கிருஷ்ணர் கொடுத்த குறிப்பு

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போரிட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இருபக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த உடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.

தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையர்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார். அதற்கு அவர் நான் தினமும் கிருஷ்ணருக்கு பாயாசம் வழங்கும் போது அதில் உள்ள முந்திரிப் பருப்பில் எத்தனை சாப்பிடுகிறார் என கவனிப்பேன். அதனை கணக்கில் கொண்டு அத்தனை வீரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சமைக்கச் சொல்வேன். ஒவ்வொரு முந்திரி பருப்பிற்கும் ஆயிரம் வீரர்கள் என கணக்கிடுவேன். சில நேரம் கிருஷ்ணர் பாதிப் பங்கு கால் பங்கு முந்திரிப் பருப்பு கூட சாப்பிடுவது உண்டு என்றார். கிருஷ்ணர் தினமும் கொடுக்கும் குறிப்பையும் அதை உடுப்பி அரசர் கவனிக்கும் விதத்தையும் கேட்ட யுதிஷ்டிரர் தான் ஒரு நாள் கூட இதைக் கவனிக்கவில்லையே என நினைத்துக்கொண்டார்.

நீதி : கடவுள் ஒவ்வொரு நொடியும் குறிப்பு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனை உணரும் போது வாழ்வின் காரியம் சாத்தியமாகும்.

மகாபாரதப் போர் தத்துவம்

மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அதில் இருக்கும் தத்துவம் உண்மை. அதை அனைவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள். ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள். எண்ணிக்கையில் பெரிதான கௌரவர்களை எதிர்த்து கிருஷ்ண பரமாத்மா என்னும் மனசாட்சியின் படி சத்தியத்தை கடைபிடித்து சத்தியத்தின் படி வாழ்க்கையை வாழ்ந்து ஐம்புலன்களால் போரிட தீமைகளை வெற்றி பெறலாம். கர்ணன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை மோகம். அவன் இந்திரியங்களின் ஒரு பகுதி. கூடவே பிறந்தவன். ஆனால் தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அவனது விருப்பம் ஆசை போல ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தவறு செய்வான். அவனையும் வெற்றி பெற்றால் இறைவனை அடையலாம்.