கோடிலிங்கேஸ்வரர் கோவில்

கோடிலிங்கேஸ்வரர் 108 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இது கர்நாடகத்தின் கோலார் நகரத்தில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம் உப்பு லிங்கம்

இராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருக்கிறது. ஒரு முறை சிலர் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும் அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கம் இப்போதும் உள்ளது.

கும்பமோணம் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம்.

ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்பதை நிரூபிக்கும் போது அதை ஆமோதிக்கும் விதமாக இங்கே அத்வைதம் என்பது சத்தியமே என்று சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தை சிவலிங்கத் திருமேனியில் இருந்து வெளியில் எடுத்து ஆசிர்வாதம் கொடுத்த காட்சி.

சுழலும் லிங்கம்

ஒருசமயம் அவ்வைப்பிராட்டி சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால் களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி அவ்வையே உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். அம்பிகையிடம் தாயே என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள் அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன் என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.

இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது. இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல இருக்கும் என்பது தான் அதிசயம். கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும். மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால் அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.