சுலோகம் -122

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-3

பாவமற்ற அர்ஜூனா இந்த உலகில் இரண்டு வகைகள் கொண்ட நிஷ்டைகள் (வழி முறைகள்) முன்பு என்னால் கூறப்பட்டது. இவற்றில் உலக விஷயங்களில் ஈடுபடாமல் ஞானத்தை பிரதானமாக கொண்டவர்களுக்கு சாங்கிய யோகமும் (ஞானயோகம்) உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு கர்ம யோகமும் அமைகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகம் படைக்கப்பட்ட பின் படைக்கப்பட்ட உயிர்கள் அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பலவிதமான தன்மைகளுடன் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் தன்மைக்கு ஏற்ப மோட்சத்தை அடைய என்னால் இரண்டு வழி முறைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஞான யோகம். இந்த உலக விஷயங்களான பந்தம் பாசம் உறவு செல்வம் என்று எதிலும் ஈடுபடாமல் தான் யார் என்று ஆத்ம விசாரணை செய்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை அடைந்து மோட்சம் அடைபவர்கள். இவர்கள் ஞான யோகத்தின் வழி செல்பவர்கள். இரண்டு கர்ம யோகம். ஆசைகளின் விளைவாக உலக பற்றுகளில் மாட்டிக் கொண்டு புலன்களின் வழியாகச் சென்று உலக விஷயங்களில் ஈடுபட்டு செல்வார்கள். ஆசைகளினால் தனது புலன்களின் வழியாக அவர்கள் சென்றாலும் அதனை பற்றில்லாமல் செல்ல வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டது கர்ம யோகம் ஆகும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:

அர்ஜூனனை ஏன் பாவமற்ற அர்ஜூனா என்று கிருஷ்ணர் அழைக்கிறார்?

பாவம் உள்ளவன் இறைவனை அடைய இரண்டில் எந்த வழிமுறையிலும் செல்ல தகுதி அற்றவன் ஆகிறான். அர்ஜூனன் பாவமற்றவன் என்று சொல்வதின் வழியாக நான் செய்கிறேன் என்ற பற்றில்லாமல் கர்ம யோகத்தின் படி யுத்தம் செய்து கர்ம யோகத்தை கடைபிடித்து இறைவனை அடைய தகுதி உடையவன் என்று அர்ஜூனன் புரிந்து கொள்ளும் வகையில் கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கிறார்.

சுலோகம் -121

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-2

குழப்பமான பேச்சினால் என் புத்தியை தடுமாறச் செய்கிறாய். ஆகையால் எனக்கு நன்மையானது எதுவோ அந்த ஒன்றை தீர்மானமாகச் சொல்லுங்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வளவு நேரம் நீ என்னிடம் தெளிவாக அறிவுரைகள் சொன்னாலும் அனைத்தையும் கேட்ட என்னுடைய கூர்மையில்லாத புத்தி குழப்பம் அடைந்து உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. உன்னுடைய அறிவுரையின் படி ஞானம் கர்மம் இரண்டும் ஓரே நேரத்தில் ஒரு மனிதனால் பின்பற்ற இயலாது. இரண்டில் ஒன்றை மட்டுமே கடைபிடிக்க முடியும் என்றால் நான் எதனை கடைபிடித்தால் மோட்சம் பெறுவேன். எனக்கு சரியான வழியைச் சொல்லுங்கள் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.

சுலோகம் -120

பகவத் கீதை 3. கர்ம யோகம் முன்னுரை

சாங்கிய யோகத்தில் கர்மங்களை ஒரு கடமையாகவே செய்ய வேண்டும் என்றும் ஐம்புலன்களையும் அடக்கினால் மன உறுதி பெற்று யோக நிலையில் பரமானந்த நிலையை பெறலாம் என்றும் கிருஷ்ணர் கூறினார். ஆனால் இதன் வழியாக மோட்சத்தை அடையலாம் என்று கிருஷ்ணர் எங்கும் சொல்லவில்லை. அப்படி என்றால் அனைத்தையும் துறந்த ஞானிகளுக்கு மட்டுமே மோட்சம் கிடைக்குமா? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மோட்சம் கிடைக்காதா? என்று அர்ஜூனனுக்கு சிறிது குழப்பம் உண்டானது. ஆகையால் கர்ம யோகத்தைப் பற்றி அர்ஜூனன் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் பதில் சொல்கிறார்.

இதில் விதிக்கப்பட்ட கர்மங்களை எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? செய்தால் என்ன நன்மை? செய்யா விட்டால் என்ன தீமை? கர்மம் எவ்வாறு பந்தத்தை ஏற்படுத்தும்? அது எப்படி முக்தியை அளிக்கும்? போன்ற பல கேள்விகளுக்கும் கர்ம யோகம் பற்றிய பல கேள்விகளுக்கும் இந்த அத்தியாயத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லப்படுகிறது.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-1

சுலோகம் -120

ஜனார்த்தனா உனது கருத்தின்படி கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது என்றாகிறது. இவ்வாறு இருக்கும் போது இத்தகைய கொடிய யுத்ததில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வளவு நேரம் நீ எனக்கு உபதேசித்ததை சிந்தித்துப் பார்த்தால் உலகப் பற்றுகளில் இருந்து ஐம் புலன்களையும் விலக்கி ஐம்புலன்களையும் அடக்கி மனதை உறுதியுடன் வைத்திருந்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை பெற்று முக்தி பெறலாம் என்று சொல்கிறாய். அப்படி என்றால் நான் முக்தி அடையவதற்கு நீ ஞானம் பெறுவதற்கான வழியை தானே உபதேசிக்க வேண்டும் அதை விட்டு விட்டு இந்த கொடுமையான யுத்தத்தில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.