திரிசூலநாதர் கோயில்

மூலவர் திரிசூலநாதர் வேறு பெயர் திரிச்சுரமுடையார். உற்சவர் சந்திரசேகரர். அம்பாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் மரமல்லி. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இத்தீர்த்தம் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டது. தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜைகள் வழிபாட்டுக்கு பயன் படுத்தப் படுகிறது. ஆகமம் காரணாகமம். ஊர் திரிசூலம் சென்னை. புராண பெயர் திருச்சுரம். இந்த திருத்தலத்துக்கு பல்லவபுரமான வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் பழைய பெயர் உண்டு. இந்த பல்லவபுரம்தான் மருவி அருகில் உள்ள பல்லாவரம் பகுதி ஆனது. இதன் அடிப்படையில் முற்காலத்தில் பல்லவ மன்னர் ஒருவர் இங்கு முதலில் கோயில் கட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை இப்பகுதியில் கடந்த 1901 ஆம் ஆண்டு தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வில் கிடைத்த 14 கல்வெட்டுகளில் மிகப் பழைமையான முதலாம் குலோத்துங்க சோழன் (கிபி 1070 – 1120) காலத்திய கல்வெட்டு உறுதி செய்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலுக்கு கடந்த 1960 ஆம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட பெரியோர் அடங்கிய குழுவினரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள திரிசூலத்தில் நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே உள்ளது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. வேதத்தின் உட்பொருளாக அதன் நடுவே சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆகையால் இந்த ஸ்தலத்துக்கு பிரம்மபுரி என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக லிங்க பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவ்வாறே அவருக்கு அருள் செய்தார். லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை சுரம் என்பர். எனவே சிவன் திருச்சுரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர் சீனிவாசப் பெருமாள் காட்சி தருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் போது சீனிவாசர் முத்தங்கி சேவையில் காட்சி தருவார். தனி சன்னதியிலுள்ள மார்க்கண்டேஸ்வரர் சோடச லிங்க (பதினாறு பட்டை லிங்கம்) வடிவில் காட்சி தருகிறார். காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் மற்றும் ஐயப்பன் ஆதிசங்கரர் சன்னதிகளும் உள்ளன. கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த சன்னதிக்குள் சிவன் அருகில் சொர்ணாம்பிகை அருள்கிறார்கள். திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. ஆரம்பத்தில் பிரதான அம்பிகையாக இருந்த சொர்ணாம்பிகை அந்நியர் படையெடுப்பின் போது வலது கையில் கட்டை விரல் சேதமடைந்தது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக் கூடாது என்று கூறி தனியே வைத்து விட்டார்கள். அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரி செய்து மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு அம்பாள் அருள் கூற அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை பிரதிஷ்டை செய்தார்கள். திரிசூலநாதரின் அருகே இடது புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இதனால் நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது. அன்னையை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால் அன்னையின் தரிசனத்தை பெறலாம்.

பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். அம்பாளின் திருக்கரங்களில் அட்சத மாலையும் தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள் பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக் கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கருவறைச் சுற்று மாடத்தின் மேல் பகுதிச் சுற்றில் பூத கண வரிசையும் அவற்றின் நடுவே சிவலிங்கத்தை பிரம்மன் வழிபடுதல், கண்ணப்ப நாயனார் பக்தி, சிவலிங்கத்தை அனுமார் வழிபடுதல், லிங்கத்தின் மேல் பால் சொரியும் பசுவின் சிற்பங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள தேவகோட்டங்களுக்கு மேலே மகரதோரண சிற்பங்களிலும் வாலி சுக்ரீவன் யுத்தம் போன்ற புராணக் கதைகளும் சோமாஸ்கந்தர் ரிஷபாரூட மூர்த்தி போன்ற இறை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத் தூண்களிலும் காலசம்ஹார மூர்த்தி இருமுகம் கொண்ட சரபேஸ்வரர் காமாட்சி அம்மன் தவம் காளிங்க நர்த்தனம் உள்ளிட்ட அற்புத சிற்பங்களைக் காணலாம்.

கருவறைச் சுற்றுப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியரிடமும் தனிச் சிறப்புகள் உள்ளன. வழக்கமாக முருகனின் வாகனமான மயில் வலப்புறம் நோக்கி இருக்கும். ஆனால் இங்கு இடப்புறத்தை நோக்கியுள்ளது. அதோடு ஒரு காலை சற்றே தூக்கி பறக்கத் தயாராகும் நிலையிலும் காணப்படுகிறது. சிவன் கோஷ்டத்திலுள்ள விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி என்றழைக்கப்படுகிறார். உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில் மூலாதார சக்தியான குண்டலினி நாக வடிவில் இருக்கிறது. இவரது சிலை சுவரைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் வீராசன தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். நரசிம்மரின் உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன் ஒரு தூணில் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு சரபம் என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால் இங்கே இறக்கை இல்லை. இரண்டு முகங்கள் இரு கைகளில் மான் மழு ஏந்தியுள்ளார். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரை பிடித்த கோலத்தில் உள்ளார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரர் வேறு எங்கும் இல்லை.

நவராத்திரி விழாவின் போது விசேஷ ஹோமம் மற்றும் 18 சுமங்கலிகள் 18 குழந்தைகளை வைத்து சுமங்கலி கன்யா பூஜைகள் நடத்தப்படும். தை ஆடி வெள்ளி நாட்களில் பூப்பாவாடை என்னும் வைபவமும் நடக்கிறது. இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 41 வேலி நிலங்களை தேவதானமாக வழங்கிய பிற்காலச் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் இந்த ஊரின் பழைய பெயராகிய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதனை தனது பெயரில் திருநீற்றுச் சோழநல்லூர் என்று மாற்றி ஆணையிட்டதாக இங்கு கிடைத்த கல்வெட்டு கூறுகிறது. பல சோழமன்னர்கள் இவ்வாலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டத்து குலோத்துங்க சோழ வளநாட்டு சாத்தூர் நாட்டு திருச்சுரம் என்று இருந்ததையும் அறிந்து கொள்ளலாம். சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். இந்த மலையில் இறைவன் வீற்றிருப்பதால் இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி பின்னர் திரிசூலம் என்று மருவி விட்டது.

துர்கை

தாரா லிங்கம்

முக லிங்கங்களைப் போன்றே தனிச் சிறப்பு வாய்ந்தவை தாரா லிங்கங்கள். லிங்கத்தின் பாணப்பகுதியில் முகங்களுக்கு பதிலாக அழகிய பட்டைகள் அமைந்தவை தாரா லிங்கங்கள். பல்லவ அரசர்கள் வெகு சிறப்பாக தாரா லிங்கங்கள் அமைத்தனர் என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த வகை லிங்கங்களின் பாணப் பகுதியில் 4, 8, 16, 32, 64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகைகளாக பட்டைகள் அமைந்திருக்கும். இந்தப் பட்டைகள் தாரா எனப்படும்.

நான்கு பட்டைகள் கொண்டது வேத லிங்கம். பாடல் பெற்ற திருத்தலமான சக்ரப்பள்ளியில் வேத லிங்கத்தைக் காணலாம்.

எட்டு பட்டைகள் கொண்டது அஷ்ட தாரா லிங்கம். பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் இந்த லிங்கம் உள்ளன. காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயம் மற்றும் திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயத்தில் இந்த லிங்கம் உள்ளது.

பதினாறு பட்டை கொண்டது ஷோடச தாரா லிங்கம். சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு பட்டை களாகக் கொண்டது. ஆகையால் சந்திர கலா லிங்கம் என்றும் இதற்கு பெயர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்தில் இந்த லிங்கம் உள்ளது. மற்றும் காஞ்சி கயிலாயநாதர் ஆலயத்தின் சுற்றாலயத்தில் இந்த லிங்கம் உள்ளது.

முப்பத்திரண்டு பட்டை கொண்டது தர்மதாரா லிங்கம். தர்மத்தின் 32 வகையைக் குறிப்பிடுவதால் தர்ம லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்பிகை 32 அறங்களை வளர்த்த காஞ்சிபுரத்தில் வயல் வெளியில் 32 பட்டைகளைக் கொண்ட கலை நயமிக்க இந்த லிங்கம் உள்ளது.

அறுபத்து நான்கு பட்டை கொண்டது சதுஷ்சஷ்டி லிங்கம். சிவபெருமானின் 64 லீலா விநோதங் களை விளக்கும் வகையில் 64 பட்டைகள் கொண்டது. இது சிவலீலா சமர்த்த லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் 64 பட்டைகள் 64 யோகினி சக்திகளைக் குறிக்கும்.

தில்லை நடராஜர்

தில்லையில் கிபி 1648 ஆம் ஆண்டில் முகலாய மன்னர் படையெடுப்பின்போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் நடராஜர் சிவகாமி விக்ரகங்களை இரண்டு மர பேழைகளில் (பெட்டி) பாதுகாப்பாக வைத்து மதுரை கொண்டு வந்து சில காலம் தங்கி மதுரையில் வழிபாடு செய்தார்கள். பின் அங்கிருந்து இரவு நேரங்களில் பயணம் செய்து குடுமியாண் மலையை சென்றடைந்து தங்கினார்கள். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு கேரளா மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து பூமிக்கடியில் குழி தோண்டி சுவாமி வைக்கப்பட்டிருந்த பேழைகளை மறைத்து வைத்தார்கள் பின் அந்த இடத்தில் புளியமரம் ஒன்றை நட்டு வைத்து தங்கள் ஊருக்கு திரும்பினார்கள். காலம் கடந்தது.

சிதம்பரத்தில் அமைதி திரும்பி 35 ஆண்டுகளுக்கு பின் முன்னோர்கள் சொன்ன குறிப்புகளை வைத்துக் கொண்டு இளம் தீட்சிதர்கள் பல குழுக்களாக பிரிந்து விக்ரகத்தை தேடினார்கள். அதில் ஒரு குழுவினர் புளியங்குடிக்கு சென்று பல இடங்களில் தேடியும் புலப்படாமல் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்தார்கள். அப்போது முதலாளி ஒருவர் தனது வயதான வேலைக்காரனிடம் அந்த பசு மாட்டை கொண்டு போய் அம்பலம் புளியில் கட்டு என கூறியுள்ளார். அங்கு இருந்த தீட்சிதர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு அம்பலம் புளி என்ற வார்த்தை குறித்து வயதானவரிடம் விளக்கம் கேட்டதற்கு, எனக்கு தெரியாது. எனது முதலாளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார். தீட்சிதர்கள் அந்த முதலாளியிடம் சென்று அம்பலம் புளி குறித்து கேட்டார்கள். அதற்கு முதலாளி இந்த இடத்தில் ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல ஆண்டுகளாக அம்பலம் புளி என்ற இடத்தில் வழிபட்டு வந்தார். இங்குள்ள சிறு துளையில் விலை மதிப்பில்லாத சுவாமி திருவுருவத்தை கண்டுள்ளார். இந்த சுவாமியை பற்றி அறிந்தவர்கள் இங்கு வருவார்கள். அதுவரை நீ பாதுகாக்க வேண்டும் சுவாமியை தேடி வருபவர்கள் உண்மையானவர்களா என சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆசான் கூறியதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்ட தீட்சிதர்கள் சிதம்பரத்திற்கு வந்து தில்லைவாழ் அந்தணர்களுடன் மூல மூர்த்திக்கு உரியவர்கள் தாங்கள்தான் என்ற ஆதாரங்களை எடுத்து சென்று கேரளா முதலாளியிடம் கொடுத்து சம்மதம் பெற்று தீட்சிதர்களே அம்பலம் புளி மரத்தின் அடியை தோண்டினார்கள். பூமிக்கடியில் இருந்து நடராஜப் பெருமானையும் சிவகாமசுந்தரி அம்மனையும் கணடெடுத்தாரகள். சுவாமிகளை புதிய பேழை ஒன்றில் வைத்து சிதம்பரத்திற்கு எடுத்து வந்தார்கள். வரும் வழியில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள சபாபதி மண்டபத்தில் வைத்து சில காலம் தங்கி பூஜை செய்தார்கள். பின் புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவில் வழியாக சிதம்பரத்திற்கு வந்தார்கள். 1688 ஆம் ஆண்டில் மீண்டும் பொன்னம்பலத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

நடராஜரையும் சிவகாமி அம்மையையும் கொண்டு செல்ல பயன்படுத்திய மரப் பேழைகள் படத்தில் காணலாம்.

பூதேஸ்வர் மகாதேவ்

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள காரியாபந்த் என்னும் மாவட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராம் மரோடா. காட்டுப் பகுதியில் உள்ளது. இந்த காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கம் வளரும் சக்தி கொண்டதாக ஆண்டிற்கு ஆண்டு வளர்ந்துகொண்டே இருக்கிறது. உயரத்திலும் சரி அகலத்திலும் சரி இதன் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்சமயம் இது 18 அடி உயரமும் 20 அகலமும் உள்ளது. இந்த சிவலிங்கத்தின் அளவு வருடாவருடம் மஹாசிவராத்திரி அன்று வருவாய் துறை அதிகாரிகளால் அளக்கப்படுகிறது. அப்போதும் 6 முதல் 8 இன்ச் வரை இந்த சிவலிங்கம் வளர்ந்திருக்கிறது. இந்த சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போதுவரை அதன் உயரமும் அகலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. சிவலிங்கம் எப்படி வளர்கிறது? கல்லால் ஆனா சிவலிங்கம் எப்படி வருடா வருடம் வளர முடியும்.? இதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம் தான் என்ன.? இப்படி பல கேள்விகளுக்கான விடையை இன்று வரை யாராலும் அறியமுடியவில்லை.

ஸ்ரீ எண்டல மல்லிகார்ஜுன சுவாமி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரவிவலசையில் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் 20மீ உயரமும் 3மீ அகலமும் கொண்டது. இந்த சிவலிங்கம் திறந்தத வெளியில் உள்ளது.

தல புராணத்தின் படி திரேதா யுகத்தில் ராமர் ராவணனைக் கொன்றுவிட்டு அயோத்திக்குத் திரும்பும் போது ​​அவர்களின் மருத்துவரான சுஷேணன் சுமஞ்ச பர்வதத்தில் தங்கி சிவபெருமானுக்காக தவம் செய்ய விரும்பினார். அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு உதவ விரும்பினார். சிறிது நேரம் கழித்து ராமர் அனுமனை அனுப்பி சூஷேணனை பற்றி விசாரிக்கச் சொன்னார். அனுமன் வந்தபோது ​​சுஷேணன் இறந்து விட்டதைக் கண்டான். சுஷேணனின் உடலைக் கண்டு மனம் வருந்திய அவர் உடலை மான் தோலால் மூடி அதன் மேல் சில மல்லிகைப் பூக்களை வைத்துவிட்டு அந்தச் செய்தியை ராமருக்குத் தெரிவிக்கச் சென்றார். ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணன் அங்கு வந்து மரியாதை செலுத்தி அவர்கள் மான் தோலை அகற்றும்போது ​​ஒரு சிவலிங்கம் இருந்தது. சுயம்பு லிங்கத்தின் அருகில் உள்ள புஷ்கரிணியில் (குளத்தில்) நீராடி பூஜை செய்துவிட்டு புறப்பட்டனர். சிவலிங்கம் படிப்படியாக வளர்ந்தது. சிவலிங்கம் வந்ததில் இருந்து மக்கள் நலம் பெற ஆரம்பித்தனர். இந்த சுவாமி மல்லிகாஜூன சுவாமி என்று அழைக்கப்பட்டார். மல்லிகைப் பூ மற்றும் அஜினா என்றால் மான் தோல் என்று பொருள். அதனால் அவர் மல்லிகாஜின சுவாமி என்று அழைக்கப்பட்டார்.

பிற்காலத்தில் துவாபரயுகத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தில் இருந்த போது ​​அர்ஜுனன் இந்த சுவாமியை வழிபட்டுள்ளார். எனவே அவர் மல்லிகார்ஜுன சுவாமி என்று அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் தெக்கலியின் ராஜா இந்த சிவலிங்கத்தைச் சுற்றி கோயில் கட்ட முயன்றார். ஆனால் அது வெற்றிபெறவில்லை. சிவபெருமான் அவரது கனவில் தோன்றி அவரை கோயிலில் அடைக்க வேண்டாம் என்றும் தன்னைத் தொட்டு பக்தர்களை அடையும் காற்று அவர்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்று கூறினார். அதனால் கோவில் கட்டப்படவில்லை. அவர் சூரிய ஒளியில் (தெலுங்கில் எண்டா) வெளிப்பட்டதால் இந்த சுவாமி ஸ்ரீ எண்டல மல்லிகார்ஜுன ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்பு நடராஜர்

கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

பாபநாசநாதர் திருக்கோயில் 1

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்த பொதிகை மலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மூலவர் பாபநாசநாதர். லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மாள் உலகம்மை விமலை உலகநாயகி. சுவாமி சன்னதிக்கு வடக்கில் உலகம்மை சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அம்மை அழகே உருவாக வலது கையில் மலர்ச் செண்டுடனும் இடது கையைத் தொங்க விட்டும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இடம் பாபநாசம் திருநெல்வேலி. புராண பெயர் இந்திரகீழ சேத்திரம். தலவிருட்சம் முக்கிளா மரம். தீர்த்தங்கள் தாமிரபரணி வேத தீர்த்தம் பைரவ தீர்த்தம் கல்யாண தீர்த்தம்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் முதன்மையான இக்கோயில் முதல் கிரகமான சூரியனுக்கு உரியது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில் விமலை சக்தி பீடம் ஆகும். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர் சுப்பிரமணியர் தட்சிணாமூர்த்தி துர்க்கை நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார். இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும். அகத்தியர் லோபாமுத்ரையுடன் அருள் பாலிக்கிறார்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒரு சமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம் இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவர் பாபநாசநாதர் என்று பெயர் பெற்றார்.

முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வந்தாள். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீது பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறி மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிட்டார். இப்பாதகச் செயலைச் செய்தவரை கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

நமச்சிவக்கவிராயர் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடையவர் ஆகவே அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து அவருடைய பக்தியை உலகறியச் செய்ய எண்ணி அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர் பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக் கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி அவரை விடுதலை செய்து அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன் மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள்.

இத்தலத்து லிங்கத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும் பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக் யஜுர் சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும் அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்தது. அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடித்து இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது

பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சம நிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சந்திரகுல பாண்டியன் என்ற பாண்டிய அரசனால் இக்கோயிலின் நடுக் கோயிலும் விமானமும் கட்டப்பட்டது. மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வீரப்ப நாயக்கரால் கிபி1609-23 யாகசாலை கொடிமரம் நடராசர் மண்டபம் கட்டப்பட்டன.

அம்மநாதர் திருக்கோயில் 2

மூலவர் அம்மநாதர் அம்மையப்பர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சந்திர அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆவுடைநாயகி ஆவுடையம்மன் கோமதியம்பாள். கிழக்கு நோக்கிய தனி கருவறையில் ஆவுடையம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்சிரிப்புடன் காட்சித் தருகிறாள். தல விருட்சம் பலாமரம் ஆலமரம். தீர்த்தம் தாமிரபரணி வியாச தீர்த்த கட்டம். இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி.

கோயிலுக்கு தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜருடன் சிவகாமி அம்மை காரைக்கால் அம்மை ஆகியோர் உள்ளார்கள். நாய் வாகனம் இல்லாத பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சந்திரன் நுழைவு வாசலின் வலப்புறத்தில் இருக்கிறார். மகாவிஷ்ணு காசி விஸ்வநாதர் விசாலாட்சி சுப்பிரமணியர் கஜலட்சுமி சனீஸ்வரர் நவகன்னிகள் ஆகியோரும் இருக்கின்றனர். இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று. இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க நந்தி சற்று விலகியிருக்கிறது. தற்போதும் கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தி அருகில் நின்று சிவனை தரிசிக்கலாம். இக்கோயிலை கட்டிய சகோதரிகள் நெல் குத்தி அரிசி புடைக்கும் சிற்பம் முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமசர் உள்ளார். இத்திருக்கோயிலுக்கு அருகே யாக தீர்த்தம் உள்ளது. இங்கு தான் உரோமச முனிவருக்கு இறைவன் பக்தவச்சலராக காட்சியளித்தார். அங்கு தற்போது பக்தவச்சலார் கோவில் உள்ளது. அம்மநாதர் கோவிலுக்கும் யாக தீர்த்தத்திற்கும் இடையே ரணவிமோசன பாறை ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து 41 நாட்கள் விடாமல் ஸ்நானம் செய்தால் தீராத நோய்களும் தீரும். இத்தலத்தில் மார்கழி மாதத்தில் திருவிழா நடக்கும். இந்த திருவிழா அன்று அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இந்தப் பகுதியில் சங்கமிக்கும் என்பது புராண வரலாறு.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இரண்டாவதான இக்கோயில் 2 ஆவதாக உள்ள கிரகமான சந்திரனுக்கு உரியது. சந்திர தலம் என்றும் சந்திர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இங்கு உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில் அந்த லிங்கம் ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே தங்கள் வேலையை துவங்குவார்கள். வெகுநாளாக இந்த லிங்கம் கோயிலில் இல்லாமல் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று எண்ணினார்கள். எனவே சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தார்கள். ஏழைகளான அவர்களிடம் கோயில் கட்டுமளவிற்கு பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின்மூலம் கிடைக்கும் பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து வைத்தனர். அவர்களது பக்தியில் மகிழ்ந்த சிவன் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக் காட்டிய அவர் விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருப்பதில்லையோ அதைப் போலவே மங்களமும் இருப்பதில்லை. எனவே மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று எழுந்தார். பதறிப் போன சகோதரிகள் அவசரத்தில் தேடிய போது விளக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு சுய ரூபத்தில் காட்சி தந்தார். சகோதரிகள் சிவனை வணங்கினர். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினார்கள்.

ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் கோவிலைக் கட்டியதாக கல்வெட்டுக்கள் உள்ளது. இத்திருக் கோயிலில் பாண்டியர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளது. மகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் ஆகும். சேர மன்னர் தன் மகளின் பெயரை இந்த ஊருக்கு சூட்டினார் என்றும் அதன் பின்னரே இந்த ஊருக்கு சேரன்மகாதேவி மங்கலம் என்ற பெயர் வந்தது என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

கைலாசநாதர் திருக்கோயில் 3

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். நாகத்தின் கீழ் ஆனந்த கௌரி அம்மன் தனியாக அருள்பாலிக்கிறார். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்றும் பெயர் உள்ளது. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடகநல்லூர். புராண பெயர் கார்கோடக நல்லூர். பெயர் மருவி கோடக நல்லூர் என்று தற்போது விளங்கி வருகிறது. இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று இது செவ்வாய் தலமாகும். கொடிமரம் பலிபீடம் பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் இது. சுவாமியே பிரதானம் என்பதால் இக்கோவில் இந்த அமைப்பில் உள்ளது. துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாண விநாயகரும் முருகரும் துவார பாலகர்களாக இருக்கின்றனர். நவ கைலாய தலங்களிலேயே பெரிய மூர்த்தி இவர். எனவே இவருக்கு எட்டு முழத்தில் எட்டு வேட்டிகளை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். இக்கோயிலில் உள்ள நந்திக்கு தாலி கட்டி பெண்கள் வழிபடுகிறார்கள். இக்கோயிலைச் சுற்றி இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும் நல்லோரை தீண்டுவதில்லை.

ஒரு முனிவர் இப்பகுதியில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவரது மகனும் இருந்தார். அவர் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்றுவிட்டார். அப்போது ஒரு ராஜகுமாரன் அங்கு வந்தான். அவனுக்கு ராஜ்ய அபிவிருத்திற்காக யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிஷ்டையில் இருந்த முனிவரை எழுப்பி யாகம் செய்யும் முறை பற்றி கேட்டறியலாம் என எண்ணினான். ஆனால் எவ்வளவோ எழுப்பியும் அவர் கண் திறக்கவில்லை. கோபமடைந்த ராஜகுமாரன் ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். நிஷ்டையில் இருந்ததால் முனிவருக்கு பாம்பு கழுத்தில் கிடப்பது தெரியவில்லை. விறகு பொறுக்கச் சென்ற மகன் திரும்பி வந்தார். தன் தந்தையில் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து கோபமடைந்தார். இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என்பது தெரிய வந்தது. உடனே அரண்மனைக்கு சென்று என் தந்தையின் கழுத்தில் போடப்பட்ட செத்த பாம்பு உயிர்பெற்று உன் தந்தையான பரிக்ஷித்து மன்னனை தீண்டும் என சாபமிட்டுவிட்டு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ராஜாவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதாக கூறினர். பரிக்ஷித்து ராஜா பாம்பிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள மிகவும் மறைவான இடத்தில் ஒரு மண்டபம் கட்டி வசித்தார். அதன் உள்ளே ஒரு எறும்புகூட புக வழியில்லை. ஒரு நாள் பரிக்ஷித்து ராஜா மாம்பழம் சாப்பிடும்போது உள்ளே குட்டியாக இருந்த கரு நீல வண்ண பாம்பு பழத்தினுள் இருந்து வெளிப்பட்டு ராஜாவை சாபப் படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விடுகிறார்.

கார்கோடகன் என்னும் அந்த பாம்பு ஒருநாள் தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றுகிறார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதினார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்கிறார். நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.

பரிக்ஷித்து மன்னனையும் நளனையும் தீண்டிய பாவம் நீங்க விஷ்ணுவை நோக்கி அந்த கரு நீல வண்ண கார்கோடகன் பாம்பு தியானம் செய்தது. விஷ்ணு அங்கு தோன்றி இக்கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி சிவனை வழிபட்ட பாம்பு சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்க சிவன் கைலாயத்தில் இருந்து வந்ததால் கைலாசநாதர் என்னும் பெயர் பெற்றார். கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் மூன்றாவது இக்கோயில் அங்காரகன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய்க்கு உரியது. செவ்வாய் தலம் என்றும் அங்காரக கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

கோத பரமேஸ்வரர் திருக்கோயில் 4

மூலவர் கோதபரமேஸ்வரர் கைலாசநாதர் திருநாகீசர். லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோத என்றால் சமஸ்கிருதத்தில் பசு என்று பொருள். பசு இறைவனை வெளிப்படுத்தியதால் கோத பரமேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சிவலிங்கத்தில் நாக வடிவில் ராகு இருக்கிறார். அம்பாள் சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வ மரம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர். புராண பெயர் திருநாங்கீசநேரி சங்காணி. காணி என்றால் நிலம் என்றும் செங்காணி என்றால் செம்மண் நிறைந்த நிலம் என்றும் பொருள். செங்காணி என்பதே பின்னர் சங்காணி என்று மறுவியது. மேலும் இந்தப் பகுதியில் சிறு சிறு குன்றுகள் சூழ்ந்து இருப்பதால் குன்றத்தூர் என்ற பெயர் பெற்று பின்னர் குன்னத்தூராக மறுவியது. முற்காலத்தில் இந்த ஊர் கீழவேம்புநாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்றுகள் நிறைந்த நிலப்பகுதியில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இங்குத் தனி விமானத்துடன் கூடிய  கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் சுவாமியும் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய சந்நிதியில்  அம்மையும் காட்சி தருகிறார்கள். சுற்றுப் பிரகாரத்தில் நந்தி தட்சணாமூர்த்தி கன்னிமூலகணபதி வள்ளி தெய்வானை உடன் ஆறுமுகநயினார் என்னும் நாகசுப்ரமணியர் உள்ளார். இவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் உள்ளார்கள். முன் மண்டபம் அர்த்த மண்டபம் நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. இங்குச் சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி பக்தர்களுக்கு ஆபத்து வரும் வேளையில் அவர்களை ஆபத்திலிருந்து மீட்பதற்குத்  தயாராக உள்ளார் என்பது போல கால்களை தூக்கி எழும்புவதற்கு தயாராக இருப்பது போல் உள்ளார்.

ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஏனெனில் பழத்தை உண்பவருக்கு நித்திய இளமையையும் வலிமையையும் தரும். ஆகவே அரசன் மரத்தைப் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்தான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது. இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச் சொன்னான். கர்ப்பிணிப்பெண் வீட்டில் இருந்த பழத்தை கண்ட காவலர்கள் மன்னனிடம் அழைத்துச் சென்றார்கள். விசாரணை ஒன்றும் செய்யாமல் அரசன் அவளை கழுவேற்ற மன்னன் உத்தரவிட்டான். தான் நிரபராதி என்று எவ்வளவு சொல்லியும் அவளது பேச்சை யாரும் கேட்கவில்லை. அந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் நீதி தளைக்கும் வரை பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். பின்னர் அவளின் சாபத்தின் படியே காலப் போக்கில் ஆண்கள் யாரும் அந்த ஊரில் இல்லாமல் போனார்கள். பின்னர் ஆண்கள் இல்லாததால் பெண்களும் அவ்வூரை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களை திருமணம் செய்யவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். இவர்களின் பக்தியை இறைவன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்து அருள விரும்பினார். ஆகவே உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தை வெளிப்படுத்த எண்ணினார். இதனால் பாம்புகள் சூழ்ந்திருந்த மண் புற்றுக்கு மேல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்கள் சென்று மறைந்திருந்த இறைவன் மீது தானாகப் பாலை சொரிந்தன. அதனை கண்ட பசுவை மேய்ப்பவர்கள் இந்தச் செயலை பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னரும் அங்கு வந்து அந்த அதிசயத்தை  நேரில் கண்டு மகிழ்ந்தார். சிவபெருமானுக்கு கம்பீரமான கோவில் ஒன்றை எழுப்ப எண்ணினார். உடனடியாக அந்தப் பகுதியைச் சுத்தம் செய்து இறைவனுக்கு முறையான கோயில் கட்ட உத்தரவிட்டார். இச்செயல் இறைவனின் அருளால் கர்ப்பிணிப் பெண்ணின் சாபத்தை நிராகரிக்க முடிந்தது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நான்காவது மலர் கரை ஒதுங்கிய இடம் குன்னத்தூர். நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் நான்காவதான இக்கோயில் இராகுவுக்கு உரியது. இராகு தலம் என்றும் இராகு கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவிலின் அருகே கீழத்திருவேங்கடநாதபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலும் சற்று தொலைவில் சிறிய மலைக்குன்றின் மீது மேலத்திரு வெங்கட நாத புரம் கோவில் கோவிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் இந்தக் கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோவில் பூஜைகள் முறையாக நடைபெற வீரபாண்டிய மன்னன் 4200 ரூபாய் மதிப்புடைய பணம் கொடுத்துள்ளது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கோவிலில் நில அளவுகோல் ஒன்று உள்ளது. இது ஊரில் ஏற்படும் நிலம் சம்மந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் பாதுகாக்கப் பட்டுவரும் செப்பேடு ஒன்றில் இந்தத் திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும் இங்குள்ள இறைவனின் பெயர் திருநாகீசர் என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிடப்பட்டு உள்ளது.