தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #6 மகேந்திரப்பள்ளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 6 வது தேவாரத்தலம் திருமயேந்திரப்பள்ளி. புராணபெயர் திருமயேந்திரப்பள்ளி. மூலவர் திருமேனியழகர், சோமசுந்தரர். பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை. தலமரம் கண்டமரம், தாழை, வில்வமரம். தீர்த்தம் மயேந்திர தீர்த்தம் என்கின்ற இந்திர தீர்த்தம். சிவன் அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி திருமேனியழகர் என்றும் அம்பாள் வடிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை அழகர் என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசி விசுவநாதர், ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியோரைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலது புறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால் வலது புறம் நடராச சபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். சிவன் சன்னதி சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி இல்லை. முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மகேந்திரப் பள்ளி தலத்தில் சிவபெருமானை அழகர் என்று அழைக்கிறார்கள்.

இந்திரன் கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால் அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன் பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். இந்திரன் (மகா) வழிபட்டதால் மகேந்திரப்பள்ளி என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. பண்டை நாளில் மன்னன் ஆண்டு வந்த பகுதியான கோயிலடிப்பாளையத்தை ஆங்கிலேயர் ஆட்சியில் கிளைவ் குண்டு வைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராஜர் திருமேனி தான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. கோவில் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கிறது. சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் பூஜிக்கப்பட்டுள்ளனர். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.