ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி -3

ராமர் சரபங்க முனிவரின் ஆசிரமத்திற்கு வரும் முன்னதாகவே இந்திரன் தனது தேவகணங்களுடன் வந்து சரபங்க முனிவருடன் பேசிக்கொண்டிருந்தான். ராமர் ஆசிரமத்திற்குள் நுழைவதை அறிந்த இந்திரன் தன் பேச்சை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான். சரபங்க மகரிஷியின் பாதங்களில் விழுந்து ராமர் சீதை லட்சுமணன் மூவரும் வணங்கி வழிபாடு செய்தார்கள். மூவரையும் பார்த்து மகிழ்ந்த சரபங்க மகரிஷி ராமா உங்களை பார்ப்பதில் பேரானந்தம் அடைகின்றேன். உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் ராமா. என்னுடைய உலக வாழ்க்கை வினைகள் எல்லாம் முடிந்து மேலுலகம் செல்லும் காலம் வந்து விட்டது. என்னை மேலுலகம் அழைத்துச் செல்ல சிறிது நேரத்திற்கு முன்பு இந்திரன் வந்திருந்தான். உன்னை காணாமல் மேலுலகம் செல்ல விரும்பவில்லை எனவே இந்திரனிடம் ராமனை காண ஆவலாய் இருக்கின்றேன் ராமரை கண்ட பின்பு வருகிறேன். சிறிது நேரம் காத்திருக்குமாறு இந்திரனிடம் கூறினேன். ராமரை நான் இன்னும் சந்திப்பதற்கான காலம் வரவில்லை. தற்போது ராமரை காண காத்திருப்பது சரியாக இருக்காது என்று நான் மேலுலகம் செல்ல உடலை விடும் வழிகளை சொல்லி விட்டு இந்திரன் சென்று விட்டான். நீ மண்ணுலகில் நிறைவேற்றுவதற்கான அரிய பெரிய செயல்களை செய்து முடித்த பின்பு இந்திரனே உன்னை வந்து சந்திப்பான். பகவானே இப்போது என்னுடைய புண்ணிய பலன்கள் எல்லாம் உங்களிடம் தந்தேன் பெற்றுக்கொள்ளுங்கள் சரபங்க முனிவர்.

ராமர் சரபங்க முனிவரிடம் நான் சத்ரிய குலத்தில் பிறந்தவன். என்னுடைய குல தர்மப்படி என்னிடம் கேட்பவர்களிடம் நான் தான் கொடுக்க வேண்டும். யாரிடமும் எதுவும் பெற்றுக்கொள்ள கூடாது. தாங்கள் குறிப்பிட்ட நல் புண்ணியங்களை நல் கார்மாக்கள் செய்து என்னால் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே தாங்கள் கொடுக்கும் புண்ய பலன்களை என்னால் பெற்றுக்கொள்ள இயலாது. நாடு நகரம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தபஸ்வியாய் காட்டில் வாழ வந்திருக்கின்றேன். இக்காட்டில் வசிக்க எங்களுக்கு ஒரு நல்ல இடத்தை தேர்ந்தேடுத்து சொல்லுங்கள் என்றார்.

இக்காட்டில் சுதீட்சணர் என்ற ரிஷி இருக்கிறார். அவர் முக்காலமும் அறிந்தவர். இந்த மந்தாகினி நதியின் எதிர் திசையில் இருக்கும் புனிதமான இடத்தில் அவர் தவம் செய்து கொண்டிருக்கின்றார். அவரிடம் சென்று இந்த வனத்தில் எங்கே வசிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள். உன்னை சந்தித்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் உன்னை சந்திக்கும் என்னுடைய ஆசை தீர்ந்தது. சிறிது நேரம் இங்கே இருப்பாயாக. நான் மேலுலகம் செல்லும் நேரம் வந்து விட்டது என்று சொல்லி பெரிய நெருப்பை வளர்த்து அதனுள் நுழைந்தார் சரபங்க முனிவர். நெருப்பில் இருந்து ஒரு திவ்யமான ஒளி உருவமாக தோன்றி பிரம்பலோகத்தை அடைந்தார் சரபங்க முனிவர்.

விராதன் ராட்சசன் ராமரால் கொல்லப்பட்டதை அறிந்த காட்டிலிருக்கும் முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமரை காண அனைவரும் முடிவு செய்து ராமரை காண கூட்டமாக புறப்பட்டார்கள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி -2

ராமர் ராட்சசனிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த ராஜ குமாரர்கள். இப்பெண் சீதை என் மனைவி. நாங்கள் வனவாசம் செய்ய இக்காட்டிற்குள் வந்திருக்கின்றோம். அப்பெண்ணை விட்டுவிடு இல்லையென்றால் இப்போதே என் அம்பு உன் உடலை துளைக்கும் என்றார். ராட்சசன் சிரித்தான். எனது தந்தை பெயர் ஜயன். தாயார் பெயர் சதஹ்ரதை என்னை அனைவரும் விராதன் என்று அழைப்பார்கள். ஆயுதத்துடன் இருக்கும் சத்ரியர்களே உங்கள் ஆயுதங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆயுதங்களால் என் உயிர் போகாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கின்றேன். இப்பெண்ணை விட்டு ஒடிவிடுங்கள். இல்லை என்றால் உங்களை கொன்று இப்பெண்ணை கொண்டு செல்வேன் என்றான் ராட்சசன்.

ராமர் நீ எமனிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறி தன்னுடைய அம்பை ராட்சசன் மீது விட்டார். அம்பு ராட்சசனின் உடலை துளைத்துக் கொண்டு ரத்தத்துடன் வெளியே வந்து விழுந்தது. ராட்சசன் அப்படியே நின்று கொண்டிருந்தான். கோபத்துடன் சீதையை இறக்கிவிட்டு தன்னுடைய சூலத்தை லட்சுமணன் மீது வீச முயன்றான். ராமர் லட்சுமணன் இருவரும் ராட்சசன் மீது அம்பு மழை பொழிந்தார்கள். அம்புகள் அனைத்தும் ராட்சசனின் உடலில் பாய்ந்தது. பெரிய முள்ளம் பன்றி போல் நின்ற ராட்சசன் சிரித்தான். உடலை ஒரு சிலுப்புச் சிலுப்பினான். உடலில் இருந்த அம்புகள் அனைத்தும் கீழே விழுந்தது. ராம லட்சுமணர்களை சூலத்தை வைத்து தாக்க முயற்சித்தான் ராட்சசன். ராமரின் ஒரு அம்பு சூலத்தை இரண்டாக உடைத்தது. ராமரும் லட்சுமணனும் கத்தியை எடுத்துக்கொண்டு அவனை தாக்க ஆரம்பித்தார்கள். ராட்சசன் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு இருவரையும் இரு கைகளால் தூக்கிக்கொண்டு காட்டிற்குள் ஓட ஆரம்பித்தான்.

அடர்ந்த காட்டிற்குள் ராமரும் லட்சுமணனும் கண்ணில் இருந்து மறைந்ததை பார்த்த சீதை அழ ஆரம்பித்தாள். ராட்சசனின் கைகளில் இருந்த இருவரும் அவனது இரு கைகளையும் உடைத்து பிய்த்து எரிந்தார்கள். ராட்சசன் கீழே விழ்ந்தான். ஆயுதங்களால் இவனுக்கு மரணமில்லை என்பதை அறிந்து தன் கரங்களாலும் காலால் மிதித்தும் ராட்சசனை கசக்கினார்கள். ராமரும் லட்சுமணனும் ராட்சசனின் உடலை எவ்வளவு கசக்கினாலும் பிரம்மாவின் வரத்தால் ராட்சசன் உயிர் போகவில்லை. ஆனால் வலியினால் ராட்சசன் கதற ஆரம்பித்தான். ராமர் தனது காலை ராட்சசன் மார்பின் மீது மிதித்தார். அப்போது ராட்சசன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். பகவானே உங்கள் பாதம் என் மீது பட்டதும் எனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து விட்டது. நான் ஒரு கந்தர்வன் மேலுலகம் செல்ல நான் பெற்ற வரமும் சாபமும் எனக்கு தடையாய் இருக்கிறது. என் உயிரை எப்படியாவது தாங்கள் எடுத்துவிட்டால் நான் மேலுலகம் சென்றுவிடுவேன் என்றான். ராமரும் லட்சுமணனும் ஆயுதங்கள் ஏதும் இன்றி ராட்சசன் உடலை தனி தனியாக பிய்த்து ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோண்டி அதில் போட்டு முடிவிட்டனர். ராட்சசனும் கந்தர்வ உருவம் பெற்று ராமரை வணங்கி மேலுலகம் சென்றான். ராமரும் லட்சுமணனும் சீதை இருக்கும் இடம் சென்று நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அவளுக்கு தைரியம் சொன்னார்கள். அங்கிருந்து கிளம்பி மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் சென்றார்கள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி -1

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அடர்ந்த தண்டகாரண்ய காட்டிற்குள் சென்றனர். சீதை அங்கே இருந்த அழகிய மலர்களை பார்த்து மகிழ்ந்து கொண்டே நடந்தாள். சிறிது தூரத்தில் வேத மந்திரங்கள் கேட்டது. சத்தம் வரும் திசை நோக்கி சென்றார்கள். அங்கே மிருகங்களும் பறவைகளும் ஒற்றுமையுடன் பயமின்றி சுற்றிக்கொண்டிருந்தன. அங்குள்ள ரிஷிகள் ராமரைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்று உபசரித்தனர். ராமர் அன்று இரவு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். உபசாரங்கள் அனைத்தும் முடிந்ததும் ராமரிடம் விண்ணப்பம் ஒன்று செய்தார்கள். தாங்கள் தர்மத்தை காப்பற்றுகின்றவர். கீர்த்தி மிக வாய்க்கப்பெற்றவர். நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் தாங்களே அரசர். இக்காட்டில் எங்களை துன்புறுத்தும் கொடிய அரக்கர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ராமர் ரிஷிகளிடம் நீங்கள் மிகப்பெரும் தபஸ்விகள். உங்கள் தவத்தின் சக்தி அளவிட முடியாதது. சாபத்தை இட்டு அரக்கர்களை அழித்துவிடலாமே என்றார். இதனைக்கேட்ட ரிஷிகள் நாங்கள் கோபத்தை வென்று விட்டவர்கள். புலன்களை வென்றவர்கள். எங்களுக்கு கோபம் வராது. நாங்கள் சாபமிட்டால் எங்களின் தவவலிமை குன்றிவிடும். தவம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ராமர் அன்று இரவு அங்கே தங்கினார்.

அதிகாலை ரிஷிகளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அடர்ந்த காட்டிற்குள் சென்றார்கள். காட்டிற்குள் பெரிய மலை போன்ற ரட்சசன் ஒருவன் மூவரின் முன்னே வந்து நின்றான். அவன் வடிவம் கோரமாக இருந்தது. கையில் ஒரு சூலாயுதம் இருந்தது. அதில் அப்போது தான் கொல்லப்பட்ட சிங்கத்தின் தலையும் யானையின் தலையும் தொங்கிக்கொண்டு இருந்தது. இடி இடித்தாற் போல் கர்ஜனை செய்தான். நான் விராதன் அரக்கன். யாரும் உள்ளே வர முடியாத காட்டிற்குள் இருக்கும் ரிஷிகளை கொன்று தின்று சுற்றிதிரிவேன். இன்று உங்களையும் இப்போதே கொன்று சாப்பிடப்போகின்றேன். நீங்கள் பார்க்க பாலகர்கள் போலிருக்கின்றீர்கள். முனிவரைப் போல் உடை உடுத்தி இருக்கின்றீர்கள். கையில் ஆயுதம் வைத்திருக்கின்றீர்கள். உடன் ஒர் பெண்ணும் இருக்கிறாள். முனிவர்களைப் போல் வேடம் போட்டு ஏமாற்றி தப்பி விடலாம் என்று நினைத்தீர்களா? ரிஷிகளை தின்று உயிர் வாழும் எனக்கு இப்பெண் இனி மனைவியாக இருப்பாள். உங்களை இப்போதே கொன்று தின்று விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே சீதையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டான்.

சீதை ரட்சசனின் கையில் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். சீதை நடுங்குவதை பார்த்த ராமர் எந்த விதத்தில் ராட்சசனை எதிர்ப்பது என்று தோன்றாமல் சில வினாடிகள் தன் அமைதியை இழந்தார். பார் லட்சுமணா சீதையை எதையும் பொறுக்கும் என்னால் இதனைக் கண்டு பொறுக்க முடியவில்லை. இதைக்காணத் தான் கைகேயி நம்மை இங்கே அனுப்பினாளா என்று மனம் கலங்கி பேசினார். ராமர் தைரியமும் அமைதியும் இழந்து பேசியதை கண்ட லட்சுமணன் குழப்பமடையாமல் பேசினான். நீங்கள் இந்திரனுடைய பலம் பெற்றவர். உங்களுடன் நானும் இருக்கிறேன். ஏன் இப்படி பேசுகின்றீர்கள். அயோத்தியில் என் கோபத்தை அடக்கினீர்கள். இப்போது பாருங்கள் அந்த கோபம் அனைத்தையும் இந்த ராட்சசன் மீது காட்டி இவனை கொன்று என் கோபத்தை தணித்துக்கொள்கிறேன் என்றான். உடனே ராமர் தெளிந்தார். முகத்தில் அமைதியுடன் வீரம் ஜொலித்தது. ராமரும் லட்சுமணனும் அம்பில் வில்லை பூட்டி ராட்சசனுக்கு குறி வைத்தார்கள்.