உயிரோட்டமுள்ள நந்தி

சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.

ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.

பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. இந்த ஆலயத்தில் ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இக்கோயிலும் ஒன்று.

ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி

பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிக்கொண்டு அவரது தவத்தை விளையாட்டாக கலைத்தார். இதனால் உலகம் முழுவதும் இருளாக மாறியது மற்றும் உலகின் அனைத்து செயல்பாடுகளும் நின்றது. மிகவும் கோபமடைந்த சிவன் பார்வதிதேவியை பூமியில் பிறந்து மீண்டும் அடையும்படி சபித்தார். வேகவதி ஆற்றின் அருகே உள்ள ஒரு பழமையான மாமரத்தடியில் மணலில் ஒரு லிங்கம் அமைத்து சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி கடும் தவம் செய்து கொண்டிருந்தாள். அருகில் உள்ள வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவலிங்கத்தை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவனிடம் பக்தி கொண்ட பார்வதி தன் உயிரை விலையாகக் கொடுத்தும் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகத் தழுவினாள். பார்வதியின் இந்த சைகை சிவபெருமானைத் தொட்டது. அவர் நேரில் வந்து அவளை மணந்தார். இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

சிறிய சிவன் சன்னதி

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள கோயில் வளாகத்தின் வடக்குப் பகுதியில் நீரழி மண்டபம் போன்ற கிணறு போன்ற அமைப்பில் உள்ள சிறிய சிவன் சன்னதி. ரிஷபம் மீது சிவன் அமர்ந்திருக்கிறார். தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 அடிக்கு கீழே உள்ளது.

திரிபுராந்தகன்

அசுரன் தாரகனுக்கு தாரகாக்ஷா, கமலாக்ஷா மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இந்த அசுர இளவரசர்கள் பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் செய்து மகத்தான சக்தியின் வரத்தைப் பெற்றனர். பிரம்மா அவர்கள் மீது மகிழ்ச்சியடைந்து மாயாசுரனால் கட்டப்பட்ட தங்கம் வெள்ளி மற்றும் இரும்பு என ஒவ்வொன்றும் வானத்தில் சுழலும் ஒரு வான் கோட்டையை அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கினார். அவர்கள் ஒரு ஆயிரமாண்டுகள் ஆட்சி செய்வார்கள் என்றும், மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்து, அவற்றை எரியூட்டக்கூடிய ஒரு அம்பு மூலம் மட்டுமே அழிக்க முடியும் என்றும் அந்த வரம் வழங்கினார். இந்த வரம் பெற்ற அசுரர்கள் உலகத்தில் பேரழிவை ஏற்படுத்தினார்கள். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று காக்குமாறு வேண்டினர்கள்.

சிவபெருமான் ஆணைப்படி விஸ்வகர்மா தேரின் சக்கரங்கள் சூரியனையும் சந்திரனையும் வைத்து பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் மற்றும் கூறுகளுடன் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாக்கி பிரம்மா சாரதியாக இயக்க ஒரு ரதம் ஒன்றை தயாரித்தார். மேருமலையை வில்லாகவும் வாசுகி பாம்பை நாணாகவும் வைத்துக் கொண்டு திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன் வெள்ளி இரும்பு கோட்டைகள் ஒரே இடத்தில் வந்து நிற்க மூன்று அசுரர்களும் சிவபெருமானுடன் போர் புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும் தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான் சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த சிவபெருமான் லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை கவிழ்ந்தனர். திரிபுரத்தையும் எரித்ததால் சிவபெருமான் திரிபுராந்தகன் என்று அழைக்கப்பட்டார். இக்காட்சி எண் 16 எல்லோலா குகைக் கோயில்களில் கைலாசா கோயிலில் சிற்பமாக உள்ளது.

ராவணன் அனுகிரஹமூர்த்தி

கைலாயத்தில் சிவன் பார்வதி அவர்களின் பரிவாரங்களுடன் உள்ளார்கள். இராவணன் தனது இருபது கரங்களின் வலிமையுடன் கைலாச மலையை அசைக்க முயற்சி செய்கிறார். இராவணனின் செயலினால் கைலாசம் லேசாக நடுங்க பார்வதி பதற்றத்துடன் சிவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். சுற்றி இருக்கும் சிவனின் பரிவாரங்கள் இராவணனின் செயலினால் கோபத்துடன் காட்சியளிக்கின்றனர். சிவன் ஒன்றும் அறியதவர் போல் பேரின்ப நிலையில் இருக்கிறார். சிதிலமடைந்த நிலையில் தற்போது இந்த சிற்பம் உள்ளது. இடம் கைலாச கோவில் குகை எண் 16. எல்லோரா குகைகள்.

யோக தட்சிணாமூர்த்தி

சிவபெருமான் உத்கடாசன தோரணையில் குருவாக தட்சிணாமூர்த்தி வடிவில் வந்து மௌனத்தில் ஞானத்தை அளித்து அறியாமையை போக்கி அருள்பாலிக்கும் சிற்பம். ஆற்காடு காவிரிப்பாக்கத்தை சேர்ந்த சிற்பம் தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

நந்தி பகவான் தன் சக்தியுடன் மனித உருவில்

நந்திகேஸ்வரரும் நந்திகேஸ்வரியும் மனித உருவில் சிவபெருமானின் மீது அசையாத பக்தியுடன் பாதுகாவலர்களாக கச்சபேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள். புராணத்தின் படி சிவபெருமான் இந்த உலகத்தில் திருநடனம் ஆடிய போது அதனைக் காண்பதற்கு நந்தி பகவான் மனித ரூபத்தில் காண விருப்பம் கொண்டு தனது சக்தியுடன் வந்து தரிசனம் செய்தார். இடம் பெரிய காஞ்சிபுரம்.

முக்கண் பைரவர்

உத்திரபிரதேசம் பரேலி மாவட்டம் அஹிச்சத்ரா என்னும் ஊரில் 3 ஆம் நூற்றாண்டில் சூலத்துடன் அருள்பாலித்த இந்த முக்கண் பைரவர் தற்போது அமெரிக்க நாட்டில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள LACMA அருங்காட்சியகத்தில் உள்ளார்.