ஸ்ரீ பாஸ்கர ராயர்

தேவி உபாசகர் ஒருவர் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்தார். அப்போது கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து உங்களுக்கு பணம் தானே வேண்டும் கூச்சல் போடாதீர்கள் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன் என்று மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தாள். சிறிது நேரத்தில் சிறு பையுடன் வந்தாள் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே இதோ பாருங்கள். இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான வட்டியும் உள்ளன. பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டாள். செல்வந்தரும் பத்திரத்துடன் வீட்டுதிண்ணையில் அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்புடன் உங்களை கவனிக்க வில்லை மன்னியுங்கள் என்று பிரசாத தட்டை நீட்டினார். செல்வந்தர் முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஆச்சரியம். நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே என்று பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர். உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு பத்திரத்தை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்றார். ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் மனைவியை அழைத்து நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே உண்மையா என்று கேட்டார். அந்த அம்மையாரோ திகைப்புடன் நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன். இது எப்படி சாத்தியம்? என்றார். அப்போது பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி குரல் கேட்டது நான் தான் பணம் கொடுத்தேன். குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைந்தனர். அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு யாரும் இல்லை.

இப்போது அனைத்தும் புரிந்தது தேவி உபாசகருக்கு. கடனை அடைக்க தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி. உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் மன்னியுங்கள் என்று செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார். அந்த தேவி உபாசகர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர். அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது. தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர். இவர் தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும் குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் பற்றி திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர் தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார். பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து அந்தந்த யோகினிகளுக்கான பெயர் மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது வைதீகர்கள் தமது தலைவரான யோகி குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று கேட்டார்கள். அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்ல. நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுனார். யோகி வைதீகர்ளுக்கு அந்தக் காட்சியை காண விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றனர்.

முத்துத் தாண்டவர்

முத்துத் தாண்டவர் என்பவர் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். இதனால் தமது தொழிலைச் செய்ய முடியாமல் போனதால் சீர்காழி சிவாலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டு அங்கேயே தங்கி விடுவார். அங்கு அருள் பாலிக்கும் ஈஸ்வரர் தோணியப்பருக்கு முன் நின்று தேவாரம் திருவாசகம் பாடி வந்தார். உணவுக்கு வருவாய் இல்லாததால் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை வாங்கி உண்டு வந்தார். ஒரு நாள் இரவு முத்துத் தாண்டவருக்கு பிரசாத உணவு கிடைக்கவில்லை. இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. ஒரு நாள் சீர்காழி கோயிலில் சிவனை வழிபட்டுத் திரும்புகையில் உடல் தளர்ந்து சிவபெருமானின் பல்லக்குகள் வைத்திருந்த மண்டபத்திற்கு அருகில் வரும்போது தள்ளாடி விழுந்து சிலநொடிகளில் சுய நினைவை இழந்தார். இவர் மயங்கிக் கிடப்பதை கவனிக்காத ஆலய குருக்கள் விளக்கைகளை அணைத்துவிட்டு கோயில் கதவைத் தாழிட்டுச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து சுயநினைவு பெற்ற தாண்டவர் தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறி அழுது அரட்டினார். தனக்கு ஆதரவு தய யாருமே இல்லையா என இறைஞ்சி மன்றாடினார். அழுது அழுது சோர்ந்த அவர் மறுபடியும் மயக்கமானார்.

அப்போது ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்தார் தாண்டவர். குருக்களின் மகள் முன்னே நிற்பதைத் தெரிந்து கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் இருந்த உணவை தாண்டவருக்கு அளித்தாள். அவர் உண்டு முடித்ததும் உமக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றிவிட்டு நீ சிதம்பரத்துக்குச் செல் அங்கு வீற்றிருக்கும் நடராஜப் பெருமானை நோக்கி ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனை என பணித்தாள். பாடல் புனையவா பாடலுக்கு நான் எங்கே போவேன் என்று புலம்பினார் தாண்டவர். சிதம்பரத்துக் கோயிலில் தினமும் நீ கேட்கும் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்து விட்டாள் அச்சிறுமி. இவரும் அப்படியே தூங்கிப் போனார். மறு நாள் பொழுது புலர்ந்தது. காலையில் கோயிலைத் திறந்து கொண்டு காவலர்களும், அர்ச்சகர்களும் ஓதுவார்களும் உள் புகுந்தனர். அங்கு அவர்களுக்கு யாரென்றே அடையாளம் தெரியாத ஒருவர் படுத்துக் கிடந்ததைக் கண்டனர். அவன் முகத்தைக் காணும்போது அம்முகத்தில் அலாதியான ஒளி பரவியிருந்தது தெரிந்தது. அப்போது குருக்கள் அவர் முகத்தைத் திருப்பிப் பார்த்து இவர் நம் தாண்டவர் என்றார்.

முந்தைய இரவு சிறுமியாக வந்தது பார்வதி தேவிதான் என்பது இப்போது தாண்டவருக்குப் புரிந்து போனது. அன்னையின் அருளால் நல்முத்தின் சுடரொளி போலத் தோற்றப்பொலிவைப் பெற்ற தாண்டவருக்கு முத்துத்தாண்டவர் என்று பெயரளித்தனர் அங்கிருந்தோர்.
முத்துத்தாண்டவர் அன்னையின் அருள்வாக்குப்படி சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில் பூலோக கைலாயகிரி சிதம்பரம் என்ற சொற்கள் விழுந்தது. அவ்வரியையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள் அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த, பக்தர்களின் முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர்.

ஒரு நாள் அவர் பாடல் புனைய பக்தர்களிடமிருந்து எந்த வார்த்தை வரியும் வெளிப்படவில்லை. என்ன செய்வதென்று அறியாத தாண்டவர் மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தார். சில மணித்துளிகளுக்குப் பிறகு சும்மா இருக்க மாட்ட பாழாப் போன மனசே கொஞ்சம் பேசாம இரு என்று தனக்குத்தானே தன்னை சொல்லிக் கொண்டார். இந்த வார்த்தைகள் அவர் உள்ளத்துள் மின்னல் வெட்டியது போல ஒரு நினைவு உண்டானது. உடனே பேசாதே நெஞ்சமே என்ற வார்த்தைகளை தொடக்கமாகக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தார். தன் பாடல் வரிகளுக்கு இனி அடுத்தவரை நம்ப வேண்டாம் என்பதை இறைவன் உணர்த்தினான் என்பதை உணர்ந்து கொண்டார். இதுவும் அவன் உணரச் செய்த விளையாட்டு இது என்பதை உணர்ந்து கொண்டார்.

ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில் பாம்பு ஒன்று அவரைத் தீண்டிச் சென்று விட்டது, அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே என்று தில்லை ஈசனை நோக்கிப் பாடினார். விஷம் தடித்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கிப் போனது. பின்னொருநாளின்போது கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனைக் கண்டு சிதம்பரம் செல்ல முடியாதோ என தவித்துப் போனார். காணாமல் வீணிலே காலம் கழித்தோமே என்று மனமுருகப் பாடினார். பாடலைக் கேட்ட கொள்ளிட ஆறு அவருக்கு இரண்டாகப் பிரிந்து வழி கொடுத்தது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும் தரிசனம் செய்வேனே என்ற பாடலைப் பாட ஆரம்பித்து விட்டார்.

1640 ம் வருடத்தில் ஆவணிப் பூச நாளின்போது மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன் என்று நடராஜரை நோக்கி உருகிப் பாடினார். உடனே நடராஜத் திருமேனியிலிருந்து ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு புறப்பட்டு வந்து அவரை ஆட்கொண்டது. நாள் தவறாமல் முத்துத்தாண்டவர் பாடிய பல பாடல்கள் பின்னாளில் கிடைக்காமல் போனது. சில பாடல்களே இன்று நம்மிடம் வரை இருக்கிறது. அதில் அறுபது கீர்த்தனங்களும் இருபது பதங்களும் மட்டுமே இன்று நம்மிடம் இருக்கிறது. அவற்றுள் ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ போன்ற பாடலை இன்று அதிகம் பலர் பாடுகின்றனர். இக்கீர்த்தனைகள் நடனத்துக்குப் பெரிதும் உதவுவதால் அதற்கு இதை பயன்படுத்தி வருகின்றனர்.

வீரபிரம்மேந்திரர்

விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரணஆசாரி பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீரபிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள் தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீரபோஜர் வீரபாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள். வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார். பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம் தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை. ஒருநாள் இரவு வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து உறங்கினார். காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது. அவன் எழுந்ததும் யாரப்பா நீ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும் ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. இனி இங்கேயே இரு என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் கால ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர். இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்த போது ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மேந்திரர் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது. இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.

வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும் அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போது தான் அறிந்ததாகவும் அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள். ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழ வேண்டியது தான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர். அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மேந்திரர் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:

புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்தது போகும் காலம் மாறி சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல் ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’ இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள். வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள். அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.

ஆந்திரவில் இருக்கும் போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன் என்றார். பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். போலேரம்மா என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது அவரது சுருட்டைக் கொளுத்தியது சரி சரி நெருப்பு போதும் என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல். இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள். அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.

காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம் துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார். தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். யாக்கை நிலையற்றது இதன் மேல் பற்று வைக்காதீர்கள் என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். எனக்கு இறப்பில்லை என்பதால் என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.

பத்து மாதங்கள் சுழன்றோடின. இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம் என்று சிலர் விமர்சித்தனர். மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கி விட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன் என்றார் தாயார். மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்து வந்து சமாதியை இடித்துத் திறந்து பார்த்தான். அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன. அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர் சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லி மீண்டும் சமாதியை மூடச் சொன்னார். இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீரபிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள். ஆந்திராவில் கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி.

Image may contain: text that says 'எதிர்காலத்தை முன்னமே சொன்ன வீரபிரம்மம்!'

மாணிக்கவாசகர்

This image has an empty alt attribute; its file name is image-6.png

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.

பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.

திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன் பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் திருவெம்பாவை திருவம்மானை ஆகியவற்றைப் பாடினார். மேலும் பல சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்து கொண்டிருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் திருக்கோவையார் என்ற பெயருடன் இருக்கிறது. பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது. தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர். அப்போது மன்னன் தனது ஊமை மகளையும் அழைத்து வந்தான். வந்தவர்கள் தில்லையில் தங்கி நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம் என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள்.

அந்தணர்கள் கலக்கமுற்றார்கள். அன்று இரவு தில்லை நடராஜர் அந்தணர்கள் கனவில் வந்து தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள் அவன் வெல்வான் என்று கூறினார். அந்தணர்கள் திருவாதவூரரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தனர். வாதம் நடந்தது. புத்தபிட்சுக்கள் தோற்றனர். இதனைப் பொறுக்காத புத்தபிட்சுக்கள் திருவாதவூரரைத் திட்ட ஆரம்பித்தார்கள். இதனை கேட்ட திருவாதவூரர் சரஸ்வதியை வேண்ட புத்தபிட்சுக்கள் அனைவரும் ஊமைகளாயினர். அதனைக் கண்ட இலங்கை மன்னன் பேசுவோரை ஊமை ஆக்கும் ஆற்றல் இருந்தால் ஊமையைப் பேச வைக்கும் ஆற்றல் இருக்குமல்லவா என்று கூறித் தனது மகளை பேச வைக்கும் படி கூறினார். திருவாதவூரரும் இறைவனை வேண்ட மன்னனின் மகள் பேச ஆரம்பித்தாள். இதனைக்கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர். பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது. மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார். புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே திருச்சாழல் என்னும் பதிகமாக அமைந்தன.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார்.

சோமசுந்தரப் பெருமான்

சிற்றரசர்களால் வணங்கப்பட்டு நீதிநெறியுடன் குபேரனைப் போல் அரசாட்சி செய்து வந்தான் பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரமபாண்டியன். தன் தந்தையின் உத்தரவுப்படி கோயில் கட்டி வெகு சிறப்பாக தினந்தோறும் பூஜை செய்து வந்தான். நாடும் பிணியற்று சுபீட்சமாக இருந்து வந்தது. எங்கும் மகிழ்ச்சியும் திருவிழா பூஜையும் தொடர்ந்த வண்ணமிருந்தது. அப்போது காஞ்சியை சோழன் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பாண்டியன் மீது ஏகப்பட்ட பொறாமை. பாண்டியனை எப்படியாவது வென்றாக வேண்டும் என்றே அவன் மூளை சிந்தித்த வண்ணம் இருந்தது. இதற்காக சக்கியம், கோவர்த்தனம், கிரெளஞ்சம், திரிகூடம், அஞ்சனம், விந்தியம், ஹேமகூடம், காஞ்சி குஞ்சரம் என எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பி வரச்செய்தான். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னனைச் சந்தித்தனர். மன்னன் தலையை மயில்முடி தோகையால் தொட்டு வருடி வாழ்த்தினார்கள். அப்போது அவர்களிடம் நான் பாண்டிய நாட்டை ஜெயிக்க விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரினால் வெல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆதலால் ஆபிசாரப் பிரயோகம் செய்வித்துத் தான் விக்கிரமனை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளேன். பாண்டியனை அழிக்க கைங்கரியம் செய்து உதவீனீர்களானால் நாட்டில் சரி பாதி இராஜ்ஜியத்தை உங்களுக்கு தருகிறேன் என ஆசை வார்த்தைகளால் உயர்த்தினான் சோழன்.

சமணர்கள் சைவர்களின் விரோதிகள். சோழ மன்னன் இவ்வாறு சொன்னதும் அவர்கள் பாலாற்றின் கரையில் கூடி பெரிய பெரிய ஓம சாலைகளையும் ஹோமகுண்டங்களையும் அமைத்தனர். ஹோம குண்டத்தில் நச்சு மரங்களின் கட்டைகளை வார்த்தனர். தீ வளர்த்து வேம்பு எண்ணெயில் தோய்த்த உப்பாலும் நல்லெண்ணெயில் ஊறச்செய்த மிளகாய்களையும் இட்டனர். விலங்குகள் பறவைகள் இவற்றின் ஊனாலும் ஹோமங்களை செய்தனர். யாகத்தின் பலனாய் மேகங்கள் கூடி இடி இடித்தது, இடி புறப்பட்ட இடைவெளியினுல் துதிக்கையில் ஒரு உலக்கையைத் ஏந்திகிக் கொண்டு பெருத்த யானையொன்று பெரும் பிளிறலுடன் தோன்றி வந்தது. யானை அடியெடுத்து நடந்து வந்தபோது பூமியின் பரப்பளவு நடுங்கியது. அது அதன் காதுகளை சிலிர்த்த போது மேகங்கள் கலைந்து அலைந்து விலகின. தந்தங்களால் மலையைப் பிளந்து கொண்ட வண்ணம் யாகசாலையில் ஹோமம் செய்து கொண்டிருந்த சமணர்களின் அருகே வந்து நின்றது. நீ சென்று மதுரையையும் அதன் அரசனையையும் அழித்துவிட்டு வருவாயாக என யானையிடம் ஏவினார்கள் சமணர்கள். மீண்டும் பேரொலியை பிளிறிய வண்ணம் புறப்பட்டது. இச்சத்தத்தினைக் கேட்ட மற்ற மிருகங்கள் மிரண்டு விலகியோட யானை தென் திசை நோக்கி விரைவாக ஓடியது. செய்தியறிந்தான் விக்கிரமன். உடனே ஆலயத்திற்கு ஓடிச் சென்றான். ஈசனிடம் முறைசெய்து வேண்டினான். மகா மேருவை வில்லாக ஆக்கினாய், மகாவிஷ்ணுவை அம்பாக தேர்வு செய்தாய், பூமியைத் தேராக உருக்கிருக்கிக் கொண்டாய், வாசுகியை நாணாக்கினாய், வேதங்கள் நான்கினையும் குதிரைகளாக்கினாய், பிரம்ம தேவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டாய், இப்படியெல்லாம் செய்து முப்புரத்தையும் எரிக்கப் புறப்பட்ட மகாதேவனே, இத்தனையுடன் புறப்பட்ட உனக்கு சமணர் அனுப்பிய யானை உனக்கொரு பொருட்டா, என்னையும் மதுரை மக்களையும் நீயின்றி எவர் காப்பார்? எனப் பலவாறு வேண்டி தொழுது முறையிட்டழுதான்.

மன்னா என அசரீரி ஒலித்தது. வெளிச்சுவரின் உட்புறம் கீழ் பக்கமாக பதினாறு கால் கொண்ட அட்டாள மண்டபமொன்றை அதிவிரைவில் கட்டி முடி. வில் வீரனாக வந்து நீ கட்டிய அம்மண்டபத்தின் மேலமர்ந்து கொண்டு யாம் யானையை வதை செய்வோம் என அசரீரி கூறக் கேட்கவும் மன்னன் அகமகிழ்ந்தான். உடனடியாக போர்க்கால அடிப்படையில் மண்டபத்தை கட்டி முடித்தான். அதன் மேல்தளத்தில் இரத்தினத்தால் இழைத்த பொற் பீடமொன்றையும் நிறுவி வைத்தான். கருமை நிறத்துடன் சிவப்பு பட்டுடுத்தி பதினாறு வயதோனவனாய் இடுப்பில் கத்தியுடனும் இடக்கையில் நாணேற்றிய வில்லுடனும் வலக்கையில் கூரான அம்பைத் தாங்கியவாறும் காதுகளில் சங்குக் குண்டலங்களுடனும் கழுத்தில் முத்தாரமுமாய் பீட உச்சியில் ஒரு வில் வீரனாகத் தோன்றி நின்றார் இறைவன். எதிரே யானை நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட சுவாமி விட்ட அம்பு விர்ரென பாய்ந்து யானையின் உயிரை ஒரு நொடியில் மாய்த்தழித்து விட்டது. அந்த இடமே ஆனைமலை எனப் பெயர் பெற்றது. பிரகலாதன் தவம் செய்து சித்தி பெற்ற இடமும் கூட இதுதான். பாண்டியன் வீரன் உருவிலிருந்த ஈசனைப் பலவாறு துதித்து விட்டுப் பட்டென்று ஈசனது இரு கால்களையும் சிக்கென்று பற்றிக் கொண்டான் பாண்டிய மன்னன். எப்பேற்பட்ட சங்கடங்களையும் சட்டென நீக்க இங்கேயே எழுந்தருள வேண்டும் எனவும் விண்ணப்பித்தான். இறைவனும் அப்படியே இருப்பதாக வாக்களித்தார். விக்கிரமபாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க பதினாறு கால அட்டாள மண்டபத்தில் அட்டாள வீர மூர்த்தியாய் காட்சி கொடுக்கின்றார் சோமசுந்தரப் பெருமான்.]

வியாக்ரபாதர்

புலிக்கால் முனிவர் என்பவர் மத்யந்தனர் என்பவரின் மகனும் சிறந்த சிவ பக்தரும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் என்பதாகும். இவர் வியாக்ரபாதர் என்றும் அழைக்கப் படுகிறார் .மத்யந்தனர் என்ற முனிவருக்கு மகனாகப் பிறந்த மழன் தனது தந்தையிடமே வேதங்களைக் கற்றுக் கொண்டான். அவன் ஒரு நாள் தந்தையிடம் மனிதனாகப் பிறந்தவர்கள் இறைவனை அடையத் தவம் செய்தால் மட்டும் போதுமா? என்று கேட்டான். அதற்கு அவர் தவம் செய்தால் சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். சிவ வழிபாடு செய்பவர்கள் தான் மறுபிறவி இல்லாத உயர்ந்த நிலையை அடைவார்கள். நீ சிவனை வழிபட்டுச் சிறந்த நிலையைப் பெற முயற்சி செய் என்றார். அதன் பிறகு மழன் சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டினான். அவனுடைய பக்தி மிகுந்த சிவ வழிபாட்டைக் கண்ட முனிவர்கள் பலரும் அவனை மழமுனிவர் என்று அழைக்கத் தொடங்கினர். இதையடுத்து மழமுனிவர் பிற இடங்களுக்கும் சென்று சிவ வழிபாடு செய்வது என்று முடிவு செய்தார்.

அவருடைய வழிபாட்டுப் பயணத்தில் தில்லைவனம் எனும் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அந்தப் பகுதியில் உயரமாக வளர்ந்திருந்த மரங்களில் பூத்துக் கிடந்த பூக்கள், அவரை மிகவும் கவர்ந்தன. தான் வழிபட இருக்கும் சிவலிங்கத்தை அந்த அழகிய பூக்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். சிவ வழிபாட்டிற்காக பறிக்கும் பூக்கள் தேன் குடிக்க வரும் வண்டுகளால் எச்சில்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதிகாலை நேரத்திலேயே அந்த மரங்களில் ஏறி பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தார். மரம் ஏறுவதில் அனுபவமில்லாத அவருக்குக் கைகளிலும் கால்களிலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களிலிருந்து வழிந்த இரத்தத் துளிகள் அவர் பறித்து வந்த சில பூக்களில் ஒட்டிக் கொண்டிருந்தன. அது மட்டுமில்லாமல் சூரிய வெளிச்சமில்லாமல் இருட்டாக இருந்த அதிகாலை நேரத்தில் பூக்களைப் பறித்து வந்திருந்ததால் அவர் பறித்து வந்த பூக்களில் சில அழுகிய பூக்களும் இருந்தன. இதனால் வருத்தமடைந்த அவர் எளிதில் மரம் ஏறுவதற்கு வசதியாகப் புலியின் கால்களும் இருட்டிலும் தெளிவாகக் காணும் நல்ல பார்வையும் வேண்டுமென்று நினைத்தார். அவர் இறைவன் சிவபெருமானை நினைத்துத் தனக்குப் புலியின் கால்களும் தெளிவான பார்வையும் தந்தருளும்படி வேண்டினார். அவரின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான் அவருக்கு நேரில் காட்சியளித்து வேண்டிய வரத்தை வழங்கினார். அதன்பிறகு முனிவரின் கால்கள் புலிக்கால்களாக மாற்றமடைந்தன. கைகளும் புலியின் கால்களைப் போன்று மாறின. அவருக்கு இருட்டிலும் தெளிவாகக் காணும் பார்வையும் கிடைத்தது. சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பது புலியைக் குறிப்பதனால் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். இதற்குப் புலிக்கால்களை உடையவர் என்று பொருளாகும். தமிழில் புலிக்கால் முனிவர் என்றும் அறியப்படுகிறார்.
புலியின் கால்களைக் கொண்டவர் என்பதால் அவர் வியாக்ரபாத முனிவர் என்று அழைக்கப்பட்டார்.

தன்னுடைய வழிபாட்டை மேலும் சிறப்பாக செய்ய நினைத்த வியாக்ரபாத முனிவர் துர்வாச முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். துர்வாச முனிவர் வியாக்ரபாதருக்கு சிவ வழிபாடு மட்டுமின்றி விஷ்ணு வழிபாடு அம்பாள் வழிபாடு பிரம்மன் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு இறை வழிபாடுகளையும் அதற்கான வழிபாட்டு முறைகளையும் கற்றுக் கொடுத்தார். திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட நீரின்றி தவித்தார் புலிக்கால் முனிவர். அந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான். வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர் வெள்ளை யானையிடம் சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு என்று கேட்டார். அதற்கு வெள்ளை யானை என்னால் தீர்த்தம் தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டது. இதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி அதுவே புலிபாய்ச்சி தீர்த்தம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும் தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை. உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால் கோபத்துடன் இருந்த முனிவர் வேண்டாம் என மறுத்து விட்டார். வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

வசிஷ்டர் தன் குடும்பத்துடன் சிதம்பரம் திருக்களாஞ்செடிகள் சூழ்ந்த சிங்காரத்தோப்பில் தவம் செய்து கொண்டிருக்கின்றார். தம்மை வந்து தரிசித்த வியாக்ரபாத மகரிஷிகளைக் கண்டு மகிழ்ந்தார். வியாக்ரபாதரின் தவ சிரேஷ்டத்தைக் கண்டு வியப்புற்று தன்னுடைய தங்கை ஆத்ரேயினை வியாக்ரபாதருக்கு மணம் முடித்து வைத்தார். வசிஷ்டரின் தங்கையும், வியாக்ரபாதரும் தம்பதி சமேதராக நடராஜப் பெருமானை வழிபட்டுவந்தனர். இருவரின் குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக சூரியனையொத்த பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு உபமன்யு என்று பெயரிட்டனர். உபமன்யு வசிஷ்டரின் ஆசிரமத்தில் அருந்ததியின் அரவணைப்பில் தெய்வப்பசுவாகிய காமதேனுவின் பால் அருந்திக் கொண்டு வனப்புடன் வளர்ந்துவந்தான். சில காலம் சென்று உபமன்யுவையும் அவன் தாயையும் அருந்ததி வியாக்ரபாதரின் இல்லம் கொண்டு சேர்ப்பிக்கின்றாள். இங்கு வந்த குழைந்தைக்கு வியாக்ரபாதர் தனது ஆசிரமத்திலிருந்த பசுவின் பால் தர தெய்வப்பசுவாகிய காமதேனுவின் சுவைமிக்க பால் அருந்திய அந்த பாலகன் வியாக்ரபாதர் தந்த பாலைத் துப்பிவிட்டு காமதேனுவின் பால் தான் வேண்டும் என அடம்பிடித்து பசியால் துடிக்க செய்வதறியாது திகைத்த வியாக்ரபாதர் நடராஜரை வேண்ட தன் பக்தனின் துயர் துடைக்க குழந்தை குடிப்பதற்காக பால் அலையென அடித்துவரும் வகையில் பாற்கடலையே உண்டாக்கினார். அதை உண்ட உபமன்யு திருப்தியடைந்து தந்தையிடம் பாடங்கள் பயின்று பெரும் ஞானியானார். உபமன்யு கிருஷ்ணருக்கு பஞ்சாக்ஷர உபதேசம் செய்வித்து கிருஷ்ணருக்கு ஏற்பட்ட தோஷங்களை நீங்கச் செய்தார். இவரின் சரிதத்தை சிவரஹஸ்யம் மிக விரிவாக விளக்குகின்றது.

பாலுக்குப் பாலகன் வேண்டியதிடப் பாற்கடல் ஈந்த பிரான் என்று திருப்பல்லாண்டிலும், அப்பர் தேவாரத்திலும் இச்சம்பவம் இடம்பெறுகின்றது. இந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் திருப்பட்டூர் என்று மாறிவிட்டது. நடராஜரால் ஏற்படுத்தப்பட்ட திருப்பாற்கடல் கோயில் வடதிசையில் அமைந்திருக்கின்றது. புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி இங்கு உள்ளது.


ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் காஷ்மீரில்

சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் ஸ்வாமி ராமாநுஜரும் அவரின் முதன்மைச் சீடர் கூரத்தாழ்வாரும் அன்றைய கால கட்டத்தில் அங்கிருந்தோரின் எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் சமாளித்து விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை நிலைநாட்டினார். கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமானுஜரை மெச்சி ஸ்ரீ பாஷ்யகாரர் என்னும் பட்டம் சூட்டியுள்ளார்.

ராமானுஜரின் மானசீக குரு ஶ்ரீ ஆளவந்தார் தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத 3 ஆசைகளை ராமானுஜர் முடித்து வைக்கப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார். முதல் ஆசையான வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விரிவான வியாக்யானம் எழுத வேண்டும். அதை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கனவே போதாயான மஹரிஷி என்னும் வேதவியாஸரின் சிஷ்யர் எழுதியுள்ள போதாயன விருத்தி என்னும் பாஷ்யத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தார். போதாயன விருத்தி மூலம் 2 லட்சம் படிகளை உடையது. ஆனால் அந்தக் கிரந்தம் எங்கும் கிடைக்க வில்லை. அதனுடைய சுருக்கம் ஒன்று காஷ்மீரத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். காஷ்மீரில் இருந்த சுருக்கம் 25000 படிகளை மட்டுமே கொண்டது. உடனே கூரத்தாழ்வாருடன் ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார். மூன்று மாதங்கள் நடந்து சென்று காஷ்மீரை அடைந்தனர்.

காஷ்மீர் மன்னரிடம் அங்குள்ள சரஸ்வதி பீடத்தில் வைக்கப் பட்டிருக்கும் போதாயன விருத்தி கிரந்தத்தைத் தருமாறு கேட்டார். மன்னர் இசைந்தாலும் அங்கிருந்த பண்டிதர்கள் ஒரு முறை மட்டுமே படிக்க அனுமதித்தனர். ராமானுஜர் கூரத்தாழ்வாரை அரசவையில் படிக்கச் சொல்லிக் கேட்டார். மன்னர் நீங்கள் கேட்டதின் சாராம்சத்தை எழுதிக் கொடுங்கள் அதை சரஸ்வதி தேவி ஒப்புக் கொண்டால் நீர் கிரந்தத்தை எடுத்துச் செல்லலாம் என்றார். ராமானுஜர் அப்பொழுதே சாராம்சத்தை மட்டுமல்லாது தமது தத்துவார்த்த விளக்கத்தையும் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொடுத்தார். மன்னர் அந்த ஓலைச்சுவடியை சரஸ்வதியின் காலடியில் சமர்ப்பித்து கோவிலைப் பூட்டி விடும்படி பணித்தார். மறுநாள் காலை மன்னர் பண்டிதர்கள் ராமானுஜர் கூரத்தாழ்வார் ஆகியோர் கோவிலைத் திறந்து பார்த்த போது சரஸ்வதியின் திருவடியில் வைத்த ராமானுஜரின் ஓலைச்சுவடிகள் சரஸ்வதியின் திருமுடியில் இருந்தது கண்டு அனைவரும் பிரமித்தனர்.

மன்னர் மிக வியந்து ராமானுஜரின் மகத்துவத்தை உணர்ந்து அவருக்குத் தண்டம் சமர்ப்பித்து கிரந்தத்தை ராமானுஜர் எடுத்துச் செல்வதற்கு அனுமதித்தார். ஆனால் அங்கிருந்த பண்டிதர்கள் ராமானுஜர் புதிய விளக்கவுரை எழுதினால் தங்கள் முக்கியத்துவம் பறி போய்விடும் என்று அஞ்சினர். எனவே ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் திரும்பிச் சென்ற வழியில் ஒர் இரவு தங்கியிருந்த இடத்திலிருந்து அந்த ஓலைச் சுவடிகளைக் கவர்ந்து கொண்டு சென்று விட்டனர். சுவடிகளைப் பறிகொடுத்த ராமானுஜர் கலக்கமடைந்து கூரத்தாழ்வாரிடம் இனி என்ன செய்வது? என்று சோகப்பட கூரத்தாழ்வார் ஸ்வாமி அடியேன் ஒரு முறை படித்து விட்டதால் அப்படியே பதத்துக்குப் பதம் நினைவிருக்கிறது இங்கேயே சொல்லவா? ஸ்ரீரங்கத்தில் சொல்லவா என விண்ணப்பித்தார். எத்தகைய சீடரைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டார் ராமானுஜர். ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்த பின் பிரம்ம சூத்திரத்திற்கு அற்புதமான வியாக்யான உரை எழுதி முடித்தார். ராமானுஜர் சொல்லச்சொல்ல கூரத்தாழ்வார் ஓலைச் சுவடிகளில் எழுதினார். அந்த உரையே ராமானுஜர் இயற்றிய கிரந்தங்களில் மிக முக்கியமான ஶ்ரீ பாஷ்யம் எனப்படுகிறது.

ராமாநுஜர் தம் இரண்டாவது காஷ்மீர் விஜயத்தில் ஶ்ரீ சரஸ்வதி தேவியைச் சேவிக்க சரஸ்வதி பீடத்துக்குச் சென்றார். அவரை சரஸ்வதி தேவியே பீடத்திலிருந்து இறங்கி வந்து வரவேற்றார். இவரது ஸ்ரீபாஷ்ய கிரந்தத்தைத் தம் சிரசால் வகித்து தன் கையை நீட்டி உடையவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய் இது பிரஷிப்தமன்று சுத்தமாயிருந்தது என்று அங்கீகரித்து இவருக்கு ஶ்ரீ பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தினார். மேலும் ஶ்ரீ சரஸ்வதிதேவி தாம் வணங்கி வந்த லக்ஷ்மிஹயக்கிரீவர் விக்ரகத்தையும் ராமானுஜருக்குத் தந்தருளினார்.

இந்த வைபவத்தைக் கேள்வியுற்ற காஷ்மீர் மன்னர் ராமானுஜரின் பரம சீடராகி அவருடைய அருளுரைகளைத் தினமும் கேட்டு வந்தார். இதனால் பொறாமையடைந்த அரசவைப் பண்டிதர்கள் மந்திர தந்திரங்களால் ராமானுஜரைக் கொல்லத் தீர்மானித்து அதற்கான ஷூத்ர ஜபங்களில் இறங்கினார்கள். ஆனால் விபரீதமாக சூன்யம் வைத்தவர்கள் மீதே ஷூத்ர தேவதைகள் திரும்ப அரசவைப் பண்டிதர்கள் திடீரெனத் தெருக்களில் பைத்தியக்காரர்களாக நிர்வாணமாகத் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு ஓடினார்கள். ஒருவர் கழுத்தை இன்னொருவர் பிடித்துப் புரண்டனர்.

இதைப் பார்த்த மன்னர் ராமானுஜர் திருவடிகளில் தண்டனிட்டு இந்த அபராதிகளை மன்னித்து அருளவேண்டும் என்றார். மன்னா அடியேன் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஷீத்ர தேவதைகளை இன்னொருவர் மீது ஏவும் போது அணுகவேண்டியவர் அவை அணுகமுடியாத சுத்தன் ஆக இருந்தால் அவைகள் ஏவியவர் மீதே திரும்பி விடும் என்றார். ராமானுஜர் மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் மீது தம் ஶ்ரீபாததீர்த்தத்தைப் புரோஷிக்க அவர்கள் சித்த ஸ்வாதீனமடைந்து உடையவரைச் சரணடைந்தனர். ராமானுஜரைக் கண்டு பிரமிப்பும் மரியாதையும் அடைந்த மன்னர் அவருக்கும் அவருடன் வந்த சீடர்களுக்கும் உயர்ந்த மரியாதைகள் செய்து அவர்களுடன் பல மைல்கள் நடந்து வந்து வழியனுப்பி வைத்தார்.

சரஸ்வதி கோவில் (சாரதா பீடமும் இது தான்) இன்றைய நிலை சரஸ்வதி கோவில் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் நீலம் நதிக்கரையில் சாரதா என்னும் குக்கிராமத்தில் (ஶ்ரீநகரிலிருந்து 70 மைல்-கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில்)மிகச் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பூஜைகள் ஆராதனைகள் எதுவும் நடைபெறுவதில்லை. 2007 ல் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று இங்கு சென்ற காஷ்மீர் பண்டிதர்களையும் கோவில் வளாகத்துள் விடவில்லை. பண்டைக் காலத்தில் இந்த ஊர் பெரு நகரமாக சர்வ ஞான பீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கிருந்து சாரதா பண்டார் என்னும் நூல் நிலையம் உலகின் மிகப் பெரிய நூல் நிலையமாக பல அரிய ஓலைச் சுவடிகளின் பெட்டகமாகத் திகழ்ந்தது. பல நாடுகளிலிருந்தும் பல சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும் பண்டிதர்களும் இங்கு வந்து ஞானம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆன்மீகம் அறிவுடமை அமைதி விளைந்த மண் உலகமே நிமிர்ந்து பார்த்த உன்னத இடம் வேதத்தை எதிர்ப்போர் பயங்கரவாதிகள் மண்டிக் கிடக்கும் இடமாக மாறி விட்டது. காஷ்மீர் மீண்டும் பழைய பொலிவுடன் கலாசார பீடமாக மலர ஶ்ரீ லக்ஷ்மிஹயக்கிரீவரையும் ஶ்ரீ சரஸ்வதி தேவியையும் ஸ்ரீராமாநுஜரையும் நெஞ்சம் நெகிழப் பிரார்த்திப்போம்.


அபிராம பட்டர்

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம்.

இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார்.

திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.