தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 32 திருக்கானாட்டுமுள்ளூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 32 வது தேவாரத்தலம் திருக்கானாட்டுமுள்ளூர். புராண பெயர் கானாட்டம்புலியூர். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு. மூலவர் பதஞ்சலிநாதர். கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். மூலவர் மீது தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளி படுகிறது. உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள். அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். தலமரம் வெள்ளெருக்கு. (தற்போது இல்லை) தீர்த்தம் சூரிய தீர்த்தம்.

கோவில் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளின் சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும் அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிக்கிறார். பதஞ்சலி நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால் வெளியில் இருந்தே சிவனை தரிசித்துவிட்டு சென்றார்கள்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒருசமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்தபோது அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம் என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா இப்போது திருப்தி தானே என கேட்டார். தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பதஞ்சலிக்கு சிவன் அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவரது பெயரையே தனக்கும் பெயர் பெற்று பதஞ்சலீஸ்வரர் என்று அருள்பாலிக்கிறார்.

செங்கல்லாலான கோயில் மிகவும் பழமையானது. விக்கிரம சோழன் காத்திய கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் வழிபட்டுள்ளார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.