சுலோகம் -120

பகவத் கீதை 3. கர்ம யோகம் முன்னுரை

சாங்கிய யோகத்தில் கர்மங்களை ஒரு கடமையாகவே செய்ய வேண்டும் என்றும் ஐம்புலன்களையும் அடக்கினால் மன உறுதி பெற்று யோக நிலையில் பரமானந்த நிலையை பெறலாம் என்றும் கிருஷ்ணர் கூறினார். ஆனால் இதன் வழியாக மோட்சத்தை அடையலாம் என்று கிருஷ்ணர் எங்கும் சொல்லவில்லை. அப்படி என்றால் அனைத்தையும் துறந்த ஞானிகளுக்கு மட்டுமே மோட்சம் கிடைக்குமா? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மோட்சம் கிடைக்காதா? என்று அர்ஜூனனுக்கு சிறிது குழப்பம் உண்டானது. ஆகையால் கர்ம யோகத்தைப் பற்றி அர்ஜூனன் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் பதில் சொல்கிறார்.

இதில் விதிக்கப்பட்ட கர்மங்களை எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? செய்தால் என்ன நன்மை? செய்யா விட்டால் என்ன தீமை? கர்மம் எவ்வாறு பந்தத்தை ஏற்படுத்தும்? அது எப்படி முக்தியை அளிக்கும்? போன்ற பல கேள்விகளுக்கும் கர்ம யோகம் பற்றிய பல கேள்விகளுக்கும் இந்த அத்தியாயத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லப்படுகிறது.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-1

சுலோகம் -120

ஜனார்த்தனா உனது கருத்தின்படி கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது என்றாகிறது. இவ்வாறு இருக்கும் போது இத்தகைய கொடிய யுத்ததில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வளவு நேரம் நீ எனக்கு உபதேசித்ததை சிந்தித்துப் பார்த்தால் உலகப் பற்றுகளில் இருந்து ஐம் புலன்களையும் விலக்கி ஐம்புலன்களையும் அடக்கி மனதை உறுதியுடன் வைத்திருந்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை பெற்று முக்தி பெறலாம் என்று சொல்கிறாய். அப்படி என்றால் நான் முக்தி அடையவதற்கு நீ ஞானம் பெறுவதற்கான வழியை தானே உபதேசிக்க வேண்டும் அதை விட்டு விட்டு இந்த கொடுமையான யுத்தத்தில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.