தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #8 திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 8 வது தேவாரத்தலம் திருக்கலிக்காமூர். மூலவர் சுந்தரேஸ்வரர். இத்தல இறைவன் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சுந்தராம்பாள், அழகுமுலையம்மை, அழகம்மை. தீர்த்தம் சந்திர தீர்த்தம், தலவிருட்சம் வில்வம். உப்பனாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கொடிமரம் கிடையாது. சிறிய கோயில். பிரகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையம்மன் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார். பிரகாரத்தில் விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சன்னதி உள்ளது. இத்தலவிநாயகர் செல்வசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வில்வவனநாதர் சன்னதியும் உள்ளது. கலி (துன்பம்) நீக்கும் சிவன் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர் திருக்கலிக்காமூர் என்று அழைக்கப்படுகிறது. நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் உள்ளனர். இங்கு விநாயகர் சன்னதிக்கு முன்புறம் துவாரபாலர்கர்கள் போல இரண்டு விநாயகர் இருக்கின்றனர். கடற்கரை நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் விழாவின் போது சிவன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தநீராடுவார். ஆனால் இத்தலத்தில் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். முற்காலத்தில் இக்கோயிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது.

வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். திருமுல்லைவாயில் அடைந்து அத்தல இறைவனிடம் தன் வயிற்று வலியைப் போக்கி அருளுமாறு வேண்டினான். அவனூடைய வயிற்று வலியை தீர்க்காது வேறொரு தலத்திற்கு அவனுக்கு வழிகாட்டினார் இறைவன். கடற்கரை ஓரமாகவே நடந்து வந்த அவன் மீனவர் ஒருவன் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். சிலையை தூக்கி வந்த அவர் இத்தலம் அருகில் வந்தபோது வலி நின்றுவிட்டது. அதன் பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக்கண்ட அவர் அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால் வருடத்தில் ஒருமுறை இவளை பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.

சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய் கணவனை இழந்த பெண் இருந்ததைக் கண்டு வருந்தியது. பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார். அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர் சுந்தரேஸ்வரர் என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு வில்வவன நாதர் என்றும் பெயருண்டு. இங்கு உள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை நோய் நீங்கி செல்வம் பெருகும் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.