிடித்தபடி கோயிலின் குளத்திலிருந்து ஏறி வந்தார். இதனை கண்ட சீடர்கள் சன்யாசியாகிய ராமானுஜர் பிறப்பால் தாழ்ந்த வில்லிதாசரின் கரங்களை பிடிப்பது முறையில்லை என்று நினைத்தார்கள். சீடர்கள் தாங்கள் நினைத்ததை ராமனுஜரிடம் கூறினார்கள்.

ராமானுஜர் வில்லிதாசர் மற்றும் அவரது மனைவி பொன்னாச்சியாரின் மகிமையை சீடர்கள் அனைவரும் புரிந்து கொள்வதற்காக சீடர்களிடம் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்று அங்கேயுள்ள நகைகள் பொருட்கள் அனைத்தையும் முடிந்தவரை களவாடிக் கொண்டு வரச்சொன்னார். சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்ற பொழுது பொன்னாச்சியார் உறங்கிக் கொண்டிருந்தார். மிகவும் நிசப்தமாக அவரிடம் சென்று அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்ற முற்பட்டனர். பொன்னாச்சியாரும் இந்த இவர்கள் வறுமையின் காரணமாக களவாடுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் நகைகளை எளிதில் கழற்றுவதற்கு இடம் கொடுத்தார். அந்த சீடர்கள் அவருடைய ஒரு பக்கத்தின் நகைகளை கழற்றிய பின் அடுத்த பக்கத்தின் நகைகளை எளிதில் கழற்றுவதற்காக தான் இயல்பாக தூக்கத்தில் திரும்புவது போல பாசாங்கு செய்தார். ஆனால் அவர் திரும்புவதைக் கண்டு அச்சமடைந்த சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திலிருந்து ராமானுஜரிடம் ஓடினர். நடந்த சம்பவங்களைக் கேட்டபின் ராமானுஜர் சீடர்களை மறுபடியும் வில்லிதாசரின் இல்லத்திற்கு சென்று அங்கு நடப்பவைகளை கவனிக்கச் சொன்னார்.

ராமானுஜரின் உத்தரவுப்படி மீண்டும் வந்த சீடர்கள் வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சியாரிடம் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். வில்லிதாசர் பொன்னாச்சியாரின் ஒரு பக்க நகைகளை மட்டும் காணவில்லை எங்கே என கேட்டார். அதற்கு பொன்னாச்சியார் சிலர் தான் அணிந்திருந்த நகைகளை களவாட வந்த பொழுது நான் உறங்குவது போல் பாவனை செய்து அவர்கள் எளிதில் களவாடும்படி செய்தேன். பிறகு அவர்கள் அடுத்த பக்கம் களவாடுவதற்கு ஏதுவாக நான் திரும்பிப் படுக்கும் பொழுது அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட வில்லிதாசர் மன வருத்தமுற்று நீ கல்லை போல கிடந்து அவர்கள் விருப்பம் போல நகைகளை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் இருவரும் களவாட வந்தவர்களுக்குக் கூட உதவும் மனப்பான்மை உடையவர்களாக இருந்தனர். வில்லிதாஸர் தம்பதிகளுடைய உரையாடலைக் கேட்ட சீடர்கள் ராமானுஜரிடம் திரும்பச் சென்று நடந்தவைகளை விவரித்து அந்த சிறந்த தம்பதிகளின் பெருந்தன்மையை ஒப்புக் கொண்டனர். அதற்கு மறுநாள் ராமானுஜர் வில்லிதாசரிடம் நடந்தவற்றை விவரித்து நகைகளை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.

வில்லிதாசர் தனது இறுதி நாட்களின் பொழுது வைஷ்ணவர்கள் அனைவரையும் தனது இல்லத்திற்கு அழைத்துத் பாதபூஜைகள் செய்தார். அப்பொழுது பொன்னாச்சியாரிடம் தாம் பரமபதத்தை அடையப் போவதாகவும் நீ தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராமானுஜரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டே தனது திருமேனியை நீத்தார் வில்லிதாசர். வைணவர்களுக்கு உண்டான முறைப்படி அவருக்கு இறுதிக்கடன்களை செய்தார்கள் வைணவர்கள். வில்லிதாசரின் திருமேனியை பல்லக்கில் வைத்து தெருக்கோடி வரை சென்றவுடன் வில்லிதாசரின் பிரிவை தாங்கமுடியாமல் பொன்னாச்சியார் வாய்விட்டு கதறி அழுது தன் உயிரை அப்பொழுதே நீத்தார். அதைக்கண்டு திகைத்த வைணவர்கள் பொன்னாச்சியாரையும் வில்லிதாசருக்கு பக்கத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர். மணவாள மாமுனிகள் இயல் சாற்றுமுறையை (உற்சவகாலங்களின் முடிவில் ஓதப்படுவது) பல்வேறு ஆசார்யர்களின் பாசுரங்களின் அடிப்படையாக கொண்டு தொகுக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசர் இயற்றிய பாசுரம் முதலில் இடம்பெற்றுள்ளது. பிள்ளை லோகாச்சார்யர் தனது தலை சிறந்த க்ரந்தமான ஸ்ரீவசன பூஷணத்தில் எம்பெருமானின் மங்களாசாஸனத்தை விவரிக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசரைக் கொண்டாடியுள்ளார்.

கபீர்தாஸர்

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் முன்பு சுகப்பிரம்மர் வணங்கி நின்றிருந்தார். பாரத பூமியில் பக்தி குறைந்திருந்த அந்த சமயத்தில் நாராயணன் சுகப்பிரம்மரை பூமியில் அவதரிக்க ஆணையிட்டார். மறுபடியும் ஒரு கருவறைக்குள் புக விரும்பாத சுகப்பிரம்மர் சுயம்புவாக பூமியில் காசியில் உள்ள கங்கை கரையில் தோன்றினார்.

புண்ய சேத்ரங்களிலேயே சிறந்த காசி மாநகரில் தமால் எனும் பெரியார் ஒருவர் தன் மனைவியுடன் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். இருவரும் நாள் தோறும் ஒருவருக்காவது அன்னதானம் செய்தும் தான் நெய்த துணிகளை தானமாக வழங்கி விட்டு தான் உணவு அருந்துவார்கள். இருவருமே தங்களுக்கென ஒரு குழந்தை இல்லை என பெரிதும் வருந்தினார்கள். ஒருநாள் விருந்தினராக வந்த பெரியவர் ஒருவர் அவர்களது சேவையை கண்டு வியந்து நீங்கள் செய்யும் இந்த விருந்தோம்பல் உங்களோடு நின்று விட இறைவன் விடமாட்டார். இந்த மாபெரும் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களுக்கு ஒரு மகனை அளிப்பார் என்று வாழ்த்திவிட்டு சென்றார். தமால் ஒரு நாள் குழந்தை இல்லையே என மனம் நொந்தவராக துணி நெய்வதற்கான நூல் சுருள்களை அலசுவதற்காக கங்கைக்கு கரைக்கு சென்றார். அங்கும் பலர் பகட்டான வழிபாடுகளைச் செய்வதைக் கண்டு காசிக்கு வந்தும் உலக ஆசைகளில் உழல்கிறார்களே என வருந்தி நினைக்கையில் அவரின் கையில் இருந்த நூல் சுருள் கங்கை நதியோடு சென்றது. இந்த நூல் இருந்தால் துணி நெய்து ஐம்பது பேருக்கு கொடுக்கலாமே என வருந்தியவராக அதைத் தொடர்ந்து கரை ஓரமாகவே ஓடினார். அந்த நூல் சுருள் கங்கையின் வேகத்தில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று மறைந்தது. அவர் நின்ற இடத்துக்கு அருகே ஒரு பர்ணசாலை இருந்தது. வருத்ததுடன் இருந்த தமால் இறைவனை தியானிப்போம் என்று அங்கே அமர்ந்தார்.

கங்கைக் கரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் தமால். நாராயணனின் ஆணைக்கினங்க சுயம்புவாக தோன்றிய சுகப்பிரம்மர் குழந்தையாக அழும் குரல் கேட்டுக் கண் விழித்தார் தியானத்தில் இருந்த தமால். வேறு யாரும் அருகில் இல்லாத நிலையில் தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அவரால் எடுத்துவரப்பட்ட குழந்தையைக் கண்டு அவரது மனைவியும் மனம் மகிழ்ந்தார். அக்குழந்தைக்கு கபீர் எனப் பெயரிட்டனர். கபீர் என்றால் பெரிய என்று பொருள். குழந்தை கபீரின் விளையாட்டுகள் கூட தெய்விக மணம் கமழ்ந்த வண்ணம் இருந்தன. தளர்நடை போட்ட பருவத்திலேயே தந்தையிடம் நெசவும் கற்றான். எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சிறுவன் தெய்வத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டே செய்தான். நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்து வந்தார். சிறுவயதிலேயே கபீருக்கு அவனது பெற்றோர் மணமுடிக்க விரும்பினர்.

முன்பொரு காலத்தில் சுகப்பிரம்மரை மணக்க முயன்று தோற்ற ரம்பை அவர் பூவுலகில் பிறந்திருப்பது அறிந்து அவரைப் பின்பற்றி அவரது உறவினருக்கே சீந்தரா எனும் மகளாகப் பிறந்திருந்தாள். அவளின் அழகைக் கண்டு கபீரின் பெற்றோர் அவளை கபீருக்கு திருமணம் பேசி முடித்தனர். திருமணத்துக்கு முன் தங்களது மத வழக்கப்படி சுன்னத்து செய்ய அவரது உறவினர்கள் முயன்றனர். சுன்னத் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர்களுடன் வாதிட்டுக் கபீர் வென்றார். இதனால் கோபமடைந்த உறவினர்கள் மதச்சடங்குகளை அவமதிக்கும் கபீரை வீட்டை விட்டுத் துரத்த வேண்டுமெனக் கூறினர். கபீரும் வீட்டைத் துறந்து ஓட முயன்றார். கபீரை இழக்க மனமின்றி அவரது பெற்றோர் அவரைத் தடுத்து வீட்டிலேயே தங்கித் தறி நெய்யும்படி கூறினார்கள்.

நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்ற கபீர்தாஸர் ராமரின் வரலாற்றுப் பெருமையை பஜனை வடிவமாக பாடலாக பாடி வளர்ந்து வந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால் நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால் இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் போனது. ஆனாலும் ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. திருமணப் பேச்சு மீண்டும் ஆரம்பித்தது. சுன்னத்து செய்து கொள்ளாதவனுக்கு பெண் கொடுக்கமாட்டோம் எனப் பெண் வீட்டார் கூறிவிட்டார்கள். கபீரின் தாய் தந்தையர் மனம் வெதும்பினர். சீந்தராவின் தந்தையின் கனவில் தோன்றிய இறைவன் உன் மகளைக் கபீருக்கே மணம்முடி எனக்கூறினார். இதனால் தந்தை குழப்பமடைந்த நிலையில் இருந்தார். சீந்தராவும் கபீரையே மணப்பேன் இல்லை என்றால் வேறு ஒருவரை மனதாலும் நினைக்க மாட்டேன் எனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தாள். இறுதியில் இறைவனே ஒரு முதியவர் வேடத்தில் வந்து ஒவ்வொருவரிடமும் சமாதானமாகப் பேசி திருமணத்தை செய்து வைத்தார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் இவருடைய மனம் ஆன்ம ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர் இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது. இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தாலும் ராமரின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். தமாலின் வீட்டில் இரவும் பகலும் தறியின் இசையும் கபீரது இசையும் இறைவனது புகழைப் பாடியபடி இருந்தன. ஒருநாள் மெய்மறந்து கபீர் பாடும் போது அவரது கை நெசவு செய்வதை நிறுத்தி விட்டது. பக்தனின் பணியில் இறைவனே அமர்ந்து தறியை இழுத்தார். தறி தானாகவே நகர்ந்து துணிகளை நெய்தது. ஒரு முழம் துணி நெய்து விட்டு பின்பு கபீர் தியானத்தில் அமர இறைவன் இன்னொரு முழம் நெய்தார். காலையில் வந்து கண்ட அவரது தாயார் சோம்பேறி இரவெல்லாம் நெய்தது இரண்டே முழம்தானா இதை விற்றுப் பணம் வந்தால் தான் உனக்கு இன்று உணவு எனக் கடிந்தார்.

கபீரும் தறியிலிருந்து துணியை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். அந்த அழகிய துண்டை எவரும் வாங்கவில்லை. மனம் தளர்ந்த கபீர் வீட்டிற்கு திரும்பி வரும் போது ஓர் அந்தணர் அந்தத் துணியைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார். கபீர் ஓடி அவரை வழி மறித்துத் துணியைப் பிடித்து இழுத்தார். அந்த இழுபறியில் துணி இரண்டாகக் கிழிந்து விட்டது. தான் கிழித்த துணியைத் தானே எடுத்துக் கொள்வதாகக் கூறிய அந்தணர் சில சோழிகளை அதற்கு விலையாகத் தந்தார். கோபம் கொண்ட கபீர் அந்த சோழிகளை வீசி எறிந்தார். அந்தணரோ என்னிடம் வேறு ஒன்றுமில்லை. அந்தத் துண்டை இலவசமாக தந்தால் நான் பிருந்தாவனம் செல்வதால் அதைக் கண்ணனுக்கு சாத்தி மகிழ்வேன் என்றார். அதை விற்றுப் பணம் எடுத்துச் செல்லாவிட்டால் தான் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதால் கபீர் தர மறுத்தார். ஆனால் அந்தணரோ ராமரின் திருநாமத்தின் பெருமையையும் அதை காசி விஸ்வநாதரே காசியில் இறப்பவர்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசித்து முக்தியளிக்கிறார் என்பதையும் கூறி தானத்தின் பயனைப் பற்றி எடுத்துக்கூறி நீண்டதொரு பிரசங்கம் செய்து அவரது தயக்கத்தைப் போக்கினார். இடைவிடாது ராம நாமத்தை ஜபித்து பக்தி மார்க்கத்தின் வழியாக இறைவனை அடைந்து கொள். அதற்கு சற்குரு ஒருவரைத் தேடி அடைந்து கொள் என்று சொல்லி ஒரு துண்டுத் துணியுடன் மறைந்து விட்டார்.

கபீர் அந்தணர் கூறியபடி ராம நாமத்தினையே துணையாகக் வைத்துக் கொள்வோம் என எண்ணியவராக மீதியிருந்த ஒரு முழத்துண்டை மடித்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தார். கபீரின் எதிரே ஒரு முஸ்லீம் முதியவர் வந்தார். கபீரை நெருங்கி ஐயா குளிர் அதிகமாக இருக்கிறது. நீங்கள் சாதுக்களுக்கு தான தருமங்கள் அளிப்பவர் என்று கேள்விப்பட்டேன். இந்த ஒரு முழம் துணியைத் தந்தால் தலையில் கட்டிக் கொண்டு பனியிலிருந்து காத்துக் கொள்வேன் என்றார். சற்று முன் அந்தணர் கூறியவற்றை மனத்தில் நினைத்தவராக கபீர் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி அந்தத் துண்டை முதியவரிடம் தந்தார். அதற்கு அந்த முதியவர் அல்லாவின் பெயரை சொல்லாமல் ஏதோ ஒரு மனிதனின் பெயரைச் சொல்கிறாயே. உன்னிடம் வாங்க மாட்டேன் எனக்கூறி கபீரின் பெற்றோரிடம் இதனை சொல்வதற்கு கபீரின் வீட்டிற்கு விரைந்தார். தாய் அடிப்பாள் என்று பயந்த கபீர் ஒரு பாழடைந்த வீட்டில் ஒளிந்து கொண்டார். உன் மகன் குலத்தைக் கெடுக்க வந்திருக்கிறான். இன்று காலையில் யாரோ ஓர் அந்தணருக்கு ஓர் அழகான துணியை கொடுத்தான். நான் எனக்குக் கொடுக்கச் சொன்னேன். இரண்டாகக் கிழித்து ஆளுக்குப் பாதி என்கிறான். நான் இத்தனை சின்னத் துண்டு வேண்டாம் என்றேன். என் தாயாரிடம் போய்க் கேள் பெரிய துணியாகக் கிடைக்கும். ஆனால் நான் தானம் செய்ததைச் சொல்லாதே என்று பாழடைந்த இந்த வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கபீரை பற்றி குற்றம் சொல்லி விட்டு சென்றார்.

துணியை விற்ற பணத்துடன் கபீரை எதிர்பார்த்த அவரது தாயார் இதனை கேட்டதும் கபீரை பிரம்பினால் இரண்டு அடி அடித்தார். கபீர் ஹரே ராம் ஹரே ராம் எனக் கதறினார். அந்த அடிகள் இறைவனது முதுகிலும் பட்டன. இருவருக்கும் காட்சி கொடுத்த இறைவன் அம்மா நீ பாக்யவதி கபீர் பரம ஞானி எனது மெய்த்தொண்டன். நீ அவனை அடித்தது எனது முதுகிலும் பட்டிருக்கிறது பார் என்று காட்டினார். இறைவனைக் கண்டு மூர்ச்சையுற்ற தாயாரை தெளிவித்து விட்டு தகுந்த குருவை அடைந்து பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும்படி கூறிவிட்டு மறைந்தார்.

வாரணாசியில் ராமானந்தர் என்ற பெரும் ஞானி பலரைப் பக்திமார்க்கத்தில் வழி நடத்தி வந்தார். கபீர் அவரிடம் உபதேசம் பெற சென்றார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரென அவரை ராமானந்தரின் சீடர்கள் மடத்துக்குள்ளேயே விடாமல் கபீரை தடிகளால் அடித்துத் துரத்தினார்கள். அடிகளையும் பொறுத்துக் கொண்டு கபீர் அங்கேயே உட்கார்ந்து விட்டார். ராமானந்தரை சந்திக்க விடாமல் கபீர் ஒரு திருடன் எனக் கூறி அங்கிருந்து அடித்து விரட்டி விட்டனர். ராமானந்தரிடம் தீட்சை பெற கபீருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. ராமானந்தரோ விடியற்காலையில் கங்கையில் நீராட வருகிறார். அந்தப் படியிலே நாம் படுத்திருந்தால் இருளிலே மிதித்து விடுவார். பெரியோர்கள் தவறு செய்தாலும் நன்மை செய்தாலும் இறைவனுடைய திரு நாமத்தையே சொல்லுவார்கள். அதையே நாம் உபதேசமாகவும் திருவடி தீட்சையாகவும் கொள்வோம் என்று திட்டமிட்டு அன்று இரவே கங்கை படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார். அன்றிரவு ஸ்ரீராம லட்சுமணர்கள் அந்த மடத்தை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறுவதைப் போல ராமானந்தர் கனவு கண்டார். உடனே அலறிக்கொண்டு எழுந்து கங்கைக்கரை நோக்கி சென்றார். கபீரை இருட்டில் மிதித்துவிட்ட ராமானந்தர் வழக்கப்படி ராம் ராம் என உச்சரித்த வண்ணம் கங்கையில் இறங்கி நீராட சென்று விட்டார். அப்போது ராமனந்தர் செபித்த ராம ராம என்ற திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது.

ராம மந்திரத்தை தனது குருவின் பாத தீட்சையாக ஏற்றுக் கொண்ட கபீர் வீட்டுக்குத் திரும்பி நெற்றித் திலகமிட்டு துளசி மாலையணிந்து ராம நாமத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தார். சிறு வயதிலேயே பகவானைப் பற்றி உரையாடல்கள் நிகழ்த்தினார். இதனால் ஊரில் இருக்கும் தன் குல மக்களால் தண்டிக்கப்பட்டார். இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கபீரின் ராமநாம ஜபம் செய்வதினால் அவருக்கு எதிராக முஸ்லீம்கள் நமது மதத்திற்கு எதிரானது என்று அவருடன் வாதிட்டனர். அவர்களுடன் வாதிட்ட கபீர் அவர்களை ராமனும் ரஹீமும் ஒன்றே என்பதையும் இறைவன் ஒருவனே என்றும் வாதிட்டு ஒப்புக்கொள்ள வைத்தார்.

அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற ஒரு மகான் இருந்தார். அவருடைய சீடர் கோரக்நாதர் என்பவர் சில சித்திகள் கைவரப்பெற்றார். அதனாலேயே கர்வம் கொண்டவராக ஊர் ஊராகச் சென்று அனைவரையும் வாதத்தில் வென்றார். ராமானந்தரையும் வெல்ல விரும்பி காசி மாநகரில் அவரது மடத்துக்கு வந்து அவரை வாதத்தற்கு அழைத்தார். ராமானந்தரின் சீடர்கள் கோரக்நாதரை கண்டு ஓடி ஒளிந்தனர். சாந்த சீலரான ராமானந்தர் செய்வதறியாது திகைத்தவராகத் தியானத்தில் ஆழ்ந்தார். இவை யாவற்றையும் கேள்வியுற்ற கபீர் கோரக்கருடன் வாதம் புரிய ராமானந்தரின் அனுமதியைக் கோரினார். ஆனால் ராமானந்தர் இது சிறுபிள்ளைத்தனம் எனக் கருதி கபீர் வாதத்தில் தோற்றால் அது தன்னைப் பாதிக்கும் என அனுமதி கொடுக்கவில்லை. கபீரோ குருவின் ஆசிகள் மட்டுமே போதும் கோரக்நாதர் உடனான வாதில் நிச்சயம் வெற்றி பேறுவேன் எனக்கூறி ராமானந்தரின் அனுமதியை பெற்றார்.

கோரக்நாதரின் எதிரில் சென்ற கபீர் என் குருவின் வல்லமை தெரியாமல் இருக்கின்றீர்கள். வாதிலும் பிரம்ம ஞானத்திலும் அவர் முன் நிற்கக்கூட உங்களுக்குத் தகுதி இல்லை. மரியாதையாகச் சென்று விடுங்கள் என்று கர்ஜித்தார். சிறுவனே உன்னை என்ன செய்கிறேன் பார் என கோரக்நாதர் எழுந்தார். தனக்கு உதவ வந்த ராமானந்தரை தடுத்த கபீர் தன் கையிலிருந்த பட்டுநூல் கண்டை ஆகாயத்தில் வீசினார். அது பூமியிலிருந்து ஆகாயம் வரை ஒரு மரம் போல் வளர்ந்து நின்றது. அதன் மேலேறி உச்சியில் அமர்ந்த கபீர் கோரக்நாதரை வானவெளியில் அமர்ந்து வாதம் புரிய அழைத்தார். கோரக்ராதர் திகைத்தார் எனினும் நொடியில் ராமானந்தரின் உருவத்திற்கு மாறி அவரைக் கீழே அழைத்தார். உண்மையான ராமானந்தர் தன் சீடனைக் காப்பாற்ற இறைவனை வேண்ட கபீர் உற்சாகமடைந்தவராக கோரக்நாதரின் குருவான மச்சேந்திரரின் உருவை அடைந்து நின்றார். உடனே கோரக்கர் மஹாவிஷ்ணு உருவத்திற்கு மாறினார். கபீரும் சரபமூர்த்தியானார். கோரக்நாதர் மாறும் உருவத்திற்கு ஏற்ப ஒருபடி மேலாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கபீரது திறமை கண்டு தனது கர்வத்தை விட்டார் கோரக்நாதர். ராமானந்தரிடன் சென்ற கோரக்நாதர் சிறந்த சீடனை அடைந்த நீங்கள் மிகவும் பாக்யசாலி எனக்கூறி வணங்கி அங்கிருந்து சென்றார். தனது பாதத்தில் பணிந்த கபீரைக் கண்டு மகிழ்ந்த ராமானந்தர் இந்த இளம் வயதிலேயே இறைவனை அடையும் பிரம்ம ஞானத்தை அடைந்து விட்ட நீ நீடூழி வாழ வேண்டும் என ஆசி கூறினார். காசி நகர் முழுவதும் ராமானந்தரையும் கபீர்தாசரையும் புகழ்ந்தது. குருநாதர் மெச்சும் சீடனாக கபீர் விளங்கினார்.

ஒருநாள் நூறு சாதுக்கள் படைசூழ இறைவன் கபீர்தாசரின் இல்லத்துக்குப் பசியாற வந்தார். வீட்டில் ஒரு மணி அரிசி கூட இல்லை. கபீரும் அவர் மனைவியுமே பட்டினி. இந்நிலையில் அடகு வைக்கவும் ஏதுமில்லாத நிலையில் சீந்தரா ஒரு யோசனை கூறினாள். கடைத்தெருவில் ஒரு சௌகார் நெடுநாளாக என்மேல் கண் வைத்திருக்கிறான். ஒருமுறை அவனது விருப்பத்துக்கு நான் இணங்கினால் பணத்தை கொட்டித் தருவதாகக் கூறுகிறான். இந்த சாதுக்களின் பசி தீர்க்க உதவுமானால் அப்படிச் செய்தால் என்ன என்றாள். கபீரும் அவளுடன் கிளம்பி சௌகாரின் வீட்டுக்குச் சென்று நூறு சாதுக்களுக்கு உணவளிக்கப் பொருள் வேண்டும். விருந்தோம்பல் முடிந்த பின் பொருளுக்கு விலையாக இவளை இங்கு விட்டுச் செல்கிறேன் என்றார். மதிமயங்கி அவனும் பொருள் அளித்தான். சாதுக்களுக்கு வயிறார விருந்து சாப்பிட்டனர். பிறகு கபீர்தாசர் வாக்களித்தபடி சீந்தராவை வியாபாரியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சேறுபடாமல் சுமந்து சென்று சௌகாரின் வீட்டில் விட்டார். அப்போது அந்த ஊர் அரசு அதிகாரி வீட்டினுள் புகுந்து திருட்டுச் சொத்து அங்கிருப்பதாகக் கூறி வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார். உள்ளே சீந்தராவைக் கண்டு இவள் கபீரின் மனைவி. இந்த உத்தமியையா கடத்தி வந்தாய் எனக்கூறி சீந்தராவை அழைத்துச் சென்று அவளது வீட்டிலேயே விட்டுச் சென்றார்.

வீட்டுக்குத் திரும்பிய அவள் கூறியதைக் கேட்டு வெகுண்ட கபீர் என் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என அரசு அதிகாரியின் வீட்டுக்குச் சென்று திட்டி அடிக்க கை ஓங்கினார். அப்போது அங்கே அந்த அதிகாரி காணவில்லை. மாறாக ஶ்ரீராமர் காட்சி அளித்து அதிகாரியாக சென்று உன் மனைவியை மீட்டது நான்தான் உனக்கு அடிக்க வேண்டுமென்று தோன்றினால் என்னை அடி என்றார். இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப் போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார். இது போல் கபீரின் வாழ்வில் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இறையருளால் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. இதனால் பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கினார் கபீர்தாசர்.

கபீர்தாசருக்கு இரண்டு குழந்தைகள் தோன்றினர். மகன் பெயர் கமால். மகனாக மட்டுமல்லாமல் கமால் மகானாகவும் விளங்கினான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான். அவனைப் பிரிய மனமின்றி கபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் அனுமதி அளித்தார். செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினான். கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை கிருஷ்ணரின் உருவமாகவே கண்டனர். அந்த ஊரில் இருந்த ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தீராத வயிற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த வியாபாரி இந்த நோயை கமால் தீர்த்தால் அவரை ஒரு மகான் என நம்பலாம் என்றார். மறுநாள் காலையில் வலியினால் துடித்த போது முன் தினம் கமாலைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. உடனே கமாலை நினைத்து வணங்கினார். உடனே அவரது வயிற்றுவலி மறைந்தது.

ரத்ன வியாபாரி கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளித்தார். கமால் இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை என ஏற்க மறுத்தார். வியாபாரி கமாலுக்கு தெரியாமல் அவரது துணியில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்து வைத்தார். வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும் போது மரகதகல் அவர்கள் கண்ணில் பட்டது. அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய இறைவன் ஓர் அந்தணராக அங்கு தோன்றி கமால் அந்தப் மரகதக் கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூறினார். கபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார். அதே சமயத்தில் நடக்க விருப்பதை முன்பே அறிந்து அங்கு வந்து சேர்ந்தா ராமானந்தர். இறைவன் சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, அனும சமேதராக அங்கு தோன்றி அனைவருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.

ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த கபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர். வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர். சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை கபீரிடம் தந்து விட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறி விடுவது என திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுவதற்கு முன் கடைக்காரன் வந்துவிட்டான். பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.

சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது என வற்புறுத்தினான். தயக்கத்துடன் கபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் காவலர்களிடம் ஒப்படைத்தான். மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்க விடப்பட்டது. விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழியாக வந்தார்கள். தலையற்ற அந்த உடல் இரு கைகளையும் கூப்பி அவர்களை வணங்கியது. இதனைக் கண்ட சாதுக்களும் ஊர்மக்களும் திகைக்க இறைவன் அசரீரியாக கபீர் உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம் தான் வெல்ல முடியாதது. அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது. அன்பனே கமால் எழுந்திரு எனக்கூற அடுத்த கனம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண நாமத்தை சொல்லி சாதுக்களையும் பெற்றோரையும் வணங்கினார்.

சீரடி சாயிபாபா மகா பக்த விஜயத்திலே கபீர்தாஸரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ராமனை தன்னுள் உணர்ந்த கபீர்தாஸர் இந்து முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கபீர்தாஸரின் குரு ராமாநந்தரின் தாக்கம் இவரிடம் அதிகம் காணப்பட்டது. கபீர் தன்னுடைய குருவான ராமானந்துக்கு சிலை எழுப்பினார். இந்து சமயம் இசுலாம் ஆகிய இரு சமயங்களிலும் தவறு இருந்தால் அதனை கபீர் கடுமையாக விமர்சித்தார். வேதங்களை தவறான முறையில் மொழி பெயர்த்து சொல்லிக் கொடுக்கப்பட்டு இந்து சமயம் தவறான வழியில் செல்லப் படுவதாகவும் உபநயனம் போன்ற சடங்குகள் அர்த்தமற்றவை எனவும் கூறினர். அவரது கருத்துகளுக்காக இந்து மற்றும் இசுலாமியர் இருவரின் கோபத்துக்கும் ஆளானார். எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான். அவன் எந்த ஆலயத்திலும் இல்லை என்று உபதேசித்தார். கபீர் படிக்காதவராக இருந்தாலும் பல நூல்களை இயற்றினார். ஆதிகிரந்தம், பிரம்ம நிருபன், ஷப்தாவளி போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.

ஜபமாலையை உருட்டுகிறாய் நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறாய் கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறாய் என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை அன்பு இல்லை நீ எப்படி இறைவனை அடைவாய்.

என்று போலியான மதவாதிகளைக் கண்டித்து பாடினார். எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது. வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டார்கள். அதுவே பின்னாளில் நூலாக வெளிவர உதவியது. 500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக் கூறிய கபீர்தாசர் ராமர் சீதாவின் திவ்ய தரிசனத்தைப் பலமுறை கண்டார். கபீரின் போதனைகள் இந்து இசுலாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப் பில் கபீரின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவரின் பிரபலமான பாடல் ஒன்று

நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.

இதற்கு அர்த்தம் உலகம் இறைவனின் படைப்பு என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர்களின் உள்ளத்துக்குள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறிய மாட்டார்கள் என்று பாடுகிறார். 1518 ஆம் ஆண்டில் காசியில் கபீர் இறைவனைத் துதித்தவாறே மோட்ச பிராப்தி அடைந்தார். அவர் இறந்த பொழுது அவரால் ஈர்க்கப்பட்ட இந்து முஸ்லீம் சமயத்தை சேர்ந்தவர்களால் அவரவர் சமயத்தைச் சேர்ந்தவர் என உரிமை கொண்டாடப்பட்டார். கபீரின் இறந்த உடல் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். அவரது உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பெரியவர் ஏன் வீணாகச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தலா ஒரு போர்வையைக் கொண்டு உடலைப் போர்த்தி விட்டு செல்லுங்கள். நாளை இறுதி ஊர்வலத்தின் போது முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்படி இரு தரப்பினரும் உடலின் வலப் பகுதியையும் இடப் பகுதியையும் போர்வை கொண்டு போர்த்தி விட்டுச் சென்றனர். அடுத்த நாள் அவரது திருவுடலை எடுத்துச் செல்ல வந்தனர். போர்வையை எடுத்ததும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். கபீரின் உடல் மறைந்து அங்கே புத்தம் புது மலர்கள் இருந்தன. இறைவனுக்காகப் பாமாலைகள் பாடிப் பாடிப் பரவசமடைந்த அவரது திருமேனி பூக்களாக உருமாறி இருந்தன. இரு தரப்பினரும் சச்சரவு இல்லாமல் சரிபாதியாக பூக்களைக் கொண்டு சென்று இந்துக்கள் ஒரு பாதி பூக்களை காசியில் சாஸ்திரங்கள் முறைப்படி ஈமக்கடன்களைச் செய்தார்கள். அதுபோல முஸ்லிம்கள் பாதி பூக்களைப் புதைத்தார்கள்.

திரு முருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர். காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால்
நான் என்னுடைய பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டிவிடுங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.

அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான் 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்த சிறுவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான், 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.

மகான் சூர்தாஸர்

தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர். ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை. ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான். காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது. கிருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. கிருஷ்ண நாமத்தின் பெருமை அறியாமல் சொன்னபோதும் நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.

ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்ததும் விழுந்து வணங்கினர். யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால் கிருஷ்ணா என்றார். சுவாமி எங்களைக் காப்பாத்துங்க என்றனர். என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாற்றுவது என்று கேட்டார். சுவாமி நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில்‌ இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை. நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. இன்று காலை அந்தக் குதிரை காணாமல் போய்விட்டது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு அரசர் உத்தரவு போட்டிருக்கார். நாங்களும் காலையில் இருந்து தேடிக்கொண்டிருக்கின்றோம். குதிரையைக் கண்டுபிடிக்க‌முடியவில்லை. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னால் எங்கள் உயிர் தப்பிக்கும் நீங்கதான் எங்களை காப்பாத்தனும் என்றனர்.

சுவாமி சிரித்தார். எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு நான் எங்க போவேன் என்றார். இருவரும் விடுவதாய் இல்லை. நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாவது சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரிகிறது என்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று முடிவு செய்தார். இங்கேயிருந்து நேரா கிழக்குப்பக்கம் போங்க அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அங்கிருந்து திரும்பி வடக்கே போனால் ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா உங்க குதிரை கிடைக்கும்‌ என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார். அவர்களும் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.

அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது. மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள். குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன். எப்படிக் கிடைத்தது குதிரை என்று கேட்டார் அரசர். ஒருவரை ஒருவர் பார்த்தனர் காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள். அரசனுக்கு மிகவும் ஆச்சரியம். நம்‌ எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும். நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன். மறுநாள் காலை வீரர்களோடு அரசரும் பெரிய பரிவாரத்துடனும் வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்து நின்றனர். அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று. அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.

கூனிக் குறுகிப்போனார் கண் தெரியாதவர். வாயில் வந்ததையெல்லாம்‌ சொன்னதே பலித்துவிட்டது இத்தகைய வாக்குசித்தி நமக்கு எப்படி வந்தது வயிற்றுப் பிழைப்பிற்காகவும் பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா? நிஜமாக உணர்ந்து சொன்னால்?அழுதார் கண் தெரியாதவர். சிலநாட்கள் அரண்மனையில் இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி கிருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு கிருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்தார். அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு உத்சவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார். கண் தெரியாத அந்த மகான் சூர்தாஸர் ஆவார். அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.

பூந்தானம் நம்பூதிரி

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த குருவாயூரப்பன் பக்தர். இவர் இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூரில் வசித்து வந்தார். இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் சந்தனா கோபாலம் ஓதி மூலம் குருவாயூர் இறைவனைப் பாடித்துதித்தார். பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கான ஒரு வீழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அனைவரும் வந்தனர். ஆனால் விழா ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. துயரமடைந்த பூந்தானம் குருவாயூர் கோயிலில் தஞ்சம் அடைந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மனம் உடைந்த பூந்தானத்தின் மடியில் குருவாயூரப்பன் ஒரு குழந்தையாக ஒரு கணம் இருந்து ஆறுதல் படுத்தினார். சிறிய கிருஷ்ணர் நம் இதயத்தில் நடனமாடுகையில் நமக்கு சொந்தமான சிறியவர்கள் தேவையா என்று கிருஷ்ணரை தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். இதனை ஞானப்பனா என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.

அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது கண்களை மூடி குருவாயூரப்பா குருவாயூரப்பா என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரை மேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என்று கேட்டார் அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி திகைத்து செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய குருவாயூரப்பன் அர்ச்சகரே என் கையில் ஒரு மோதிரம் இருக்கும் அதைப் பூந்தானத்திடம் கொடுத்து விடுங்கள். கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன் என்று கூறினார். பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் குருவாயூரப்பான் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

தனது இறுதிகாலம் வந்ததை உணர்ந்த அவர் தான் சொர்க்கத்திற்கு புறப்பட போவதாகவும் தன்னுடன் வர விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்றும் அறிவித்தார். கிராம மக்கள் அனைவரும் மறுத்துவிட்டனர். இறுதியில் நோய்வாய்ப்பட்ட மனைவியை பராமரித்த ஒரு வேலைக்காரி மட்டுமே அவருடைய பரலோக பயணத்தில் அவருடன் சேர்ந்து கொண்டதாக அவரது புராண வரலாறு தெரிவிக்கிறது. ராகவியம், விஷ்ணுவிலாசம் சமஸ்கிருதத்தில் சீதாராகவம் மலையாளத்தில் விஷ்ணுகீதா பஞ்சதந்திரம் ஆகிய நூல்களை இயற்றியிருக்கிறார்.

வள்ளலார்

வள்ளலார் அவர்கள் 1864-ம் ஆண்டு வேட்டவலம் கிராமத்திற்கு வருகை தந்தபோது ஜமீன் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது பிரபல ஓவியரான விழுப்புரத்தைச் சேர்ந்த செங்கல்வராசு என்பவர் வள்ளலார் அவர்களின் திருஉருவத்தை ஓவியமாக வரைந்தார்.

அந்த ஓவியத்தின் கீழேயே வரைந்தவரின் கையொப்பமும் ஆண்டு தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமே நேரடியாக வரையப்பட்ட படம். இந்த படத்தில் இருப்பதுதான் வள்ளலாரின் திருஉருவம்.

சக்கரம்மா என்னும் சக்கரையம்மா பெண் சித்தர்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 ல் பிறந்தாள் ஆனந்தாம்பா. அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில் தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா. அவளது வீடு கோயிலின் அருகில் ஞ இருந்தது அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கவும் முடிந்தது. அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும் பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.

அக்கால வழக்கப்படி அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. சட்டநாத மடத்தின் உரிமையாளன் கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா. ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரி போல் நடத்தினான். சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்து கொள்வாள் ஆனந்தாம்பா. பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது. அக்கால வழக்கப்படி அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். கணவன் காலமானது அவளுக்கு ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஏற்படுத்தியது.

தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள் அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். வீட்டின் அருகிலிருந்த குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியை தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார். அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று. நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம் என்று சக்கரையம்மா கேட்டபோது குணாம்பா அதுபற்றிக் கவலைப்படாதே என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக சித்தியே அவருக்கு கற்று கொடுத்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த சித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம் என அருள்புரிந்தார் குணாம்பா.

சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள். அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார் கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர். அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர். ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள். அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார். யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள். அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் அவருக்கு தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா மகனே வா என அழைத்தாள். தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்று எண்ணி மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம் தானும் பேசாமல் விழுந்து வணங்கிவிட்டு வந்துவிட்டார்.

பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி பார்த்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது. ஏன் சிரிக்கிறீர்கள் தாயே என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார். மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல் கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார் அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும். இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி. தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ். பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி சுவாமியையும் ரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார். 1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள். திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வருந்தாதே மகனே நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அருள்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும் என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு. சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்து வருகிறார்.சுதந்திரப் போராட்ட காலத்தில் சக்கரையம்மா என்ற பெண்சித்தர் வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய உள்ளொளி என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம். இது ஆந்திராவில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த இடம். அதனால் அந்த இடத்தையே தனது சமாதிக்குத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அப்பகுதியை ஆண்ட சுல்தான் மசூத் கானும் அதற்கு இணங்கி மாஞ்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுத்தார். ஸ்ரீ ராகவேந்திரர் 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார். கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர்தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.

சர்தாமஸ் மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது ஷூவையும் தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற சர்தாமஸ் மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஆலயம் பற்றி அதை தானமாக அளித்தது பற்றி ஆங்கிலேய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பற்றி எல்லாம் அவர் யாரிடமோ விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசுகிறார் எதற்குப் பேசுகிறார் ஒருவேளை சித்தப்பிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் என்ணிய குழுவினர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர். வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் சர்தாமஸ் மன்றோ. அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர் அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் காரணம் கேட்டனர். அதற்கு சர்தாமஸ் மன்றோ பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும் அவரது கம்பீரக் குரல் பற்றியும் செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர் ஏன் நீங்கள் அவரைக் காணவில்லையா என்று கேட்டார். தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள் சர்தாமஸ் மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர் தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.

கடந்த நூற்றாண்டில் காலமான மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தன் பாஷையான ஆங்கிலத்திலேயே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர்தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும் ஆளுநருக்கும் அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப்போனார். விரைவிலேயே சர்தாமஸ் மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் மந்த்ராலயம் ஆலய வளர்சிக்கு உதவியதுடன் பல இந்துத் திருத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். ஒருமுறை சர்தாமஸ் மன்றோவுக்கு மிகக் கொடிய வயிற்று நோய் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அவர் திருப்பதி பெருமாளை வேண்டிக் கொண்டார். வயிற்றுவலி குணமானதும் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு தானமாக அளித்ததுடன் தன் பெயரில் தினந்தோறும் பொங்கல் செய்து இறைவனுக்குப் படைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டார். இன்றும் தினமும் திருப்பதி திருமலையில் சர்தாமஸ் மன்றோ கட்டளை பெயரில் பொங்கல் செய்து விநியோகிக்கப்படுகிறது.