பப்ருவாகனனால் வீழ்த்தப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற அர்ஜூனன்

குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்று யுதிஷ்டிரர் அரசராக முடிசூட்டிக்கொண்டார். தேசம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினார். அதன் பொருட்டு அசுவமேத யாகம் செய்ய முடிவுசெய்தார். யாகம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை வியாசரிடம் கேட்டறிந்தார். வியாசர் வழிகாட்டியபடி சித்ரா பௌர்ணமியன்று யுதிஷ்டிரருக்கு முறைப்படியாக தீட்சை கொடுக்கப்பட்டது. பின்னர் உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை தேசம் முழுவதும் சுற்றிவர அனுப்பினார் யுதிஷ்டிரர். குதிரையை எதிர்ப்பவரை வெற்றி கொள்ள அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தெய்விக அஸ்திரங்கள் வில் எடுக்கக் குறையாத அம்பறாத் தூளிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டான். சென்ற நாடுகளில் எல்லாம் யாகக் குதிரைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர். வட தேசம் முழுவதும் வெற்றிகொண்ட அர்ஜுனன் தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருந்த மணலூருபுரம் என்ற நாட்டை அடைந்தான்.

மதுரை அப்போது கடம்ப வனமாக இருந்தது. மணலூருபுரம்தான் அப்போதைய பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்தது. அப்போது அந்த நாட்டை பப்ருவாகனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன் அர்ஜுனனுக்கும் பாண்டிய மன்னரின் மகளான சித்ராங்கதைக்கும் பிறந்தவன். யாகக் குதிரை வந்திருக்கும் தகவல் பப்ருவாகனனுக்கு வீரர்கள் மூலம் தெரியவந்தது. பெரியப்பா நடத்தும் யாகக் குதிரைக்கும் காவலாக வந்திருக்கும் தன் தந்தைக்கும் சகல மரியாதைகளையும் செய்ய வேண்டும் என்று பப்ருவாகனன் விரும்பினான். அதன்படி மாலை மற்றும் காணிக்கைகளுடன் அர்ஜுனனிடம் சென்றான். அப்போது அர்ஜுனனின் மற்றொரு மனைவியும் நாக கன்னிகையுமான உலூபி என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள். பப்ருவாகனனைப் பார்த்து மகனே நான் உன் தந்தையின் மனைவியரில் ஒருத்தி. உனக்கு நானும் ஒரு தாய்தான். நான் சொல்வதைக் கேள். உன் தந்தையுடன் போர் செய். அதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும் என்றாள்.

பப்ருவாகனன் போருக்குத் தயாரானான். குதிரையைப் பழக்கப்படுத்துவதில் தேர்ச்சிபெற்ற சில வீரர்களை அழைத்து குதிரையைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவிட்டான். அர்ஜுனன் பப்ருவாகனன் சிறந்த வீரன்தான் என்று பாராட்டிவிட்டு யுத்தத்துக்குத் தயாரானான். போர் கடுமையாக நடைபெற்றது. அர்ஜுனன் பப்ருவாகனனின் தேரில் பறந்த கொடியை அறுத்து தேர்க் குதிரைகளையும் கொன்றான். தேரைவிட்டு கீழே இறங்கிய பப்ருவாகனன் அர்ஜுனனைக் குறிவைத்து அம்புகளை மழையெனப் பொழிந்தான். மகனிடம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக அர்ஜுனன் அந்த அம்புகளைத் தடுத்தானே தவிர மகனை அதிகம் தாக்கவில்லை. பப்ருவாகனன் அக்னிப் பிழம்புடன் சீறும் பாம்பாகச் சென்று பேரழிவை உண்டாக்கும் கணைகளை அர்ஜுனனின் மார்பைக் குறிவைத்து ஏவினான். சக்தி வாய்ந்த அந்த அம்புகள் அர்ஜுனனின் மார்பைப் பிளந்து அவனைக் கீழே சாய்த்தன. எதிர்க்க அவகாசமில்லாமல் அர்ஜுனன் யுத்தக் களத்தில் மடிந்து வீழ்ந்தான். தந்தை இறந்ததைக் கண்டதும் பப்ருவாகனனின் ஆவேசமெல்லாம் போன இடம் தெரியவில்லை. தந்தையின் மரணத்துக்கு தான் காரணமாகிவிட்டோமே என்று நினைத்து மயங்கிவிழுந்தான். தகவல் ஊரெங்கும் பரவியது. அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதை யுத்தகளத்துக்கு வந்து அழுது அரற்றினாள். தன் கணவனின் இறப்புக்குக் காரணமான உலூபியிடம் கோபம் கொண்டாள். மயக்கம் தெளிந்து எழுந்த பப்ருவாகனனும் உலூபியைப் பார்த்து நாக கன்னிகையே நீ சொன்னதைக் கேட்டு நான் என் தந்தையையே கொன்றுவிட்டேன். இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன் நானும் என் தாயுடன் அக்னிப் பிரவேசம் செய்து உயிர்விடப்போகிறேன் என்று கதறினான்.

அப்போது அங்கே வந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனன் இறந்ததைக் கண்டு அழுவதுபோல் நடித்தார். கிருஷ்ணர் அழுவதைப் பார்த்த உலூபி மற்றவர்கள் அர்ஜுனன் இறந்ததற்காக அழலாம். ஆனால் நீங்களே அழலாமா நீங்கள் சொன்னால் நான் அர்ஜுனனை உயிர் பெறச் செய்கிறேன் என்று கூறினாள். கிருஷ்ணரும் சரியென்று கண்களாலேயே கூறினார். உடனே உலூபி தன் மனதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவன மணியை நினைத்தாள். உடனே தன் கையில் வந்து சேர்ந்த அந்த மணியை அர்ஜுனன் உடலில்வைத்து அவனை உயிர்த்தெழச் செய்தாள். உயிர்த்தெழுந்த அர்ஜுனன் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த சித்ராங்கதை, பப்ருவாகனன், கண்ணன், உலூபி ஆகியோரைப் பார்த்தான். பிறகு உலூபியிடம் தன் மகனைக்கொண்டே தன்னைக் கொல்லச் செய்து பிறகு தன்னை உயிர் பிழைக்கச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டான். கிருஷ்ணரின் உத்தரவுப்படி உலூபி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள்.

தட்சனின் மகள் வசுவின் பிள்ளைகள் எட்டுப் பேர். இவர்களில் ஏழு பேர் சாந்தனுவின் பிள்ளைகளாகப் பிறந்து கங்கையில் விடப்பட்டவர்கள். இளையவர் பீஷ்மராகப் பிறந்தார். தங்களில் ஒருவரான பீஷ்மரை அர்ஜுனன் முறைதவறி கொன்றுவிட்டான் என்று அர்ஜுனன் மேல் கோபம் கொண்டு அவன் தன் மகனாலேயே மடிய வேண்டும் என்று சபித்துவிட்டனர். இதை அறிந்த என் தந்தை அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டார். மனமிறங்கிய அவர்கள் என் தந்தையிடம் அர்ஜுனனுக்கு மணலூருபுரத்தில் ஒரு மகன் இருக்கிறான். அவன் அர்ஜுனனை போர்க்களத்தில் வீழ்த்துவான். அப்போது உன்னிடம் இருக்கும் சஞ்ஜீவன மணியால் அர்ஜுனனை உயிர்த்தெழச் செய் என்று சாபவிமோசனம் கொடுத்தனர். அதனால்தான் இப்படி நடைபெற்றது. இல்லையென்றால் பீஷ்மரைக் கொன்ற பாவத்துக்காக நீங்கள் கொடிய நரகத்துக்குச் சென்றிருப்பீர்கள் என்றாள். உலூபி சொன்னதை ஆமோதித்தார் பகவான் கிருஷ்ணர். அனைவரும் மகிழ்ச்சியுடன் பப்ருவாகனனின் அரண்மனைக்குச் சென்று உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தன் மனைவி சித்ராங்கதை மகன் பப்ருவாகனன் ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு அர்ஜுனன் யாகக் குதிரையுடன் அஸ்தினாபுரம் புறப்பட்டான். அஸ்வமேத யாகம் இனிதே நிறைவுபெற்றது.

சகுனி குரு குலத்தை அழிக்கும் காரியங்கள் ஏன் செய்தான்

காந்தார மன்னன் சுலபனின் மகன் சகுனி. மகள் தான் காந்தாரி. காந்தார நாட்டு இளவரசி அழகும் இளமையும் நற்பண்புகளும் மட்டுமல்லாமல் ஆயுதக் கலையிலும் பயிற்சி பெற்றவள் காந்தாரி. எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறன் கொண்டவள். அழகும் அறிவும் நிரம்பி இளமையின் பூரிப்பில் மதர்ந்திருந்த காந்தாரிக்கும் எல்லா பெண்களையும் போலவே திருமணத்தைப் பற்றியும் தன் மணாளனைப் பற்றியும் கனவுகளும் கற்பனைகளும் மனது முழுக்க நிறைந்திருந்தது. சிவபெருமானிடம் தனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவள். அவளின் ஜாதக தோஷத்தின் படி அவளை திருமணம் செய்யும் முதல் கணவன் இறந்துவிடுவான் என்ற விதி இருந்தது. இது தெரிந்தால் எந்த மன்னனும் தன் மகளை மணம் புரியத் துணிய மாட்டானே என்ற கவலை காந்தார மன்னனை பெரிதும் வாட்டியது.

அதே சமயத்தில் பீஷ்மர் தன் குலம் தழைக்க குரு குலத்தின் வாரிசுகளான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் பெண் தேடிக் கொண்டிருந்தார். திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க காந்தாரியை பெண் கேட்டு வந்த பீஷ்மரின் தூதை காந்தார நாட்டு மன்னன் உடனே ஏற்கவில்லை. அறிவும் அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகள் ஒரு கண் தெரியாதவனுக்கு மனைவியாவதா என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதன் பின் குரு குலத்தின் அருமை பெருமைகளை மனதில் கொண்டு பார்வை அற்ற திருதராஷ்டிரனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறான். ஆனால் மகளுக்கு இருந்த தோஷம் அவனை கவலை அடையச் செய்தது. அதனால் ஒரு உபாயம் செய்கிறான். தோஷம் நீக்குவதற்கு பரிகாரமாக ஒருவரும் அறியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக்கிடாவை அவளுக்கு திருமணம் செய்து வைத்து பின் அதை வெட்டி பலி கொடுத்து விடுகின்றனர். அதன் படி காந்தாரி தன் முதல் கணவனான ஆட்டுக்கிடாவை இழந்துவிட்ட விதவை. திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற கணக்கு சரியாகிவிடுகிறது.

திருதராஷ்டிரன் தான் தன் கணவன் என்று பெற்றோர்கள் நிச்சயம் செய்திருப்பதை அறிந்த காந்தாரி மறுவார்த்தை கூறாமல் சம்மதம் தெரிவித்தாள். கண் தெரியாதவனாய் இருந்தாலும் தன் கணவன் குருகுலத்தில் மூத்தவன் அரச குமாரன் என்ற காரணங்களால் மனம் தேற்றிக் கொண்டாள். சகல சீர் வரிசைகளுடனும் பரிசுகளுடனும் தன் தமக்கையை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் செல்கிறான் சகுனி. அங்கு காந்தாரியும் சகுனியும் சகல மரியாதைகளோடு வரவேற்கப்படுகின்றனர். திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. தன் கணவன் பார்வை அற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால் தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டுவிட்டாள் காந்தாரி.

காந்தாரி திருமணத்திற்கு முன் தனக்கிருந்த தோஷத்தால் ஆட்டுக் கிடாயை மணம் செய்து கொண்டதும் அதன் பின் அதை பலி கொடுத்து முதல் கணவன் இறந்தான் எனும்படி தோஷ பரிகாரம் செய்ததும் பீஷ்மருக்கு தாமதமாக ஒற்றர்கள் மூலம் கிடைக்க தன் குலத்திற்கு விதவை மருமகள் ஆவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணினார். இந்த விஷயத்தை மறைத்து திருமணம் செய்த சுபலன் மற்றும் அவனது நாட்டை நிர்மூலமாக்க பீஷ்மர் எண்ணினார். காந்தார நாட்டுக்கு படையெடுத்துச் சென்று எல்லோரையும் சிறைப் பிடித்தார். அப்போதும் பீஷ்மரை சமாதானப்படுத்திய சுபலன் மற்றும் அவரது உறவினர்கள் பீஷமருக்கு விஷம் வைத்துக் கொல்ல திட்டம் போட்டனர். இதையும் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்ட பீஷ்மர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். ஒட்டுமொத்த சுபலன் கூட்டத்தை பாதாள அறைக்குள் சிறையில் வைத்தார். ஒட்டுமொத்த குடும்பத்தை நிர்மூலமாக்குவது பாவம் என ஆலோசகர்கள் சொன்னதால் ஒருநாளைக்கு இரண்டு பிடி உணவும் ஒரு சுரைக்காய் குடுவை அளவு நீரும் மட்டுமே அவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.

தன் உடன் பிறந்தவர்களையும் உற்றாரையும் நோக்கிய சகுனி இந்த உணவை வைத்துக்கொண்டு ஒரே ஒருவர் உயிர் வாழ முடியும் மற்றவர்கள் ஒருவருக்காக உயிர்த்தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் அனைவரும் அழிந்து போவோம். யார் உயிர் வாழவேண்டிய நபர் என்று நமக்குள் முடிவு செய்யுங்கள் என்றான். சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு சகுனியின் தந்தை சுபலன் அறிவில் சிறந்த சகுனியே உயிர் பிழைக்க வேண்டும். சகுனி தன் உயிரை பீஷ்மாரின் குலத்தை ஒழிக்கவே பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அவர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படியே ஒவ்வொரு நாளின் உணவும் சகுனிக்கு அளிக்கப்பட்டது. அவன் கண்ணெதிரே ஒவ்வொருவராக பசியால் செத்து விழுந்தார்கள். தந்தை சுபலன் மரண அவஸ்தையில் இருந்தபோது சகுனியை அழைத்து அவனின் வலது காலை அடித்து உடைத்தார். சகுனி வலியால் துடித்தபோது உன் ஒவ்வொரு அசைவின் போதும் இந்த மரணங்களை மறக்கக் கூடாது பழி பழி என்று அலைய வேண்டும் என்றார் தந்தை. மேலும் அவரது வலக்கையை ஒடித்துக் கொடுத்து இதில் இருக்கும் எலும்பைக் கொண்டு தாயக்கட்டைகளை உருவாக்கி கொள். சூதாட்டத்தில் சிறந்த உனக்கு இந்த தாயக்கட்டைகளே வேண்டிய எண்ணைக் கொடுக்கும். இதைக் கொண்டே குருவம்சத்தை அழித்து விடு என்றார். அதன்படியே அத்தனை உறவுகளையும் இழந்தான்.

பல வருடங்களுக்கு பின்னர் அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான். துரியோதனன் மேல் ஆத்திரம் பொங்கினாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். அன்பு மருமகனே நீ எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கின்றாய். இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து காந்தார நாட்டின் பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிட்டு இந்தக் கொடியவர்களை ஒழித்து காந்தார நாட்டை முழுவதும் எனக்கு உரிமையாக்கி விட்டாய். இதற்கு உனக்கு எப்படிக் கைம்மாறு செய்வது என்று தேன் ஒழுக பேசினான். துரியோதனன் அவன் பேச்சை அப்படியே நம்பி விடுதலை செய்தான். சகுனி தன்னந்தனியாக சூதே உருவாக வெளியே வந்தான். மனமெங்கும் கோபமும் பழி வாங்கும் உணர்வும் மேலோங்கியது. குரு குலத்தை பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தான். தீமையின் வடிவான துரியோதனனின் ஆலோசகன் ஆனான். வீணான மோதலை உருவாக்கி கௌரவ பாண்டவ யுத்தத்தை உருவாக்கி தனது சபதத்தை நிறைவேற்ற இறுதிவரை போராடினான்.

பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட மிகமிக நல்லவன்

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருக்ஷேத்திரப் போர். பதினான்காவது நாளில் இன்று அதிக எண்ணிக்கையில் கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்கள் பாசறையை விட்டு வெளியே வந்தனர். அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் திரோபதி அவரவர் தேரில் அமர்ந்து போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அந்தத் தருணத்தில் திரோபதியிடமிருந்து அந்த விசித்திரமான வினா கிருஷ்ணனை நோக்கிப் புறப்பட்டது கிருஷ்ணா எல்லாம் தெரிந்த எம்பெருமானே இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன். கொல்பவனும் நீ. கொல்லப்படுபவனும் நீ. வெல்பவனும் நீ. வெல்லப்படுபவனும் நீ. சொல். இன்று யார் யாரால் கொல்லப்படுவார்கள் என்று கேட்டாள். திரோபதியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாண்டவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் முகத்தை ஆவலோடு நோக்கினார்கள். இன்றைய போரின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் இருந்தது. எதனாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கிருஷ்ணன் நகைத்தவாறே சொன்னான். திரோபதி உனக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளது. சொல்கிறேன் கேள். இன்று இரு தரப்பினராகப் பிரிந்து போரிடும் அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இப்போது உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் யாருமில்லை. அவன் இறக்கவிருப்பதை எண்ணி என் மனம் இப்போதே வருந்துகிறது என்றார். இந்த பதிலால் கடும் அதிர்ச்சியடைந்த அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தங்கள் அண்ணனான யுதிஷ்டிரரைக் கவலையோடு பார்த்தார்கள். யுதிஷ்டிரரரை விட நல்லவர்கள் யாரிருக்க முடியும் என்று அனைவரும் எண்ணினர்.

திரோபதி கண்களில் நீர்வழிய யுதிஷ்டிரரைப் பார்த்தாள். இதயத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தாள். பாண்டவர்கள் ஐவரும் போர் முடிந்து நல்லபடியாகத் திரும்ப வேண்டும் இன்று மாலை ஐவரும் திரும்புவார்களா இல்லை நால்வர் மட்டும் தானா என்று கவலையுடன் இருந்தாள். கிருஷ்ணன் தன் பதிலால் ஏற்பட்ட பின்விளைவு எதையும் பொருட்படுத்தாமல் போர்க்களம் நோக்கிப் சென்றார். யுதிஷ்டிரர் தேர் மற்றும் அனைவரின் தேர்களுக்கும் அடுத்து அடுத்து நகர்ந்தது.

போர்க்களத்தில் கையில் கதாயுதத்தோடு களத்தில் இறங்கிய பீமன் தன்னுடன் போர்த் தொடுக்க முன்வந்து நின்ற விகர்ணனைப் பார்த்துக் கடுமையாக எச்சரித்தான். விகர்ணா என்முன் வராதே தள்ளிப் போ. நான் உன்னைக் கொல்வதற்காகக் களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன் துச்சாதனன் இருவரையும் வதம் செய்ய வந்திருக்கிறேன். அவர்கள் இருவரின் குருதியையும் கலந்து கூந்தலில் பூசிக் குளிப்பேன் எனச் சபதம் செய்திருக்கிறாள் திரோபதி. மேகம் போல் அடர்ந்த அவள் கூந்தல் முடியப்படாமல் இருப்பதை எத்தனை நாட்கள் நான் பார்த்துக் கொண்டிருப்பது இன்று என் கையில் உள்ள கதையால் உன் அண்ணன்கள் இருவரின் கதை முடியவேண்டும். திரோபதி தன் கூந்தலை முடியவேண்டும். குறுக்கே வராதே வழிவிடு என்றான். பீமனின் வீராவேசப் பேச்சைக் கேட்டு விகர்ணன் பீமா என்னை வென்றுவிட்டு அவர்களை உன்னால் வெல்ல இயலாதா என்னை வெல்ல முடியாதென்ற பயமா என்றார். கௌரவர்கள் நூறு பேரில் நீ மட்டும் தப்பிப் பிறந்தவன். அன்று கௌரவர் சபையில் திரோபதியை உன் அண்ணன் துச்சாதனன் துகிலுரிய எத்தனித்தானே அப்போது மெய்ஞ்ஞானியான பீஷ்மர் கூட வாய்மூடி மௌனியாக இருந்தார். அதர்மம் தலைவிரித்தாடிய அந்த சந்தர்ப்பத்தில் தர்மத்தின் பக்கம் நின்று குரல்கொடுத்தவன் நீ மட்டும்தான். அநியாயம் நடக்கிறது நிறுத்துங்கள் என்று அறைகூவியவன் நீ ஒருவன்தான். உன்னுடைய குரல் உன் அண்ணன் துரியோதனனுக்கு பிடிக்காது என்பதையும் நீ யோசிக்கவில்லை. அறத்தின் பக்கமே நின்றது உன் மனம். உன்மேல் கொண்ட அன்பால் உன்னைக் கொல்ல என் கதாயுதம் விரும்பவில்லை நான் உன்னைக் கொல்ல முயன்றாலும் கூட என் கதாயுதம் என்னைத் தடுத்துவிடுமோ எனத்தான் அஞ்சுகிறேன். உன்மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தப்பிப் பிழைத்துப் போ என்றார் பீமன்.

விகர்ணா நீ எங்களுடன் சேர்ந்துவிடு. பாண்டவர்கள் உன்னையும் சேர்த்து ஆறுபேராக இருப்போம். உனக்கும் அரசு வழங்கி முடி சூட்டுகிறோம். திரௌபதியின் மானத்தைக் காக்கக் குரல்கொடுத்த உன் தலையில் முடிசூட்டிப் பார்க்க என் மனம் ஆசைப்படுகிறது. என் விருப்பத்தை நிறைவேற்று என்றார் பீமன். பீமா நான் அற வழியில் நிற்பவன் என்று சொன்னாயே அது உண்மைதான். அன்று பெண்ணின் மானம் சூறையாடப்படும் நிலையில் அதன் பொருட்டு எதிர்த்துக் குரல் கொடுப்பது அறம். எனவே எதிர்த்துக் குரல் கொடுத்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும் நான் சார்ந்திருக்கும் என் அண்ணண் தரப்புக்காக நான் போரிடுவதே நியாயம். வெறும் மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்றா நினைத்தாய் என்னைத் தாண்டித்தான் நீ துரியோதனனை அடைய முடியும். இயலுமானால் என்னை வெற்றி பெற்று துரியோதனனிடம் செல் என்றான். விகர்ணனின் பேச்சு பீமனுக்குக் கோபத்தை விளைவித்தது. தேரிலிருந்து குதித்துப் பாய்ந்து சென்று விகர்ணனை தனது கதையால் தாக்கினான் பீமன். உக்கிரமான போர் நெடுநேரம் நடைபெற்றது. ஒரு மாபெரும் வீரனுடன் போர் புரிகிறோம் என்பதை பீமனின் மனம் உணர்ந்தது. மேலும் அறத்தின் வழியே வாழ்பவர்களை வெல்வது சுலபமல்ல என்பதையும் அவன் மனம் புரிந்துகொண்டது. மனமே இல்லாமல் தன் கதாயுதத்தால் ஓங்கி விகர்ணனை அறைந்தான் பீமன். தர்மத்தின் வழியிலேயே நின்ற அவன் முகத்தில் புன்முறுவல் படர்வதையும் சிரித்துக் கொண்டே அவன் மரணத்தை வரவேற்பதையும் பார்த்து வியந்தது பீமன் மனம். விகர்ணனின் உயிர்ப் பறவை விண்ணில் பறந்தபோது பீமன் உள்ளம் இனம் தெரியாத சோகத்தில் ஆழ்ந்தது. மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு யுத்தம் நிறுத்தப்பட்டது.

பாண்டவர்கள் பாசறைக்குத் திரும்பினார்கள். அனைவரிலும் நல்லவன் அன்று கொல்லப்படுவான் என்று கிருஷ்ணன் சொன்னானே பதற்றத்தோடு காத்திருந்த திரௌபதி யுதிஷ்டிரர் உள்ளிட்ட எல்லோரும் நலமாகத் திரும்பி வருவதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். திரௌபதி கிருஷ்ணனிடம் கேட்டாள். அனைவரிலும் நல்லவன் இன்று மரணமடைவான் என்றாயே இறந்தது யார்? என் கணவர் ஐவரிலும் மூத்தவரைத் தானே உலகம் மிக நல்லவர் எனப் புகழ்கிறது. அவரின் நலத்திற்காக நான் இன்று முழுவதும் உன்னைப் பிரார்த்தித்தவாறே காலம் கழித்தேன். அவரை விடவும் நல்லவர்கள் உண்டா என்று கேட்டாள்.

திரௌபதி நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை. ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான். உன் மானத்தைக் காப்பதற்காக எதிரணியில் இருந்து குரல்கொடுத்தான். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும் தன் அண்ணனுக்காக உயிரையே கொடுத்திருக்கிறான். மகுட ஆசை கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. தான் இறப்போம் என்று தெரிந்தே இறந்திருக்கிறான். தர்மம் எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியில் தான் கிருஷ்ணர் இருப்பார் என்பதும் நான் இருக்கும் அணிதான் வெல்லும் என்பதும் அவன் அறிந்தவை தான். ஆனாலும் தன் உயிர் போவதை அவன் ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. தனது அண்ணனுக்காக உயிரை விடுவதே தனது தர்மம் எனக் கருதியிருக்கிறான். அவன் இருந்தவரை கௌரவர்கள் அத்தனை பேரையும் அந்த நல்லவனின் தர்மசக்தி கவசமாய்க் காத்திருந்தது. அவன் இருக்கும்வரை கௌரவர்களை அழிப்பது இயலாத செயல். இன்று பீமன் அந்த நல்லவனை வதம் செய்துவிட்டான். இனி கெட்டவர்களான மற்ற கௌரவர்களை அழிப்பது கடினமல்ல என்றார். இதற்கு யுதிஷ்டிரர் என்னை நல்லவன் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ விகர்ணன் என்னை விடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் பாழும் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்ததே என்று அனைவரும் அவனுக்காக வருத்தப்பட்டனர்.

திருதராஷ்டிரர் எதனால் கண் தெரியாமல் பிறந்தார்

குருசேஷத்திர போர் முடிந்தவுடன் திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம் நான் குருடனாக இருந்தபோதும் விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர். உனக்கு நான் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்னால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன் என்றார்.

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது அவரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்து கொடுத்து பரிசு பெறும் நோக்கில் அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மணை குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர் அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். திருதராஷ்டிராரே இப்போது பதில் சொல்லுங்கள். அரசன் சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார் என்று கிருஷ்ணர் கேட்டார்.

ஒரு முறை வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே. சமையல்காரன் பணம் பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன் தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரர்.

புன்னகைத்த கிருஷ்ணர் திருதராஷ்டிரரே நீங்களும் ஓர் அரசனாக இருந்து நியாயம் தவறாமல் மன்னன் செய்ததே தவறு எனக் கூறினீர்கள். அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அரசனாக அமர்த்தியது. நல்ல மனைவி நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால் நான்சொன்ன கதை உன்னைப் பற்றியது தான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னங்கள் அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் கண் இருந்து அதனை பார்த்தும் உனக்கு சைவ அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அதனாலேயே நீ கண் தெரியாதவனாய் பிறந்தாய். தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும் என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்தார் திருதராஷ்டிரன்.

பார்பரிகா

பார்பரிகா இவருக்கு காட்டுஜி பார்பரிகா என்ற பெயரும் உண்டு. இவர் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பர்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தவன். குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய போர் வீரனாக திகழ்ந்தான் மகாபாரத போரின் முன்பு போரை முடிக்க எத்தனை நாள் தேவைப்படும் என அனைத்து போர் வீரர்களிடமும் கிருஷ்ணர் கேட்டார். அனைவரும் சராசரியாக 15 முதல் 20 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர். பார்பரிகாவை கேட்ட போது தான் ஒரு நிமிடத்தில் போரை முடித்து விடுவதாக கூறினார். அனைவரும் அது எப்படி சாத்தியமாகும் என கேட்க கிருஷ்ணர் அவரிடம் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும். பதில் கூறுமாறு பார்பரிகாவிடம் கூறினார்.

சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார். பார்பரிகா சிவபெருமானின் தீவிர பக்தனாகவும் விளங்கினார். சிவபெருமானை குளிரச் செய்யும் நோக்கில் அவர் கடுமையான தவத்தில் ஈடுபட்டார். அதற்கு பலனாக மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புகளை வரமாகவும் பெற்றார். முதல் அம்பு தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் பின்பு மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும். மூன்றாம் அம்பை தனியாக பயன் படுத்தினால் குறிப்பிடப்படாத அனைத்தையும் மொத்தமாக ஒரே அம்பில் அழித்து விடும். தான் காப்பாற்ற நினைக்கும் அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும். அதனால் பார்பரிக்காவை தீன் பந்தரி மூன்று அம்புகளை கொண்டவன் என்று பெயர் பெற்றான்.

இந்த வரத்தை பற்றி கேட்ட கிருஷ்ணர் அனைவருக்கும் அவனது திறமையை காண்பிக்க முடிவெடுத்தார். அதனால் வெறும் மூன்று அம்புகளை கொண்டு பார்பரிகா போர் புரிவதை பற்றி கிண்டல் செய்த அவர் அவரின் சக்தியை வெளிப்படுத்த செயல்முறை விளக்கம் கேட்டார். கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள அனைத்து இலைகளையும் எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார். இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது. கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார். உடனே அந்த இலையின் மீதும் குறி வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது. இதனை கண்ட அனைவரும் வியந்தனர். பார்பரிகா பெற்ற வரத்தின் போது சிவன் இரண்டு நிபந்தனைகள் விதித்தார். முதல் நிபந்தனை தன் சொந்த பகைக்காக இந்த அம்புகளை அவர் பயன்படுத்த கூடாது. இரண்டாம் நிபந்தனை போர்களத்தில் பலவீனமான பக்கத்தில் இருந்து சண்டை போடும் போதே இந்த அம்புகளைப் பயன்படுத்த வேண்டும். வெற்றி பெரும் பக்கத்தில் இருந்தால் இந்த அம்பை உபயோகிக்க கூடாது. இது தவிர எந்த அணி தோற்கின்ற நிலையில் உள்ளதோ அந்த அணியுடன் சேர்ந்து போர் புரிவது என்று தனது குருவுக்கு தட்சிணையாக வாக்குறுதி ஒன்றை அளித்திருக்கின்றான்.

பார்பரிகாவின் சக்தியை பார்த்த கிருஷ்ணர் குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக எண்ணியிருக்கின்றாய் எனக்கேட்டார். கௌரவர்களிடம் பீஷ்மர் துரோணர் கிருபர் கர்ணன் என அதிரவர்கள் இருக்கின்றார்கள். படைபலமும் கௌரவர்களுக்கே அதிகமாக உள்ளது. கௌரவர்களை விட பாண்டவர்களே பலவீனமாக இருக்கின்றார்கள். எனவே பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். இதற்கு கிருஷ்ணர் பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால் தானாகவே அவர்கள் அணி வலுவடையும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் வெற்றி அடையும் நிலைக்கு வருவார்கள். கௌரவர்கள் தோற்கும் நிலை அடைவார்கள். உன்னுடைய யுத்த நியதியின் படி தோற்கும் பக்கம் நின்று நீ யுத்தம் செய்ய வேண்டும். அதன்படி பின்பு நீ கௌரவர்கள் பக்கம் சேரவேண்டும். பின்பு கௌரவர்கள் வெற்றி அடையும் நிலைக்கு வருவார்கள். இப்படி நீ மாறி மாறி இரு அணிக்கும் போரிட்டுக்கொண்டே இருந்தால் இறுதியில் நீ மட்டும் தான் இருப்பாய் இரு அணியிலும் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். யுத்தம் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்துவிடும் என கிருஷ்ணர் கூறினார். இதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான்.

அப்போது கிருஷ்ணர் வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும் என்றார் கிருஷ்ணர். யார் அவன் சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன் என்றான் பார்பரிகா. உன் உறவினர்களுக்காகவும் போரின் முடிவுக்காகவும் உழைக்க எண்ணாமல் குருவிற்கு கொடுத்த தட்சணைபடியும் சிவபெருமான் விதித்த நிபந்தனைப்படியும் போர் செய்ய வேண்டும் என்று நினைத்த நீதான் அந்த ஆள் என்று அவன் தலையைக் கேட்டார் கிருஷ்ணர். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி அவனுக்கு வரம் ஒன்று கொடுக்க சித்தம் ஆனார். அவனோ தான் இறந்தாலும் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரம் கேட்டான். கிருஷ்ணரின் ஆசையை ஏற்றுக் கொண்ட பார்பரிக்க தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை கேட்டார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை அவருக்கு அளித்தார் கிருஷ்ணர். அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று வைத்தான் பீமன். அதனால் மகாபராத போர் முழுவதையும் கிருஷ்ணரின் அருளால் பார்பரிகா கண்டார். ராஜஸ்தானில் பார்பரிக்காவை காட்டு ஷ்யாம்ஜி யாக இன்றும் வணங்குகின்றனர்.

கிருஷ்ணர் ஏன் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணர் அந்த கீதையை உபதேசித்தது பற்றிய ஒரு சந்தேகத்தை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் எழுப்பினான். மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை சொல்ல ஏன் என்னை தேர்ந்தெடுத்தாய். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். அண்ணன் யுதிஷ்டிரர் இருக்கிறார். ஐவரில் மூத்தவர் தர்ம நீதிகளை உணர்ந்தவர். அண்ணன் பீமன் மிகச் சிறந்த பக்திமான் பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இவர்களை விட்டு என்னை புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக தேர்ந்தேடுத்தது ஏன் என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டன்.

அர்ஜுனா நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. பீஷ்மர் அறங்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் உணர்ந்தவர். சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது கடைப்பிடித்தால் தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்று தெரிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும் போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். எண்ணம் சொல் செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. யுதிஷ்டிரர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. யுதிஷ்டிரர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும் கூட ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அதிகம்.

அர்ஜுனா நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. உன்னைவிட வயதான அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து அவர்களுக்காக நீ என்னிடம் வாதிடுகிறாய். போர்க்களத்திலே நின்றபோதும் உற்றார் உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய். அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும் களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்ய மனவலிமை தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இதெல்லாம் தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள் தனிச்சலுகை எதுவுமில்லை என்றார் கிருஷ்ணர். அர்ஜுனன் அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

கிருஷ்ணர் கொடுத்த குறிப்பு

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போரிட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இருபக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த உடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.

தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையர்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார். அதற்கு அவர் நான் தினமும் கிருஷ்ணருக்கு பாயாசம் வழங்கும் போது அதில் உள்ள முந்திரிப் பருப்பில் எத்தனை சாப்பிடுகிறார் என கவனிப்பேன். அதனை கணக்கில் கொண்டு அத்தனை வீரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சமைக்கச் சொல்வேன். ஒவ்வொரு முந்திரி பருப்பிற்கும் ஆயிரம் வீரர்கள் என கணக்கிடுவேன். சில நேரம் கிருஷ்ணர் பாதிப் பங்கு கால் பங்கு முந்திரிப் பருப்பு கூட சாப்பிடுவது உண்டு என்றார். கிருஷ்ணர் தினமும் கொடுக்கும் குறிப்பையும் அதை உடுப்பி அரசர் கவனிக்கும் விதத்தையும் கேட்ட யுதிஷ்டிரர் தான் ஒரு நாள் கூட இதைக் கவனிக்கவில்லையே என நினைத்துக்கொண்டார்.

நீதி : கடவுள் ஒவ்வொரு நொடியும் குறிப்பு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனை உணரும் போது வாழ்வின் காரியம் சாத்தியமாகும்.

மகாபாரதப் போர் தத்துவம்

மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அதில் இருக்கும் தத்துவம் உண்மை. அதை அனைவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள். ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள். எண்ணிக்கையில் பெரிதான கௌரவர்களை எதிர்த்து கிருஷ்ண பரமாத்மா என்னும் மனசாட்சியின் படி சத்தியத்தை கடைபிடித்து சத்தியத்தின் படி வாழ்க்கையை வாழ்ந்து ஐம்புலன்களால் போரிட தீமைகளை வெற்றி பெறலாம். கர்ணன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை மோகம். அவன் இந்திரியங்களின் ஒரு பகுதி. கூடவே பிறந்தவன். ஆனால் தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அவனது விருப்பம் ஆசை போல ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தவறு செய்வான். அவனையும் வெற்றி பெற்றால் இறைவனை அடையலாம்.