தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 38 திருமங்கலக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 38 வது தேவாரத்தலம் திருமங்கலக்குடி. மூலவர் பிராணவரதேஸ்வரர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் மங்களநாயகி மங்களாம்பிகை. தலமரம் வெள்ளெருக்கு கோங்கிலவு கோங்கு. தீர்த்தம் மங்கள தீர்த்தம் காவிரி. இத்தலம் பஞ்சமங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 1. ஊரின் பெயர் மங்கலக்குடி 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தல தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம் 5. இத்தல விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து கோயில்களிலும் சிவலிங்கத்தில் ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம் ஆவுடையாரை விட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருக்கின்றது. அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தித்தான் மலர் வைத்து பூஜித்தார். நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இவருக்கு தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்யம் படைத்து வலம்புரி சங்கில் பால் பன்னீர் தேன் சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள். இதுதவிர சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின் போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.

ஒரே கோயிலே இரட்டைக் கோயிலாக தனித்தனியே அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக உள்ளது. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிசேகம் செய்கின்றனர். சிவன் சன்னதிக்குச் செல்லும் போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இக்கோயிலின் வெளிச்சுற்றில் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது.

அனைத்து கோயில்களிலும் காலையில் திருக்கல்யாணம் நடந்து மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவமும் ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி அம்பிகை திருக்கல்யாணமும் அதன்பின் திருமண விருந்தும் நடக்கும். நவராத்திரியின் போது அனைத்து கோயில்களிலும் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வார்கள். ஆனால் இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம் ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக் காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப் போல அலங்கரிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

ஒரு சமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால் அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார். கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயில் (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டுள்ளனர். எனவே இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.

பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார. கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அதுபடி மந்திரி உயிர் திரும்பப் பெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவநாயகன்)என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள். இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளினர்கள். இத்தலத்தில் உள்ள புருஷமிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில் மனிதன் விலங்கு பறவை என்ற மூன்று முகங்கள் உள்ளது.

11 ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்துள்ளார். இக்கோயிலில் சோழர் பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. காளி சூரியன் திருமால் பிரம்மா அகத்தியர் அம்பாள் ஆகாசவாணி பூமாதேவி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.