திரௌபதியின் பாதணிகளை சுமந்த கிருஷ்ணர்

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே என்று நினைத்த துரியோதனன் மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். தாத்தா பீஷ்மர் பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும் அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால் துரியோதனனோ பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களைப் போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள் என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.

அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கிருஷ்ணர் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. சற்றைக்கெல்லாம் பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும் தர்மம் வெல்லும் என்று நமக்கு ஆசி கூறியவர். அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால் நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும் என்று நடுங்கினார்கள். பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட திரௌபதி மிகவும் கவலை கொண்டாள். இனி தன்னுடைய சபதம் என்னாவது போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணர் அங்கே வந்து சேர்ந்தான். திரௌபதியைப் பார்த்து சத்தம் செய்யாமல் என் பின்னால் வா என்று மிக மெல்லிய குரலில் கூறி அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தில் கிருஷ்ணர் நடந்து சென்றுகொண்டிந்தார். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. கிருஷ்ணர் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் திரௌபதிக்கு சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணரின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் திரௌபதி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசை கேட்டது. ஓரிடத்தில் நின்ற கிருஷ்ணர் திரௌபதியைப் பார்த்து சகோதரி உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு என்று கூறினான். திரௌபதியும் காலணிகளைக் கழற்றி வீசினாள். தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் திரௌபதி நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காதே என்றான். திரௌபதியும் கிருஷ்ணர் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் திரௌபதி. யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர் தீர்க்க சுமங்கலியாக இரு பெண்ணே என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன் அவள் யாரென்றும் பார்த்தார். திரௌபதியை பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். இவளையா வாழ்த்தினோம் என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ அந்தப் பாண்டவர்களின் பத்தினியை தீர்க்கச் சுமங்கலியாக இரு என்று வாழ்த்திவிட்டோமே என்று தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.

திரௌபதியைப் பார்த்த பீஷ்மர் பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தில் நீ தனியாகவா வந்தாய் உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள் என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கிருஷ்ணர் நின்றுகொண்டிருந்தார். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது. வா கிருஷ்ண இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு என்று கேட்டார். இதுவா திரௌபதியின் பாதணிகள் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் இந்த துணியில் முடிந்து வைத்திருக்கிறேன் என்றார் கிருஷ்ணர். உடனே திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். கிருஷ்ணா இது என்ன சோதனை என் காலணிகளை நீ சுமப்பதா என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா என்று அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன. தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயா என்றார் கிருஷ்ணர். பீஷ்மர் குறுக்கிட்டு மாயவனே அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன் உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க அவர்களின் பாதணிகளைக்கூட நீ தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும். கிருஷ்ணா நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான் ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் செய்யமுடியுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட பக்தர்களை ரட்சிக்க திரௌபதியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா என்று அவர் கண்களில் கண்ணீர் கொப்பளித்தன. மறுநாள் போரில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் அர்ஜூனனால் படுத்தார்.

உண்மையான பக்தி

தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார். என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர்.

தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். தாயே நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா என்று கேட்டார் கிருஷ்ணர். உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம் என்றாள் பிங்கலை. பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. தாயே கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே கத்திகள் யாருடையவை என்று கிருஷ்ணர் கேட்டார். என்னுடையவைதான் வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகள் மூவரைக் கொல்ல வேண்டும் அதற்காக மூன்று கத்திகள் வைத்திருக்கின்றேன் என்றாள். யார் அந்த விரோதிகள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன், திரௌபதி, அர்ஜூனன் இந்த மூவரும் என்றாள். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. திரௌபதிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ஜூனனைக் கொல்ல இந்தப் பெரிய கத்தி என்றாள். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கிருஷ்ணருக்குக் கொடுக்கலாமா என் கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கிருஷ்ணரின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுத்தான். ஆகவே அவனுக்கு சிறிய கத்தி என்றாள்.

திரௌபதி எப்படி உங்கள் விரோதியானாள் என்று கேட்டார் கிருஷ்ணர். அஸ்தினாபுரத்தில் இருக்கும் திரௌபதிக்கு துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர் வாரி வாரிப் புடவைகளை அருளினானே புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால் புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கிருஷ்ணருக்கு கை எவ்வளவு வலித்திருக்கும் கிருஷ்ணரின் கைகளை வலிக்கச் செய்த திரோபதியை சும்மா விடுவேனா அவளுக்கு நடுத்தர அளவுள்ள கத்தி என்றாள்.

அர்ஜூனன் கிருஷ்ணரின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே அவன் மேல் ஏன் விரோதம் என்று கேட்டார் கிருஷ்ணர். அர்ஜூனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா. குதிரைகளின் கயிற்றை இழுத்து இழுத்துக் கிருஷ்ணர் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும் தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாதாரண வேலை இல்லை. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம் என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ஜூனன். அன்று அவனை பார்த்துக் கொள்கிறேன் அவனுக்கு பெரிய கத்தி என்றாள்.

அர்ஜூனன் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தார் கிருஷ்ணர். குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கிருஷ்ணர்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள். திரௌபதிக்கு புடவை கொடுத்ததில் கிருஷ்ணர் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே சுயநலமே ஆனாலும் மானம் காக்க வேண்டியதால் திரௌபதியையும் மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசிவிட்டாள்.

போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜூனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும் என்றாள் பிங்கலை. சுயநலம் பிடித்த அர்ஜூனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்றான் கிருஷ்ணர். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கிருஷ்ணர் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னார் அர்ஜூனன் கிருஷ்ணர் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான் அர்ஜூனனை நீங்கள் கொன்றுவிட்டால் உற்ற நண்பனை இழந்து கிருஷ்ணர் வருந்துவானே. கிருஷ்ணர் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா என்று கேட்டார் கிருஷ்ணர். நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கிருஷ்ணர் உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன் என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன் மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

அன்னதானம் பெற்ற உணவை சாப்பிடும் முறை

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். தன் உடலை விட்டுவிட வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம் அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற யுதிஷ்டிரர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிஷ்மரிடம் சென்றார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி பிதாமகரே தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் யுதிஷ்டிரர். உடனே திரௌபதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த யுதிஷ்டிரர் நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் இது தகாத செயல் என்று கடுமையாகக் கேட்டார்.

துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர் அந்தச் சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது என்று கூறினாள். யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள். ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால் அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் திரௌபதியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன். ஆனால் இப்போது அர்ஜூனன் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன். என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

குறிப்பு: முற்காலத்தில் இந்த காரணத்தை ஒட்டியே விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் மற்றவர்களிடம் பெற்ற உணவை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்டார்கள்.

சகுனியை பெருமைபடுத்திய கிருஷ்ணர்

குருசேத்திரப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர் தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். யாகம் தொடங்கலாமே சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்றா எனக் கேட்டார் கிருஷ்ணர். ஆயிற்று கண்ணா முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் என்றான் அர்ஜுனன். யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில் கேட்டார் கிருஷ்ணர். குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான் என்றார் யுதிஷ்டிரன். வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான் அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது. என்னாயிற்று கண்ணா உனக்கு முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே என்றார் கிருஷ்ணர் அமைதியாக. பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா கேட்டான் அர்ஜுனன். அர்ஜுனா வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து எத்தனை தடைவந்தாலும் தகர்த்து தன் லட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் லட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர்கள் தோற்கவில்லை. ஆனால் எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் லட்சியமும் வெல்லவில்லையே என கேட்டான் யுதிஷ்டிரன். போரில் உடன்பிறந்தவர் உற்றார் உறவினர் பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது. உங்கள் வாரிசுகளை அழித்த பின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள் கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள். அப்படிப் பார்த்தால் சகுனியின் லட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே என அர்ஜுனன் கேட்க சிரித்தார் கிருஷ்ணர். அர்ஜுனா எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய் என்றார் கிருஷ்ணர்.

கெளரவர்களை அழிப்பதே சகுனியின் லட்சியமா ஏன் கிருஷ்ணா என்று அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார். கெளரவர்களை மட்டும் அல்ல உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம் இலட்சியம் எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால் கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி என்றார் கிருஷ்ணர். பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன். பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான் என்றார் கிருஷ்ணர். சகுனி துரோகி நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே என்றார் திருதராஷ்டிரன். இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான் உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால் தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி உங்கள் எல்லோரையும் விட நல்லவனே என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணா எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான் தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன சொல் கிருஷ்ணா என கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன். அது எனக்கும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா முடியாதா கேட்டார் கிருஷ்ணர். கோபப் படாதே கிருஷ்ணா யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே என்றார் யுதிஷ்டிரர் அமைதியாக. யுதிஷ்டிர வீரனாக நல்லவனாக ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் என்பதை அறிவாயா தப்பிப் பிழைத்தவன் சகுனி தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் லட்சியம் வெல்வதற்காக இதில் என்ன தவறு போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களாகும் போது அவன் கொண்ட லட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே என்றார் கிருஷ்ணர்.

திரௌபதியை துகிலுரிக்க வைத்தது சகுனி செய்த தர்மமா என கேட்டான் பீமன். பீமா யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன் எங்களுக்கு பதிலாக கிருஷ்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால் அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே. திரௌபதியின் அவமானம் சகுனியால் திட்டமிடப்பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யுதிஷ்டிரனும் துரியோதனனும் தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான் பழிகாரன் அல்ல கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன். கிருஷ்ணா பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும் என்றான் சகாதேவன் அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார் அவரைப் பின் தொடர்ந்தான் சகாதேவன்.

கிருஷ்ணா சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன் என்றான் பணிவுடன். சகாதேவா காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது கவலை வேண்டாம். அது மட்டுமின்றி இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே. என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன் அவன். உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. அவனை என் பக்தனாக அவன் விரும்பாவிடினும் அவனை நான் ஏற்றுக் கொண்டதனால் யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன். என்னை விரும்பி நினைப்பதோ விரும்பாமல் நினைப்பதோ என்னை நினைப்பது மட்டுமே முக்கியம். ஒருவனை நான் ஆட்கொள்ள அதுபோதும் என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்.

கலியுகம் பற்றி யுதிஷ்டிரர்

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சந்தைக்குள் நுழைந்து ஒரு அழகான குதிரையை பார்த்த உடன் குதிரையின் உரிமையாளரை நெருங்கி குதிரை என்ன விலை என்று கேட்டான். அதற்கு குதிரையின் உரிமையாளர் இந்த குதிரை விற்பனைக்கு அல்ல நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் குதிரையை இலவசமாகவே கொடுப்பேன் என்றார். சகாதேவன் உடனே சரி கேள்வியைச் சொல்லுங்கள் என்றான். ஒரு பெரிய கிணறு அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால் அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால் பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன் என கேட்க சகாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில் சகாதேவனை தேடிக்கொண்டு் வந்த நகுலன் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.குதிரையின் உரிமையாளர் நகுலனிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை ஏன் என்று கேட்டார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. சகாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர் அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார். ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில் அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள் என்று கேட்டான். பதில் சொல்ல முடியாததால் அர்ஜுனனும் அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க அரண்மனையில் அவர்களைக் காணாமல் யுதிஷ்டிரர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு தம்பி நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய் அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா என்றார். பீமனும் போய் தேடிப்பிடித்து அர்ஜுனன் நகுலன் சகாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். திரௌபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் அவர்களைப் பார்த்ததும் அர்ஜுனா நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள் எனக் கேட்டார். அதற்குப் அர்ஜுனன் நடந்ததை எல்லாம் சொல்லி குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். யுதிஷ்டிரர் நடுங்கிவிட்டு பதில் சொல்லத் தொடங்கினார். எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள் என்று விரிவாகக் கூறினார்.

அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள் ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி அவ்வளவு பிள்ளைகளையும் பிரியமாக காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது என்றார். இரண்டாவது கேள்விப்படி இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில் அதன் வால் போக முடியவில்லை என்று பதில் கூறினார். அடுத்து மூன்றாவது கேள்வி பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும் பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள் வறுமையில் வாடுவார்களே தவிர அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான் வேலி அப்படியே இருக்க பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது. கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி முடித்தார் யுதிஷ்டிரர்.

கலியுகம் பற்றி கிருஷ்ணர்

பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார் கிருஷ்ணர். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

பீமன் அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு அதைச் சுற்றி நான்கு கிணறுகள் சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன் அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

சகாதேவன் கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன் கிருஷ்ணரின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுதுதுக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்து தள்ளி வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன் தெளிவுபெற கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நான்கு பாண்டவர்களும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும் மனதில் உள்ள குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

பீமா கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள். வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

அர்ஜுனா கலியுகத்தில் போலி மதகுருக்கள் ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள். குயிலை போல.

சகாதேவா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள் பசுவை போல்.

நகுலா கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல் நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் பாறையை தடுத்த சிறுசெடியை போல் என்று பதில் சொல்லி முடித்தார்.

அர்ஜூனனின் காண்டீபம்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன் கர்ணா இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள் என்றான். கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். நீ அல்லவோ சுத்த வீரன் அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர் கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றார். அது என்ன என்று கேட்டான் அர்ஜுனன். நேரம் வரும் போது சொல்கிறேன் என்றார் வியாசர். பல ஆண்டுகள் கழிந்தன. மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின் கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். அர்ஜுனா நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு என்று கூறினான் கிருஷ்ணன். கனத்த மனத்துடன் கிருஷ்ணரிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும் யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படும் வில்லுக்கு விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில் இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். அர்ஜுனா நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது என்று கூறினார் வியாசர். கிருஷ்ணரே புறப்பட்ட பின் நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால் என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது. இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே என்ன காரணம் என்று கேட்டான் அர்ஜுனன். அதற்கு வியாசர் உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கிருஷ்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால் இதை உன்னால் தூக்க முடியவில்லை என்றார்.

சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே ஏன் தெரியுமா கிருஷ்ணரின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். கிருஷ்ணரின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும். அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன் கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான். பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் இறைவன் தான் வழங்குகிறார் என்றார் வியாசர்.

அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன்

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. ராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி என்றால் ஏன் அவர் தன் வில்லினால் அம்பைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து கல்லினால் ஏன் பாலம் கட்டினார் எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது ஒரு நதியின் அருகே அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருவம் கொண்டு அமர்ந்து ராமநாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அவரிடம் சென்று ஏய் வானரமே உன் ராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார் என்றான் கர்வமாக. தியானம் கலைந்த அனுமன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க எண்ணுகிறார்.

வில்லினால் கட்டப்பட்ட சரப்பாலம் என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும் போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும். ஆகையால் கல்லினால் வானரங்களை வைத்து பாலம் கட்டினார் என்றார் அனுமன். அதற்கு அர்ஜூனன் இந்த நதியின் குறுக்கே நான் அம்பினால் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும் என்கிறான் அர்ஜூனன். பாலம் உடைந்துவிட்டால் வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன் என்கிறான். பாலம் உடையவில்லை என்றால் என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன் என்கிறான் அனுமன். அர்ஜூனன் அம்பினால் சரப்பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து ராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினார். அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும் அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தார் உடனே பாலம் தகர்ந்து சுக்குநூறானது. பார்த்தாயா என் ராமனின் சக்தியை என்ற அனுமன் ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.

போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான் தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள் கிருஷ்ணா என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும் தனது வாக்கிலிருந்து பின்வாங்க அர்ஜூனன் தயாராக இல்லை. அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது என்ன நடக்கிறது இங்கே என்ன பிரச்சனை என்று ஒரு குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில் ஒரு அந்தணர் தென்பட்டார். இருவரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு கிருஷ்ண கிருஷ்ண என்று சொல்லியபடி பாலம் கட்டினான். தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால் கர்வம் சிறிது தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை ராம நாம ஜெபம் செய்யவில்லை. அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார் நிற்கிறார் ஓடுகிறார் ஆடுகிறார் பாலம் ஒன்றும் ஆகவில்லை. அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அந்தணரை நோக்கி வந்து யார் நீங்கள் என்று கேட்கிறார் அனுமன். அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர். நீங்கள் இருவருமே தோற்கவில்லை. வெற்றி பெற்றது கடவுள் பக்தியும் இறைவனின் நாமமும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்தான். ராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை அகந்தை அழிந்த அர்ஜூனன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன் தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி ராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது இறைவனின் நாமம்தான் தவிர நீங்கள் அல்ல என்றார்.

கர்வம் தோன்றும் போது கடமையும் பொறுப்புக்களும் மறந்து விடுகின்றன. உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது சந்தேகமேயில்லை. ஆனால் தன்னால் முடியும் என்று கர்வத்துடன் எண்ணும் போது இறை நாமத்தையும் அனைதுத்தும் அவர் செயலே என்பதையும் மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா இந்த வானரன் வேறு யாருமல்ல சிரஞ்சீவி அனுமனே என்றார். உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டினார். அர்ஜூனன் அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர் ஆஞ்சநேயா பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும் வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது என்றார். அப்படியே ஆகட்டும் பிரபோ என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.

கலிபுருஷன்

பரீட்சித்து அரசன் மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும் பிறந்தவன். குருச்ஷேத்திரப் போரில் கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது பரிட்சித்து உத்திரையின் கர்ப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன் பிரம்மாஸ்வரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணர் பரீட்சித்தை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ணரும் பாண்டவர்களும் கலியுகம் ஆரம்பிக்க போகிறது ஆகவே உலகைவிட்டு செல்ல முடிவெடுத்து பரீட்சித்துவை அரசனாக்கிவிட்டு செல்கின்றனர். குரு நாட்டின் அரசாட்சியை ஏற்கும் பரீட்சித்து கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.

மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை. கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள். திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது. துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை. அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி. கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறாள் பூமித்தாய். தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது. ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறார்கள். இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன. சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன். தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன். பரீட்சித்து மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எதிரே நிற்பவன் கலிபுருஷன்.

கிருஷ்ணர் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட கலிபுருசன் அடி எடுத்து வைத்துவிட்டான். உடனே தனது வாளை எடுத்து நான் இருக்கும் வரையில் தர்மம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கலிபுருசனை வெட்ட தயாராகிறான் பரீட்சித்து. கலிபுருஷன் அஞ்சுகிறான். பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து அவனை வெற்றி பெற இயலாது. கலிபுருஷன் பரீட்சித்து மகாராஜாவிடம் சரணடைகிறான். சரணடைந்தவனைக் காப்பது முறை. எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து. இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள் நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன் என்று கலிபுருஷன் பரீட்சித்துவிடம் கெஞ்சுகிறான். பரீட்சித்து மகராஜா கலிபுருசனுக்கு நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கிறார்.

  1. சூதாட்டம் ஆடும் இடம்
  2. மது அருந்தும் இடம்
  3. பெண்களை அவமரியாதை செய்யும் இடம்
  4. பிராணிகளை வதை செய்யும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் நான்கு இடங்களை கொடுக்கிறார்.

  1. தங்கம் இருக்கும் இடம்
  2. பொய் பேசப்படும் இடம்
  3. ஆணவம் செருக்கு இருக்கும் இடம்
  4. காமம் கோபம் இருக்கும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் இரண்டு இடங்களை கொடுக்கிறார்.

  1. பேராசை இருக்கும் இடம்
  2. பகைமை இருக்கும் இடம்

திருப்தி அடைந்த கலி நான் இருக்கும் இந்த 10 இடங்களில் உங்களுடைய மக்கள் யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உத்திரவாதம் கொடுத்து உலகத்தில் கலியுகத்தை ஆரம்பிக்கின்றார் கலிபுருசன்.

உத்தவர்

கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல் அவருக்குப் பணிவிடைகள் செய்து தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில் தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கிருஷ்ணரரிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில் தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உத்தவரிடம் இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும் நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் சிறு வயது முதலே கிருஷ்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருந்த பல கிருஷ்ணனின் லீலைகள் புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன. அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

கிருஷ்ண நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழிவேறு. நீ நடத்திய மகாபாரத நாடகத்தில் நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர். கிருஷ்ணர் சம்மதிக்க உத்தவர் கேட்க ஆரம்பித்தார். கிருஷ்ணா நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கு அறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று யுதிஷ்டிரா வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை. விளையாட ஆரம்பித்ததும் யுதிஷ்டிரர் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. யுதிஷ்டிரன் செல்வத்தை இழந்தான். தன் நாட்டை இழந்தான். தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் யுதிஷ்டிரனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில் தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் ஆடை தந்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர் சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சியமானம் என்ன அவளிடம் இருக்கிறது. அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? ஆபத்தான இது போன்றசமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத நீ எப்படி ஆபத்பாந்தவன்? நீ செய்தது நியாயமா தருமமா? என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

உத்தவரே விவேகம் உள்ளவனே வெற்றி பெற வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் யுதிஷ்டிரனுக்கு இல்லை. அதனால் தான் யுதிஷ்டிரன் தோற்றான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச்சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம் யுதிஷ்டிரனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் கிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாம். யுதிஷ்டிரன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான். இதனை மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். விதி வசத்தால் சூதாடஒப்புக் கொண்டேன். இந்த விஷயம் கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது கடவுளே என்று மனதில் எண்ணிக்கொண்டான். கிருஷ்ணன் மட்டும் சூதாட்டமண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிடவில்லை. அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது திரௌபதியும் என்னை கூப்பிடவில்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாள். என்னைக் கடைசி வரை கூப்பிடவில்லை. துச்சாதனன் துகிலுரித்த போது தனது பலத்தால் போராடாமல் அபயம் கிருஷ்ணா அபயம் எனக் குரல் கொடுத்தாள் திரௌபதி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு என்று பதிலளித்தார் கிருஷ்ணர்.

அப்படி என்றால் நீ கூப்பிட்டால் தான் வருவாயா கிருஷ்ணா. நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா என்று கேட்டார். உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம் மட்டுமே நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன் மட்டுமே. அது தான் தெய்வ தர்மம் என்றார். அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று கேட்டார் உத்தவர். அதற்கு கிருஷ்ணர். உத்தவரே நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக கவனியுங்கள்.

நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மறந்துவிடும் போதும் எனக்குத் தெரியாமல் ஏதாவது தீவினையைகளை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அப்போதுதான் நடக்கிறது. எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று யுதிஷ்டிரன் நினைத்தானே அது அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை யுதிஷ்டிரன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றார் கிருஷ்ணர். உத்தவர் தனது கேள்விக்கு கிடைத்த பதிலில் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். அவனின்றி ஓர்அணுவும் அசையாது என்ற நம்பிக்கையுடன் சரணாகதி அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை.