கைகேயி ஊர்மிளை இருவரின் தியாகம்

இந்தியாவில் வால்மீகி, கம்பர், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, சமண ராமாயணங்கள் பல கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. இராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் இந்தியாவில் இருப்பதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த ராமாயணங்களில் சில நூலில் கதைகள் பல கோணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் கைகேயி மற்றும் ஊர்மிளையின் தியாகம் பற்றி ஒரு நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ராவண வதம் முடிந்து சீதை லட்சுமணன் வானரங்கள் மற்றும் ராமருக்கு உதவிய ராட்சசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் அழைப்பை ஏற்று அவருக்கு வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்கள். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும் சத்ருக்னனும் அக்னிப் பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி தான் வந்து கொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ராமரால் அனுப்பப்பட்டார். அவரும் நந்தி கிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு பரதனிடம் அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார். பரதனும் ராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார். ராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லட்சுமணனையும் என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர் எனக் காட்டினான் பரதன். அவளை வணங்கிய பின்னரும் வெளிப்படையாக உன்னைப் பெற்ற தியாகி அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார் அனுமன். துணுக்குற்ற பரதன் அவள் மகாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்? எனக் கேட்டான். அப்போது அனுமன் கூறினார்.

பரதா உன் தாயைப் பற்றிய சில உண்மைகளை நீ தெரிந்துகொள். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா? தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளை உணரும் தன்மை கொண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவனாய் தசரதன் உத்யான வனத்தில் திரிந்த போது தளதளவென்று பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி அந்த தளிரின் உணர்ச்சியை கண்டாள். தன் குழந்தையான தளிரைப் பிரிந்து தாய் கொடியான தான் எப்படி கண்ணீர் வடிக்கிறினோ அது போலவே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய் என்று தசரதனுக்கு சாபமிட்டாள் அந்த தாய்க் கொடி. பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷி குமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால் உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய் என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

தசரதர் ராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி குறித்த முகூர்த்தத்தின் பின் விளைவுகளை பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி. அந்த முகூர்த்தப்படி ராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால் ராஜ்யத்தில் ராமர் அன்று அரசராக அமர்ந்திருந்தால் அதுவே அவரது ஆயுளை முடிந்திருக்கும். புத்ர சோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ர சோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும் போது அது ராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு பாவி என்ற பட்டமும் கொடுமைக்காரி என்ற பட்டமும் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை. அந்தக் கணத்தில் ராஜ்யத்தின் அரசனாக இருப்பவன் உயிர் நீப்பான் என்று ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள்.

ராமர் 14 நாட்கள் வன வாசம் செல்ல வேண்டும் என்று தசரதரிடம் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் வாய் தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம் கூட ராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகி விட்டது. எந்தப் பெண் தன் மங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? ராமரிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் நீ அரசாள வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். ஒருக்கால் நீ பதவி ஏற்றால் ராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மகா தியாகி. அவள் பதினான்கு வருடங்கள் என்று வாய் தவறி கேட்டதினால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ராமனின் தரிசனம் கிட்டியது. ராவணன் முதல் பல ராட்சசர்கள் வரை ராமரால் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்க வேண்டும் என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத் துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்பட்டது.

ராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லட்சுமணரும் கிளம்பி விட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால் இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால் தன் நினை அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். லட்சுமணன் வந்து கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர்பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூட போக மாட்டேன். வாருங்கள் என்னுடன் நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம் என்றாள். லட்சுமணன் கோபத்துடன் நீ இவ்வளவு மோசமானவளா? நீ வர வேண்டாம் என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்றாள் சிரித்துக் கொண்டே ஊர்மிளை. அப்படியே ஆகட்டும் எனக் கூறிச் சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது. ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.