பீமனின் பக்தி

பாண்டவர்கள் வனவாசத்தில் காட்டில் வாழ்ந்து வந்தார்கள். இக்காலத்தில் தியானம் ஜெபம் பூஜைகள் என்று பயனுள்ளதாக கழித்தார்கள். குந்திதேவி பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அதில் பீமன் மட்டும் எப்போதும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் இறுதியாகவே வந்து கலந்து கொள்வான். ஒரு நாள் நீ யானை போல் பலசாலிதான் ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று என்று கடிந்தார் தருமர். இதன் பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம் போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி நகுலனை கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார் தர்மர். நகுலன் திரும்பி வந்து நாளை கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு நாள் வருவதாக சொல்லிவிட்டார் என்று கூறினான். நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள் என்று கூறியவாறு அர்ஜூனன் நம்பிக்கையுடன் சென்றான். கிருஷ்ணரிடம் நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். நாளை எனக்கு வேறு வேலை இருக்கிறதே என்றார் கிருஷ்ணர். மனம் சோர்ந்தவனாக அர்ஜூனன் திரும்பினான். அர்ஜூனன் அழைத்தும் கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டாரே என்று அனைவரும் அடுத்த நாள் காலையில் பூஜையில் முக வாட்டத்துடன் இருந்தனர். வழக்கம் போல தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன் அனைவரின் முகமும் வாட்டமாக இருப்பதைக் கண்டு ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்? என்று கேட்டான். அப்பொழுது தருமர் கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம். அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டார் என்றார். நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன் என்றான் பீமன்.

அப்போது அர்ஜூனன் நான் போய் அழைத்து வர முடியாத கிருஷ்ணர் நீ கூப்பிட்டதும் வந்து விடுவாரா? என்று கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும் போது பாஞ்சாலி நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை என்று கூறிவிட்டுச் சென்றான். சிறிது தூரம் போனபின் தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான். கிருஷ்ணா என்னுடைய பக்தி உண்மையாக இருந்தால் நீ விருந்துக்கு வர வரவேண்டும். வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து நான் என் உயிரை விடுவேன் என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி பீமனின் தலைக்கு மேலாக வந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக் கொண்டார். பீமனின் பக்தி அழைப்பினை ஏற்று அவனோடு விருந்திற்கு வர சம்மதித்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும் கேலி செய்தவர்கள் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆனது. பீமன் தனது பக்தியை தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அர்ஜூனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும் பீமனின் மனம் தூய்மையாகவும் தன்னலம் அற்றதாகவும் பக்தியுடனும் இருந்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.