சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 5 வது தேவாரத்தலம் திருநல்லூர்ப்பெருமணம். மூலவர் சிவலோகத்தியாகர், சிவலோக தியாகேசர், உற்சவர் திருஞானசம்பந்தர், அம்பாள் திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதிநாயகி. ஆச்சாள், ஆயாள் அம்பிகையின் வேறு பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்பாளுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும் இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது. தலவிருட்சம் மாமரம். தீர்த்தம் பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம், இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் பிரகாரத்தில் ருணலிங்கேஸ்வரர் உள்ளார். கோயில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளுடைய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும் திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேதநெறி தழைத்தோங்கவும் சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர் உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார். சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் திருஞானசம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த திருஞானசம்பந்தர் பின் இறைவனின் விளையாட்டு தான் இது என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த திருஞானசம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார். இதன்பிறகு நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் என்பவளை நிச்சயித்தார் சிவபாத இருதயர். திருஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். திருஞானசம்பந்தர் அக்னியை வலம் வரும் போது இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன் என்று கூறி கல்லூர்ப் பெருமணம் என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி, நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக என்று அருள்புரிந்தார். திருஞானசம்பந்தர் மணக்கோலத்துடன் இறை சோதியுள் கலந்தமையால் இத்தலத்திற்கு முத்தித்தலம் என்றும் பெயருண்டு.
பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். காகபுசுண்டரிஷி இத்தலத்தில் இறைவனுடன் ஐக்கியமானார், திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி, பிரமன், முருகன், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர், காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். திருஞானசம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். உள்வாயிலில் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவன் திருப்பெருமண முடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டிருக்கின்றார். திருஞானசம்பந்தர் பாடல் பாடியுள்ளார்.
![](https://i0.wp.com/2.bp.blogspot.com/-C1Q5L5Q6VX4/VZUQpxAi3MI/AAAAAAAABNs/TaqpdB0xj6A/s1600/IMG_1164.jpg?w=650)
![](https://i0.wp.com/4.bp.blogspot.com/-CjFOWSRRf2s/VZUREJBPBQI/AAAAAAAABOk/I1sY-KCnxnQ/s1600/AMBAL%2BTIRUVENNEETRUMAIAMMAI.jpg?w=650)
![](https://i0.wp.com/4.bp.blogspot.com/-7j8eu8FK82g/VZUT-xn967I/AAAAAAAABUQ/2sS-isO18JE/s1600/RUNA%2BVIMOSANA%2BSIVAN.jpg?w=650)
![](https://i0.wp.com/1.bp.blogspot.com/-xuSOxA3bDjw/VZUS3qc9ilI/AAAAAAAABQo/f4FkIz8lx7M/s1600/IMG_1188.jpg?w=650)
![](https://i0.wp.com/1.bp.blogspot.com/-U17qK8boFyQ/VZUVLG0SymI/AAAAAAAABXA/jPU-MQwdHqs/s1600/6.jpg?w=650)
![](https://i0.wp.com/4.bp.blogspot.com/-4RsqSE_y6nU/VZUVc2R263I/AAAAAAAABX0/I1amqi28vYg/s1600/RAJA%2BGOPURAM.jpg?w=650)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/04/image-13.jpeg?resize=640%2C360&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/04/image-11.jpeg?resize=500%2C300&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/04/image-12.jpeg?resize=512%2C256&ssl=1)