தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 275 திருவிடைவாசல்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 275 வது தேவாரத்தலம் திருவிடைவாசல். புராணபெயர் திருவிடைவாய். மூலவர் புண்ணியகோடியப்பர், இடைவாய் நாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுகிறது. உற்சவர் திருவிடைவாயப்பர். அம்பாள் அபிராமி, உமை. தீர்த்தம் புண்ணியகோடி தீர்த்தம். தலமரம் கஸ்தூரி அரளி. தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275 வது தலமானது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.

கிழக்கு பார்த்த கோயில். கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, கஜலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசாஸ்தா, நவகிரகம், பைரவர், அய்யனார், மற்றும் சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர். இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது. அத்துடன் சிவனின் வாகனமாகவும் கொடியாகவும் விடை உள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும் இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் திருஞானசம்பந்தர் தனது பாடலில் விடைவாயே என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.