தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 224 வது தேவாரத்தலம் டி.இடையாறு. புராணபெயர் திருஇடையாறு, திருவிடையாறு. மூலவர் இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருந்தீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர். இங்கு இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது படுகிறது. அம்பாள் ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி. தலமரம் மருதமரம். தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது. மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத சண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சண்முக சுப்பிரமணியர் பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். இத்தலத்தில் சிவ பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலம் இது. இடையாறில் பிறந்த இவர் பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும் கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இடையாற்றில் எம்மை பூஜித்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இக்கோவில் 8ம் நூற்றாண்டு கோவிலானாலும் கி.பி. 1471இல் ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டில் செய்திகள் உள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளில் இறைவன் உடைய நாயனார் எனவும் இவ்வூரை இராஜராஜவள நாட்டு திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இறையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது. சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். சுந்தரர், திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளார் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.