60. பரி நரியாக்கிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பரி நரியாக்கிய படலம் அறுபதாவது படலமாகும்.

இறைவனே குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தார் என்பதை உணர்ந்த மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனை மனதார துதித்து வழிபட்டார். அன்று சூரியன் மறைந்ததால் பகல் முடிந்து இரவின் அடையாளமாக சந்திரன் தோன்றியது. நடு இரவில் இறைவனின் திருவருளால் குதிரைகளாக மாறிய நரிகள் எல்லாம் பழைய வடிவத்தை அடைந்தன. குதிரைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவைகள் எரிச்சல் அடைந்து ஊளையிட்டன. அரிமர்த்தனனின் குதிரை லாயத்தில் கட்டியிருந்த பழைய குதிரைகளை நரிகள் கடித்துக் குதறின. குதிரைகள் வலி தாங்க முடியால் அலறிச் சாய்ந்தன. இதனால் பேரிரைச்சல் ஏற்பட்டது. குதிரை லாயத்திற்கான பணியாட்கள் பேரிரைச்சலால் கண் விழித்து நடந்தவைகளைப் பார்த்து திகைத்தனர். அரிமர்த்தனனிடம் நடந்தவைகளை கூறச் சென்றனர். அந்நேரம் நரிகள் ஆத்திரத்தில் ஊளையிட்ட வண்ணம் காட்டை நோக்கி ஓடின. நடந்தவைகளை கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதினான். ஆத்திரத்தில் தண்டல்காரர்களிடம் அக்கொடியவன் அரச பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அதனை மறைக்கவே ஏதோ மாயங்கள் செய்து குதிரைகளைக் கொண்டு வந்து அவற்றை நரிகளாக மாற்றி ஏற்கனவே இருந்த குதிரைகளையும் கொல்லச் செய்து விட்டான். ஆதலால் அவனுக்கு சரியான தண்டனை அளித்து அரசப்பணத்தை மீட்டெடுங்கள் என்று கட்டளையிட்டான்.

மாணிக்கவாசகரின் மாளிகைக்கு அரசனின் ஆணையை செயல்படுத்த தண்டல்காரர்கள் சென்றனர். அவர் அங்கு தியானத்தில் இருந்தார். அவரை எழுப்பி நடந்தவைகளைக் கூறி அவரை அழைத்துச் சென்றனர். மாணிக்கவாசகரும் அவர்களுடன் ஏதும் கூறாமல் இறைவனை எண்ணியபடி நடந்து சென்றார். தண்டல்காரர்கள் அவருடைய கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வையை ஆற்று மண்ணில் படுக்கச் செய்தனர். மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார். இறைவா இது என்ன சோதனை? என்னைக் காப்பாற்றுங்கள் என்று உருகினார். மாணிக்கவாசகரின் குரல் கேட்டு உருகிய இறைவனார் அவருக்கு அருள் செய்யும் நோக்கம் கொண்டார். இறைவனாரின் திருவருளால் வைகையில் தண்ணீர் வரத் தொடங்கியது. மழை ஏதும் பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் வருவதைக் கண்டதும் தண்டல்காரர்கள் திகைத்தனர். நேரம் செல்லச் செல்ல வைகையில் தண்ணீர் வருவது அதிகரித்து வெள்ளமாக மாறியது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தில் மட்டும் வெள்ளம் வராமல் தண்ணீராக மட்டும் வைகை ஓடியது. நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இறைவனாரின் திருவிளையாடலை எண்ணியபடி இருந்தார். நேரம் ஆக ஆக வைகையையின் வெள்ளம் கரையை உடைக்கத் தொடங்கியது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அடியவர்களின் துன்பத்தினை இறைவனார் விரைந்து வந்து தீர்ப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.