தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 242 திருப்பனங்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 242 வது தேவாரத்தலம் திருப்பனங்காடு. புராணபெயர் வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு. மூலவர் தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்களும் கிழக்கு நோக்கி உள்ளார்கள். இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன்உ ற்சவர் சோமஸ்கந்தர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கிருபாநாயகி, அமிர்தவல்லி என இரண்டு அம்பாள்கள் உள்ளார்கள். அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர். தலமரம் பனைமரம். தீர்த்தம் ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம், ஊற்று தீர்த்தம். கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது.

கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை. அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்த போது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.

கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி காட்சி தருகின்றார். அகத்தியர் தான் ஸ்தாபித்த இறைவன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக உள்ளது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.

அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும் சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும் யானை மீது ஐயப்பன் அமர்ந்திருக்கின்றார்.

அகத்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சிவனை மானசீகமாக எண்ணி வழிபட்டார். அப்போது அருகிலுள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதாக சிவன் அசரீரியாக ஒலித்தார். அகத்தியர் அங்கு சென்று பார்த்தபோது வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அகத்தியரைக் கண்ட முனிவர் அவரிடம் வேம்பு மரத்தின் அடியில் இருந்த சுயம்பு லிங்கத்தை காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அகத்தியர் லிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. அகத்தியரின் மனதை அறிந்த சிவன் தன் தலையில் இருந்து கங்கை நீரை இவ்விடத்தில் பாய விட்டார். அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. இப்போது இந்த தீர்த்தம் ஜடாகங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்கு அருகில் இருக்கிறது. அதில் இருந்து நீரை எடுத்த அகத்தியர் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினார். பின் சிவனுக்கு படைக்க பழங்கள் இல்லாததால் அருகில் பழம் இருக்கிறதா என்று தேடினார் அகத்தியர். சிவன் அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து கனிகளை உதிரச்செய்தார். அகத்தியர் அதனை சுவாமிக்கு படைத்து வணங்கினார். அகத்தியரின் பூஜையில் மகிழ்ந்த சிவன் அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் தாளபுரீஸ்வரர் (தாளம் என்றால் பனை என்று பொருள்) என்று பெயர் பெற்றார்.

சிவதலயாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும் அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர். சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர் உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா என்றார். அம்முதியவர் உங்களுக்கு நீர் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது. வியந்த சுந்தரர் முதியவரிடம் தாங்கள் யார் என்றார். அதற்கு முதியவர் உன் திருமணத்தில் வம்பு செய்த நான் பனங்காட்டில் குடியிருப்பவன் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். தனக்கு உணவு படைத்து பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி வம்பு செய்பவன் கள்ளன் என்று அவரை உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார். சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தம் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தம் சுந்தரர் தீர்த்தம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. வடலூர் வள்ளளார் பாடலிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர்கள், முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து 22 கல்வெட்டுக்கள் உள்ளது. கல்வெட்டில் இறைவன் திருப்பனங்காடுடைய நாயனார் என்றும் ஊர்ப்பெயர் காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுத் திருப்பனங்காடு என்றும் குறிக்கப்படுகிறது. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.