தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 26 கொருக்கை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 26 வது தேவாரத்தலம் கொருக்கை. புராணபெயர் திருக்குறுக்கை. யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் வீரட்டேஸ்வரர். சதுர ஆவுடையார் உயர்ந்த பாணமாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மன்மதன் இறைவனை மீது எறிந்த ஐந்து அம்புகளுள் ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது. உற்சவர் யோகேஸ்வரர். அம்பாள் ஞானாம்பிகை. தலமரம் கடுக்காய் மரம், அரிதகிவனம். தீர்த்தம் திரிசூல் கங்கை, பசுபதி தீர்த்தம்.

ஐந்து நிலைகள் கொண்ட இக்கோவில் மேற்கு நோக்கி உள்ளது. நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். எனவே இறைவன் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும். ரதி மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன.

ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் உள்ளது. நடராச சபையில் சிவகாமி மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை சம்பு விநோத சபை காமனங்கநாசனி சபை என்ற பெயரில் உள்ளது. இத்தல விநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதரின் lனது திருப்புகழில் பாடல்கள் பாடியுள்ளார்.

திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி. வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்கள். அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டார். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால் தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார்.

சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்று தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார். கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது. உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவு தான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார். இன்றும் காமனைத் தகனம் செய்த இடம் விபூதிக்குட்டை என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாகவே உள்ளது.

புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அக்கைகள் குறுகிவிட்டன. தன்னால் பிழை நேர்ந்தது என்றெண்ணி தன் தலையை பாறை மீது மோதமுற்பட்டார் அப்போது இறைவன் காட்சி தந்து அவர் உடற்குறையைப் போக்கினார். இவர் குறுங்கை முனிவர் என்று இவர் பெற்றார் இவர் பெயரால் குறுக்கை என்று அழைக்கப்பட்டு நாளடைவில் கொருக்கை என்று ஆனது. குறுங்கை விநாயகர் சந்நிதியில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது.

திருநாவுக்கரசர் தனது பாடல்களில் இறைவன் மார்கண்டேயருக்கு அருள் புரிந்தது. சண்டேசருக்கு அருளியது. முற்பிறப்பில் சிலந்தியாக இருந்தபோது செய்த தொண்டிற்காக மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறப்பெடுக்கச் செய்தது. திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை பூஜிக்க ஒரு நாள் மலர்களில் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து திருமால் அர்ச்சிக்க அவருக்கு அருள் செய்தது. தினந்தோறும் கல்லால் அடித்து பூஜை செய்த சாக்கிய நாயானாருக்கு அருளியது. கண்ணப்ப நாயானாருக்கு அருளியது. திருமறைக்காட்டில் அணைந்து போகும் நிலையில் இருந்த விளக்கை தன் மூக்கால் தூண்டி பிரகாசமாக எரியச் செய்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செயது அருளியதை எல்லாம் குறிப்பிட்டு வீரட்டனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். லட்சுமி, திருமால், பிரமன், முருகன், ரதி வழிபட்டுள்ளனர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது, சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.