ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 31

ராமர் பற்றிய சிந்தனையில் தனியாக இருந்த ராவணனிடம் கும்பகர்ணன் எழுந்து அரசவைக்கு வந்து விட்டான் என்ற செய்தி சொல்லப்பட்டது. மகிழ்ச்சி அடைந்த ராவணன் அங்கிருந்து அரசவைக்கு வந்து சேர்ந்தான். ராவணனிடம் கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான். கம்பீரமாக பொலிவுடன் இருக்கும் தங்களின் முகம் ஏன் மிகவும் கவலையில் உள்ளது. உங்களுடைய கவலையை போக்குவதற்காக நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா எனக்கு உத்தரவிடுங்கள் இப்போதே செய்து முடிக்கிறேன் என்றான் கும்பகர்ணன். அதற்கு ராவணன் தம்பி நீ தூங்க ஆரம்பித்ததும் தேவர்களும் நெருங்க முடியாத நமது நகரத்தை கடல் போல் வந்த வானரசேனைகள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். ராட்சசர்களுக்கும் இந்த வானரங்களுக்கும் நடந்த யுத்தத்தில் நம்முடைய பல தளபதிகளும் முக்கிய வீரர்களும் இறந்து விட்டார்கள். நேற்று நானே எனது படைகளுடன் யுத்தத்திற்கு சென்றேன். ராமர் தனது பராக்கிரமத்தால் என்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து தர்மம் என்ற பெயரில் என்னை உயிரோடு விடுகிறேன் என்று அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். இந்த சம்பவத்தால் மிகவும் கவலையுடன் இருக்கிறேன். உன்னுடைய பலத்தை நான் அறிவேன். அதனால் இப்போது உன்னை மட்டுமே நம்பியிருக்கிறேன். இதற்கு முன்பாக நடந்த யுத்தத்தில் உனது பலத்தினால் தேவர்களையெல்லாம் சிதறி ஓட விரட்டி அடித்திருக்கிறாய். உடனே சென்று யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து இழந்த எனது பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்து நமது ராட்சச குலத்தையும் நமது இலங்கை நகரத்தையும் காப்பாற்று என்று ராவணன் கேட்டுக் கொண்டான். கும்பகர்ணன் மிகவும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து மன்னிக்க வேண்டும் அண்ணா என்று கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான்.

ராமர் இலங்கைக்குள் வந்து விட்டார் என்ற செய்தி வந்ததும் சபையில் நாம் அனைவரும் செய்த ஆலோசனையில் பெரியவர்களும் அறிஞர்களும் என்ன சொல்லி எச்சரிக்கை செய்தார்களோ அதுவே இப்போது நடந்திருக்கிறது. அனைவரும் எச்சரிக்கை செய்ததை நீங்கள் கேட்கவில்லை. சீதையை ஏமாற்றி தூக்கி வந்த பாவத்திற்கான பயனை இப்போது அனுபவிக்கிறீர்கள். நீங்கள் முதலில் ராம லட்சுமணர்ளை அழித்து விட்டு பின்பு சீதையை தூக்கி வந்திருந்தால் உங்களது வீரம் அனைவராலும் பாரட்டப் பட்டிருக்கும். இப்போது என்னை தோற்கடித்து விட்டான் எனது வீரர்கள் இறந்து விட்டார்கள் என்று புலம்புகிறீர்கள். அரசன் ஒருவன் ஆசையினால் தூண்டப்பட்டு அதனைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் செய்து முடித்துவிட்டு பின்பு ஆலோசனை சொல்பவர்களின் கருத்தையும் கேட்காமல் இருந்தால் இதுபோல் அவஸ்தை பட வேண்டியிருக்கும் என்று தனக்கு தெரிந்த நீதியை ராவணனிடம் சொல்லி முடித்தான் கும்பகர்ணன். கும்பகர்ணன் பேசிய பேச்சுக்கள் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணனுக்கு கோபம் வந்தது. தனது கோபத்தை அடக்கிக் கொண்டு கும்பகர்ணனிடம் பேச ஆரம்பித்தான்.

ராமர் லட்சுமணர்களை முதலில் அழித்திருக்க வேண்டும் என்ற உனது வாதம் சரியானது தான் ஆனால் இப்போது காலம் தாண்டிவிட்டது. இப்போது இதைப்பற்றி பேசிப் பயனில்லை. நடந்து போன எனது தவறுகளினால் இப்போது இந்த சங்கடமான சூழ்நிலை அமைந்துவிட்டது. என் மீது நீ வைத்திருக்கும் பிரியம் உண்மையாக இருந்தால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு தைரியம் சொல்லி உனது வல்லமை முழுவதையும் உபயோகித்து எனக்காக யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து என்னை காப்பாற்று என்று ராவணன் கும்பகர்ணனிடம் கேட்டுக் கொண்டான். இதற்கு கும்பகர்ணன் நீங்கள் கவலைப்பட்டது போதும். என்னை யாராலும் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும். உங்களுக்கு பயத்தை உண்டாக்கி இருக்கும் எதிரிகளை அழித்து விட்டு வருகிறேன் என்று கும்பகர்ணன் யுத்தகளத்தை நோக்கிச் சென்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.