தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 23 திருவேள்விக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 23 வது தேவாரத்தலம் மூலவர் கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர். இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி. தீர்த்தம் கௌதகாபந்தன தீர்த்தம். மணவாளேஸ்வர சுவாமி திருமணக் கோலத்துடன் திகழ்கிறார். இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார். சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் கௌதுகாபந்தன க்ஷேத்திரம் என்றும் பெயர்.

கோவில் 3 நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது. கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளது. இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாளுக்கு வலதுபுறமும் இறைவனுக்கு இடதுபுறமும் உள்ளார். அர்த்த மண்டபத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் இருக்கின்றார்கள். அகத்தியருக்கும் இத்தலத்தில் அர்த்த மண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது.

அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தார். சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தனது குஷ்டத்தை போக்கிகொண்டார். சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.

ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற அம்பிகை திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் மணவாளேஸ்வரர் ஆக தோன்றி அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். அதன்படி அம்பாளுக்கு கங்கணம் கட்டி வேள்விகள் செய்து பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் திருவேள்விக்குடி என அழைக்கப்பட்டது. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது. செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளார். திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.