மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் வெளிப்பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ள இலகுலீசர் புடைப்புச் சிற்பம் தமிழகத்திலேயே மிகவும் அரிதான ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. இலகுலீசர் சிவபெருமானின் 28 ஆவது அவதாரமாகவும் பாசுபத சைவ சமயத்தைத் தோற்றுவித்தவராகவும் வழிபடப்படுகிறார். தலையில் கரண்ட மகுடத்துடனும் மார்பில் பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார். இச்சிற்பத்தில் இலகுலீசர் தனது வலக்காலை மடித்தும் இடக்காலை தொங்கவிட்டபடியும் சுகாசன திருகோலத்தில் காட்சியளிக்கிறார். இவரைச் சிவபெருமானின் யோகநிலை வடிவம் என்றும் கூறுவர். வட இந்தியா கோயில்களில் இவரது சிற்பம் வேறு ரூபத்தில் உள்ளது.
இலகுலீசர் கிபி 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பௌத்தமும் சமணமும் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் இலிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இலகுலீசர் உருவாக்கிய சைவ சமத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது. சிவபெருமானே இலகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இலகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இலிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது. இறைவனே மானுட வடிவில் இறங்கி வந்து அவதரிப்பது காரோஹணம் என்று பெயர். அதாவது காயமாகிய உடல் எடுத்து கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது.
