ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் காஷ்மீரில்

சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் ஸ்வாமி ராமாநுஜரும் அவரின் முதன்மைச் சீடர் கூரத்தாழ்வாரும் அன்றைய கால கட்டத்தில் அங்கிருந்தோரின் எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் சமாளித்து விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை நிலைநாட்டினார். கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமானுஜரை மெச்சி ஸ்ரீ பாஷ்யகாரர் என்னும் பட்டம் சூட்டியுள்ளார்.

ராமானுஜரின் மானசீக குரு ஶ்ரீ ஆளவந்தார் தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத 3 ஆசைகளை ராமானுஜர் முடித்து வைக்கப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார். முதல் ஆசையான வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விரிவான வியாக்யானம் எழுத வேண்டும். அதை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கனவே போதாயான மஹரிஷி என்னும் வேதவியாஸரின் சிஷ்யர் எழுதியுள்ள போதாயன விருத்தி என்னும் பாஷ்யத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தார். போதாயன விருத்தி மூலம் 2 லட்சம் படிகளை உடையது. ஆனால் அந்தக் கிரந்தம் எங்கும் கிடைக்க வில்லை. அதனுடைய சுருக்கம் ஒன்று காஷ்மீரத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். காஷ்மீரில் இருந்த சுருக்கம் 25000 படிகளை மட்டுமே கொண்டது. உடனே கூரத்தாழ்வாருடன் ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார். மூன்று மாதங்கள் நடந்து சென்று காஷ்மீரை அடைந்தனர்.

காஷ்மீர் மன்னரிடம் அங்குள்ள சரஸ்வதி பீடத்தில் வைக்கப் பட்டிருக்கும் போதாயன விருத்தி கிரந்தத்தைத் தருமாறு கேட்டார். மன்னர் இசைந்தாலும் அங்கிருந்த பண்டிதர்கள் ஒரு முறை மட்டுமே படிக்க அனுமதித்தனர். ராமானுஜர் கூரத்தாழ்வாரை அரசவையில் படிக்கச் சொல்லிக் கேட்டார். மன்னர் நீங்கள் கேட்டதின் சாராம்சத்தை எழுதிக் கொடுங்கள். அதை சரஸ்வதி தேவி ஒப்புக் கொண்டால் நீர் கிரந்தத்தை எடுத்துச் செல்லலாம் என்றார். ராமானுஜர் அப்பொழுதே சாராம்சத்தை மட்டுமல்லாது தமது தத்துவார்த்த விளக்கத்தையும் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொடுத்தார். மன்னர் அந்த ஓலைச் சுவடியை சரஸ்வதியின் காலடியில் சமர்ப்பித்து கோவிலைப் பூட்டி விடும்படி பணித்தார். மறுநாள் காலை மன்னர் பண்டிதர்கள் ராமானுஜர் கூரத்தாழ்வார் ஆகியோர் கோவிலைத் திறந்து பார்த்த போது சரஸ்வதியின் திருவடியில் வைத்த ராமானுஜரின் ஓலைச் சுவடிகள் சரஸ்வதியின் திருமுடியில் இருந்தது கண்டு அனைவரும் பிரமித்தனர்.

மன்னர் மிக வியந்து ராமானுஜரின் மகத்துவத்தை உணர்ந்து அவருக்குத் தண்டம் சமர்ப்பித்து கிரந்தத்தை ராமானுஜர் எடுத்துச் செல்வதற்கு அனுமதித்தார். ஆனால் அங்கிருந்த பண்டிதர்கள் ராமானுஜர் புதிய விளக்கவுரை எழுதினால் தங்கள் முக்கியத்துவம் பறி போய்விடும் என்று அஞ்சினர். எனவே ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் திரும்பிச் சென்ற வழியில் ஒர் இரவு தங்கியிருந்த இடத்திலிருந்து அந்த ஓலைச் சுவடிகளைக் கவர்ந்து கொண்டு சென்று விட்டனர். சுவடிகளைப் பறிகொடுத்த ராமானுஜர் கலக்கமடைந்து கூரத்தாழ்வாரிடம் இனி என்ன செய்வது? என்று சோகப்பட கூரத்தாழ்வார் சுவாமி அடியேன் ஒரு முறை படித்து விட்டதால் அப்படியே பதத்துக்குப் பதம் நினைவிருக்கிறது இங்கேயே சொல்லவா? ஸ்ரீரங்கத்தில் சொல்லவா என விண்ணப்பித்தார். எத்தகைய சீடரைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டார் ராமானுஜர். ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்த பின் பிரம்ம சூத்திரத்திற்கு அற்புதமான வியாக்யான உரை எழுதி முடித்தார். ராமானுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வார் ஓலைச் சுவடிகளில் எழுதினார். அந்த உரையே ராமானுஜர் இயற்றிய கிரந்தங்களில் மிக முக்கியமான ஶ்ரீ பாஷ்யம் எனப்படுகிறது.

ராமாநுஜர் தம் இரண்டாவது காஷ்மீர் விஜயத்தில் ஶ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட சரஸ்வதி பீடத்துக்குச் சென்றார். அவரை சரஸ்வதி தேவியே பீடத்திலிருந்து இறங்கி வந்து வரவேற்றார். இவரது ஸ்ரீபாஷ்ய கிரந்தத்தைத் தம் சிரசால் வகித்து தன் கையை நீட்டி உடையவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய் இது பிரஷிப்தமன்று சுத்தமாயிருந்தது என்று அங்கீகரித்து இவருக்கு ஶ்ரீ பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தினார். மேலும் ஶ்ரீ சரஸ்வதிதேவி தாம் வணங்கி வந்த லக்ஷ்மிஹயக்கிரீவர் விக்ரகத்தையும் ராமானுஜருக்குத் தந்தருளினார்.

இந்த வைபவத்தைக் கேள்வியுற்ற காஷ்மீர் மன்னர் ராமானுஜரின் பரம சீடராகி அவருடைய அருளுரைகளைத் தினமும் கேட்டு வந்தார். இதனால் பொறாமையடைந்த அரசவைப் பண்டிதர்கள் மந்திர தந்திரங்களால் ராமானுஜரைக் கொல்லத் தீர்மானித்து அதற்கான ஷூத்ர ஜபங்களில் இறங்கினார்கள். ஆனால் விபரீதமாக சூன்யம் வைத்தவர்கள் மீதே அந்த ஷூத்ர தேவதைகள் திரும்ப அரசவைப் பண்டிதர்கள் திடீரெனத் தெருக்களில் பைத்தியக்காரர்களாக நிர்வாணமாகத் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு ஓடினார்கள். ஒருவர் கழுத்தை இன்னொருவர் பிடித்துப் புரண்டனர்.

இதைப் பார்த்த மன்னர் ராமானுஜர் திருவடிகளில் மண்டியிட்டு இந்த பண்டிதர்களை மன்னித்து அருளவேண்டும் என்றார். மன்னா அடியேன் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஷீத்ர தேவதைகளை இன்னொருவர் மீது ஏவும் போது அணுக வேண்டியவர் அவை அணுக முடியாத சுத்தன் ஆக இருந்தால் அவைகள் ஏவியவர் மீதே திரும்பி விடும் என்றார். ராமானுஜர் மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் மீது தம் ஶ்ரீபாததீர்த்தத்தைப் தெளிக்க அவர்கள் சித்த ஸ்வாதீனமடைந்து ராமானுஜரைச் சரணடைந்தனர். ராமானுஜரைக் கண்டு பிரமிப்பும் மரியாதையும் அடைந்த மன்னர் அவருக்கும் அவருடன் வந்த சீடர்களுக்கும் உயர்ந்த மரியாதைகள் செய்து அவர்களுடன் பல மைல்கள் நடந்து வந்து வழியனுப்பி வைத்தார்.

சரஸ்வதி கோவில் (சாரதா பீடமும் இது தான்) இன்றைய நிலை சரஸ்வதி கோவில் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் நீலம் நதிக்கரையில் சாரதா என்னும் குக்கிராமத்தில் (ஶ்ரீநகரிலிருந்து 70 மைல் கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில்) மிகச் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பூஜைகள் ஆராதனைகள் எதுவும் நடைபெறுவதில்லை. 2007 ல் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று இங்கு சென்ற காஷ்மீர் பண்டிதர்களையும் கோவில் வளாகத்துள் விடவில்லை. பண்டைக் காலத்தில் இந்த ஊர் பெரு நகரமாக சர்வ ஞான பீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கிருந்து சாரதா பண்டார் என்னும் நூல் நிலையம் உலகின் மிகப் பெரிய நூல் நிலையமாக பல அரிய ஓலைச் சுவடிகளின் பெட்டகமாகத் திகழ்ந்தது. பல நாடுகளிலிருந்தும் பல சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும் பண்டிதர்களும் இங்கு வந்து ஞானம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆன்மீகம் அறிவுடமை அமைதி விளைந்த மண் உலகமே நிமிர்ந்து பார்த்த உன்னத இடம் வேதத்தை எதிர்ப்போர் பயங்கரவாதிகள் மண்டிக் கிடக்கும் இடமாக மாறி விட்டது. காஷ்மீர் மீண்டும் பழைய பொலிவுடன் கலாசார பீடமாக மலர ஶ்ரீ லக்ஷ்மிஹயக்கிரீவரையும் ஶ்ரீ சரஸ்வதி தேவியையும் ஸ்ரீராமாநுஜரையும் நெஞ்சம் நெகிழப் பிரார்த்திப்போம்.


அபிராம பட்டர்

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம்.

இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார்.

திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.