திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் கோவிலுக்கு நேர் எதிரே மலையே நந்தீஸ்வரர் வடிவில் அமர்ந்திருக்கிறார்.


திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் கோவிலுக்கு நேர் எதிரே மலையே நந்தீஸ்வரர் வடிவில் அமர்ந்திருக்கிறார்.
மூலவர் சிங்கீஸ்வரர். உற்சவர் பஞ்சமூர்த்திகள், நடராஜர், சிவகாமி அம்பாள், பிரதோஷநாயர், சந்திரசேகர். அம்பாள் புஷ்பகுஜாம்பாள். மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் ஸ்வேத பத்ம புஷ்கரிணி கமல தீர்த்தம். ஊர் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு. ஶ்ரீதேவி பூதேவி ஆதிகேசவபெருமாள் சன்னதி உள்ளது. சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரிதவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரம். சரஸ்வதி ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரைத் தண்டினால் சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும் உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும் சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது.
சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடிய போது சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது இசை பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால் சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவ நடனத்தைக் காண முடியாமல் போனதால் அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது இசை பக்தியை பாராட்டிய சிவன் பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும் பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்று அழைக்கப்பட்டத. பின்னர் மெய்ப்பேடு என்று அழைக்கப்பட்டு தற்போது மப்பேடு என அழைக்கப்படுகிறது.
கோயில் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வட கிழக்கு மூலையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கிபி 976 இல் இக்கோயில் கட்டப்பட்டது. இவர் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரர். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கிபி 1501 இல் கோவில் ராஜ கோபுரம் மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். மேலும் வடகிழக்கு மூலையில் உள்ள பாலீஸ்வர மரகத பச்சைக் கல்லால் ஆன சன்னதியை புதுப்பித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு குகஸ்ரீ சுந்தரேச சுவாமிகள்(ஆத்தூர்-சேலம்) முன்னிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் சத் சங்கம் பெயரில்,நால்வர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில் கிபி 1947 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கட்டப்பட்டதையும் உறுதி செய்கின்றது. கோயிலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சம்ஸ்கிருத மொழி மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. செப்பேடுகளை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெ டுக்கப்பட்டுள்ள செப்பேடுகள் 1513 ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறு பெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன.
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி. இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் காசிபைரவர் இருக்கிறார். பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த பைரவர் நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர் பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன் பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில் முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர். இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பக்தர்கள் பைரவரின் பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தை கோயிலின் தல மரமாக இருக்கும் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருகிறார் என்று கோயிலின் தல வரலாறு சொல்கிறது.
பைரவர் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனவர் என்பதற்கு சான்றாக பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரும் வடை மாலையும் சில மணி நேரங்களில் விஷம் போல் நீல நிறமாக மாறி விடுகிறது. ஆகையால் தீர்த்தமோ வடை மாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில் இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள் படைக்கப்படும் வடை மாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கூட பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் திருமூலநாதர் சுயம்பு வடிவாக அருள்பாலிக்கிறார். சப்த ரிஷிகள் இங்கு பிரார்த்தனை செய்து ஞானம் பெற்றதினால் இறைவன் ஞானபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மாள் குங்கும சுந்தரி. அம்மனின் வாகனமாக நந்தி விளங்குகிறார். கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பங்குனி ஆற்றங்கரையில் இக்கோயில் உள்ளது. முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும் மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தினுள் உள்ளே அம்பாள் குங்கும சுந்தரியும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் கிபி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயில் இது. திருஞானசம்பந்தர் இங்கு சில நாள் தங்கியிருந்து திருமூலநாதரை வணங்கி சென்றுள்ளார். தீர்த்தம் பங்குனி தீர்த்தம். தல மரம் வில்வம். இம்மரம் பித்ரு சாப விமோசன தலமரமாக விளங்கி வருகிறது. தனது கணவர் உயிர் பெற்று மீண்டும் எழுவதற்கு ரதிதேவி தவம் செய்த திருக்கோயிலான பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலுக்கு மன்மதபுரம் என்றொரு பெயரும் உண்டு. பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்திருக்கோயில் இருந்ததால் பூவாளியூர் என்றழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி பூவாளூர் என்று மாறியது.
இக்கோயிலில் இறைவன் கல்யாண திருக்கோலத்தில் இருப்பதால் இறைவியின் சன்னதியும் இறைவன் சன்னதிக்கு இடதுபுறத்திலேயே அமைந்துள்ளது. இறைவன் இறைவியின் சன்னதிகள் இணைந்து அமைந்துள்ளதால் பிரகாரம் வலம் வரும்போது இரண்டு சன்னதிகளையும் சேர்த்தேதான் சுற்றியாக வேண்டும். தனியே சுற்ற இயலாது. மண்டபத்தினுள் 63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் உள்ளார். மஹாலிங்கம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வெள்ளை வாரண விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. பாலதண்டாயுதபாணி கெஜலட்சுமி ஜேஷ்டாதேவி ஆகியோர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் துர்க்கை அம்மன் சண்டிகேஸ்வரி தனி சன்னதிகள் உள்ளது. நடராஜர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவகிரகம் பைரவர் சனீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் 12 திருமுறைகள் புத்தகங்களை கொண்டு திருமுறை கோயில் இங்கு உள்ளது.
கோயில் 130 அடி அகலமும் 170 அடி நீளமும் கிழக்கு நோக்கியவாறு நான்கு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிய கோவிலில் மூன்று நிலை கோபுரம் உள்ளது. கோவில் வளாகம் பெரியது. கோயில் கட்டிடக்கலை பாணியில் இருந்து கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்று நாம் கருதலாம். கோஷ்ட மூர்த்திகளாக நர்தன கணபதி தட்சிணா மூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். தட்சிணா மூர்த்தி மற்றும் விநாயகர் சிலைகள் சமீப காலத்தில் செதுக்கப்பட்டதாகத் தோன்றினாலும் பழமையானதாகத் தெரிகிறது. அம்மன் சன்னதியின் மகா மண்டபத்தில் தனி சன்னதியில் 12 கரங்களுடன் மயிலின் மீது அமர்ந்த சண்முகரின் சிறிய சிலை உள்ளது. இக்கோயிலின் முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். கிராமத்தின் கிராம தெய்வமான வாக்குவாலம்மன் என்ற சிறிய கோயில் பிரதான கோயிலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இரண்டு முக்கிய சன்னதிகளைச் சுற்றியுள்ள பெரிய பிரகாரத்தில் சுவாரஸ்யமான சிற்பங்களுடன் கூடிய பல தூண்கள் உள்ளன.
கோயிலுக்கு முன்பு பங்குனி ஆற்றங்கரையில் கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று பிதுர் ஹோமம் நடைபெறுகிறது. பிதுர்க்களே இத்தலத்திற்கு நேரில் வந்து யாக ஆகுதிகளை ஏற்று ஆசிர்வதிப்பதினால் இத்தலம் தென்னிந்திய கயா என்று அழைக்கப்படுகிறது. யாகம் செய்ய வசதி இல்லாதவர்கள் தலத்திற்கு வந்து கோயிலை தூய்மை படுத்தும் உழவார திருப்பணிகளில் பலருடன் சேர்ந்து செய்தால் பிதுர் ஹோமம் நடத்திய பலன் கிடைக்கும். தீயச்செயல்கள் செய்து அதற்கு பிராயசித்தம் தேடுபவர்கள் பங்குனி மாதம் ஆற்றங்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட உடல்சுத்தி உள்ளம்சுத்தி புத்திசுத்தி மனசுத்தி அறிவுசுத்தி ஆகிய ஐந்து சுத்திகளும் கிடைக்கும். ஒரு ரிஷி தன் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்ய விரும்பினார். அப்போது அங்கு நதி இல்லாததால் கயாவில் நடத்த நினைத்தார். இந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன் அவர் இந்த கோயிலில் சிவனைப் பிரார்த்தனை செய்தார். இறைவன் தனது சிலம்பை எடுத்து வீசினார். உடனே அந்த இடத்தில் கங்கை ஓடத் தொடங்கியது. உடனே ரிஷி அந்த இடத்திலேயே தான் செய்ய வேண்டிய முன்னோர்க்கு உண்டான சடங்கை செய்தார். அன்று முதல் இக்கோயில தென்னகத்தின் கயாவாக விளங்குகிறது.
தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தனர். தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நேரடியாக சிவபெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு முறையிட்டனர். முருகன் வருவார் காப்பாற்றுவார் எனக் கூறிவிட்டு மீண்டும் தவத்தில் அமர்ந்து விட்டார் சிவபெருமான். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வரவில்லை. சிவபெருமானின் தவமும் கலையவில்லை. தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக்கணையை வீசி சிவனது தவத்தைக் கலையச் செய்யும்படி கூறினர். மன்மதன் இதற்கு மறுத்து விட்டான். மறுத்தால் நாங்கள் சாபம் விடுவோம் என தேவர்கள் பயமுறுத்தவே பயந்த மன்மதன் சிவபெருமான் மேல் மன்மத பாணத்தை ஏவினான். சிவபெருமான் மன்மதனை நோக்கித் திரும்ப அவரின் நெற்றிக்கண் பார்வைபட்டு மன்மதன் எரிந்து போனான். இந்த நிகழ்வு நடைபெற்ற திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தனது கணவரை இழந்த ரதிதேவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். தனது கணவனை காப்பாற்ற உடனடியாக சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினாள். மன்மதன் இல்லாததால் பிரம்மாவும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் தவித்து வந்தார். தனது மானசீக புதல்வரை இழந்த மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். இதனால் மனம் இளகிய சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்த ரதியின் முன்பு தோன்றினார். உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர்களின் கண்களுக்கு அரூபமாகத் தெரிவான் என்று ரதியிடம் கூறிய சிவபெருமான் மன்மதனை உயிர் பெற்று எழச் செய்தார். இந்த இடம் பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலில்.
சிவத்தலங்களில் பொதுவாக துர்க்கையம்மன் கோயிலின் இறைவன் தேவகோட்டத்தில் அமைந்திருப்பார். ஆனால் பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலில் விஷ்ணு துர்க்கை அம்மன் தனி சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார். நவராத்திரிப் பெருவிழாவின் போது இந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த துர்க்கை அம்மனுக்கு 8 கரங்கள் உள்ளன என்பது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். ஏழு முனிவர்களின் புதல்வர்களாகிய எழுபது முனிவர்கள் சைவ சாத்திர நுட்பங்கள் தமக்கு அருளுமாறு பெருமானை வேண்டி யாகம் செய்தார்கள். வேள்வியில் மகிழ்ந்த சிவபெருமான் எழுபது முனிவர்கள் உள்ளிட்ட பிரம்மன் முதலியோருக்கு சைவ சாஸ்திர நூல்களின் நுட்பங்களை அருளியது இத்திருக்கோயிலில்தான் என்கிறது தல புராணம்.
அகத்தியர் தென்நாட்டில் பல இடங்களிலும் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார். அப்படி பிரதிஷ்டை செய்த கோயில்களில் சாரம் அகத்திஸ்வரர் கோயிலும் ஒன்று. அகத்தியா் தமது திருக்கரங்களினால் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத் திருமேனி ஶ்ரீஅகத்தீஸ்வரா் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அகத்தீஸ்வரா் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பிகையின்திருநாமம் ஶ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆகும். இந்த அன்னையின் திருவுருவச்சிலை தற்போது திருக்கோயிலில் இல்லை. காலவெள்ளத்தில் இச் சிலை சிதிலமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அக்காலத்தில் இந்த இடம் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது. இங்கு ஈசன் தன் தேவியோடு அகத்திய மகரிஷி முன் தோன்றி தன் திருமணக் கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினாா். ஈசன் மீது அகத்தியா் கொண்டிருந்த பக்தியின் சாரத்திற்கு சான்றாக இந்த திருத்தலம் சாரம் என்று அழைக்கப்பட்டது.
இக்கோயிலில் பிரம்ம சாஸ்தா முருகர் அருள்பாலிக்கிறார். பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரம்மனைச் சிறையிலிட்டு அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கிய போது பிரம்மனுக்கு உரிய ஜபமாலையும் கமண்டலத்தையும் கொண்டாா் முருகப்பெருமான். கந்தனுக்குரிய இந்தத் திருவடிவம் பிரம்மசாஸ்தா என்று அழைக்கப்படுகின்றது. பிரம்ம சாஸ்தா என்று முருகப்பெருமானின் இந்த வடிவினை கந்தபுராணப் பாடல் குறிப்பிடுகின்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானை சுப்ரமண்யன் என்று வணங்குகிறோம். பிரம்மண்யன் என்றால் பிரம்மத்தை உணா்ந்த பரமஞானம் பெற்றவன் என்பது பொருளாகும். சு என்பது இதனை அதி உன்னதமான என்ற பொருளை மேலும் சிறப்பிக்கும் அடைமொழியாகும். பிரம்மத்தின் அதி உயா்வான நிலையை அடைந்தவன் சுப்ரமண்யன். அவனுக்கு மேலான ஞானம் தேஜஸ் வேறு இல்லை என்பது பொருள். எனவே தான் முருகப் பெருமானை ஞானக் கடவுள் என்று வணங்குகின்றோம்.
குளிகன் மற்றும் மாந்தியுடன் ஜேஷ்டாதேவியின் திருவுருவச் சிலை உள்ளது. இச்சிலை இத்தலத்தில் தற்போது ராஜமாதங்கி என்றும் சியாமள வராஹி என்றும் அழைக்கப்படுகின்றது.
பல்லவ மன்னா்கள் முருகனைப் பரமபாகவதன் பரம மகேஸ்வரன் பரம வைஷ்ணவன் பரம பிரம்மண்யன் என்று அழைத்ததாக செப்பேடுகள் தொிவிக்கின்றன. சோழ மன்னா்கள் காலத்தில் நிா்மாணிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் காணப்படும் அரிய இந்த பிரம்ம சாஸ்தாவின் சிலை பல்லவா்கள் காலத்தைச் சாா்ந்தது என்று வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். தொண்டை நாட்டில் ஆனூா் கந்தசாமி கோயிலிலும் காஞ்சிபுரம் குமரக் கோட்டத்திலும் புதுச்சோி மாநிலம் மதகடிப்பட்டு குண்டாங்குழி மகாதேவா் கோயிலிலும் பிரம்ம சாஸ்தா வடிவிலான முருகப்பெருமானின் சிலைகள் உள்ளன.
சாரம் ஶ்ரீஅகத்தீஸ்வரா் திருக்கோயிலில் சோழா் கால கல்வெட்டுகள் இரண்டு காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் பண்டைய அளவு கோலினைக் கல்வெட்டில் வடித்துள்ளனா். மற்றொரு கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்து மூன்றாவது ஆட்சியாண்டைக் குறிப்பதாகும். இக்கல்வெட்டில் இத்தலத்தின் பெயா் ஜெயங்கோவளநாட்டு சாரமான ஜெயங்கொண்ட சோழ நல்லூா் என்றும் ஈசனின் பெயர் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க மன்னன் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் கோயிலுக்கு நந்தா விளக்கேற்றுவதற்காக முப்பது பசுக்களை தானமாக வழங்கியதையும் சந்தி விளக்கெரிக்க பதினாயிரத்து எண்ணூறு காசும் கொடுத்து சூரிய சந்திரா் உள்ளவரை விளக்கெரிக்க ஒப்புக் கொண்டதையும் ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் திண்டிவனத்திற்கு அருகில் 8 கிமீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயில் தற்போது சிறிது சிறிதாக புணரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மூலவர் தீர்த்தீஸ்வரர். உற்சவர் தீர்த்தீஸ்வரர். கோயிலின் மூலவராகவும் உற்சகராகவும் தீர்த்தீஸ்வர சுவாமி அருள்பாலிக்கிறார். பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்கள் தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்ந்து தனது வழிபாட்டை செய்கிறது. அம்பாள் திரிபுர சுந்தரி. தீர்த்தீஸ்வரர் சன்னதியும் திரிபுர சுந்தரி தேவியின் சன்னதியும் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கிறது. தல விருட்சம் மகிழம் மரம். ஆலயத்தின் தல விருட்சமான மகிழ மரத்திற்கு அடியில் மாழ்வினை தீர்த்தர் சன்னதி உள்ளது. அவருடன் வீரபத்திரர் விசாலாட்சி மகாவிஷ்ணு ஒன்றாக அருள்பாலிக்கிறார்கள். திருவள்ளூரில் உள்ள புகழ்பெற்ற வீர ராகவப் பெருமாள் கோயிலை ஒட்டி அமைந்துள்ள பழமையான சிவன் கோவில் இது. வீர ராகவப் பெருமாள் கோயிலின் பெரிய கோயில் குளத்தை நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி தீர்த்தம் தலம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலம் புராணத்தில் தீர்த்தபுரி என்று அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 18 ஆம் நூற்றாண்டில் மீண்டும் புணரமைத்து கட்டப்பட்டது.
கருவறையைச் சுற்றியுள்ள சுவரில் விநாயகர் தட்சிணாமூர்த்தி விஷ்ணு பிரம்மா துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரரின் கோஷ்ட உருவங்கள் உள்ளன. வரசித்தி விநாயகர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தர்ம சாஸ்தா பால தண்டாயுதபாணி நவக்கிரகம் நடராஜர் கால பைரவர் சன்னதிகளும் உண்டு. மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டது இக்கோயில். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையே சுப்பிரமண்யர் சன்னதி உள்ளது. இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பு ஆகும்.
மது கைடபர் என்ற அரக்கர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இவர்களை அழிக்க திருமாலிடம் முறையிட்டனர் ரிஷிகள். திருமால் சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை வதம் செய்தார். வேதத்தில் சிறந்த அவர்களை அழித்ததால் திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டது. இதனால் இங்கு வந்து தீர்த்தீஸ்வரரை வேண்டி தோஷம் நீங்கப்பெற்றார் திருமால். இதனால் இறைவன் மால்வினை தீர்த்தர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு சமயம் காஞ்சி மஹாபெரியவர் இங்கு ஒரு மண்டலம் தங்கி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் மகிழம் மரம் மால் வினை தீர்த்தரை வலம் வந்து வணங்கினால் மரத்தில் இருந்து மகிழம் பூ உதிர்வதுபோல் பக்தர்களது வாழ்விலும் துன்பங்கள் உதிரும் என்று அருளினார். சில காலம் முன்பாக பௌர்ணமி தினங்களில் சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை கனக குளிகை காலத்தில் ஓநான் வேலி சித்தர் என்பவர் எடுத்து மற்ற புண்ணிய தீர்த்தங்களோடு சேர்த்து திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் தீர்த்த பிரசாதமாக வழங்கினார். இந்த தீர்த்தத்தை பருகியவர்கள் தங்களது உடலில் உள்ள நோய்கள் பல நீங்கப் பெற்றார்கள்.
திருமந்திரம் எழுதிய திருமூலா் வணங்கியதால் இத்தல ஈசனுக்கு திருமூலநாதா் எனும் திருநாமம் ஏற்பட்டதாக கோயில் தல புராணம் சொல்கிறது. திருவள்ளுர் புழல் பகுதியில் இக்கோயில் உள்ளது. நாகாபரணம் அணிந்தபடி திருமூலநாதா் கிழக்கு நோக்கிய கருவறையில் சதுர வடிவிலான ஆவுடையாா் மீது லிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளாா். லிங்கம் பெரியது. கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வருடத்திற்கு இரண்டு முறை புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சூரியன் தன் ஒளிக் கற்றைகளை நீட்டி திருமூல நாதரை வழிபட்டு செல்கிறார். அம்பாள் ஶ்ரீஸ்வா்ணாம்பிகை. தென்திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். கருவறை மற்றும் அா்த்தமண்டபத்தின் பஞ்ச கோஷ்டங்களில் முறையே விநாயகா் தட்சணாமூா்த்தி விஷ்ணு பிரம்மா மற்றும் துா்க்கை ஆகிய சிலாரூபங்கள் காட்சியளிக்கின்றன. தீா்த்தம் ஸ்வா்ண புஷ்கரணி. தல விருட்சம் வில்வம். துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் நந்தி சன்னதியுடன் கிழக்கு நோக்கிய ஆலயம். அகத்திய மகரிஷி ஈசனின் திருமணக் கோலத்தை இத்தலத்தில் கண்டிருக்கிறார்.
மகேந்திரி வாராஹி, பிராமினி, மகேஸ்வரி மற்றும் நாராயணி ஆகியோருடன் தனி சன்னதியில் கருவறைச் சுவரைச் சுற்றி கோஷ்ட விக்கிரகங்களாக வீற்றிருக்கிறார்கள். வெளிப் பிரகாரத்தில் மகா கணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், மகா பிரத்தியங்கரா தேவி, சரபேஸ்வரர், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி, நாகர், நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் சக்தி கணபதி, சிவலிங்கம், கஜலட்சுமி, வீரபத்ரர், முருகன் சன்னதிகள், வள்ளி, தேவசேனா, அஷ்டோத்திர லிங்கம், மகா சரஸ்வதி, 63 நாயன்மார்கள், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், சந்திரன், சூரியன் உள்ளார்கள். கோயிலுக்கு எதிரே கோயில் குளம் உள்ளது. பைரவர் சதுா் புஜங்களுடன், விரிந்த அனல் மகுடம், கண்டிகை, மணிவடம், தோள்வளை, அரைஞாண் போன்ற அணிகலன்க ளுடன் காணப்படுவதோடு இவரது வாகனமான நாய் மிகவும் எழிலாக அமைந்துள்ளது. பைரவரின் மேல் வலது திருக்கரம் உடுக்கையைப் பற்றியுள்ளது. இடது திருக்கரம் பாசக் கயிற்றைப் பிடித்துள்ளது. கீழ் வலது திருக்கரம் திரிசூலத்தையும் இடது திருக்கரம் கபாலத்தையும் ஏந்தி காட்சி தருகிறார். இச்சிலையின் காலம் 19 ஆம் நூற்றாண்டு தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.
இத்திருக்கோயில் பல்லவா் காலம் முதலே சிறப்புடன் இருந்தது என்பதற்கு ஆதாரமாக கிபி 8 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்த பல்லவா் கால சுப்ரமண்யரின் சிற்பம் ஒன்று இன்றும் இத்தலத்தில் காணப்படுகின்றது. சதுா்புஜங்களுடன் மேல் இரு திருக்கரங்களில் அக்கமாலையும், கெண்டியும் முன்கரங்களில் ஒன்றினை அபய ஹஸ்தமாகக் கொண்டு அமா்ந்த திருக்கோலத்தில் சுப்ரமண்யர் காட்சி கொடுக்கிறார். பல்லவா் காலத்தைத் தொடா்ந்து சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்திலும் இக்கோயில் சிறப்புற்றிருந்தது என்பதற்கு ஆதாரமாக சோழ மன்னா்களால் வணங்கப்பட்ட ஜேஷ்டாதேவியின் புராதன சிற்பமும் இத்தலத்தில் உள்ளது. (தற்போது இந்த சிலை கோயிலுக்கு அருகே தனியாக கோயில் எழுப்பப்பட்டு அங்கே உள்ளது) இக்கோயில் முகமண்டபத்தை அலங்கரிக்கும் சித்திரத் தூண்கள் பன்னிரெண்டிலும் எழில் வாய்ந்த சிற்பவடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் கிபி 17−18 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்தவையாகும். இத்திருக்கோயிலில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. இச்சுரங்கப்பாதை இந்தத் தலத்திலிருந்து திருமுல்லைவாயில் கொடியுடையம்மன் மற்றும் திருவொற்றியூா் வடியுடையம்மன் மீஞ்சுர் திருவுடையம்மன் தலத்திற்கும் செல்வதாகக் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக திருவுடையம்மன் கோயிலில் சுரங்கப்பாதை இருந்ததற்கான சுவடுகள் தற்போதும் காணலாம்.
தெற்கு கோஷ்டத்தில் கல்லால விருட்சத்தின் கீழ் தட்சணாமூா்த்தி வீராசனத் திருக்கோலத்தில் அருளுகின்றாா். இவரது மேல் இரு திருக்கரங்கள் நாகப்பாம்பினையும் அக்னி தண்டினையும் பற்றியிருக்கிறது. கீழ் வலது திருக்கரம் சின் முத்திரை தாங்கியும் இடது திருக்கரம் புத்தக முத்திரையில் ஏடு ஏந்திய திருக்கரமாகவும் காணப்படுகின்றது. சிரசினை ஜடாபாரம் அலங்கரிக்கிறது. வலது செவியில் அணிகள் ஏதும் இன்றி நீள் செவியாகவும் இடது செவியில் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றது. திருக்கழுத்தில் உருத்திராட்ச மணி, தோள்களில் தோள்வளை, முன்கைகளில் கைவளை, இடையில் தொடை வரை இடைக்கச்சை ஆகிய அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. இச்சிற்ப வடிவம் 15 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தது என தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.
பாரதம் பாடிய பெருந்தேவனாா் என்ற புலவா் புழல் திருத்தலத்தில் வாழ்ந்தவா். இவா் சங்க காலப் புலவா்கள் வரிசையில் இல்லை என்றாலும் சங்க நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தை சேர்ந்தவர். இவரால் எட்டுத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அகநானூறு ஐங்குறுநூறு குறுந்தொகை நற்றிணை மற்றும் புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன. இவரது காலம் கிபி 700 க்கு முன்பு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவா் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
புழல் கோட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் இத்தலத்து இறைவனது பெயர் கல்வெட்டுகளில் புழல் நாயனாா் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் சம்புவராய மன்னரான ராஜநாராயண சம்புவராயா், விஜயநகர மன்னர்களான முதலாம் தேவராயன், அச்சுதராயன் போன்ற அரசா்களின் கல்வெட்டுகளாகும். புழல் கோட்டத்திற்கு விக்கிரம சோழவளநாடு என்ற பெயா் இருந்ததை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. விஜயநகர மன்னா்கள் காலத்தில் இவ்வூா் மக்கள் இக்கோயிலுக்கு அளித்த நிலதானங்கள் மற்றும் கொடைகள் பற்றியும், இக்கோயிலில் நடந்த திருவிழாக்கள் பற்றியும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றியும் கல்வெட்டுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. புழல் கோட்டத்தின் தலைமை இடமான புழல் சோழ மன்னா்களின் ஆட்சிக்காலத்தில் ராஜசுந்தரி நல்லூா் என்று வழங்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் வீரராஜேந்திரன் மகனான கிழக்கு கங்கத்தை அரசாண்ட ராஜேந்திரனின் மனைவி ராஜசுந்தரி என்பவரது பெயரால் இவ்வூா் ராஜசுந்தரி நல்லூா் என்று அழைக்கப்பட்டுள்ளது.
பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலம் முதலே இத்திருக்கோயில் விளங்கினாலும் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சோழா் காலத்தின் புனரமைக்கப்பட்ட இக்கோயில் மீண்டும் அழிவினைச் சந்தித்ததால் விஜயநகர மன்னா்களின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோயில் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சாா்ந்தது என்பதையும் வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். சுந்தரா் இத்தல இறைவனை தரிசித்து பாடல்கள் பாடியுள்ளார்.
உஜ்ஜயினி உள்ள நாகசத்திரேஸ்வரர் சிலை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரமார் கால சிலையாகும். இந்த சிலை நேபாளத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது. செங்கற்களால் ஆன இந்த சிற்பத்தில் சிவனும் பார்வதியும் நாகத்தின் மீது அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுவைப் போல் சிவன் பார்வதியுடன் பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிலை இக்கோயிலை தவிர்த்து வேறு எங்கும் இல்லை. சிவபெருமானை நோக்கி தவம் செய்த நாகராஜருக்கு அவரது தவத்தின் பலனாக இறைவன் அவருக்கு அழியாத தன்மையைக் கொடுத்தார்.
நாகம் அவர்கள் மீது குடை வடிவில் படர்ந்துள்ளது. சிவனுக்கு வலதுபுறம் விநாயகர் இருக்கிறார். இக்கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். இந்த வருடம் முறை ஆகஸ்ட் 9ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகசந்திரேஸ்வரர் சன்னதி திறக்கப்பட்டு மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 12 மணி வரை வழிபடப்பட்டு மீண்டும் சன்னதி மூடப்பட்டது. 1050 ஆம் ஆண்டு பர்மர் மன்னர் போஜ் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இதற்குப் பிறகு, சிந்தியாவின் மன்னர் ரானோஜி 1732 இல் மகாகல் கோயில் மற்றும் நாகச்சந்திரேஷ்வர் கோயில் உட்பட முழு அமைப்பையும் புதுப்பித்து பலப்படுத்தினார். உஜ்ஜயினி மாகாளர் கோயிலின் 3 ஆவது தளத்தில் இந்த சன்னதி உள்ளது.
முருடேஸ்வர் கோவில் மிகவும் பழமையான கோயில். கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலா தாலுகாவில் உள்ள கடற்கரையில் உள்ள ஒரு கோயில். இக்கோயில் அழகிய மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. மூன்று பக்கம் கடல் சூழ்ந்த கந்துக மலையின் மீது அமைந்துள்ளது. சாளுக்கிய மற்றும் கடம்ப சிற்பங்களைக் கொண்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோயில் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. முருதேஸ்வரா என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ மிருதேச லிங்கமே பிரதான மூல லிங்கமாகும். இந்த லிங்கமானது இறைவன் ராவணனுக்கு கொடுத்த ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி ஆகும். தரை மட்டத்தில் இருந்து சுமார் இரண்டு அடி கீழே இருப்பதாக கோயில் புராண வரலாறு சொல்கிறது. மூலஸ்தானத்தில் லிங்கத்தை விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே தற்போது தரிசிக்கலாம். மூலஸ்தானத்தை தவிர கோயில் முழுவதுமாக நவீனப் படுத்தப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டு கோவிலுக்கு அருகில் 5 கோடி செலவில் 123 அடிகள் / 37 மீட்டர்கள் உயரம் சிவன் சிலை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 20 அடுக்குகள் கொண்ட 249 அடிகள் உயரம் கொண்ட ராஜகோபுரம் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை 123 அடி உயரத்தில் இருக்கிறது. இதன் எதிரில் ராட்சத நந்தி உள்ளது. நேபாளத்தில் 143 அடி உயரத்தில் கைலாஷ்நாத் மகாதேவர் சிலை உலகிலேயே பெரிய சிவன் சிலை ஆகும். கணபதி ஆஞ்சநேயர் நாகர் சுப்பிரமணியர் நவக்கிரகம் தத்தாத்ரேயர் சன்னதிகள் உள்ளன. இங்கு சிவன் பார்வதியை ராமர் சீதா லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் பூஜிப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. முருடேஸ்வர் சன்னதியில் அணையா விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் ஊற்றி காசு போட்டு பக்தர்கள் தங்கள் முகத்தை எண்ணெயில் பார்க்கின்றனர்.
இலங்கையை ஆட்சி செய்த அசுரர்களின் அரசன் ராவணன். சிவனின் சக்திகள் அனைத்தும் சேர்ந்த ஒரு ஆத்ம லிங்கம் வேண்டும் என்று ஆசைப்பட்டு அதன் மூலமாக அழியா வரம் பெற வேண்டும் என நினைத்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். அவரது தவம் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு ஆத்ம லிங்கத்தை கொடுத்து சென்று சேரும் இடம் வரை இந்த லிங்கத்தை எங்கும் கீழே வைக்க வேண்டாம் என்று கூறினார். ஆத்ம லிங்கத்தை பெற்றுக் கொண்ட ராவணன் இலங்கை திரும்பிக் கொண்டிருந்தான். இதனை அறிந்த நாரத முனிவர் ஆத்ம லிங்காத்தை வைத்து ராவணன் அழியா வரம் பெற்று விட்டால் ராவணனால் பூமிக்கு அழிவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தார். எனவே விநாயகரை அணுகி ஆத்ம லிங்கத்தை ராவணன் இலங்கை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இராவணன் தினமும் சூரியன் மறையும் நேரம் தவறாமல் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார். இதனை அறிந்த விநாயகர் விஷ்ணுவை உதவிக்கு அழைத்தார். இராவணன் இலங்கை செல்லும் வழியில் விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை மறைத்தார். மாலை வந்து விட்டது என்று நினைத்த இராவணன் மாலை வழிபாடு செய்ய நினைத்தார். அப்பொழுது விநாயகர் ஒரு சிறுவன் வேடத்தில் அங்கு தோன்றினார்.
இராவணன் தனது பூஜை முடித்து வரும் வரை ஆத்ம லிங்கத்தை வைத்து கொள்ள கேட்டார். விநாயகர் தான் சிறுவன் என்றும் இத்தனை எடை கொண்ட லிங்கத்தை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது ஆகவே என்னால் இந்த எடையை தூக்க முடியாமல் இருக்கும் போது மூன்று முறை உங்களை அழைப்பேன். நீங்கள் வரவில்லை என்றால் ஆத்ம லிங்கத்தை தரையில் வைத்து விடுவேன் என்று கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த ராவணன் ஆத்ம லிங்கத்தை விநாயகரிடம் கொடுத்தார். ராவணன் பூஜை முடித்து மீண்டும் திரும்பி வருவதற்கு முன்பாகவே விநாயகர் மூன்று முறை அழைத்தார். ராவணன் வரவில்லை எனவே ஆத்ம லிங்கத்தை கீழே வைத்து விட்டார். பின்னர் விஷ்ணு அவரது சுதர்சன சக்கரத்தை அழைத்துக் கொள்ள இருள் நீங்கி மீண்டும் பகல் வந்தது. ராவணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆத்ம லிங்கத்தை தனது வலிமையால் பிடுங்க முயற்சி செய்தார். அவரது முயற்சியில் ஆத்ம லிங்கம் ஐந்து துண்டுகளாக உடைத்தது. கோபத்தில் அதனை வீசினார். ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அதில் ஒரு துண்டு முருதேஸ்வர் கோயில் உள்ள இந்த இடத்தில் விழுந்தது. இந்த இடத்தில் முருடேஸ்வர் கோயில் கட்டப்பட்டது.
வினாயகரால் ஆத்ம லிங்கம் வைக்கப்பட்ட இடம் ஒன்றும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் முருடேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் சஜ்ஜேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் குணேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் தாரேஸ்வர் கோயிலும் ஆக ஐந்து இடங்களில் இந்த லிங்கத்தின் ஐந்து துண்டுகள் இருந்தது. இந்த ஐந்து இடத்தையும் வாயு பகவான் பஞ்ச சேத்திரங்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.
மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும் திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் நின்று அருள் பாலிக்கிறார்கள். ஏன்?
சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம சாத்திரங்கள் கூறுகின்றன.
ஒன்று: சிவன் சன்னதி எந்த திசை நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது. அதாவது சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை சமான வீஷணம் என்பர். மதுரையிலும் திருவண்ணாமலையிலும் இந்த அமைப்பு உள்ளது. அதில் இரண்டு வேறுபாடுகள் உள்ளது. சுவாமிக்கு வலப்புறம் அம்பாள் சன்னதி இருப்பதற்கு கல்யாணக் கோலம் என்று பெயர். சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் சன்னதி இருப்பற்கு அர்த்தநாரீஸ்வர கோலம் என்று பெயர்.
இரண்டாவது: சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்பாள் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும். இதற்கு அனுக்கிரஹ வீஷணம் என்று பெயர். சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்பாள் பிரதிஷ்டை அமைந்திருக்கும். சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று அம்பாள் நமக்கு அருள்வதாகப் பொருள். இந்த நிலை அனேகம் கோயில்களில் உள்ளது.
மூன்றாவது: சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். நேர் எதிராகப் பார்த்துக் கொள்ளும் அமைப்பு. இதற்கு அபிமுக வீஷணம் என்பர். இந்த அமைப்பு கொண்ட கோயில் அரிதாகவே இருக்கும். திருக்கடவூர் காளஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பு உள்ளது.
இவ்வாறு சிவன் கோயில்களில் மூன்று திசைகளில் அம்பாள் அருள்பாலித்தாலும் அவளது அருளில் எந்த வேறுபாடும் கிடையாது. மூன்றுமே ஒன்றுதான்.