மண்டோதரியின் தத்துவம்

மண்டோதரி இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி. இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் மென்மையான இடையுடையவள் எனப் பொருள். மண்டோதரி மிகவும் அழகானவள். தூய பக்தியுடையவள் நேர்மையானவள். இலங்கைக்குச் சென்ற அனுமன் முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். அந்த அளவிற்கு இவளது அழகும் குணமும் தன்மையும் இருந்தது. சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடுபட்டாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன் தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான்.

கஷ்யப்ப முனிவரின் மகன் மாயாசுரன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த மாயாசுரனின் வளர்ப்பு மகள் மண்டோதரி ஆவாள். மாயாசுரனின் இல்லத்திற்கு வருகை புரிந்த இராவணன் மாயாசுரனின் வளர்ப்பு மகளான மண்டோதரியை திருமணம் புரிய விரும்பி வேதமுறைபடி அக்கினியை ஏழுமுறை வலம் வந்து திருமணம் புரிந்து கொண்டான்.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கும் மண்டூர் எனும் பட்டணம் மண்டோதரியின் பிறப்பிடமாகும். நெடுங்காலமாக இங்கு வாழும் குறிப்பிட்ட குலத்தை சேர்ந்த மக்கள் இராவணனை தங்களின் மருமகனாக பாவித்து வருகிறார்கள். இங்கு இராவணனுக்கு ஒரு கோயில் (நினைவிடம்) அமைந்துள்ளது. சீதையை அபகரித்து வந்த இராவணன் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தீண்டினால் தலை வெடித்து மரணமடைவான் என இராவணனுக்கு சாபம் இருந்தது. இதனால் சீதையை சம்மதிக்க வைக்க அவளை பலமுறை முயன்றான். எனினும் சீதை ஒரு போதும் இராவணனின் இச்சைக்கு இணங்கவில்லை. ஒரு சமயம் மிகுந்த கோபமடைந்த இராவணன் சீதையின் தலையைத் துண்டிக்க தன் வாளை உயர்த்தினான். அப்போது மண்டோதரி அங்கு ஓடிவந்து இராவணனின் கையைப் பிடித்து இராவணனைத் தடுத்தாள். ஓர் ஆணின் மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதற்காக அவளைத் துன்புறுத்துவதும் கொலை செய்ய முயற்சிப்பதும் மகா பாதகம். இத்தகைய செயல் உம்மை மட்டுமல்ல உம்மைச் சார்ந்த அத்தனை பேரையும் உன் சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அழித்திடும் என மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை செய்தாள். அதன் பின்னர் இராவணன் சீதையைக் கொலை செய்யும் எண்ணத்தை விட்டான்.

மண்டோதரி சீதையின் தாய் என வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அத்பூத இராமாயணம் தேவி பாகவத புராணம் மற்றும் சமண இலக்கியங்கள் மண்டோதரியை சீதையின் தாய் என குறிப்பிடுகின்றன. இராமாணயத்தில் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக அவ்வாறு கூடுதலான கதையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயணத்தில் மண்டோதரி ஒரு துணை கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும் அவளின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் தன் கணவன் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தாலும் ஒரு போதும் தன் கணவனின் தீய செயல்களுக்குத் துணை போகவில்லை. மாறாக இறுதி வரை அவள் நேர்மையானவளாகவே திகழ்ந்தாள்.

ஒரு பெண்ணின் அனுமதியும் சம்மதமும் இல்லாமல் எந்தவொரு ஆணும் அவளை நெருங்க கூடாது. ஒரு பெண்ணுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அவளை விட்டு விலகி விட வேண்டும் அவளைக் கட்டாயபடுத்தியோ மிரட்டியோ சம்மதிக்க வைப்பது மூடத்தனம். அன்புடைய மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கணவன் அவளின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும். அனைவரும் நேர்மையின் உருவமாக திகழ்ந்து நேர்மையாக நடக்க வேண்டும் என்று உணர்த்தினாள். இதுவே மண்டோதரியின் பாத்திரம் உணர்த்தும் தத்துவம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.