ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 40

ராமரிடம் வந்த லட்சுமணன் அவரை வணங்கி நின்றான். தேவலோகத்தில் இந்திரனை வெற்றி பெற்றவனும் யாராலும் வெற்றி பெற முடியாத இந்திரஜித்தை அழித்து விட்டாய் உனது காரியத்தால் விரைவில் சீதையை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது என்று லட்சுமணனை கட்டி அணைத்து பாராட்டினார் ராமர். இந்திரஜித் லட்சுமணனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனிடம் தெரிவித்தார்கள். இதனை ராவணன் நம்பாமல் இந்திரஜித் இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு இந்திரஜித்தின் உயிரற்ற உடலை பார்த்ததும் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தான் ராவணன். சுற்றி இருந்ந ராட்சசர்கள் என்ற செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றார்கள். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன் புத்திர சோகத்தில் புலம்பினான். பின்பு கோபத்தில் எழுந்த ராவணன் அனைத்திற்கும் காரணமானவள் இந்த சீதை இவளால் தான் இவை அனைத்தும் நடந்தது. அவளை இப்போதே கொன்று விடுகிறேன் என்று தனது கத்தியை எடுத்துக் கொண்டு அசோகவனத்திற்கு சென்றான் ராவணன்.

ராமரின் சிந்தனையில் இருந்த சீதை தன்னை நோக்கி ராவணன் கத்தியுடன் கோபமாக வருவதை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ராவணனின் மகன்கள் இல்லையென்றால் தம்பிகள் யாராவது ராம லட்சுமணர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை யூகித்த சீதை தன்னை கொன்று விடப்போகிறானோ என்று சந்தேகத்துடன் நின்றாள். அப்போது அங்கு வந்து சேர்ந்த ராவணனின் ஆலோசகனும் அமைச்சருமான சுபார்ச்வன் ராவணனை தடுத்தான். வேதத்தை ஓதி சகல வித்தைகளையும் கற்று உலகத்தையையே வென்ற உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. இவ்வளவு வலிமை வாய்ந்த நீங்கள் ஒரு மானிடப் பெண்ணை கொன்று அதனால் எற்படும் தோஷத்தையும் அவமானத்தையும் பெற்றுக் கொள்ளாதீர்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்களது கோபத்தை ராமரின் மீது காண்பியுங்கள். இன்று இரவு தாண்டியதும் நாளை அமாவாசை ஆரம்பிக்கிறது. நமக்கு உகந்த நாள். இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள். பிரம்மா உங்களுக்கு கொடுத்த கவசத்தை இது வரை நீங்கள் உபயோகித்ததில்லை. நாளை அதனை உபயோகித்து யுத்தத்திற்கு சென்று உங்களது கோபத்தை ராம லட்சுமணர்களின் மீது காண்பியுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் பிரம்மாவின் கவசத்தை மீறி அவர்களின் அம்பு உங்கள் உடலை துளைக்காது. உங்கள் வலிமையை உபயோகித்து அவர்களை அழித்து விடுங்கள். உங்களது புகழ் மேலும் பெருகும். உங்களுக்கு சீதை கிடைத்து விடுவாள் என்று சுபார்ச்வன் யோசனை தெரிவித்தான். ராவணன் சிறிது நேரம் யோசித்து நீங்கள் சொல்வது சரியான யோசனை என்று தனது சேனைத் தலைவர்களை அழைத்தான். நாளை அமாவசை ஆரம்பித்ததும் நான் யுத்தத்திற்கு வருகிறேன். அது வரையில் நீங்கள் இருக்கும் அனைத்து படைகளையும் அழைத்துக் கொண்டு யுத்த களத்திற்கு செல்லுங்கள். ராமரையும் லட்சுமணனையும் நான்கு புறமும் சுற்றி நின்று ஆயுதங்களை அவர்கள் மீது எரிந்து யுத்தம் செய்யுங்கள். நான்கு புறமும் உங்களுடன் யுத்தம் செய்த களைப்பில் ராமர் இருக்கும் போது நான் வந்து ராமரையும் லட்சுமணனையும் அழித்து விடுகிறேன் கிளம்புங்கள் என்று உத்தரவிட்டான். ராவணனின் உத்தரவுப்படி அனைத்து ராட்சச வீரர்களும் யுத்த களத்திற்கு புறப்பட்டார்கள்.

ராமரையும் லட்சுமணனையும் சுற்றி நின்று தாக்கிய ராட்சச படைகளின் மீது ராமரும் லட்சுமணனும் அம்பு மழை பொழிந்து கொன்று குவித்தார்கள். மழை போல் வந்த அம்புகளுக்கு நடுவில் ராமரை ராட்சசர்களால் காண இயலவில்லை. ராட்சசர்கள் தங்களுடன் வந்தவர்கள் ராமரின் அம்புகளால் இறப்பதை பார்த்து பயத்தில் கலங்கி நின்றார்கள். ராவணன் உத்தரவுப்படி ஒரு நாள் தாக்குப்படிக்க முடியாது என்று உணர்ந்த மீதியிருந்த ராட்சசர்கள் இலங்கை நகரத்திற்குள் சிதறி ஓடினார்கள். இலங்கை நகரத்திற்குள் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் அழுகை சத்தம் கேட்ட வண்ணமாக இருந்தது. ராவணனின் அகங்காரத்தினால் அனைவரும் இறந்து விட்டார்களே என்று ராவணனை துற்றியபடி ராட்சச பெண்கள் ஒருவருக்கு வருவர் கூக்குரலிட்டு அழுது புலம்பினார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 39

ராமரிடம் வந்த விபீஷணன் கலங்காதீர்கள் நடந்தவற்றை இப்போது தான் அறிந்து உடனடியாக இங்கு வந்தேன். ராவணன் சீதைக்கு விதித்த ஒரு வருடம் முடிய இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. அது வரை சீதையை கொல்ல யாரையும் ராவணன் அனுமதிக்க மாட்டான். நீங்கள் கண்டது அனைத்தும் உண்மை இல்லை. சீதை போன்ற ஒரு உருவத்தை இந்திரஜித் மாயத்தால் உருவாக்கி உங்களை குழப்பியிருக்கிறான். மயக்கத்தில் இருக்கும் லட்சுமணனும் சிறிது நேரத்தில் எழுந்து விடுவான். எதற்கும் கலங்காத தாங்கள் இப்போது உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தை விட்டு மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நம்மால் யோசித்து செயல்பட முடியும் என்றான்.

ராமர் விபீஷணனிடம் சீதையை நான் எனது கண்களால் கண்டேன். எனது கண் முன்னே இந்திரஜித் சீதையை கொன்றான் என்றார். அதற்கு விபீஷணன் நிகும்பலை என்ற இடத்தில் ஒரு குகைக்குள் இந்திரஜித் பெரிய வேள்வி ஒன்றை செய்ய ஆரம்பித்திருக்கிறான் என்று என்னுடைய ஒற்றர்கள் தெரிவித்தார்கள். இந்த வேள்வியை இந்திரஜித் செய்து முடித்து விட்டால் அவன் மிகவும் வலிமை பெற்று பல வரங்களையும் பெற்று விடுவான். அதன் பிறகு அவனை நம்மால் எளிதில் வெற்றி பெற முடியாது. அந்த வேள்வியை நாம் தடுத்து நிறுத்தி விடுவோம் என்று பயந்து நம்மை திசை திருப்பவே இந்திரஜித் சீதை போல் ஒரு உருவத்தை மாயமாக செய்து நாடகமாடி இருக்கிறான். இந்த வேள்வியை தடுக்கும் முயற்சியை நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டும். நிகும்பலையில் இந்திரஜித் வேள்வி செய்யும் குகையை யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறான். ஆனால் அவன் வேள்வி செய்யும் குகை எனக்கு தெரியும். லட்சுமணனையும் அனுமனையும் இப்போது அங்கு அனுப்பி வையுங்கள். இந்திரஜித்தை லட்சுமணன் எதிர்த்து வெற்றி பெறுவான். இந்திரஜித்துக்கு காவலாக இருக்கும் ராட்சசர்களை அனுமன் எதிர்த்து வெற்றி பெறுவார். அதன் பிறகு இலங்கைக்குள் ராவணன் மட்டுமே இருப்பான். அவனையும் அழித்து விட்டால் சீதையை நீங்கள் அடைந்து விடலாம் என்று சொல்லி முடித்தான் விபீஷணன். சுக்ரீவன் லட்சுமணனுக்கு மூலிகை வைத்தியம் செய்து விழிக்கச் செய்தான். விழித்த லட்சுமணன் விபீஷணன் கூறிய அனைத்தையும் ராமரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டான். இந்திரஜித்தை எதிர்த்து யுத்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராமரிடம் கேட்டுக் கொண்டான்.

ராமர் விபீஷணனின் பேச்சில் உண்மை இருப்பதை அறிந்து தெளிவடைந்தார். உடனடியாக லட்சுமணனுக்கு அனுமதி கொடுத்து அவனுடன் அனுமனையும் சில வானர படைகளையும் அனுப்பி வைத்தார். அனைவரும் இந்திரஜித் வேள்வி செய்த குகைக்கு அருகே சென்று சேர்ந்தனர். குகைக்கு வெளியே காவல் காத்த ராட்சசர்களுக்கும் வானர வீரர்களுக்கும் யுத்தம் நடந்தது. லட்சுமணனும் அனுமனும் வானர வீரர்களை கொன்று குவித்தார்கள். லட்சுமணனும் வானர வீரர்களும் ராட்சசர்களை கொன்று குவிப்பதை சில ராட்சசர்கள் இந்திரஜித்திடம் சென்று கூறினார்கள். இதனால் கோபம் கொண்ட இந்திரஜித் வேள்வியை தொடர்ந்து செய்யாமல் பாதியிலேயே விட்டு விட்டு அவர்களுடன் யுத்தம் செய்வதற்காக குகையை விட்டு வெளியே வந்தான். லட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சரிசமமாக யுத்தம் செய்து தங்கள் வலிமையை காண்பித்தார்கள். இறுதியில் லட்சுமணன் இந்திராஸ்திரத்தை எடுத்து ராமர் தர்மத்தை கடைபிடிப்பது உண்மையானால் இந்த அம்பு இந்திரஜித்தை அழிக்கட்டும் என்று சொல்லி அம்பை செலுத்தினான். அம்பு இந்திரஜித்தின் கழுத்தைத் துளைத்து தலையை துண்டாக்கி அவனது உயிரைப் பிரித்தது. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மலர் தூவி லட்சுமணனை பாராட்டினார்கள். இந்திரஜித் கொல்லப்பட்டதும் அங்கிருந்த ராட்சசர்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். லட்சுமணன் காயத்துடன் யுத்தம் செய்த களைப்பில் அனுமன் மீது சாய்ந்து நின்றான். விபீஷணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து லட்சுமணனை பாராட்டினான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 38

ராமர் சீதையை கண்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார். லட்சுமணனும் வானர வீரர்களும் இந்திரஜித்தை எப்படி தாக்குவது என்று புரியாமல் நின்றனர். இந்த சூழ்நிலையை தனக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொண்ட இந்திரஜித் வானரங்களை கொன்று குவித்தான். இதனை கண்ட வானர படைகள் மாயையால் உருவாக்கப்பட்டவள் இந்த சீதை என்று தெரியாமல் பெரிய பாறைகளை அவளின் மீது படாதவாறு இந்திரஜித்தின் மீது தூக்கி எறிந்தார்கள். இதனால் கோபமடைந்த இந்திரஜித் மாயையால் உருவாக்கப்பட்ட சீதையின் தலை முடியை பிடித்து அவளை தாக்கத் தொடங்கினான். இதனைக் கண்ட அனுமனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மாயையால் உருவாக்கப்பட்ட சீதையின் கதறலை பொறுக்க முடியாமல் இந்திரஜித்திடம் பேச ஆரம்பித்தார். மகாபாவியே பிரும்ம ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் நீ. பெண்ணை துன்புறுத்துகிறாயே நீயும் ஓர் ஆண் மகன் தானா? சாபத்தின் காரணமாக ராட்சச குலத்தில் பிறந்ததினால் ராட்சசர்களின் குணத்தை பெற்றுவிட்டாய். அதற்கும் ஓர் எல்லை உண்டு. உனது செயல்கள் எல்லை மீறிப் போகிறது. உன் தந்தை செய்த தவறால் இந்த இலங்கை நகரம் இப்போது இந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அது போல் நீயும் பெரிய தவறைச் செய்கிறாய். இதன் பலனாக மூன்று உலகங்களில் நீ எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் நீ தப்பிக்க மாட்டாய். உனக்கான அழிவை நீயே தேடிக் கொள்கிறாய் என்றார். அதற்கு இந்திரஜித் பெண்களை துன்புறுத்தக் கூடாது என்று சொல்கிறாயே அது உண்மை தான் ஆனால் யுத்த நியதிப்படி எதிரிக்கு பெரும் துன்பத்தை கொடுக்க என்ன காரியம் வேண்டுமானாலும் செய்யலாம். அதையே இப்போது செய்கிறேன். சீதையை துன்புறுத்துவதற்கே இப்படி பேசுகிறாயே இப்போது இவளை கொல்லப் போகிறேன். இதன் பிறகு சுக்ரீவனையும் உன்னையும் விபீஷணனையும் கொல்வேன். நீங்கள் இத்தனை காலம் யுத்தம் செய்து சிரமப் பட்டதெல்லாம் வீணாகப் போகிறது என்று தனது கத்தியை எடுத்து மாயையால் உருவாக்கப்பட்ட சீதையை கொன்றான் இந்திரஜித். அனுமன் அதிர்ச்சி அடைந்தார்.

ராமர் சீதை கத்தியால் கொல்லப்படுவதை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றார். இந்த சமயத்தைப் பயன் படுத்திய இந்திரஜித் ஒரு அம்பை ராமரின் மீது எய்தான். இதனைக் கண்ட லட்சுமணன் ராமரின் முன்பு நின்று அந்த அம்பை தன் உடம்பில் ஏற்றுக் கொண்டு மயங்கி விழுந்தான். சீதை இறந்து விட்டாள். இன்னொரு பக்கம் லட்சுமணன் தனக்கு வந்த அம்பை ஏற்று மயங்கி கிடக்கின்றான். என்ன செய்வது என்று தெரியாமல் ராமர் மயக்க நிலையில் சிலை போல் நின்றார். லட்சுமணனை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திரஜித் நீங்கள் இத்தனை நாட்கள் செய்த யுத்தம் அனைத்தும் வீணாகப் போயிற்று என்று ஆனந்தக் கூத்தாடி இலங்கை நகரத்திற்குள் நுழைந்தான். சுக்ரீவன் உட்பட வானர தலைவர்கள் அனைவரும் ராமருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் ராமரை சுற்றி நின்று கொண்டிருந்தனர். இந்திரஜித் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று அனுமன் சிந்திக்க ஆரம்பித்தார்.

ராமரையும் லட்சுமணனையும் அழிக்க பெரிய வேள்வியை செய்து அதன் வழியாக வரத்தையும் வலிமையையும் பெற இந்திரஜித் திட்டமிட்டிருந்தான். வேள்வியை செய்யும் போது ராம லட்சுமணர்கள் இடையில் வந்து வேள்வியை தடுத்து விட்டால் என்ன செய்வது என்று சிந்தித்து ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி அவர்களை செயல்பட விடாமல் தடுக்க மாயையால் சீதை போன்ற உருவத்தை உருவாக்கி அவளைக் கொன்றால் அனைவரும் துக்கத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். அப்போது வேள்வியை செய்து முடித்து விடலாம் என்று திட்டம் தீட்டி இருந்தான் இந்திரஜித். அத்திட்டத்தின் படி இப்போது பாதி திட்டத்தை நிறைவேற்றி விட்டான். திட்டத்தின் மீதியை செயல்படுத்த ஆரம்பித்தான் இந்திரஜித். மலையின் குகைக்குள் பெரிய வேள்வியை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தான் இந்திரஜித். அனைத்து செய்தியையும் அறிந்த ராவணன் ராமரை எதிர்க்க தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திரஜித்தை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 37

ராமர் வானர படைகளுக்கு எச்சரிக்கை செய்தார். இலங்கை நகரம் எரிந்து கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் ராட்சசர்களின் பெரும் படை வருகிறது. மாயங்கள் செய்து எந்த திசையிலிருந்தும் ராட்சசர்கள் தாக்குவர்கள். அனைவரும் நான்கு திசைகளிலும் பார்த்து யுத்தம் செய்யுங்கள் என்றார். யுத்தம் ஆரம்பித்து. கும்பனை சுக்ரீவன் அழித்தான். நிகும்பனை அனுமன் அழித்தார். கும்பன் நிகும்பனுக்கு பாதுகாப்புக்காக வந்த ராட்சசர்கள் அனைவரையும் ராமர் அழித்தார். யுத்தத்திற்கு சென்ற ராட்சசர்கள் அனைவரும் அழிந்தார்கள் என்ற செய்தியை கேட்ட ராவணன் இந்திரஜித்தை அழைத்து அவனிடம் பேச ஆரம்பித்தான். இது வரை யுத்தத்திற்கு சென்றவர்களில் கும்பகர்ணன் உட்பட யாராலும் வெல்ல முடியாத வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள். நீ மட்டும் தான் இரண்டு முறை வெற்றி பெற்று திரும்பி வந்திருக்கிறாய். இது உனது பராக்கிரமத்தை காட்டுகிறது. உனது அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட ராம லட்சுமணர்கள் எப்படி பிழைத்தார்கள் என்று தெரியவில்லை. இப்போது மீண்டும் யுத்த களத்திற்கு சென்று வானரங்களை அழித்து ராம லட்சுமணர்களை வென்று வா என்று உத்தரவிட்டான் ராவணன். இந்திரஜித் தான் தவம் செய்து பிரம்மாவிடம் பெற்ற அஸ்திரங்களை ராமரின் மீதும் லட்சுமணனின் மீதும் ஏற்கனவே உபயோகப்படுத்தி விட்டதால் இப்போது யுத்தம் செய்வதற்கு மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தான். அதன்படி பெரிய யாகங்கள் செய்து தனது வலிமையை அதிகரித்துக் கொண்ட இந்திரஜித் யுத்தகளத்திற்குள் நுழைந்தான்.

ராமர் இந்திரஜித் வருவதை பார்த்து தனது அம்பை அவனை நோக்கி அனுப்பினார். ராமரின் அம்பு தன்னை தாக்க வருவதை அறிந்து கொண்ட இந்திரஜித் மாயங்கள் செய்து வானத்தையும் பூமியையும் பனி மூட்டத்தால் மறைத்து தன்னையும் மறைத்துக் கொண்டான். ராமரின் மீதும் லட்சுமணனின் மீதும் மறைந்திருந்து அம்பு மழை பொழிந்தான். ராம லட்சுமணர்களை அம்புகள் தாக்கி அவர்களின் உடலில் இருந்து ரத்தம் வரத்தொடங்கியது. இதனால் கோபம் கொண்ட லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். இந்திரஜித் மறைந்திருந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறான். எங்கு இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு அனுமதி கொடுங்கள். என்னிடம் உள்ள பிரம்மாஸ்திரத்தை வைத்து ராட்சசர்கள் அனைவரையும் மொத்தமாக அழித்து விடுகிறேன் என்றான். அதற்கு ராமர் பல ராட்சசர்கள் நம்முடைய வானர படைகளின் தாக்குதலை தாங்க முடியாமல் பயந்து ஓடுகின்றனர். சிலர் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். பலர் நம்மை சரணடைந்து யுத்தம் செய்யாமல் ஒதுங்கி நிற்கின்றனர். இந்திரஜித் ஒருவனை தாக்குவதற்காக இவர்கள் அனைவரையும் பிரம்மாஸ்திரத்தினால் தாக்குவது யுத்த தர்மத்திற்கு எதிரானது எனவே வேண்டாம். இந்திரஜித்தையும் நம்மை எதிர்க்கும் ராட்சசர்களை மட்டும் அழிப்பதில் நமது கவனத்தை செலுத்துவோம். இந்திரஜித் நம்மை நோக்கி அனுப்பும் அம்புகள் எந்த திசையிலிருந்து வருகிறது என்று நன்றாக பார்த்து அந்த திசை நோக்கி நமது அம்புகளை அனுப்புவோம். இந்திரஜித் கண்ணுக்கு தெரியாமல் எங்கு மறைந்திருந்தாலும் அவனை தாக்கும் மந்திர அஸ்திரங்களை அனுப்புகிறேன். அவன் எங்கு ஒடி ஒளிந்தாலும் என்னுடைய அஸ்திரம் அவனை தாக்கி நம் முன்னே கொண்டு வந்து சேர்த்து விடும் என்றார்.

ராமர் தனது அஸ்திரங்களை உபயோகிக்க ஆரம்பிக்கப் போகிறார் இதில் நாம் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்ந்த இந்திரஜித் இலங்கை நகரத்திற்குள் ஒடினான். அதனால் அவனுடைய ராட்சச படைகளும் இலங்கை நகருக்குள் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து பறக்கும் தனது தேரில் யுத்த களத்தின் மேலாக வானத்தில் பறந்து வந்த இந்திரஜித் மாயத்தினால் சீதையின் உருவத்தை செய்து தனக்கு முன்பாக நிறுத்தி யாரும் தன்னை தாக்காதவாறு பாதுகாப்புடன் நின்று ராம லட்சுமணர்களை தாக்கத் தொடங்கினான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 36

ராமர் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். அனுமனே இந்த மலையில் இருக்கும் மூலிகைகள் அனைத்தும் அங்கிருக்கும் குளிர்ந்த சூழ்நிலையில் உயிர் வாழும் தன்மையுடையது. இங்கிருக்கும் வெப்ப சூழ்நிலையில் சில நாட்களில் வாடி விடும். அப்படி இந்த மூலிகைகள் வாடி இறந்தால் அதற்கு நாம் காரணமாகி விடுவோம். அப்படி நடந்தால் நாம் இயற்கைக்கு எதிராக செயல்பட்டது போலாகிவிடும். ஆகையால் இந்த மூலிகை மலையை எங்கிருந்து எடுத்து வந்தாயோ அங்கேயே வைத்து விட்டு வந்துவிடு என்று உத்தரவிட்டார். அனுமன் ராமரின் கட்டளையே ஏற்று மூலிகை மலையை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு திரும்பினார்.

ராமருடன் சுக்ரீவனும் விபீஷணனும் யுத்தத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பவற்றை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது விபீஷணன் பேச ஆரம்பித்தான். ராவணன் தங்களுடன் யுத்தம் செய்து தோற்று ஓடி விட்டான். கும்பகர்ணன் இறந்து விட்டான். ராவணனுடைய படை தளபதிகளும் பல வலிமையான வீரர்களும் இறந்து விட்டார்கள். இனி ராவணன் உங்களுடன் யுத்தம் செய்ய வர மாட்டான். இந்திரஜித் மட்டும் மாயங்கள் செய்து மறைந்திருந்து வலிமையான அஸ்திரங்களை தங்களின் மேல் உபயோகித்து விட்டு வெற்றி வீரன் போல் திரும்பி சென்றான். ஏற்கனவே உங்கள் மீதும் வானர வீரர்கள் மீதும் இந்திரஜித் பல வலிமையான அஸ்திரங்களை உபயோகித்து வீணடித்து விட்டான். இப்போது அவன் தவ வலிமையும் அஸ்திர வலிமையும் இல்லாமல் இருக்கிறான். ஆகையால் அவனும் யுத்தத்திற்கு வருவானா என்று தெரியாது. ஆகையால் நாம் நகரத்திற்குள் இருக்கும் ராட்சசர்கள் மீது திடீர் தாக்குதல் நடந்தலாம். இதனால் கோபத்தில் ராவணன் யுத்தம் செய்ய வருவான். அவனை வெற்றி பெற்றால் மட்டுமே யுத்தம் நிறைவு பெறும். எனவே இந்த திடீர் தாக்குதலுக்கு அனுமதி கொடுங்கள் என்று விபீஷணன் ராமரிடம் கேட்டுக் கொண்டான்.

ராமர் பலவகையில் யோசனை செய்து திடீர் தாக்குதல் நடத்தும் பொறுப்பை சுக்ரீவனிடம் கொடுத்தார். சூக்ரீவன் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் அனுமன் உட்பட பல வானர வீரர்களை தேர்வு செய்தான். அவர்களிடம் இந்த இரவு நேரத்தில் பெரிய தீப்பந்தங்களுடன் இலங்கை நகரத்திற்குள் நுழைந்து கண்ணில் படும் அனைத்து மாளிகைகளுக்கும் தீ வைத்து விடுங்கள் என்றான். வானர வீரர்கள் தீப்பந்தத்துடன் நகரத்திற்குள் நுழைந்து பார்த்த இடத்தில் எல்லாம் நெருப்பை பற்ற வைத்தார்கள். தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட முத்துக்கள் ரத்தினங்கள் வைரங்கள் சந்தனக் கட்டைகளால் கட்டப்பட்ட மாட மாளிகைகளும் கோபுரங்களும் எரிந்து சாம்பலாயின. இரவு நேரத்தில் வைரம் போன்று ஜொலித்த இலங்கை நகரம் இப்போது சூரியன் எரிவதைப் போல் நெருப்பில் எரிந்தது. ராட்சசர்கள் பலர் நெருப்பில் அலறி ஒட்டம் பிடித்தார்கள். நெருப்பு வைத்தவர்கள் வானரங்கள் என்பதை அறிந்த ராட்சச வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்த ஆயத்தமானார்கள். இதனை கண்ட சூக்ரீவன் மற்ற வானர வீரர்களிடம் நகரத்தை சூழ்ந்து கொள்ளுங்கள். எதிர்த்து வரும் ராட்சச வீரர்களை கொன்று குவியுங்கள் என்று கட்டளையிட்டான். மூலிகை வாசத்தில் உடல் வலிமையும் புத்துணர்ச்சியும் பெற்ற வானர வீரர்கள் சுக்ரீவனின் வார்த்தைகளில் உற்சாகமடைந்தார்கள். எதிர்த்து வந்த ராட்சசர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். சில ராட்சச வீரர்கள் நகரத்திற்குள் நடக்கும் விபரீதத்தை ராவணனிடம் தெரிவித்தார்கள். இதனால் கோபம் கொண்ட ராவணன் கும்பகர்ணனின் மகன்களான கும்பனையும் நிகும்பனையும் போர் முனைக்கு செல்லுமாறு கட்டளையிட்டான். இருவருக்கும் துணையாக வலிமையான வீரர்களான யூபாக்சன் சோணிதாக்சன் பிரஜங்கன் கம்பனன் என்ற ராட்சச வீரர்களையும் அனுப்பினான். ராவணனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட கும்பனும் நிகும்பனும் பெரிய படையுடன் இரவு நேரத்தில் சங்கு நாதம் செய்து யுத்த களத்திற்கு சென்றார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 35

ராமரிடம் ஜாம்பாவான் பேச ஆரம்பித்தார். இமய மலையில் உள்ள ஒரு சிகரத்தில் மூலிகைகள் நிறைந்திருக்கும். அந்த மூலிகைகள் இறந்தவரையும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. அந்த மூலிகைகளை சூரியன் மறைவதற்குள் பறித்து அன்றே சூரியன் மறைவதற்குள் அதன் வாசத்தை லட்சுமணனுக்கு உபயோகப்படுத்தி விட வேண்டும் இல்லை என்றால் மூலிகைகள் பயன் தராது. இந்த குறுகிய நேரத்திற்குள் எடுத்து வருவதற்கு அனுமனால் மட்டுமே முடியும். அனுமன் இந்த மூலிகைகளை கொண்டு வந்ததும் லட்சுமணன் எழுந்து விடுவார் கவலைப்படாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். அனுமனிடம் திரும்பிய ஜாம்பவான் நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள் என்று மூலிகைகளின் பெயரையும் அதன் விதத்தையும் சொல்ல ஆரம்பித்தார். இமயமலையில் ரிஷபம் போன்ற வடிவத்தில் மூலிகை நிறைந்த மலை ஒன்று இருக்கும். அந்த மலை பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் அதுவே அதன் அடையாளம். அங்கு ம்ருதசஞ்சீவினி என்ற மூலிகை இருக்கும். அது இறந்தவரையிம் உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. அடுத்து விசல்யகரணி என்ற மூலிகை அது உடலில் உள்ள காயங்களை உடனடியாக போக்கும் ஆற்றல் உடையது. அடுத்து சாவர்ண்யகரணி என்ற மூலிகை அது காயத்தால் உண்டான வடுக்கலை நீங்கும் ஆற்றல் உடையது. அடுத்து சந்தானகரணி அது உடலில் அம்புகளால் பிளந்த இடத்தை ஒட்ட வைக்கும் ஆற்றல் உடையது. இந்த நான்கு மூலிகைகளையும் எடுத்து இன்று மாலை சூரியன் மறைவதற்குள் இங்கு வர வேண்டும் உன்னால் இயலுமா என்று கேட்டார். ராமரை வணங்கி நின்ற அனுமன் பேச ஆரம்பித்தார்.

ராமரின் அருளால் நிச்சயமாக நான் இதனை செய்து விடுவேன். விரைவில் திரும்பி வருகிறேன் என்ற அனுமன் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டு அங்கிருந்து தாவி இமயமலையில் இருக்கும் மூலிகை சிகரத்திற்கு சென்றார். அங்கிருக்கும் பல மூலிகைகள் சூரியனைப் போன்று பிரகாசித்துக் கொண்டும் பல நிறங்களிலும் பல வடிவங்களிலும் இருப்பதைப் பார்த்த அனுமன் ஆச்சரியமடைந்தார். ஜாம்பவான் சொன்ன விதத்தில் இருக்கும் மூலிகைகளை தேட ஆரம்பித்தார் அனுமன். தங்களை யாரோ ஒருவன் எடுத்துச் செல்ல வந்திருக்கிறான் என்று உணர்ந்த மூலிகைகள் தங்களை மறைத்துக் கொண்டன. மலை முழுவதும் சுற்றிய அனுமனுக்கு மூலிகைகள் தெரியவில்லை. மூலிகைகள் தங்களை மறைத்துக் கொண்டதை உணர்ந்த அனுமன் மிகவும் கோபம் கொண்டார். இமயமலையில் இருக்கும் பலவிதமான விலங்கள் பெரிய மரங்கள் கொண்ட அந்த மூலிகை சிகரத்தை அப்படியே பெயர்த்து எடுத்த அனுமன் கருடனுக்கு நிகரான வேகத்தில் அங்கிருந்து ராமர் இருக்குமிடத்திற்கு தாவினார். யுத்தகளத்தின் தூரத்தில் அனுமன் வந்து கொண்டிருக்கும் போதே அதனை கண்ட வானரங்கள் அனுமன் வந்து விட்டார். சூரியன் மறைவதற்குள்ளாகவே அனுமன் வந்து விட்டார் என்று கூக்குரலிட்டார்கள். வானர வீரர்களின் கூக்குரலுக்கு அனுமன் எதிர் சப்தமிட்டார். இலங்கை நகரத்திற்குள் இச்சத்தத்தை கேட்டு வெற்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ராட்சசர்கள் பயத்தில் உறைந்தார்கள். அனுமன் யுத்தகளத்திற்கு அருகில் மூலிகை மலையை இறக்கி வைத்து விட்டு அனைவரையும் வணங்கி நின்றார்.

ராமர் விரைவாக வந்த அனுமனைப் போற்றி வாழ்த்தினார். விபீஷணன் அனுமனை கட்டி அனைத்து தனது வாழ்த்துக்களை கூறினார். லட்சுமணன் மூலிகை வாசத்தில் தூங்கி எழுவது போல் எழுந்தார். அவரது உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் மறைந்தது. யுத்தம் ஆரம்பித்தது முதல் யுத்தகளத்தில் இறந்து கிடந்த வானர வீரர்கள் தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தார்கள். அம்புகளால் மயக்கமடைந்தும் காயமடைந்தும் இருந்த வானர வீரர்கள் மூலிகையின் வாசம் பட்டதும் காயத்திற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் புதுப் பொலிவுடன் எழுந்தார்கள். யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் வானர வீரர்களால் குவியல் குவியல்களாக கொல்லப்பட்ட ராட்சச வீரர்களை தேவர்கள் பார்த்தால் அவமானமாக இருக்கும் என்று கருதிய ராவணன் இறந்து கிடக்கும் ராட்சச வீரர்களை உடனே கடலில் தூக்கி வீசச்சொல்லி உத்தரவிட்டிருந்தான். அதன் விளைவாக இறந்த ராட்சச வீரர்கள் பிழைக்க வழி இல்லாமல் போனது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 34

ராமர் நாராயணனின் சொரூபமாக இருந்தால் நாம் எப்படி வெற்றி பெருவது என்று ராவணன் சிந்திக்க தொடங்கினான். ஏற்கனவே நமது வலிமை மிக்க பல வீரர்கள் இறந்து விட்டார்கள். யாராலும் வெற்றி பெற முடியாத தம்பி கும்பகர்ணனும் இறந்து விட்டான். இனி இந்த யுத்தத்தை எப்படி செய்வது என்று கவலையுடன் இருந்தான். ஆனாலும் ராவணனுடைய மனம் அகங்காரத்தினால் ராமரை சரணடைய ஒத்துக் கொள்ள மறுத்தது. தேவலோகத்தையே வெற்றி பெற்றிருக்கிறோம் அது போலவே இந்த மானிடனையும் வானரங்களையும் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற ஆணவம் ராவணனிடம் மேலோங்கி இருந்தது. ஆணவமும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயமும் ராவணனின் மனதை நிலை குலைய வைத்தது. கவலையின் உச்சத்தில் இருந்தான் ராவணன். அப்போது இந்திரஜித் அங்கு வந்தான். நான் இருக்கும் வரையில் நீங்கள் கவலையில் இருக்கிறீர்கள். ஏற்கனவே ராமரையும் லட்சுமணனையும் வெற்றி பெற்றது போல் இப்போதும் சென்று வெற்றி பெற்று வருகிறேன் என்று ராவணனுக்கு தைரியத்தை கொடுத்த இந்திரஜித் தனது படைகளுடன் யுத்தகளத்திற்கு புறப்பட்டான். அசோக வனத்திற்குள் எதிரிகள் யாரும் உள்ளே புக முடியாத படி பாதுகாப்பை பலப்படுத்திய ராவணன் இந்திரஜித்தின் வெற்றி செய்தியை கேட்க தனது மாளிகையில் காத்திருந்தான்.

ராமர் பெரிய ராட்சச படை தம்மை நோக்கி வருவதை பார்த்தார். இந்திரஜித் மீண்டும் யுத்தம் செய்ய வருகிறான் என்று உணர்ந்த ராமர் லட்சுமணனை எச்சரிக்கை செய்தார். லட்சுமணா இந்திரஜித் மீண்டும் யுத்தம் செய்ய வருகிறான். அவன் தன் உடலை மறைத்துக் கொண்டு தாக்குவான். ஆகவே எச்சரிக்கையுடன் இருந்து அவனது தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்றார். யுத்தம் ஆரம்பித்தது. இந்திரஜித் மந்திர அஸ்திரங்களை கொண்டு வானர வீரர்களை தாக்க ஆரம்பித்தான். வானர வீரர்கள் குவியல் குவியலாக இறக்க ஆரம்பித்தார்கள். இதனை கண்ட ராமர் இந்திரஜித்தை எதிர்க்க ஆரம்பித்தார். ராமர் அம்புகள் விடும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத இந்திரஜித் தன் உடலை மறைத்துக் கொண்டு யுத்தம் செய்ய ஆரம்பித்தான். பிரம்மாஸ்திரத்தை எடுத்த இந்திரஜித் ராமரின் மீது எய்தான். தன்னை நோக்கி வந்த பிரம்மாஸ்திரத்தை எதிர்த்து வேறு அஸ்திரங்கள் எய்தால் இது பிரம்மாவை அவமதிப்பதாகும் என்று எண்ணிய ராமர் அமைதியுடன் இருந்தார். அதனை கண்ட லட்சுமணன் ராமரின் முன்பு வந்து நின்று பிரம்மாஸ்திரத்தை தான் ஏற்றுக் கொண்டு மயங்கி விழுந்தான். அண்ணனை காக்க தன் உயிரையும் கொடுக்க வந்த லட்சுமணனின் இச்செயலால் நிலைகுலைந்த ராமர் நிற்க முடியாமல் அவனோடு சேர்ந்து தானும் விழுந்தார். இதனை கண்ட இந்திரஜித் ஒரே அஸ்திரத்தில் இருவரையும் அழித்து விட்டோம் என்று வெற்றி முழக்கமிட்டு ஆனந்த கூச்சலிட்டான். ராட்சச வீரர்கள் இந்திரஜித்தை பெருமைப்படுத்தி கோசமிட்டார்கள். ராம லட்சுமணர்கள் தனது பிரம்மாஸ்திரத்தால் அழிந்தார்கள் என்று ராவணனிடம் சொல்லி அவனை சந்தோசப் படுத்துவதற்கு அரண்மனைக்கு திரும்பினான் இந்திரஜித்.

ராமர் தன்னை தாக்க வந்த பிரம்மாஸ்திரத்தை லட்சுமணன் ஏற்றுக் கொண்டதை நினைத்து கண்ணீர் விட்டார். இவனைப் போல் ஒரு தம்பி உலகத்தில் வேறு யாருக்கும் கிடைப்பார்களா என்று லட்சுமணன் மீதிருந்த அம்பை எடுத்தார். பிரம்மாஸ்திரத்தினால் தாக்கப்பட்ட லட்சுமணன் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியத்துடன் இருந்த ராமர் லட்சுமணனை எப்படி விழிக்க வைப்பது என்று ஜாம்பவானிடம் ஆலோசனை கேட்டார். இந்திரஜித்தின் தாக்குதலில் பெரும் காயமடைந்த ஜாம்பவான் லட்சுமணனின் முகத்தை பார்த்து அஸ்திரத்தின் சக்தி இருக்கும் வரை விழிக்க வாய்ப்பில்லை. விரைவில் விழிக்க வைக்க மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை உபயோகித்து விரைவில் லட்சுமணனை எழுப்பி விடலாம் என்ற ஜாம்பவான் அனுமன் இருக்கிறாரா என்று கேட்டார். ஜாம்பவானின் வார்த்தையை கேட்ட அனுமன் இதோ இருக்கிறேன் நான் என்ன செய்ய வேண்டும் உத்தரவிடுங்கள் என்று அனைவரின் முன்பும் வந்து வணங்கி நின்றார்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 33

ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் நீண்ட நேரம் யுத்தம் நடந்தது. ராமரின் அம்புகளால் கும்பகர்ணனின் உடலை துளைக்க முடியவில்லை, இதனை உணர்ந்த ராமர் கூர்மையான அம்புகளால் கும்பகர்ணனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமாக வெட்ட ஆரம்பித்தார். முதலில் கைகளை வெட்டிய ராமர் பின்பு கால்களை வெட்டி இறுதியாக தலையை வெட்டினார். ராமரின் அம்பின் வேகத்தில் கும்பகர்ணனின் தலை அம்புடன் பரந்து சென்று இலங்கை நகரத்திற்குள் ஒரு மலை விழுவதைப் போல் விழுந்தது. வானரப் படைகளை திணறடித்துக் கொண்டிருந்த கும்பகர்ணன் இறந்துவிட்டான். இதனைக் கண்ட ராட்சச படைகள் அலறியடித்துக் கொண்டு இலங்கை நகரத்திற்குள் ஓடினார்கள். வானர சேனைகள் ஆர்ப்பரித்து கோசங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள்.

ராமர் கும்பகர்ணனை அழித்துவிட்டார் என்ற செய்தியை கேட்ட ராவணனுக்கு தன் உயிர் செல்வதைப் போல் உணர்ந்து மயக்கமடைந்து விழுந்தான். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன் கும்பகர்ணனை நினைத்து புலம்ப தொடங்கினான். யாராலும் வெற்றி பெற முடியாத உன்னை ராமர் எப்படி வெற்றி கொண்டார். உன்னுடைய பலம் எங்கே போனது. நீ இறந்த செய்தியை கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்களே. நீ இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ்ந்து பயன் இல்லை. உன்னைக் கொன்ற ராமரை சித்ரவதை செய்து கொன்ற பிறகு நீ இருக்கும் இடத்திற்கு நானும் வருவேன் கும்பகர்ணா என்று புலம்பினான் ராவணன். ஆரம்பத்தில் விபீஷணன் பேச்சை கேட்டிருக்கலாமோ அகங்காரத்தினால் அவசரப்பட்டு விட்டோமோ என்று சபையில் அனைவரின் முன்னிலையில் தனது புலம்பலை கொட்டித் தீர்த்தான் ராவணன். இதனைக் கேட்ட திரிசரன் என்ற ராட்சசன் இப்படி புலம்புவதில் எந்த பயனும் இல்லை. பிரம்மாவினால் கொடுக்கப்பட்ட சக்தியும் ஆயுதங்களும் நம்மை காக்கும் கவசங்களும் இருக்க ஏன் வருத்தப் படுகிறீர்கள் என்று ராவணனுக்கு தைரியம் சொல்லி தேற்றினார்கள். ஆனாலும் ராவணன் புலம்பியபடியே இருந்தான். இதனை கண்ட திரிசரன் நாராந்தகன் தேவந்தகன் அதிகாயன் என்ற நான்கு ராட்சசர்களும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல முடிவு செய்தார்கள். ராவணனிடம் சென்ற நால்வரும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து யுத்தம் செய்தால் எத்தனை வலிமையுடைய வீரனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நால்வரும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல அனுமதி கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட ராவணன் சிறிது ஆறுதல் அடைந்து அனுமதி கொடுத்தான்.

ராம லட்சுமணர்களை எங்களது அஸ்திரத்தினாலும் வலிமையினாலும் அழித்து விட்டு நாங்கள் உங்களை வந்து பார்க்கிறோம் என்று நால்வரும் அவர்களுடைய படைகளுடன் யுத்தகளத்திற்கு சென்றார்கள். நால்வரும் ஒன்றாக செல்வதால் இம்முறை வெற்றி அடைவோம் ராம லட்சுமணர்கள் அழிவார்கள் என்று ராவணன் நம்பினான். யுத்ததிற்கு வந்த நால்வரும் கடுமையாக போரிட்டு வானர வீரர்களை திணறடித்தார்கள். நால்வரும் பல வானர வீர்ர்களை கொன்று குவித்து தங்கள் வலிமையை காட்டினார்கள். அவர்களை லட்சுமணனும் சுக்ரீவனும் அனுமனும் எதிர்த்து யுத்தம் செய்தார்கள். இறுதியில் நாராந்தகனை சுக்ரீவன் கொன்றான். திரிசரனேயும் தேவந்தகனேயும் அனுமன் கொன்றார். அதிகாயனை லட்சுமணன் கொன்றான். நால்வரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை ராவணனுக்கு தெரிவித்தார்கள். ராவணன் கவலையின் உச்சத்திற்கு சென்று தடுமாற ஆரம்பித்தான். இதுவரை நடந்த யுத்தத்தில் யாராலும் வெல்ல முடியாத வலிமையுடன் இருந்த சேனாதிபதிகளும் வீரர்களும் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வருகின்றார்கள் என்று ராமரைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான் ராவணன். இந்திரனுக்கு நிகரான இந்திரஜித் அனுப்பிய நாக பாணத்தையும் எப்படியோ அறுத்து விட்டார் இந்த ராமர். மிகவும் பராக்கிரமம் நிறைந்தவராக இருக்கிறார். இவரது வலிமை புரிந்து கொள்ள முடியாத விந்தையாக உள்ளது. ராமர் நாராயணனின் சொரூபமாக இருக்குமோ என்று ராவணன் எண்ணினான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 32

ராமர் யுத்தகளத்திற்குள் ஒரு பெரிய மலையைப் போல் ராட்சச உருவம் வருவதை பார்த்து யார் இந்த ராட்சசன் என்று விபீஷணனிடம் கேட்டார். அதற்கு விபீஷணன் வந்து கொண்டிருப்பது ராவணனின் தம்பி கும்பகர்ணன் மிகவும் வலிமையானவன் இவனை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம். ராவணனுக்கு தர்மத்தை எடுத்துரைத்து சீதையை திருப்பி அனுப்ப வேண்டும் என்று சபையில் அனைவர் முன்னிலையிலும் தைரியமாக சொல்லி ராவணன் செய்த தவறை கண்டித்தவன். ராவணன் மீது உள்ள பாசத்தால் தவறு என்று தெரிந்தும் ராவணனுக்காக யுத்தம் செய்ய வந்திருக்கிறான் என்று ராமரிடம் விபீஷணன் சொல்லி முடித்தான். கும்பகர்ணன் யுத்த களத்திற்குள் நுழைந்ததும் ராட்சச வீரர்கள் அவன் மீது மலர்களை தூவி ஆரவாரம் செய்தார்கள். மலை போல் பெரிய உருவத்தை கொண்ட கும்பகர்ணனை கண்ட வானர வாரர்கள் அலறி அடித்துக் கொண்டு ராமரை நோக்கி ஒடினார்கள். வானர படைத் தலைவர்கள் அனைவருக்கும் தைரியத்தை சொல்லி படைகள் சிதறி ஓடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ராமரிடன் வந்த அங்கதன் கும்பகர்ணனை நான் தாக்குகிறேன் என்று அனுமதி பெற்றுக் கொண்டு அவனை தாக்க பெரிய வானர படை கூட்டத்துடன் சென்றான். பெரிய மரங்களையும் பாறைகளையும் கும்பகர்ணன் மீது தூக்கிப் போட்டார்கள். எதனையும் பொருட் படுத்தாத கும்பகர்ணன் சிரித்துக் கொண்டே அனைத்தையும் தூசி தட்டிச் செல்வது போல் தட்டிவிட்டு வானர படைகளை அழித்துக் கொண்டு முன்னேறிச் சென்றான். கும்பகர்ணனின் தாக்குதலில் அங்கதன் மயக்கமடைந்தான். இதனைக் கண்ட சுக்ரீவனும் கும்பகர்ணனை எதிர்த்து தாக்கினான். சுக்ரீவனாலும் கும்பகர்ணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறிது நேரத்தில் கும்பகர்ணனின் தாக்குதலில் சுக்ரீவனும் மயக்கமடைந்தான். இதனைக் கண்ட கும்பகர்ணன் சுக்ரீவனை தூக்கிக் கொண்டு இலங்கை நகரத்திற்குள் நுழைந்தான். வானரர்களின் அரசனான சுக்ரீவனை சிறை பிடித்து விட்டோம் இனி யுத்தம் நின்று விடும் என்று கும்பகர்ணன் மகிழ்ச்சி அடைந்தான். ராட்சச வீரர்கள் ஆரவாரம் செய்து தங்களின் வெற்றியை கொண்டாடினார்கள். சுக்ரீவன் சிறைபட்டு விட்டான் என்ற செய்தியை அறிந்து கொண்ட வானர வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ராமரை நோக்கி ஓடினார்கள். அனுமன் அனைவருக்கும் தைரியம் கூறினார். சுக்ரீவன் தற்போது மயக்கத்தில் இருக்கிறார். அதனால் தான் கும்பகர்ணனால் சுக்ரீவனை தூக்கிச் செல்ல முடிகிறது. விரைவில் சுக்ரீவன் விழித்து விடுவார். விழித்ததும் ஒரே தாவலில் அங்கிருந்து இங்கு வந்து விடுவார் எனவே யாரும் பயம் கொள்ளத் தேவையில்ல என்று சொல்லி வானர படைகளை ஒழுங்கு படுத்தினார். ராவணனின் மாளிகைக்குள் சுக்ரீவனை தூக்கிக் கொண்டு கும்பகர்ணன் நுழைய முற்பட்ட போது சுக்ரீவன் விழித்துக் கொண்டு தன்னுடைய சுய உணர்வை பெற்று இலங்கைக்குள் ராட்சசர்களுக்கு மத்தியில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டான். கும்பகர்ணனின் காதுகளையும் மூக்குகளையும் பற்களால் கடித்தும் அவனது உடலை தனது நகங்களால் கீரியும் கும்பகர்ணனின் பிடியில் இருந்து விடுபட்ட சுக்ரீவன் அங்கிருந்து ஒரே தாவலில் ராமர் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.

ராமரிடம் வந்து சேர்ந்த சுக்ரீவன் கும்பகர்ணனின் வலிமையை எடுத்துரைத்தான். மலை போல் இருக்கும் கும்பகர்ணனை எவ்வாறு தாக்கி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். சுக்ரீவனின் தாக்குதலில் தனது உடல் முழுக்க ரத்தத்துடன் இருந்த கும்பகர்ணன் பெரிய இரும்பு உலக்கையை எடுத்துக் கொண்டு மீண்டும் யுத்த களத்திற்குள் நுழைந்தான். கும்பகர்ணன் மீது தாவி ஏறிய வானரபடைகள் ஈட்டிகளால் அவனது உடம்பை குத்தி தாக்கினார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாத கும்பகர்ணன் அனைவரையும் உதறி விட்டு மேலும் முன்னேறிக் கொண்டே இருந்தான். லட்சுமணன் தனது அம்புகளால் கும்பகர்ணனை தாக்கினான் ஆனாலும் கும்பகர்ணனை லட்சுமணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அனைவரது தாக்குதலையும் சமாளித்த கும்பகர்ணன் ராமரை நோக்கி முன்னேறிச் சென்றான்

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 31

ராமர் பற்றிய சிந்தனையில் தனியாக இருந்த ராவணனிடம் கும்பகர்ணன் எழுந்து அரசவைக்கு வந்து விட்டான் என்ற செய்தி சொல்லப்பட்டது. மகிழ்ச்சி அடைந்த ராவணன் அங்கிருந்து அரசவைக்கு வந்து சேர்ந்தான். ராவணனிடம் கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான். கம்பீரமாக பொலிவுடன் இருக்கும் தங்களின் முகம் ஏன் மிகவும் கவலையில் உள்ளது. உங்களுடைய கவலையை போக்குவதற்காக நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா எனக்கு உத்தரவிடுங்கள் இப்போதே செய்து முடிக்கிறேன் என்றான் கும்பகர்ணன். அதற்கு ராவணன் தம்பி நீ தூங்க ஆரம்பித்ததும் தேவர்களும் நெருங்க முடியாத நமது நகரத்தை கடல் போல் வந்த வானரசேனைகள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். ராட்சசர்களுக்கும் இந்த வானரங்களுக்கும் நடந்த யுத்தத்தில் நம்முடைய பல தளபதிகளும் முக்கிய வீரர்களும் இறந்து விட்டார்கள். நேற்று நானே எனது படைகளுடன் யுத்தத்திற்கு சென்றேன். ராமர் தனது பராக்கிரமத்தால் என்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து தர்மம் என்ற பெயரில் என்னை உயிரோடு விடுகிறேன் என்று அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். இந்த சம்பவத்தால் மிகவும் கவலையுடன் இருக்கிறேன். உன்னுடைய பலத்தை நான் அறிவேன். அதனால் இப்போது உன்னை மட்டுமே நம்பியிருக்கிறேன். இதற்கு முன்பாக நடந்த யுத்தத்தில் உனது பலத்தினால் தேவர்களையெல்லாம் சிதறி ஓட விரட்டி அடித்திருக்கிறாய். உடனே சென்று யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து இழந்த எனது பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்து நமது ராட்சச குலத்தையும் நமது இலங்கை நகரத்தையும் காப்பாற்று என்று ராவணன் கேட்டுக் கொண்டான். கும்பகர்ணன் மிகவும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து மன்னிக்க வேண்டும் அண்ணா என்று கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான்.

ராமர் இலங்கைக்குள் வந்து விட்டார் என்ற செய்தி வந்ததும் சபையில் நாம் அனைவரும் செய்த ஆலோசனையில் பெரியவர்களும் அறிஞர்களும் என்ன சொல்லி எச்சரிக்கை செய்தார்களோ அதுவே இப்போது நடந்திருக்கிறது. அனைவரும் எச்சரிக்கை செய்ததை நீங்கள் கேட்கவில்லை. சீதையை ஏமாற்றி தூக்கி வந்த பாவத்திற்கான பயனை இப்போது அனுபவிக்கிறீர்கள். நீங்கள் முதலில் ராம லட்சுமணர்ளை அழித்து விட்டு பின்பு சீதையை தூக்கி வந்திருந்தால் உங்களது வீரம் அனைவராலும் பாரட்டப் பட்டிருக்கும். இப்போது என்னை தோற்கடித்து விட்டான் எனது வீரர்கள் இறந்து விட்டார்கள் என்று புலம்புகிறீர்கள். அரசன் ஒருவன் ஆசையினால் தூண்டப்பட்டு அதனைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் செய்து முடித்துவிட்டு பின்பு ஆலோசனை சொல்பவர்களின் கருத்தையும் கேட்காமல் இருந்தால் இதுபோல் அவஸ்தை பட வேண்டியிருக்கும் என்று தனக்கு தெரிந்த நீதியை ராவணனிடம் சொல்லி முடித்தான் கும்பகர்ணன். கும்பகர்ணன் பேசிய பேச்சுக்கள் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணனுக்கு கோபம் வந்தது. தனது கோபத்தை அடக்கிக் கொண்டு கும்பகர்ணனிடம் பேச ஆரம்பித்தான்.

ராமர் லட்சுமணர்களை முதலில் அழித்திருக்க வேண்டும் என்ற உனது வாதம் சரியானது தான் ஆனால் இப்போது காலம் தாண்டிவிட்டது. இப்போது இதைப்பற்றி பேசிப் பயனில்லை. நடந்து போன எனது தவறுகளினால் இப்போது இந்த சங்கடமான சூழ்நிலை அமைந்துவிட்டது. என் மீது நீ வைத்திருக்கும் பிரியம் உண்மையாக இருந்தால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு தைரியம் சொல்லி உனது வல்லமை முழுவதையும் உபயோகித்து எனக்காக யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து என்னை காப்பாற்று என்று ராவணன் கும்பகர்ணனிடம் கேட்டுக் கொண்டான். இதற்கு கும்பகர்ணன் நீங்கள் கவலைப்பட்டது போதும். என்னை யாராலும் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும். உங்களுக்கு பயத்தை உண்டாக்கி இருக்கும் எதிரிகளை அழித்து விட்டு வருகிறேன் என்று கும்பகர்ணன் யுத்தகளத்தை நோக்கிச் சென்றான்.