கிருஷ்ண லீலை

ஒரு முறை அஞ்ஞாத வாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்த பொழுது ஏகாதசி அன்று கிருஷ்ணர் நீண்ட நாட்களாக வரவேயில்லையே என்று எண்ணினாள். அவனுக்கு பிடித்த பால் பாயசத்தை செய்து ஏகாதசியான இன்று நைவேத்யம் செய்வோம் என்று சுவையான பால் பாயசத்தை செய்து தான் வழிபடும் கிருஷ்ண விக்ரஹத்திற்கு நைவேத்யம் செய்ய முற்படும் பொழுது குடிலின் வாயிலில் நின்று அத்தை என்று கிருஷ்ணர் கூப்பிட்டார். குந்திதேவி அந்த பாயச பாத்திரத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு என்று அன்போடு வரவேற்றார்.

அத்தை நீ என்னை நினைத்து பாயசம் வைத்தவுடன் வந்துவிட்டேன். பாயசத்தை விட உன் அன்பு என்னை இழுத்து வந்துவிட்டது என்றார் கிருஷ்ணர். உனக்காக செய்த பால் பாயசத்தை கொண்டு வருகிறேன் என்று கொண்டு வந்தாள். அனைவரும் எங்கை என குந்திதேவியிடம் கிருஷ்ணர் கேட்டார். அதற்கு கிருஷ்ணா அவரவர் வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்றாள். அரண்மனையில் இருக்க வேண்டியவர்கள் காட்டில் இருக்கின்றார்கள். இன்னும் சில காலம் தான் அத்தை எல்லாம் மாறும் என்றார். குந்திதேவி கர்ம வினையை அனுபவிக்கிறோம். எப்பொழுது நீ எங்களுடன் இருப்பதே எங்களுக்கு அரண்மனை வாழ்க்கை வாழ்வதுபோல் இங்கும் சந்தோஷமாக இருக்கிறோம். எதோ பேசி பாயசத்தை மறந்துவிட்டேன் இதோ ஒரு நிமிடம் என்று பாதி பாயசத்தை தனக்கும் தன் புதல்வர்களுக்கும் திரெளபதிக்கும் எடுத்து வைத்துவிட்டு மீதியை கிருஷ்ணருக்கு எடுத்து வந்தார் குந்திதேவி. கிருஷ்ண பரமாத்மா புன்சிரிப்புடன் அதை வாங்கி சுவைத்து குடித்து முடித்து ஆஹா என்ன சுவை அத்தை உன் கைவண்ணமே என்றும் சுவைதான். எனக்கு இன்னும் இதே அளவு வேண்டும் எனக் கேட்டார். தாய் என்கிற சாதாரண மானுட புத்தியால் குந்திதேவி செய்வதறியாமல் புதல்வர்களுக்கு பாயசம் இல்லையே என்று நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் கொடுத்தாள். அதை வாங்கிய கிருஷ்ணர் கொடு என்று வேகமாக வாங்கி குடித்துவிட்டு இப்போதுதான் திருப்தியானேன் என்று கூறி மேலும் பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.

குந்திதேவி கிருஷ்ணா என் புதல்வர்களுக்கு ஒரு துளி பாயச பிரசாதம் கூட வைக்காமல் சென்று விட்டாயே. நான் எதேனும் தவறு செய்து விட்டேனா என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது உடனே தாமதிக்காமல் அசரீரி குரலில் வந்தது. அத்தை நீ எனக்கு பிடிக்கும் என்றுதானே பாயசம் செய்தாய். அதனால்தான் அவ்வளவு பாயசத்தையும் குடித்தேன். என்னுடையவர்களான உங்கள் 7 பேரையும் விடுவேனா. உள்ளே சென்று பார் நான் சாப்பிட்ட அதே பாத்திரத்திலும் தனியாக பீமனுக்கும் சேர்த்து வைத்திருக்கிறேன். இதுவும் என் லீலைதான் என்றது கிருஷ்ணரின் குரல் அசிரீரீயாக. இதைக்கேட்ட குந்திதேவி ஆனந்தக் கண்ணீருடன் பகவானே சாதாரண மனுஷியாக உன்னிடம் பாயசத்தை மறைத்தேன். என்னை மன்னித்துவிடு என்று கூறி உள்ளே சென்று பாயசத்தை எடுத்து கிருஷ்ணா என்று பருகினாள். பிறகு பஞ்ச பாண்டவர்களுக்கும் கொடுத்தாள். பீமனுக்கு ஒரே சந்தோஷம் தனி அண்டா பாயசத்தை ருசித்து சாப்பிட்டான்.

ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் பெற்ற சகாதேவன்

காட்டில் இருந்த பாண்டு மன்னன் தன் உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் மாறாக பிய்த்து தின்று விடும்படியும் அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ணர் வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது யாராவது பிணத்தை தின்பார்களா வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் விறகு எடுக்க சென்றதும் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அது மற்ற‌வர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன் கிருஷ்ணரிடம் எல்லோரும் விறகை சுமந்து வந்தீர்கள். சகோதரர்கள் நால்வரும் க‌ளைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்து தானே வந்தது. நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய் என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான். எதிர்காலம் தேவ ரகசியம் என்றும் இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம் சத்தியம் கிருஷ்ணர் வாங்கிக் கொள்கிறார். தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகி விட்டது.

துரியோதனன் பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் சற்று நம்பிக்கை இழக்கிறான். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படிகூறலாமா என்று கேட்கிறார். ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு என்று கேட்டார். இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் அனைத்தும் கடவுளின் பிடியில் மட்டுமே இருக்கும் என்பதை உணர்ந்தான். அடங்கியது அவன் கர்வம்.

நம்பிக்கை

அர்ஜுனனும் கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். அர்ஜுனா அது புறா தானே என்று கேட்டார் கிருஷ்ணர். ஆமாம் கிருஷ்ணா அது புறா தான் என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு அர்ஜுனா எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே ஆமாம் ஆமாம் அது பருந்து தான் என்று சொன்னான் அர்ஜுனன். மேலும் சில விநாடிகள் கழித்து அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால் அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது என்று கிருஷ்ணர் சொல்ல கொஞ்சமும் தாமதிக்காமல் தாங்கள் சொல்வது சரிதான் அது கிளி தான் என பதிலளித்தான் அர்ஜுனன். இன்னும் கொஞ்சம் நேரமானதும் அர்ஜுனா முதலில் சொன்னது எல்லாம் தவறு. இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு காகம் என்று சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர். நிஜம் தான் கிருஷ்ணா அது காகமே தான் சந்தேகமே இல்லை பதிலளித்தான் அர்ஜுனன்.

அர்ஜுனா நான் சொல்வதை எல்லாம் நீயும் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே உனக்கென்று எதுவும் யோசிக்கத் தெரியாதா என்று கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார். கிருஷ்ணா என் கண்ணை விடவும் அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீ ஒன்றைச் சொன்னால் அது பருந்தோ காகமோ புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது. அதனால் நீ என்ன சொல்கிறாயோ அப்படித் தானே அது இருக்க முடியும். தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும் என்று அமைதியாகச் சொன்னான் அர்ஜுனன். இந்த நம்பிக்கை தான் கிருஷ்ணரை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

கிருஷ்ணரால் உயிர்ப்பிக்கப்பட்ட பரீட்சித்

பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மகன்களான உப-பாண்டவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர். பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜூனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இந்த இருவர்களின் அஸ்திரப் பிரயோகத்தால் ஏற்படும் அழிவை வியாசமுனி தடுத்து ஏவிய அஸ்திரங்களைத் திரும்பப் பெறக் கோருகிறார். திரும்பப் பெறும் வித்தை அறிந்த அர்ஜூனன் தன் அஸ்திரத்தை திரும்பப் பெறுகிறான். அதனைத் திரும்பப்பெறத் தெரியாத அசுவத்தாமனிடம் இலக்கை மாற்றச்சொல்ல அவன் அதை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவின் மேல் ஏவுகிறான். உத்தரை கருவில் இறந்த குழந்தையைக் கரிக்கட்டை சாம்பலாக பிரசவித்தது கிருஷ்ணர் நீர் தெளித்து அந்த சாம்பலை உயிர்ப்பித்தார். அக்குழந்தைதான் பரீட்சித். கருவிலேயே பரீட்சிக்கப் பட்டதால் பரீட்சித் எனும் பெயர் வந்தது.

கடவுளை அதிகம் சிந்திப்பவர்

அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர் ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது அவனது மனைவி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில் அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்தார்.

கண்ணாடியைப் பார்த்து கணவனும் மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று கேட்டார் கிருஷ்ணர். மாமா இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா பாமாவா மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன் என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன் கிருஷ்ணர் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான். இதென்ன விந்தை என அபிமன்யு கேட்டான். அபிமன்யு என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு என்றார். நோக்கம் எதுவானாலும் பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

கண்ணீர் விட்டழுத கிருஷ்ணர்

மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் கண்ணீர் வடித்துக் கொண்டு இனி நான் என் உயிர் வாழ வேண்டும் என்று அழுதுகொண்டு இருந்தான். அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தான். கீதையை உபதேசித்த கிருஷ்ணர் அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தார். அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து நான்தான் சாதாரண மனிதன் மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன் எனது மகனை இழந்ததால் அழுகிறேன். ஆனால் நீங்கள் தெய்வமாயிற்றே இதை எல்லாம் கடந்தவர் அல்லவா நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன். உலகில் உள்ள எல்லாமே மாயை எதுவும் யாருக்கும் சொந்தமில்லை இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையது ஆகும். எனவே எதற்காகவும் எந்த ஒரு இழப்பிற்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தேன். இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே இந்த மனிதகுலத்தை எப்படி திருத்த என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன் என்றார்.

அக்னி நட்சத்திரம் குறித்த மகாபாரதக் கதை

யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர் காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழை பெய்ய செய்தான் இந்திரன்.

யமுனை நதியில் கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின் அவர்கள் கரையேறும் போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து உங்களை பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். என் பசிக்கு உங்களால் தான் உதவ முடியும். இவ்வனத்தில் என் பசிப்பிணியை தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன் அக்னி தேவனே ஏன் இந்த வேடம் நேரிடையாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று சொன்னதும் தன் வேடத்தை கலைத்த அக்னி தேவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை சுவேதசி என்ற மன்னனுக்காக நுாறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன். அதனால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம் செய்தால் மட்டுமே என் பிணி தீரும் என்றார். நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன் என்றார். ஆகவே நான் எரிக்கும் போது மழையை தடுத்து உதவி செய்யுங்கள் என்று கேட்டார்

இதைக்கேட்ட அர்ஜுனன் அக்னி தேவனே நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் இங்கு நாங்கள் நீராட வந்ததால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. அதனால் இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு அம்பறாத் துாணியும் அம்புகளும் வில்லும் தேவை என்றான். உடனே அர்ஜுனனுக்காக சக்தி மிக்க காண்டீப வில் அம்புகள் மற்றும் அம்பறாத் துாணி என எல்லாவற்றையும் தந்தார் அக்னி பகவான். அப்போது கிருஷ்ணர் அக்னி தேவனிடம் உன் பசி பிணியை தீர்த்து கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணர். அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் துவங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட அர்ஜுனன் அவ்வனத்தில் மழை பொழியாமலிருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை கட்டி தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார். அடுத்த வந்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக கொண்டார். அடுத்த வந்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் இருவரிடமும் விடைபெற்றார் அக்னி தேவன். காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறது புராணம்.

விதி

துரியோதனனுக்கு யுதிஷ்டிரரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்னும் வஞ்சம் இருந்தது. சூதாட்டத்தின் மூலமாகத்தான் யுதிஷ்டிரருடைய அத்தனை செல்வத்தையும் அபகரிக்க முடியும் என்றார் சகுனி. சூதாட்டம் ஆட வா என்று அழைக்க முடியாது. அழகிய மண்டபம் ஒன்று கட்ட வேண்டும் அதை விழாவாக வைத்து அனைவரையும் அழைத்து சூதாடலாம் என்று நினைத்தான் துரியோதனன். அதன்படியே மண்டபம் கட்டும் வேலையைத் தொடங்கினான். மண்டபம் காண வாருங்கள் மகிழ்வாக விழாவைக் கொண்டாடலாம் என்று ஓலையில் அழைப்பு எழுதி திருதராஷ்டிரனிடம் கையெழுத்து வாங்கினான் துரியோதனன். பிறகு சகுனியின் அறிவுரைக்கேற்ப விதுரர் மூலமாக தர்மருக்கு அனுப்பி வைத்தான்.

யுதிஷ்டிரருக்கு விதுரர் அழைப்பு ஓழையை கொடுத்தார். அதைப் படித்த யுதிஷ்டிரர் தனது சகோதரர்களிடம் சென்று தனித்தனியாக ஆலோசனை செய்தார். திருதாராஷ்டிரர் கையெழுத்திட்ட ஓலை வந்திருக்கிறது. மண்டப விழாவுக்கு செல்வோமா என்று கேட்கிறார். மூன்று சகோதரர்கள் போகலாம் என்றார்கள். சகாதேவனிடம் இதே போன்று கேட்டதும் ஓலை கொண்டு வந்தது யார் என்று கேட்கிறான். விதுரர் ஓலை எடுத்துவந்தார் என்கிறார் யுதிஷ்டிரர். அனுப்பியது யார் என்றான் சகாதேவன். துரியோதனன் அனுப்பினான் என்கிறார். ஓலையில் கையெழுத்து அது யார் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டான். அது திருதராஷ்டிரன் போட்டிருக்கிறார் என்றார் யுதிஷ்டிரர். இப்படியே சகாதேவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். ஒரு கட்டத்தில் சலித்து விட்டார். எதற்கு கேட்கிறாய் சகாதேவா என்று யுதிஷ்டிரர் கேட்டார். நமக்கு ஓலை அனுப்பியது ஒருவர். கையெழுத்திட்டது ஒருவர். அனுப்ப நினைத்தது ஒருவர். கொண்டு வந்தது மற்றொருவர் என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப்பொறுத்த வரை இவை அனைத்தையும் செய்வது விதி ஒருவன் தான் என்றான் சகாதேவன்.

எண்ணங்கள்

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் யுதிஷ்டிரர் ஒருமுறை வீதியில் நடந்து சென்றார். துரியோதனன் அந்தப் பக்கமாக தேரில் வந்தான். யுதிஷ்டிரர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் வீதியில் நடக்க வேண்டும் இதுபற்றி அவன் யுதிஷ்டிரரிடம் கேட்டான். அண்ணா நம்மைப் போன்றவர்கள் வீதியில் நடக்கலாமா நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் இருந்தும் நீங்கள் நடந்து செல்கின்றீர்கள். இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ என்றான். யுதிஷ்டிரர் அவனிடம் தம்பி நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு வீதியாக நடந்தால் தான் நமது நாட்டின் நிலைமை மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும் என்றதும் துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது. நாடாளப் போவது நானல்லவா அப்படிப் பார்த்தால் நானல்லவா வீதியில் நடந்து செல்ல வேண்டும் என்று எண்ணி இவரைப் போலவே நாமும் நடப்போம் என தேரில் இருந்து குதித்தான்.

மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம் இவனும் கவனித்துப் பார்த்தான். ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன் ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். யுதிஷ்டிரருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இவனது காலில் ஒரு முள் குத்தினால் ஆ வென அலறுகிறான். ஆனால் இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு கரகரவென நறுக்குகிறான். இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா என்று அவனை மனதுக்குள் எண்ணியபடியே நடந்தார். அப்போது அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன. இதைப்பார்த்த யுதிஷ்டிரர் தவறு செய்துவிட்டோமே இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும் மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும் நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு தர்மத்தையும் பாதுகாக்கிறான். அப்படியானால் இவனைப் பற்றிய தப்பான எண்ணம் என் மனதில் ஏன் ஏற்பட்டது. நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.

வீட்டிற்கு சென்றதும் இதைப்பற்றி பெரியவர்களிடம் கேட்டான். நடந்தவைகள் அனைத்தும் கேட்டவர்கள் யுதிஷ்டிரனுக்கு பதில் சொன்னார்கள். தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால் துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட எண்ணங்களும் காற்றில் பரவி உன்னையும் பாதித்து விட்டது. இதனால் தான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுவோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

கிருஷ்ணனை எதிர்த்து போர் புரிந்த அர்ஜுனன்

ஒருநாள் அதிகாலையில் காலவ முனிவர் ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும் நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க கையில் நீரை எடுத்தபோது ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல் வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார்.

சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கிருஷ்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். கிருஷ்ணனுடன் நேரடியாகக் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு முனிவரின் கால்களிலும் கிருஷ்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஆணவம் பிடித்த சிந்திரசேனன் அதைச் செய்யாமல் அவனது மனதில் சூழ்ச்சி ஒன்று பிறந்தது. அர்ஜுனனை தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். அர்ஜுனா உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் அதுதான் க்ஷத்திரிய தர்மம் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.

சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா என்று கேட்டான் சித்திரசேனன். நான் வணங்கும் கிருஷ்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் அர்ஜுனன். என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக என் மீது போர் தொடுத்து என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல் என்று கேட்டான் அர்ஜுனன். தங்கள் ஆத்ம நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன் என்றான் சித்திரசேனன். அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்து விட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. இதனை கண்ட சித்திரசேனன் அர்ஜுனா அதிர்ச்சி அடைந்தவிட்டீர்களா உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா தங்களால் முடியவில்லை என்றால் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என்றான் சித்திரசேனன்.

நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும் நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட நண்பன் மீதே போர் தொடுத்து உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து போர்க்கோலம் பூண்டு யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். கிருஷ்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். கடமையைச் செய்யும் போதும் சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கிருஷ்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார் அர்ஜுனன் யுத்தம் ஆரம்பமானது. துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்தது போல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும் ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.

யுதிஷ்டிரனும் பீமனும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. கிருஷ்ணரின் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் சித்திரசேனன். செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார் கிருஷ்ணன். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர். தன் ஆத்ம நண்பன் கிருஷ்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதற்கு கிருஷ்ணன் இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தர்மயுத்தம் நடக்கப்போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காகவே இந்த நாடகத்தை நடத்தி இந்த யுத்தத்தை ஒரு பயிற்சிக் களமாக அமைத்தேன் என புன்முறுவலோடு கூறினார் கிருஷ்ணன்.