கர்ணன்

கர்ணன் கிருஷ்ணரை பார்த்து கேட்டான் என் தாயார் நான் பிறந்த உடனே என்னை ஆற்றில் விட்டுவிட்டார். நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை. பரசுராமர் எனக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார் ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க எனக்கு சாபம் கொடுத்தார். ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். தாய் குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் கர்ணா நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள், வாள் ஆகியவற்றின் இரைச்சலுடன் நீ வளர்ந்திருப்பாய். ஆனால் நானோ மாடு கொட்டகையில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன். நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை. ராணுவ பயிற்சி இல்லை. ஆனால் அனைவரும் நான் தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிற போது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன். நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்துகொண்டேன். ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு நான் ஓடிப்போன ஒரு கோழை. துரியோதனன் போரில் வெற்றி பெற்றால் உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பாண்டவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும். கிருஷ்ணன் தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும். எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது. நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே என்று கர்ணனுக்கு விளக்கினார்.

இரண்டு கேள்விகள்

  1. பீஷ்மருக்கு தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயன்றது.

இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் மஹாபிஷன். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான். சந்தனுவை விட்டு கங்கை நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள் அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும்.

  1. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர்? எந்த முறையில் வியாசர் கையாண்டார்?

இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது. நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி ரத்தத்தில் இருக்கும் ஸ்டெம் செல்களை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உருவாக்கலாம் என்று நவின விஞ்ஞானம் சொல்கிறது.

வியாசரின் இதுபோன்ற ஒரு முறையை கையாள்கிறார். தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார். அவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலிகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன் புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.

இன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது. தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர இன்குபேட்டர் உள்ளது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைத்து சராசரி குழந்தையாக வளர்க்க முடிகிறது.

மண்

குருஷேத்திர களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர். பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். அருகிலேயே மரணதேவனும் பீஷ்மரின் அனுமதிக்கு காத்திருந்ததார். மனம் முழுதும் நிறைந்திருந்த பீஷ்மரை மண்ணை விட்டு அனுப்ப நான் காரணமாகிப் போனேனே என்று கிருஷ்ணரிடம் படபடத்தான் அர்ஜூனன். பீஷ்மர் மண்ணைவிட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா என்றார் கிருஷ்ணன். திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜூனன். மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால் அவரை தடுப்பார் எவருமில்லை. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது. தன்னைப் பற்றிய நினைவு இன்றி தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது. பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜூனா விருப்பு வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே பீஷ்மம். கொண்ட கொள்கைக்காக தன்னைப்பற்றிய சிந்தனையே இன்றி தொடர்ந்து கடமையாற்றுவதே பீஷ்மம். பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா தவறா என்றுகூட யோசிக்கமாட்டார். தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல் தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ அவரே பீஷ்மர். அதற்காக அவர் கொண்ட தவம் தான் பிரம்மச்சர்யம். மண்ணிலிருந்து தன்னை ஒட்டாமல் விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும் என்றார் கிருஷ்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்று இம்மண். அதை விட்டு விலகி நின்றால் போதுமா என்று கேட்டான் அர்ஜூனன். நீர் நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி இருக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜூனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும் இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம். உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத விடவே இயலாத ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான். கருவில் இருக்கும்வரை மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும் தாய்மடியில் இருக்கும்வரை தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை. எப்போது குழந்தை என்ற ஓர் உயிர் மண்தொட ஆரம்பிக்கிறதோ அப்போது தான் படுத்திருக்கும் இடம் தன் இடம் என்று உள்நுழைகிறது ஆசை. பிறகு மண்ணில் புரள்கிறது குழந்தை. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின் முன்னோக்கி நகர்கிறது. தவழ்கிறது இடம் பிடிக்க அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டும் என்று எழ முயற்சித்து தொட நினைக்கிறது. எழுகிறது நடக்கிறது ஓடுகிறது இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. ஓடுகிறது. தேடுகிறது. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது. முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே உயிர்பிரிந்து போனபின்னே மண்ணால் வந்த மனிதனின் ஆசை மண்ணுக்குள்ளேயே புதைக்கவும் படுகிறது.

இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும் அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது. வாழும் காலத்திலேயே மண்ணாசையை மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர் என கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட அர்ஜூனன் திகைத்தான். அதனால்தான் மண்படாமல் பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னேன் அர்ஜூனா. பீஷ்மர் வாவென்றழைக்காமல் மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர் இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால் மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை மண் அவருக்குள் புகுத்திவிட்டால் பீஷ்மர் மண்ணாள ஆசை கொண்டுவிட்டால் உன்னால் என்னால் எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

ஒருவேளை அதிலிருக்கும் போதும் மண்தொட அவர் விரும்பினாலும் அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும். மண்தொட ஆசைப்பட்டால் வலிதான் மிஞ்சும் என்பதாலேயே மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல் விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன். இத்தனையும் நான் அறிந்து கொண்டேனே மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா என்று ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜூனன். சிரித்தார் கிருஷ்ணர். நீ நிற்பதே மண் மீதுதான். விண் நோக்கிச் செல்ல உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின் மண்ணில் தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராட வேண்டும் என்றார் கிருஷ்ணர். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. எதை வெல்ல நினைத்தோமோ அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும் இந்த மண் தந்ததுதான். உறவுகளையும் உணர்வுகளையும் கொடுத்த மண்தான் அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது அர்ஜூனனுக்குப் புரிந்தது.

நான் என்பது யார் இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும் புரியாவிட்டாலும் தான் யார் என்பதை மண் புரிய வைத்துவிடும். இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே ஒவ்வொருவரும் அர்ஜூனரே. கிருஷ்ணன் எனும் சாரதி ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. வாழும்போதே அதை உணர வேண்டும்.

ஐந்து கணவன்மார்களுடன் வாழ்ந்த திரௌபதி

ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு சந்தேகம் வந்தது. திரோபதி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். கிருஷ்ணன் முன்னால் பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் பீமனின் சந்தேகத்தை ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள். பீமனுக்குக் கோபம் வந்தது. தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து கிருஷ்ணா உனக்கே இது நியாயமா இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள் எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும் நீயும் சிரிக்கிறாய் திரெளபதியும் சிரிக்கிறாளே என்று கேட்டான்.

கிருஷ்ணர் சொன்னார் பீமா நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று எழுதப்பட்டவை தான் நடக்கிறது. இதில் நீ வருத்தப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லை. உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். வருடத்திற்கு ஒரு முறை திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார். ஆம் பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் காலை உதயத்தில் திரும்பி வருவாள் என பீமன் சொன்னான். அப்போது திரெளபதி எப்படி இருப்பாள் என்று கிருஷ்ணர் கேட்டார். பீமனோ புடம் போடப்பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்றான்.

பீமா இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார் என்றார் கிருஷ்ணர். அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும் கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்க தடுத்து அங்கே பார் என்றார். பீமன் கண்களுக்கு தீக்குள் திரெளபதி சாட்சாத் அகிலாண்டேஸ்வரி சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைத்தார் கிருஷ்ணர்.

பீமா நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி. அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள். இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப்படும் காட்சி இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய் என்றார்.

எருக்க இலையும் பீஷ்மரும்

மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர் அர்ஜூனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக அர்ஜூனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கையை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள் கௌரவர்கள் கிருஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர். பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.

பீஷ்மர் வேதவியாசரிடம் என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் என்ன என்று கேட்டார். அதற்கு வியாசர் பீஷ்மரே ஒருவர் தன் எண்ணம் சொல் செயலால் செய்வது மட்டும் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும். பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது. தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். திரௌபதியை துச்சாதனன் துகில் உரித்த போது சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று வியாசரிடம் கேட்டார். பீஷ்மா ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. தவறு செய்துவிட்டோம் என்று நீ உணர்ந்ததால் உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. ஆனாலும் திரௌபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது கேட்காதது போல் இருந்த உன் செவிகள் பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள் தவறை தட்டிக் கேட்காத வாய் அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள் வாளை பயன்படுத்தாத உன் கைகள் இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள் தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி என்றார் வியாசர்.

இதனை கேட்ட பீஷ்மர் வியாசரிடம் தவறு செய்த இந்த உடலை பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. சூரிய சக்தியை பிழிந்து தவறு செய்த இந்த என் உடலுக்கு தாருங்கள் என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார். வியாசர் எருக்க இலை ஒன்றைக் காட்டி பீஷ்மா எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான் சூரியனின் உருவமான எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும் என்றார். அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய யுதிஷ்டிரரிடம் வியாசர் ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்றாலும் உன் வருத்தத்துக்காக இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும் என்று ஆறுதல் சொன்னார்.

சில காலங்களுக்கு முன்புவரை ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும் தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறை இருந்தது.

விஷ்ணு சஹஸ்ரநாம்

குருக்ஷேத்திரத்தில் அம்புப்படுக்கையில் பீஷ்மர் கிருஷ்ணரின் புகழையும் பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தார். கிருஷ்ணரும் வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர். முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார். பிதாமகர் ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம் என்றார். அப்போது தான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர். பிறகு யுதிஷ்டிரர் கிருஷணரிடம் திரும்பி ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.

கிருஷ்ணர் வழக்கம் போல் என்னால் மட்டும் என்ன செய்ய முடியும். உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார் சகாதேவன் அதனை மீட்டு சொல்ல வியாசர் எழுதுவார் என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். கிருஷ்ணர் தொடர்ந்தார். உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே சுத்த ஸ்படிக மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து சுத்த ஸ்படிகம் உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார் என்றார். சுத்த ஸ்படிகம் அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. ஸ்வதம்பரராகவும் ஸ்படிகமாகவும் இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும். உடனே சகாதேவனும் வியாசரும் பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் சிவனை பிரார்த்தித்து தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர். அந்த சுத்த ஸ்படிக மாலை உலகின் முதல் வாய்ஸ் ரிகார்டராக அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது.

தானம் தர்மம்

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. யாரிடம் கேட்பது யார் தெளிவாகக் கூறுவார்கள் குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது. இதை உணர்ந்த ஈசன் அவர் முன் எழுந்தருளினார். சூரியனே என்ன தடுமாற்றம் உன் மனதில் என ஈசன் கேட்க பரம்பொருளே இல்லை என கூறாமல் சகல விதமான தான தர்மங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால் எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது இது அநீதி அல்லவா என கேட்டார் சூரியத் தேவன்.

சூரியனே நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில் இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால் தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன் தான். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது என்றார். இதைக்கேட்ட சூரிய தேவன் இறைவா தானமும் தர்மமும் பாவமும் புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன் என்றார்.

கேட்டு கொடுப்பது தானம்
கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்

திரௌபதியின் பாதணிகளை சுமந்த கிருஷ்ணர்

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே என்று நினைத்த துரியோதனன் மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். தாத்தா பீஷ்மர் பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும் அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால் துரியோதனனோ பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களைப் போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள் என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.

அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கிருஷ்ணர் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. சற்றைக்கெல்லாம் பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும் தர்மம் வெல்லும் என்று நமக்கு ஆசி கூறியவர். அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால் நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும் என்று நடுங்கினார்கள். பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட திரௌபதி மிகவும் கவலை கொண்டாள். இனி தன்னுடைய சபதம் என்னாவது போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணர் அங்கே வந்து சேர்ந்தான். திரௌபதியைப் பார்த்து சத்தம் செய்யாமல் என் பின்னால் வா என்று மிக மெல்லிய குரலில் கூறி அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தில் கிருஷ்ணர் நடந்து சென்றுகொண்டிந்தார். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. கிருஷ்ணர் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் திரௌபதிக்கு சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணரின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் திரௌபதி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசை கேட்டது. ஓரிடத்தில் நின்ற கிருஷ்ணர் திரௌபதியைப் பார்த்து சகோதரி உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு என்று கூறினான். திரௌபதியும் காலணிகளைக் கழற்றி வீசினாள். தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் திரௌபதி நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காதே என்றான். திரௌபதியும் கிருஷ்ணர் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் திரௌபதி. யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர் தீர்க்க சுமங்கலியாக இரு பெண்ணே என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன் அவள் யாரென்றும் பார்த்தார். திரௌபதியை பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். இவளையா வாழ்த்தினோம் என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ அந்தப் பாண்டவர்களின் பத்தினியை தீர்க்கச் சுமங்கலியாக இரு என்று வாழ்த்திவிட்டோமே என்று தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.

திரௌபதியைப் பார்த்த பீஷ்மர் பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தில் நீ தனியாகவா வந்தாய் உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள் என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கிருஷ்ணர் நின்றுகொண்டிருந்தார். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது. வா கிருஷ்ண இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு என்று கேட்டார். இதுவா திரௌபதியின் பாதணிகள் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் இந்த துணியில் முடிந்து வைத்திருக்கிறேன் என்றார் கிருஷ்ணர். உடனே திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். கிருஷ்ணா இது என்ன சோதனை என் காலணிகளை நீ சுமப்பதா என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா என்று அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன. தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயா என்றார் கிருஷ்ணர். பீஷ்மர் குறுக்கிட்டு மாயவனே அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன் உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க அவர்களின் பாதணிகளைக்கூட நீ தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும். கிருஷ்ணா நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான் ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் செய்யமுடியுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட பக்தர்களை ரட்சிக்க திரௌபதியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா என்று அவர் கண்களில் கண்ணீர் கொப்பளித்தன. மறுநாள் போரில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் அர்ஜூனனால் படுத்தார்.

உண்மையான பக்தி

தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார். என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர்.

தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். தாயே நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா என்று கேட்டார் கிருஷ்ணர். உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம் என்றாள் பிங்கலை. பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. தாயே கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே கத்திகள் யாருடையவை என்று கிருஷ்ணர் கேட்டார். என்னுடையவைதான் வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகள் மூவரைக் கொல்ல வேண்டும் அதற்காக மூன்று கத்திகள் வைத்திருக்கின்றேன் என்றாள். யார் அந்த விரோதிகள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன், திரௌபதி, அர்ஜூனன் இந்த மூவரும் என்றாள். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. திரௌபதிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ஜூனனைக் கொல்ல இந்தப் பெரிய கத்தி என்றாள். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கிருஷ்ணருக்குக் கொடுக்கலாமா என் கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கிருஷ்ணரின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுத்தான். ஆகவே அவனுக்கு சிறிய கத்தி என்றாள்.

திரௌபதி எப்படி உங்கள் விரோதியானாள் என்று கேட்டார் கிருஷ்ணர். அஸ்தினாபுரத்தில் இருக்கும் திரௌபதிக்கு துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர் வாரி வாரிப் புடவைகளை அருளினானே புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால் புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கிருஷ்ணருக்கு கை எவ்வளவு வலித்திருக்கும் கிருஷ்ணரின் கைகளை வலிக்கச் செய்த திரோபதியை சும்மா விடுவேனா அவளுக்கு நடுத்தர அளவுள்ள கத்தி என்றாள்.

அர்ஜூனன் கிருஷ்ணரின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே அவன் மேல் ஏன் விரோதம் என்று கேட்டார் கிருஷ்ணர். அர்ஜூனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா. குதிரைகளின் கயிற்றை இழுத்து இழுத்துக் கிருஷ்ணர் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும் தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாதாரண வேலை இல்லை. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம் என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ஜூனன். அன்று அவனை பார்த்துக் கொள்கிறேன் அவனுக்கு பெரிய கத்தி என்றாள்.

அர்ஜூனன் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தார் கிருஷ்ணர். குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கிருஷ்ணர்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள். திரௌபதிக்கு புடவை கொடுத்ததில் கிருஷ்ணர் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே சுயநலமே ஆனாலும் மானம் காக்க வேண்டியதால் திரௌபதியையும் மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசிவிட்டாள்.

போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜூனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும் என்றாள் பிங்கலை. சுயநலம் பிடித்த அர்ஜூனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்றான் கிருஷ்ணர். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கிருஷ்ணர் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னார் அர்ஜூனன் கிருஷ்ணர் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான் அர்ஜூனனை நீங்கள் கொன்றுவிட்டால் உற்ற நண்பனை இழந்து கிருஷ்ணர் வருந்துவானே. கிருஷ்ணர் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா என்று கேட்டார் கிருஷ்ணர். நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கிருஷ்ணர் உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன் என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன் மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

அன்னதானம் பெற்ற உணவை சாப்பிடும் முறை

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். தன் உடலை விட்டுவிட வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம் அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற யுதிஷ்டிரர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிஷ்மரிடம் சென்றார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி பிதாமகரே தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் யுதிஷ்டிரர். உடனே திரௌபதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த யுதிஷ்டிரர் நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் இது தகாத செயல் என்று கடுமையாகக் கேட்டார்.

துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர் அந்தச் சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது என்று கூறினாள். யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள். ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால் அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் திரௌபதியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன். ஆனால் இப்போது அர்ஜூனன் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன். என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

குறிப்பு: முற்காலத்தில் இந்த காரணத்தை ஒட்டியே விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் மற்றவர்களிடம் பெற்ற உணவை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்டார்கள்.