தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 276 கிளியனூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 276 வது தேவாரத்தலம் கிளியனூர். புராணபெயர் கிளிஞனூர், திருக்கிளியன்னவூர். மூலவர் அகஸ்தீஸ்வரர், அக்ஞீசரம் உடையவர். இங்கு இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. தீர்த்தம் அக்னி தீர்த்தம், கன்வ தீர்த்தம். தலமரம் வன்னிமரம். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275 வது தலமாகவும், கிளியனூர் அகஸ்தீஸ்வரர் 276 வது தலமாகவும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. இக்கோயில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நோய் நீங்கப்பெற்றார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள் தீங்குகளிலிருந்து விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர். கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இறைவன் அடியவர் துயரைப் போக்கி அவர் வேண்டியதை அருள்பவன். அடியவர்கள் இவ்வுலகில் மறுபிறப்பு எடுப்பினும் முழுச் செல்வத்துடன் நல்வாழ்வு அளிப்பவர் என்று பாடியுள்ளார். மதுரை கொண்ட பரகேசரி வர்மனாகிய முதல் பராந்தகன் காலத்திலேயே இவ்வூர்க்கோயில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இம்மன்னனுடைய 10 -ம் ஆண்டு கல்வெட்டில் இவ்வூர் கிளிஞனூர் எனவும் இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமான் திருஅக்ஞீசரம் உடையவர் எனவும் கல்வெட்டில் காணப்படுகின்றது.

கல்வெட்டுகளில் பராந்தகனுடைய ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பான நிவேதனங்களுக்கு மான்யம் வழங்கியதாக செய்தி உள்ளது. முதல் குலோத்துங்கன் ஆட்சியில் இக்கோயில் கருவறையின் மேற்குப்புறம் வெளிச்சுற்றில் பிச்சாண்டவருக்காக பூஜைக்கு மான்யம் வழங்கியுள்ள செய்தியும் விளக்கு தொடர்ச்சியாக எரியவிட மான்யம், கோயில் பூஜைகள் தினந்தோறும் நடக்கவும், கோயில் திருப்பணிக்கும் பல மான்யங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நன்மக்கள் பலரால் கொடுக்கப்பட்டது தெரிய வருகிறது. இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். கிள்ளி என்பது பழங்காளச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் பழைய சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர் என்று மருவியது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறியலாம். திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில் இடைக்காலத்துச் சோழநாட்டையாண்ட மன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். ராகு, கேது கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.