கடவுளை அதிகம் சிந்திப்பவர்

அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர் ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது அவனது மனைவி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில் அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்தார்.

கண்ணாடியைப் பார்த்து கணவனும் மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று கேட்டார் கிருஷ்ணர். மாமா இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா பாமாவா மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன் என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன் கிருஷ்ணர் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான். இதென்ன விந்தை என அபிமன்யு கேட்டான். அபிமன்யு என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு என்றார். நோக்கம் எதுவானாலும் பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

கண்ணீர் விட்டழுத கிருஷ்ணர்

மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் கண்ணீர் வடித்துக் கொண்டு இனி நான் என் உயிர் வாழ வேண்டும் என்று அழுதுகொண்டு இருந்தான். அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தான். கீதையை உபதேசித்த கிருஷ்ணர் அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தார். அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து நான்தான் சாதாரண மனிதன் மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன் எனது மகனை இழந்ததால் அழுகிறேன். ஆனால் நீங்கள் தெய்வமாயிற்றே இதை எல்லாம் கடந்தவர் அல்லவா நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன். உலகில் உள்ள எல்லாமே மாயை எதுவும் யாருக்கும் சொந்தமில்லை இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையது ஆகும். எனவே எதற்காகவும் எந்த ஒரு இழப்பிற்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தேன். இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே இந்த மனிதகுலத்தை எப்படி திருத்த என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன் என்றார்.

அக்னி நட்சத்திரம் குறித்த மகாபாரதக் கதை

யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர் காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழை பெய்ய செய்தான் இந்திரன்.

யமுனை நதியில் கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின் அவர்கள் கரையேறும் போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து உங்களை பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். என் பசிக்கு உங்களால் தான் உதவ முடியும். இவ்வனத்தில் என் பசிப்பிணியை தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன் அக்னி தேவனே ஏன் இந்த வேடம் நேரிடையாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று சொன்னதும் தன் வேடத்தை கலைத்த அக்னி தேவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை சுவேதசி என்ற மன்னனுக்காக நுாறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன். அதனால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம் செய்தால் மட்டுமே என் பிணி தீரும் என்றார். நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன் என்றார். ஆகவே நான் எரிக்கும் போது மழையை தடுத்து உதவி செய்யுங்கள் என்று கேட்டார்

இதைக்கேட்ட அர்ஜுனன் அக்னி தேவனே நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் இங்கு நாங்கள் நீராட வந்ததால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. அதனால் இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு அம்பறாத் துாணியும் அம்புகளும் வில்லும் தேவை என்றான். உடனே அர்ஜுனனுக்காக சக்தி மிக்க காண்டீப வில் அம்புகள் மற்றும் அம்பறாத் துாணி என எல்லாவற்றையும் தந்தார் அக்னி பகவான். அப்போது கிருஷ்ணர் அக்னி தேவனிடம் உன் பசி பிணியை தீர்த்து கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணர். அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் துவங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட அர்ஜுனன் அவ்வனத்தில் மழை பொழியாமலிருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை கட்டி தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார். அடுத்த வந்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக கொண்டார். அடுத்த வந்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் இருவரிடமும் விடைபெற்றார் அக்னி தேவன். காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறது புராணம்.

விதி

துரியோதனனுக்கு யுதிஷ்டிரரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்னும் வஞ்சம் இருந்தது. சூதாட்டத்தின் மூலமாகத்தான் யுதிஷ்டிரருடைய அத்தனை செல்வத்தையும் அபகரிக்க முடியும் என்றார் சகுனி. சூதாட்டம் ஆட வா என்று அழைக்க முடியாது. அழகிய மண்டபம் ஒன்று கட்ட வேண்டும் அதை விழாவாக வைத்து அனைவரையும் அழைத்து சூதாடலாம் என்று நினைத்தான் துரியோதனன். அதன்படியே மண்டபம் கட்டும் வேலையைத் தொடங்கினான். மண்டபம் காண வாருங்கள் மகிழ்வாக விழாவைக் கொண்டாடலாம் என்று ஓலையில் அழைப்பு எழுதி திருதராஷ்டிரனிடம் கையெழுத்து வாங்கினான் துரியோதனன். பிறகு சகுனியின் அறிவுரைக்கேற்ப விதுரர் மூலமாக தர்மருக்கு அனுப்பி வைத்தான்.

யுதிஷ்டிரருக்கு விதுரர் அழைப்பு ஓழையை கொடுத்தார். அதைப் படித்த யுதிஷ்டிரர் தனது சகோதரர்களிடம் சென்று தனித்தனியாக ஆலோசனை செய்தார். திருதாராஷ்டிரர் கையெழுத்திட்ட ஓலை வந்திருக்கிறது. மண்டப விழாவுக்கு செல்வோமா என்று கேட்கிறார். மூன்று சகோதரர்கள் போகலாம் என்றார்கள். சகாதேவனிடம் இதே போன்று கேட்டதும் ஓலை கொண்டு வந்தது யார் என்று கேட்கிறான். விதுரர் ஓலை எடுத்துவந்தார் என்கிறார் யுதிஷ்டிரர். அனுப்பியது யார் என்றான் சகாதேவன். துரியோதனன் அனுப்பினான் என்கிறார். ஓலையில் கையெழுத்து அது யார் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டான். அது திருதராஷ்டிரன் போட்டிருக்கிறார் என்றார் யுதிஷ்டிரர். இப்படியே சகாதேவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். ஒரு கட்டத்தில் சலித்து விட்டார். எதற்கு கேட்கிறாய் சகாதேவா என்று யுதிஷ்டிரர் கேட்டார். நமக்கு ஓலை அனுப்பியது ஒருவர். கையெழுத்திட்டது ஒருவர். அனுப்ப நினைத்தது ஒருவர். கொண்டு வந்தது மற்றொருவர் என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப்பொறுத்த வரை இவை அனைத்தையும் செய்வது விதி ஒருவன் தான் என்றான் சகாதேவன்.

எண்ணங்கள்

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் யுதிஷ்டிரர் ஒருமுறை வீதியில் நடந்து சென்றார். துரியோதனன் அந்தப் பக்கமாக தேரில் வந்தான். யுதிஷ்டிரர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் வீதியில் நடக்க வேண்டும் இதுபற்றி அவன் யுதிஷ்டிரரிடம் கேட்டான். அண்ணா நம்மைப் போன்றவர்கள் வீதியில் நடக்கலாமா நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் இருந்தும் நீங்கள் நடந்து செல்கின்றீர்கள். இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ என்றான். யுதிஷ்டிரர் அவனிடம் தம்பி நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு வீதியாக நடந்தால் தான் நமது நாட்டின் நிலைமை மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும் என்றதும் துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது. நாடாளப் போவது நானல்லவா அப்படிப் பார்த்தால் நானல்லவா வீதியில் நடந்து செல்ல வேண்டும் என்று எண்ணி இவரைப் போலவே நாமும் நடப்போம் என தேரில் இருந்து குதித்தான்.

மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம் இவனும் கவனித்துப் பார்த்தான். ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன் ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். யுதிஷ்டிரருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இவனது காலில் ஒரு முள் குத்தினால் ஆ வென அலறுகிறான். ஆனால் இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு கரகரவென நறுக்குகிறான். இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா என்று அவனை மனதுக்குள் எண்ணியபடியே நடந்தார். அப்போது அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன. இதைப்பார்த்த யுதிஷ்டிரர் தவறு செய்துவிட்டோமே இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும் மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும் நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு தர்மத்தையும் பாதுகாக்கிறான். அப்படியானால் இவனைப் பற்றிய தப்பான எண்ணம் என் மனதில் ஏன் ஏற்பட்டது. நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.

வீட்டிற்கு சென்றதும் இதைப்பற்றி பெரியவர்களிடம் கேட்டான். நடந்தவைகள் அனைத்தும் கேட்டவர்கள் யுதிஷ்டிரனுக்கு பதில் சொன்னார்கள். தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால் துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட எண்ணங்களும் காற்றில் பரவி உன்னையும் பாதித்து விட்டது. இதனால் தான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுவோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

கிருஷ்ணனை எதிர்த்து போர் புரிந்த அர்ஜுனன்

ஒருநாள் அதிகாலையில் காலவ முனிவர் ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும் நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க கையில் நீரை எடுத்தபோது ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல் வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார்.

சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கிருஷ்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். கிருஷ்ணனுடன் நேரடியாகக் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு முனிவரின் கால்களிலும் கிருஷ்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஆணவம் பிடித்த சிந்திரசேனன் அதைச் செய்யாமல் அவனது மனதில் சூழ்ச்சி ஒன்று பிறந்தது. அர்ஜுனனை தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். அர்ஜுனா உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் அதுதான் க்ஷத்திரிய தர்மம் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.

சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா என்று கேட்டான் சித்திரசேனன். நான் வணங்கும் கிருஷ்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் அர்ஜுனன். என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக என் மீது போர் தொடுத்து என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல் என்று கேட்டான் அர்ஜுனன். தங்கள் ஆத்ம நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன் என்றான் சித்திரசேனன். அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்து விட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. இதனை கண்ட சித்திரசேனன் அர்ஜுனா அதிர்ச்சி அடைந்தவிட்டீர்களா உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா தங்களால் முடியவில்லை என்றால் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என்றான் சித்திரசேனன்.

நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும் நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட நண்பன் மீதே போர் தொடுத்து உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து போர்க்கோலம் பூண்டு யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். கிருஷ்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். கடமையைச் செய்யும் போதும் சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கிருஷ்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார் அர்ஜுனன் யுத்தம் ஆரம்பமானது. துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்தது போல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும் ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.

யுதிஷ்டிரனும் பீமனும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. கிருஷ்ணரின் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் சித்திரசேனன். செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார் கிருஷ்ணன். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர். தன் ஆத்ம நண்பன் கிருஷ்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதற்கு கிருஷ்ணன் இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தர்மயுத்தம் நடக்கப்போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காகவே இந்த நாடகத்தை நடத்தி இந்த யுத்தத்தை ஒரு பயிற்சிக் களமாக அமைத்தேன் என புன்முறுவலோடு கூறினார் கிருஷ்ணன்.

தானத்தில் சிறந்தவர்

ஒரு முறை பாண்டவர்கள் தங்களில் மூத்தவரான யுதிஷ்டிரரையும் அவரது கொடைத் தன்மையையும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர் கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார். யுதிஷ்டிரரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன் என்றார். என் மேல் வருத்தப் பட வேண்டாம் நாளை நிரூபிக்கிறேன் என்றார். பொழுது விடிந்தது. என்னுடன் வாருங்கள் என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று இரண்டு தங்க மலைகளை உருவாக்கினார். பாண்டவர்களிடம் ஒரு மலையை ஒப்படைத்து இன்று சூரிய அஸ்தமனத்துக்குள் இந்த மலையை நீங்கள் முழுவதுமாக தானமளித்து விட வேண்டும் என்றார்.

இவ்வளவுதானா என்று அனைவரும் சேர்ந்து சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு ஆளனுப்பி அனைவரையும் வரச்செய்து அத்தனை பேருக்கும் சுமக்க முடியாத அளவு தங்கத்தை வெட்டி வெட்டி கொடுக்கத் துவங்கினார்கள். போவோர் வருவோர் என் எவருக்கும் பாகு பாடின்றி கூப்பிட்டு கூப்பிட்டு தங்க மலையை வெட்டிக் கொடுக்கின்றனர். பொழுதும் சாய்கிறது. மலை கால்வாசி கூட கரைந்த பாடில்லை. பொழுது சாய இன்னும் சில நிமிடங்களே பாக்கி. யுதிஷ்டிரர் சோர்ந்து போய்ச் சொன்னார். கிருஷ்ணா தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். எங்களால் ஒரு மலையில் கால்வாசி கூட கொடுக்க முடியவில்லை. அதுவரை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் அங்கு வந்த கர்னனை அழைத்துச் சொன்னார். கர்ணா இந்த இரண்டு தங்க மலைகளையும் பொழுது சாயவிருக்கும் இந்தச் சில நிமிடங்களில் உன்னால் எவருக்காவது கொடுக்க முடியுமா என்று கேட்டார். அதற்கென்ன கிருஷ்ணா என்று சொல்லி மலைகளின் அருகில் சென்றான் கர்ணன். காலை முதல் மாலை வரை ஓய்வின்றிக் கொடுத்தே கால்வாசிதான் கொடுக்க முடிந்திருக்கிறது. இவன் எப்படி சில நிமிடங்களில் தரப்போகிறான் என அனைவரும் நம்பிக்கையின்றி பார்த்துக்கொண்டிருக்க நேரம் நகர்கிறது. இன்னும் சூரியாஸ்தனமத்துக்கு ஒரே ஒரு நிமிடம்தான் மீதியிருக்கிது. அந்த வழியாய் வந்த வழிபோக்கனை கர்ணன் கைதட்டி அழைத்தான். இந்தா இந்த இரண்டு மலைகளையும் நீயே வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டுத் தன் அரண்மனை நோக்கிச் சென்றான். சூரியன் மறைந்தது. கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

கிருஷ்ணன் பாண்டவர்களிடம் இந்த மலையை முழுவதும் தானமாக தரவேண்டும் என்றதும் இது நம்முடையது என்ற எண்ணமும் தங்களால் அவைகளை முழுமையாக தரமுடியும் என்ற மமதையில் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மலையை வெட்டி எடுத்து கொடுத்தார்கள். ஆனால் கர்ணனனிடம் மமதை இல்லை. மேலும் தானம் செய்ய வேண்டும் எண்ணம் மட்டுமே இருந்தது அதை எப்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.

தக்ஷகன் பாம்பு

பளிங்குத் தரைகள், கண்கவர் சிற்பங்கள், நவரத்தினங்கள் இழைத்த தூண்கள், சுவரெல்லாம் சித்திர வேலைப்பாடுகள், விருந்தினர் மாளிகை, கடை வீதிகள், யாக சாலைகள் என அற்புதமாக இந்திரப்பிரஸ்தத்தை தேவலோகமாக மாற்றியிருந்தனர் பாண்டவர்கள். கிருஷ்ணனின் அருளாசியுடன் பிரமாண்டமான ராஜசூய யாகத்துக்கும் ஏற்பாடுகள் செய்த பாண்டவர்கள் மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். சகோதரர்களான துரியோதனாதிகளுக்கும் அவனைச் சார்ந்த தாயாதியருக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தான் யுதிஷ்டிரன். இத்தனைச் செல்வமும் பாண்டவர்களுக்கு எப்படி வந்தது அதனை எப்படி அழிப்பது என சிந்தித்தபடியே பரிவாரத்துடன் அங்கு வந்தான் துரியோதனன். அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு மாளிகையில் தங்கினான். ஒருநாள் காலையில் மயன் உருவாக்கியிருந்த மாளிகையைக் காணப் புறப்பட்டான் துரியோதனன். அதன் சிறப்பு துரியோதனனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாளிகையின் ஓரிடத்தில் தண்ணீர் எனக் கருதி மெதுவாகக் காலை வைத்தான். ஆனால் அது வெறும் தரையாக இருந்தது. மற்றோர் இடத்திலோ தரையெனக் கருதி அலட்சியமாகக் காலை வைக்க அது தண்ணீர் நிறைந்த தடாகமாக இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராததால் தவறி விழுந்தான் துரியோதனன். எனினும் ஒருவழியாகச் சமாளித்து எழுந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து சிரிப்பொலி கேட்டது. உயரே நோக்கினான். அங்கே பாண்டவர்களின் மனைவி திரௌபதி நின்றுகொண்டிருந்தாள். அவன் விழுந்ததைப் பார்த்து அவள் சிரித்தாள். சிரிப்பது தவறென உணர்ந்து சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டாள். துரியோதனனோ அதை பெரும் அவமானமாக எடுத்துக் கொண்டான். பாஞ்சாலியை பதிலுக்குப் பதில் அன்றே அவமானப்படுத்த நினைத்தான்.

விழாவுக்கு வந்த உறவினர்களுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடாகி இருந்தது. பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினாள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன் ஐவரின் பத்தினியே இன்று யாருடைய முறை என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் கிருஷ்ணர். கலங்காதே திரௌபதி நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன் அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு ஏன் பதில் கூறவில்லை என்று கேட்பான். உடனே நீ தக்ஷகன் முறை என்று சொல் அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான் என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும் விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். எனக்குப் பதில் கூறவில்லையே இன்று யாருடைய முறை? ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான். திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். கிருஷ்ணா இதென்ன மாயம். யாரந்த தக்ஷகன். அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி பயந்து ஓடுகிறான் என்று கேட்டாள். கிருஷ்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

பானுமதி துரியோதனனின் மனைவி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும் மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் சாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான் பால் அருந்தும் மனநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்று கொண்டிருந்த தக்ஷகன் எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால் அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் மனித உருவில் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள் துடிதுடித்தாள். துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான் அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும் அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம் அவளின் வசியம் செய்த பாலை குடித்ததனால் பானுமதியின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை எனவே ஒரு நிபந்தனை விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு பௌர்ணமி தோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன். அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியது தான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம் என்றார் கிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கிருஷ்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

துரோணாச்சார்யாரிடம் யாசகம் கேட்ட கிருஷ்ணர்

துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்று அதை ஒரு பொக்கிஷமாகப் போற்றி ஒரு தாயத்தில் மறைத்து வைத்து தனது கழுத்தில் கட்டிக் கொண்டார். இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது. அதாவது குரு தட்சணையாகப் பெற்ற பொருள் குருவின் உயிரைக் காக்கும். இந்த ரகசியத்தை அறிந்தவர் கிருஷ்ணர் ஒருவர் தான். பாரதப்போரில் துரோணர் கவுரவர்கள் பக்கம் நின்று போரிட்ட நிலையில் தர்மத்தை காக்க அவரை அழிக்க வேண்டும். அவர் குரு தட்சணை என்ற தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை நிலை நாட்ட முயற்சிப்பவரை தர்மம் காப்பாற்றும் என்ற வேத வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதை துரோணரை வீழ்த்தும் உபாயத்தை அவர் காதில் சொன்னது.

அதன்படி ஒரு முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் துரோணரிடம் சென்றார். சுவாமி என்னுடைய ஒரே பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போது ஒரு வரன் அமைந்திருக்கிறது. ஆனால் மாங்கல்யம் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. நீங்கள்தான் கருணை கூர்ந்து உதவி செய்ய வேண்டும். உங்களால் முடியாது என்று சொல்லிவிட்டால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொல்லி விட்டு துரோணரின் கழுத்தில் தொங்கிய தாயத்தையே அந்த முதியவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட துரோணர் முதியவரின் யாசகத்தை நிராகரிக்க முடியாமல் மன வேதனையுடன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அவரது கைகளில் கொடுத்து ஐயா பெரியவரே இது மிகவும் மதிப்பு வாய்ந்த தங்கத் தாயத்து. இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்கல்யமாக அளித்து திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று கூறி மானசீகமாக மணமக்களை போர் முனையில் இருந்தே ஆசீர்வதித்தார். வந்த வேலை முடிந்தவுடன் முதியவரான கிருஷ்ணர் துரோணருக்கு வணக்கம் செலுத்தி விட்டு திரும்பினார். துரோணரிடமிருந்து பெற்ற ஒப்பற்ற பரிசான குரு பக்திக்கு உதாரணமான ஏகலைவனின் கட்டை விரலை தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்துக்கொண்டார். அதன் மூலம் குரு பக்திக்கு உரிய மரியாதையையும் குருவை போற்றும் உத்தம சீடனின் மேன்மையையும் அனைவருக்கும் உணர்த்தினார். அதன்பின் தனது யுக்தியால் துரோணரை அழித்தார்.

கர்ணன்

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற ரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் கிருஷ்ண பகவானின் லீலையால் அறிந்தான்.

பூர்வ ஜன்மத்தில் கர்ணன் பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. சஹஸ்ர கவசன் என்று பெயர் பெற்ற அசுரனாக இருந்தான். தேவர்களை தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை தேவர்களால் செய்ய இயலவில்லை. எனவே அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி சஹஸ்ர கவசனை ஒழிக்க உதவுமாறு வேண்டினர். இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழிக்க நர நாராயணர்களாக அவதரித்தார்.

சஹஸ்ர கவசனை அழிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். அதன் பிறகு நாராயணர் 12 வருடங்கள் தவம் புரிய நரன் 12 வருடங்கள் போர் புரிந்தான். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள பூர்வ ஜன்ம கவசத்தோடு பிறப்பெடுத்தான்.

இந்தக் கவசமும் அறுக்கப்படவேண்டிய காரியத்திற்காக பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும் நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் பிறப்பெடுத்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை கிருஷ்ணர் தன் லீலைகள் மூலம் இந்திரன் மூலம் கவசத்தை நீங்கினார். கவசம் நீங்கியதால் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது இல்லையென்றால் இருவருக்கும் 12 வருடகாலம் யுத்தம் நடந்திருக்கும்.