தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 223 அறகண்டநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 223 வது தேவாரத்தலம் அறகண்டநல்லூர். புராணபெயர் அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். அம்பாள் அழகிய பொன்னம்மை, ஸ்ரீசெளந்திர கனகாம்பிகை. தலமரம் வில்வம். தீர்த்தம் தென்பெண்ணை. ராஜகோபுரம் ஏழுநிலைகளை உடையது. ராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தலவிநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் திருஞானசம்பந்தர் உள்ளார். விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாத லிங்கம் உள்ளது. இறைவனின் கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும், நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளனர். வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. இத்தலத்திலுள்ள முருகன் ஒருமுகத்துடனும் ஆறுகரங்களில் ஆயுதங்களுடன் வள்ளிதெய்வயானையுடன் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இங்கு நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார்.

திருவண்ணாமலை வரும் வழியில் ரமண மகரிஷி இக்கோயிலுக்கு வந்து அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கி பாடல் பாடியிருக்கிறார். மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மகாவிஷ்ணு உயிரைக் கொன்ற தோஷம் நீங்க சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி பல தலங்களுக்கும் சென்ற மகாவிஷ்ணு, இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார். மகாவிஷ்ணு தாயாரை பிரிந்து தனியே வந்ததால் ஸ்ரீதேவியும் மகாவிஷ்ணுவைத் தேடி இத்தலத்திற்கு வந்தாள். இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவையும் அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும் வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவதல யாத்திரை சென்றார். அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி சிறு குன்றாக இருந்த இந்த இடத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு இந்த இடத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. சிவனை எண்ணி இவ்விடத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்காக மனம் இரங்கிய சிவன் அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாபவிமோசனம் கொடுத்தருளினார். நீலகண்ட முனிவர் சிவனிடம் தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுமென வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அறையணிநாதர் என்ற பெயர் பெற்றார். அறை என்றால் பாறை என்றும் அணி என்றால் அழகு என்றும் பொருள். பாறை மீது அழகாக அமைந்திருப்பவர் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்தது. கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்துள்ளார்கள். வனவாசம் முடிந்து 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள் பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும் அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்தனர். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் அறகண்டநல்லூர் இறைவனை தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர் என்றும் பழிபாவங்கள் நீங்கப் பெறுவார்கள் என்றும் அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும் என்றும் பாவங்களும் கழியும் என்றும் சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றி தொழுதால் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார். திருஞானசம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர் அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. திருஞானசம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.