தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 245 தக்கோலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 245 வது தேவாரத்தலம் தக்கோலம். புராணபெயர் திருவூறல். மூலவர் ஜலநாதேஸ்வரர், உமாபதீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன் மணலால் ஆனாவர் தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாள் கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். இங்கு அம்பாளுக்கு தான் முதல் பூஜை. தலமரம் தக்கோலம். தீர்த்தம் நந்தி தீர்த்தம், கல்லாறு. குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளனர். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது.

அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலைக் குத்துக்காலிட்டு காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபயமாகக் கொண்டு இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலையில் இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில் உள்ளார்.

தேவகுருவான பிரகஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க சிவனை வழிபட்டார். அப்போது நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை வரவழைத்தர். அது இங்குள்ள சிவலிங்கத்தைச் சுற்றி வந்து மற்றொரு நந்தியின் வாயிலிருந்து வெளியேறியது. அதில் நீராடி சிவனை வழிபட்ட முனிவர் நோய் நீங்கப்பெற்றார். ஜலம் (தீர்த்தம்) சூழ்ந்து சென்றதால் சிவன் ஜலநாதீஸ்வரர் என பெயர் பெற்றார். சிறிமு நாட்களுக்கு முன்பு வரை தண்ணீர் வந்தது. தற்போது இதுபோல் தண்ணீர் வரவில்லை. தட்சன் நடத்திய யாகத்திற்கு அவனது மகள் தாட்சாயணி சென்ற போது அவளை அவன் அவமானப்படுத்தினான். சிவன் தட்சனின் தலையை அறுத்தார். அவனும் தன் சொல் மீறி சென்ற பார்வதியும் பூலோகத்திலுள்ள க்ஷீர நதிக்கரையில் தன்னை நினைத்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி தட்சன் சிவனை வழிபட்டு ஆட்டுத்தலை பொருத்தப் பெற்றான். தட்சன் தனக்கு தலை வேண்டி ஓலமிட்டு வழிபட்டதாலும் தலையிழந்த அவனுக்கு ஆட்டுத்தலை கொடுத்து தக்க கோலத்தை கொடுத்ததாலும் இவ்வூர் தக்கோலம் என்று பெயர் ஏற்பட்டது. தாட்சாயணி இங்கு வந்த போது பாலாற்றில் பெருவெள்ளம் சென்றது. அவள் நதிக்கரையில் உள்ள மணலை அள்ளி லிங்க வடிவமாக்கி வழிபட்டாள். தியானத்தில் இருந்தபோது வெள்ளம் லிங்கத்தை சூழ்ந்தது. லிங்கத்தை காப்பாற்றுவதற்காக அவள் அதனை அணைத்துக் கொண்டாள். இந்த லிங்கமே இப்போது இக்கோயிலில் இருக்கிறது. பார்வதி லிங்கத்தை காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும் அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.

பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருந்ததால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். இன்னொரு அதிசயத்தையும் இந்த லிங்கத்தில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த லிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே லிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும். இத்தலத்தை திருவூறல் என நாவுக்கரசரும், சுந்தரரும் பாடியுள்ளனர். இவ்வூரில் ஏழு சிவாலயங்கள், ஏழு விநாயகர் கோயில்கள், ஏழு கிராம தேவதை கோயில்கள் உள்ளன. சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார். இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால் இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என தலபுராணம் கூறுகிறது. காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

Image result for தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.