ராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார். நாட்டு மக்கள் அனைவரும் ராமரை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப் பொருட்களை தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும் போது நாம் மட்டும் அற்ப காலணிகளையா தருவது என நினைத்தவன் ராமரைப் பார்க்கப் போகாமல் திரும்ப சென்று விடலாம் என்று நினைத்து திரும்பினான். அதனை கவனித்து விட்ட ராமபிரான் அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமர் சொல்ல அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமர் வனவாசம் செல்லப் புறப்பட்ட போது வனவாசம் செல்லும் போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது. இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல எனக்கு அனுமதியுங்கள் என்று கேட்டு அனுமதி வாங்கி தன்னுடன் எடுத்துச் சென்றார் ராமர். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கி விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன என்றார். உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர் பரதனால் கொண்டு செல்லப்பட்டு அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.
வேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான காமதேனுவை தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட கார்த்தவீர்யாஜுனன் என்ற அரசன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும் அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் புதல்வர் பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டு வந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார். கார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை 21 முறை வாளால் வெட்டிக்கொன்றார்கள். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற சத்திரியர்களான அரசர்கள் மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் 21 தலைமுறையினரையும் தான் வெட்டி வீழ்த்தப்போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.
அயோத்திய நகரை அப்போது ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த தசரத சக்ரவத்தி தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும் பரசுராமரின் போர்திறன் தவசக்தி மற்றும் சிவ பெருமானிடம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி போன்றவை அவரிடம் இருக்கும் வரை இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்று அறிந்து வைத்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தீர்க்க வழி தேடினார். புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர். பரசுராமரின் பலவீனத்தை தெரிந்து கொண்ட தசரதர் ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார். பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும் அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் யுத்தம் நடக்காமல் இருக்க பரசுராமர் பார்வையில் படும் போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார். தனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவை செய்யும் பொருட்டு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரதசக்கரவர்த்தி இத்தனை திருமணம் புரிந்தார்.
அந்தணர் ஒருவர் கலகை என்பவளுடன் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சாந்த குணமுடையவர். கலகை அந்தணருக்கு எதிர்மறையாக இருந்தார். இவள் கணவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். இதனால் வெறுப்படைந்த அந்தணர் வீட்டை விட்டு வெளியில் கிளம்பிச் சென்றார். அவ்வாறு செல்லும்போது வழியில் அந்தணரை பார்த்து ஐயா எங்கே போகிறீர்? ஒருவர் என்று கேட்டார். மனைவியின் துன்பம் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் வீட்டைவிட்டு வெளியேறி போகின்றேன் என்றார். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள். அன்பரே நான் சொல்லும்படி கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த அந்தணர் வீட்டுக்குச் சென்று கலகை இன்று நான் சாப்பிடமாட்டேன் என்றார். சாப்பிடு என்று உணவை கோபத்துடன் கொடுத்தாள். இவ்வாறு அந்தணர் கலகையிடம் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும் வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் சுகமாக வாழ்ந்து வாழ்ந்தார். ஒருநாள் அந்தணர் மனைவியிடம் கலகை நாளை என் தந்தையாருடைய சிரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப் பிரசாதத்தை ஜலதாரையில் கொட்டுமாற சொல்லியருக்க வேண்டும். அவர் சற்றுக் கவனக்குறைவாக பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டிவிட்டாள். அந்தணர் கோபத்தில் எனக்கு ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே இது எவ்வளவு பெரிய பாவம் கலகை. அதனால் கலகை என பெயர் பெற்ற நீ அலகையாகப் (பேய்) போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து வேதனைப்பட்டாள்.
தர்மாங்கதர் என்ற ஓர் முனிவர் கங்கைக்கரையில் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை செபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். கங்கைக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்த பெண் பேய் பிடிக்கச் சென்றது. அப்போது முனிவர் கமண்டலத் தண்ணீரை ஓம் நமோ நாராயணாய என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது தர்மாங்கதரே நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவனுக்கு குற்றங்கள் செய்த பாவத்தால் அவருடைய சாபத்தால் பேயாக அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவித்தேன் என்று அழுதாள். அதற்கு தர்மாங்கத முனிவர் அழாதே. நான் தோன்றிய நாள் முதல் இன்று வரை செய்த தவத்தில் பாதி உனக்கு தருகிறேன் இதன் பலனாக இனி நீ பல இன்பங்களை அனுபவிப்பாய் என்று அருளினார். உடனே வைகுண்டத்திலிருந்து வந்த பொன்மணி விமானம் இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்து சென்றது.
ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து நீங்கள் பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்வீர்களாக. உனக்கு நான் மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி ராவணனை வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். கலகை நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற பெயருடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால் கௌசலை வயிற்றில் நான் பிறந்தாலும் என்னை நீ அன்பு மகனாக வளர்ப்பாயாக. சமயம் வரும்பொழுது ராவண வதத்திற்காக என்னைக் கானகம் போகச் செய்வாய் என்றார். திருமாலுடைய சக்கரம் பரதனாகவும் சங்கு சத்துருக்கனாகவும் ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பிறக்குமாறு ஸ்ரீமன் நாராயணர் கட்டளை இட்டருளினார்.
ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி வீதியில் பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் எமதர்மராஜன் முன் நிறுத்தினார்கள். அவரும் அவனுடைய பாப புண்ணிய கணக்கை பரிசீலித்து ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதற்கு விலை கூற மறுத்து ராம நாமத்திற்கு நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள் என்றான். திகைத்த எமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். நான் வருவதென்றால் பல்லக்கில் தான் வருவேன் அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் சம்மதமா என்றான். இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால் ராம நாமம் மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும் அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய எமதர்ம ராஜா அதற்கு சம்மதித்து அவனை பல்லக்கில் உட்கார வைத்து சுமந்து கொண்டு இந்திரனிடம் சென்றார். இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம் வாருங்கள் என்றார். எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு பிரம்மாவிடம் சென்றனர். அவரும் ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது வைகுண்டம் போய் அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
மகா விஷ்ணுவிடம் சென்ற அவர்கள் இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது அதற்காக இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர். இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா என்று சொல்லி பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.
தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. நான்கு பிள்ளைகளும் நான்கு தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தார்கள் தர்மம் நான்கு வகைப்படும். அவை 1.சாமான்ய தர்மம் 2. சேஷ தர்மம் 3. விசேஷ தர்மம் 4. விசேஷதர தர்மம்
சாமான்ய தர்மம் – பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் ராமர்.
சேஷ தர்மம் – சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் லட்சுமணன்.
விசேஷ தர்மம் – தூரத்தில் இருந்து கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.
விசேஷதர தர்மம் – பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதர தர்மம். சத்ருக்னன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக இந்த நான்கு தர்மங்களையும் ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.
சிவ பக்தையான மண்டோதரி சிவபிரானை குழந்தை வடிவில் தரிசிக்க விரும்பி அதற்காக கடும் தவம் புரிந்தாள். அதேசமயம் உக்கிரகோசமங்கை எனும் திருத்தலத்தில் ஆயிரம் முனிவர்கள் ஒன்று கூடி சிவபிரானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் காட்சியளித்த சிவன் தன் கையிலிருந்த சிவ ஆகமங்களை அவர்களிடம் தந்தார். ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு தான் குழந்தை வடிவில் காட்சியளிக்கச் செல்வதாகவும் திரும்பி வரும் வரை ஆகமங்களைப் பாதுகாக்கும் படியும் கூறினார். அதோடு குழந்தை வடிவில் செல்லும் தன்னை ராவணன் தொடும் சமயத்தில் அங்கிருந்து மறைந்து ஜோதி வடிவாக இக்கோயில் குளத்தினில் தோன்றி மீண்டும் ஒரு முறை காட்சியருள்வதாகக் கூறி மறைந்தார். அழகே உருவான குழந்தை வடிவில் மண்டோதரிக்குக் காட்சியளித்தார் சிவன். குழந்தை வடிவில் வந்தவர் யார் என உணர்ந்து கொண்ட மண்டோதரி தன் தவம் நிறைவேறியதால் மகிழ்ந்தாள். குழந்தையாய் இருந்த சிவனை வாரியணைத்து எடுத்து சீராட்டினாள். அப்போது அங்கு வந்த ராவணன் அக்குழந்தையின் அழகால் கவரப்பட்டான். அவன் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது. யாருடைய குழந்தை இது என்று மண்டோதரியிடம் ராவணன் கேட்டான். அதற்கு மண்டோதரி நடந்தவற்றை கூறினாள். சிவனின் பக்தனான ராவணன் மகிழ்வோடு அந்த குழந்தையை தூக்க முயற்சிக்கும் போது சிவன் அங்கிருந்து மறைந்து உத்தர கோச மங்கை தலத்தின் திருக்குளத்தில் அக்னிப் பிழம்பாய் தோன்றினார். அவரைக் கண்ட அங்கிருந்த முனிவர்கள் பரவசமடைந்து ஜோதியில் பாய்ந்து நீரில் மூழ்கினர். ஒரே ஒரு முனிவர் மட்டும் இறைவன் கொடுத்த ஆகமங்களைக் காப்பதே தன் கடமை என சிவனின் கட்டளைக்கு பணிந்து அங்கேயே ஆகமங்களை காத்து நின்றார். அவருக்கு சிவன் தன் உமையவளுடன் விடைமேலமர்ந்து காட்சியருளினார். மூழ்கிய முனிவர்கள் ஒவ்வொருவரும் லிங்க வடிவில் இறைவனோடு ஒன்ற இறைவன் நடுவில் வீற்று சகஸ்ரலிங்கமாக அமர்ந்தார்.
எஞ்சியிருந்த முனிவர் தன் உயிரினும் பெரிதாய் சிவாகமங்களைக் காத்ததால் அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்யுமாறு அருளி மறைந்தார் எம்பெருமான். அந்த எஞ்சிய தொண்டரே மாணிக்கவாசகராய் அவதரித்தார். மகேசனின் புகழ்பாடி மண் சிறக்க வகை செய்தார். மாணிக்கவாசகப் பெருமானின் அவதாரத்திற்கு மண்டோதரியின் பக்தியும் ஒரு காரணமாயிற்று.
ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.
ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்குக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.
ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர் அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.
கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை அபகரிக்ககூடாது.