ராவணன் கேட்ட தட்சணை

ராமர் சேது பாலத்தை கட்டும் பணியை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் வேண்டியனவற்றை தயார் செய்யுங்கள் என்று பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார். அது போல் பண்டிதர்கள் யாராவது அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு இந்த சிவ பூஜையை செய்வதில் சிறந்த பண்டிதன் என்றால் அது ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள். விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா? சுக்ரீவனும் அவனின் சேனைகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ராமனின் விருப்பமறிந்த அனுமன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார். ராட்சசர்கள் அனுமனை சூழ்ந்தார்கள். ராட்சசர்களிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். நான் உங்களுடன் சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு ராவணனின் சபையினர்கள் வியந்தார்கள். ராவணன் ஆச்சரியத்தோடு பார்த்தான் அனுமனை. சபையில் உள்ளவர்கள் இது ராமரின் சூழ்ச்சி என்றார்கள். அதற்கு அனுமன் சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமா? தயவு கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன். அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்த ராவணன் இந்த வேள்வியை நடத்தித் தர ஒப்புக் கொண்டு ராமர் இருக்குமிடத்திற்கு வந்தான் சிவ பக்தனான ராவணன்.

ராமருக்கு பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவரது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவர் தோன்றுவான் என ராவணன் எண்ணினான். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள் என்றார் ராமர் அதற்கு ராவணன் தசரத மைந்தா பூஜைக்கான ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் திருமணம் ஆனவன் தனது துணைவியில்லாமல் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை அதனால் இந்த பூஜை செய்தும் உபயோகம் இல்லை என்று பதிலளித்தான் ராவணன். தாங்கள் தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமர். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் ராமரிடம் ஒரு நிபந்தனை விதித்தான். பூஜைக்காக சீதையை சிறிது நேரம் அழைத்து வருகிறேன். பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்றான். நிபந்தனையை ஏற்றுக் கொண்டார் ராமர் இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயவு கூர்ந்து தாங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பிய வண்ணம் பண்டிதரான ராவணனிடம் கேட்டார் ராமர். அதற்கு ராவணன் மெதுவான குரலில் ராமனுக்கு மட்டுமே கேட்கும் படி பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும் தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ராவணன். ராமரும் சம்மதிக்க சிவ பூஜை சிறப்பாக நடைபெற்றது. ராவணனின் எண்ணப்படி அவன் உயிர் பிரிந்திடும் சமயத்தில் போர்க்களத்தில் ராவணனின் அருகிலிருந்து ராமர் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அருகிலிருந்து ஆசிர்வதி்த்தார். மன்னிக்க முடியாத சீதை அபகரணத்திற்காக வதம் செய்யப்பட்ட ராவணனுக்கு அவனுடைய உயர்ந்த வேத பண்டிதனுக்கான குரு தட்சிணை அவன் மரணத்தின் போது கிட்டியது.

2 thoughts on “ராவணன் கேட்ட தட்சணை

Leave a Reply to சுப்பிரமணியன் கிருஷ்ணமு்ர்த்திCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.