ஞானியின் குரு

மிகச் சிறந்த ஞானி ஒருவரிடம் உங்களது குரு யார் என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஞானி எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். அதில் முதலாமவர் ஒரு திருடர்.

ஒருமுறை நான் செல்லவேண்டிய கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக்கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன். நான் அவரிடம் நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர் நான் ஒரு திருடன் நீங்களோ ஒரு ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கிடைப்பது மிகவும் கடினம். நீங்கள் விரும்பினால் என் வீட்டிற்கு வரலாம். திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள் என்று அழைத்தார். நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் ஞானியை பார்த்து பயப்படாத போது ஒரு ஞானி ஏன் திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் தியானம் செய்யுங்கள் ஓய்வெடுங்கள் நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன் என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை. ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை எல்லா பிரார்த்தனைகளும் எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன். அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் தியானம் செய்யலாம் என்று நான் முயல உதவி செய்திருக்கிறது. அவர் தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. நாய் நதிக்குள் பார்த்தது. தன்னுடைய பிம்பத்தை தண்ணீரில் பார்த்து பயந்து குரைத்தது. தண்ணீரில் இருந்த நாயின் பிம்பமும் குரைத்தது. இதை பார்த்து பயந்து போய் திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்து தண்ணீரை பார்த்தது. அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது. அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். நாம் அறியாத ஒன்றை பார்த்து பயந்து பின் வாங்ககூடாது. எதிர்த்து செல்லவேண்டும். சென்ற பின்னால் அங்கு பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்துவிடும். அறியாதவற்றை கண்டு நான் பயப்படும் போது நாயின் நினைவு வரும் எதிர்த்து நிற்பேன். என் அறியாமை மறைந்துவிடும். அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது ஒரு எரியும் விளக்கை கைகளில் எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த விளக்கை ஏற்றினாய் என்று கேட்டேன். ஆமாம் என்று கூறியது குழந்தை. விளக்கு எரியாமல் இருந்தது நீ நெருப்பை வைத்தாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த குழந்தை சிரித்துவிட்டு விளக்கை ஊதி அணைத்துவிட்டு இப்போது நீங்கள் இந்த ஒளியை பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது. எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அனைத்தும் அறிந்தவன் என்ற எண்ணத்தை விட்டு விட்டேன். எனக்கு எப்போதெல்லாம் அனைத்தும் தெரியும் என்கின்ற எண்ணம் வருகின்றதோ அப்போதெல்லாம் இந்த குழந்தையை எண்ணிக்கொள்வேன் என்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.