இராமரை விருந்தினராக இலங்கைக்குள் அழைக்க வேண்டும் என்று இலங்கைக்கு அரசனான பின் விபீஷணன் விரும்பினார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகமும் அவனுக்குள் எழுந்தது. தன்னையும் மனைவியையும் பிரித்த இராவணனின் நாட்டுக்குள் நுழைய இராமர் சம்மதிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் தன்னை மன்னனாக ஆக்கிய ஆற்றல் மிக்க தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். தயக்கத்துடன் தனது விருப்பத்தை இராமரிடம் தெரிவித்தார். எனக்கும் உன் நாட்டைப் பார்க்க விருப்பம் தான் விபீஷணா என்று இராமர் உடனே வர சம்மதித்தார். அனுமன் அங்கதன் இலட்சுமணன் ஆகியோர் உன் நாட்டின் வனப்பையும் எழிலையும் வர்ணித்தபோது எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது என்றார் ராமன். விபீஷணன் நெகிழ்ந்து இராமனுக்கு வழிகாட்டியபடி முன்னே சென்றார். இராமருடன் மற்றவர்களும் பின்தொடர்ந்தார்கள்.
இராமர் இலங்கையின் அவல நிலை கண்டு தன்னால்தானே இப்படி நேர்ந்தது என வருத்தத்துடன் நடந்து சென்றார். பிரமாண்டமான மாளிகைகள் பொலிவு குறைந்து காணப்பட்டன. ஆள் அரவம் இல்லாத அரண்மனைகள் வருத்தப்பட வைத்தன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சிலர் தம்மை கண்டதும் வணங்குவதை கவனித்த ராமர் சற்றுத் தொலைவில் யாரோ ஒரு பெண் ஓடி ஒளிவதையும் கண்டார். தன்னைக் கண்டதும் ஒருவர் மறைய முயற்சிப்பதைக் கண்டு திடுக்கிட்டான். இதனை கவனித்த விபீஷணன் இராமரிடம் இப்போது ஓடியது எங்கள் தாயார் என்றான். இதனைக் கேட்ட இராமர் அவர்கள் ஏன் பயந்தோட வேண்டும்? நான் அந்த அளவுக்கு இந்தப் போரில் உயிர்ச்சேதம் புரிந்து விட்டேனா? என்று குரல் தழுதழுத்தவாறு கூறினார். இதற்குள் விபீஷணனைச் சேர்ந்த சிலர் அவரது தாயாரை அழைத்து வந்து ராமன் முன் நிறுத்தினார்கள். அம்மா மன்னியுங்கள். போர் தர்மப்படி பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உடல்குறை உள்ளவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். நிராயுதபாணியாக நின்ற இராவணனைத் தாக்குவதும் தர்மம் அல்ல என்று உணர்ந்து நாளை போரிட வருமாறு வாய்ப்பு கொடுத்தேன். அப்படிப்பட்ட நான் உங்களுக்குத் துன்பம் தரமாட்டேன் என்னை நம்புங்கள் என்றான் ராமர்.
இராமா உனக்கு அளவு கடந்த துன்பத்தைக் கொடுத்த இராவணனின் தாயார் என்ற குற்ற உணர்வால்தான் சந்திக்க முடியாமல் மறைந்து கொள்ள முயற்சித்தேன் என்பது ஒரு காரணம். உன் வீர தீரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்ணாகப் பிறந்ததாலும் அரண்மனையிலிருந்து வெளியே வரமுடியாத பாரம்பரியம் கட்டுப்பாட்டாலும் உன் மகிமையை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனாலும் உன் வீரச்செயல்கள் என் காதுகளை எட்டத்தான் செய்தன. அதே சமயம் என் மகன் இராவணன் உனக்கு துன்பம் இழைத்ததையும் நன்கறிவேன். ஆணவம் மிகுந்த அவனைப் பெற்றதற்காக அவமானப்படுகிறேன். இது ஒரு புறம் இருந்தாலும் நான் உன்னுடைய அடுத்தடுத்த வீர தீர பராக்கிரமங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் கேட்டாவது இன்புற வேண்டும் என்பதற்காக நான் நீடித்து வாழ விரும்பினேன். உன் போர் தர்மத்தைப் புரிந்து கொள்ளாத உன் படையினர் யாராவது என்னைக் கொன்றுவிடக் கூடாது அல்லவா? அதனால் ஓடி ஒளிந்தேன் என்றார். இவரது பதில் அனைவருக்கும் திகைப்பைத் தந்தது. இராமர் அவளுடைய கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றி விட்டு அம்மா விதி நிர்ணயித்த காலம்வரை நீங்கள் நிம்மதியாக வாழலாம். கவலை வேண்டாம் என ஆறுதல் கூறினார். விபீஷணா நீ ராவணனுக்கு அறிவுரை சொன்னபோது கேட்காத இராவணன் ஒருவேளை தாயார் சொல்லியிருந்தால் கேட்டிருக்கலாம். இவரை இனி நீதான் மிகுந்த பரிவு அக்கறையுடன் பாதுகாத்து வர வேண்டும் தாய்மையைப் போற்ற வேண்டும் என்றார் இராமர்.
இராமர் காலில் விழுந்த விபீஷணன் மாற்றாந்தாய் சொன்னார் என்பதற்காக காட்டுக்குப் புறப்பட்ட பண்பாளன் நீங்கள். தாய்க்கு உரிய மரியாதையையும் மதிப்பையும் அளிக்கத் தயங்காத அற்புத மகன் நீங்கள். உன்னுடன் இணைந்திருக்கும் நான் அந்த நற்பண்பை இழக்க மாட்டேன். இராவணனை எங்கள் தாயார் திருத்தவில்லையே என நான் இதுவரை ஆதங்கப்பட்டதில்லை. ஏனெனில் எனக்கு இராவணனின் முரட்டு குணம் தெரியும். என் தாயின் அன்புள்ளமும் தெரியும். அதனால் இராமா நீங்கள் எமது தாயாரைப் பற்றிய கவலை வேண்டாம். நான் அவரை கண்ணின் இமைபோலக் காப்பேன் என்றார். இராமரும் அவரைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
