அரசாட்சி முறை

பாடல் #247: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

விளக்கம்: உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு தண்டனைகளை தாங்கும் பக்குவத்தை கொடுத்து பின் தண்டனைகளையும் கொடுத்து மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்யாதபடி அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – திருக்குறள்

விளக்கம்: குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அது நிகழாதவாறு தகுந்த தண்டனை வழங்குவதே அரசனின் கடமை ஆகும்ஆகும்

கோர்ட்டில் ஒரு திருடன் திருட்டு வழக்கிற்கான நிறுத்தப்பட்டான். அவனிடம் நீதிபதி திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வருகிறாயே நீ திருந்தவே மாட்டியா? என்று கேட்டார். எத்தனை தடவை திருடினாலும் அதே தண்டனையே கொடுக்கறீர்கள் நீங்கள் சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா? என்றான் திருடன். நீதிபதி யோசித்தார். அவனின் கேள்வி நியாயமாகப்பட்டது. திருடனை சிறைச்சாலைக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்த நீதிபதி அவருக்கு சில கட்டளைகளை கொடுத்தார்.

நீதிபதியின் கட்டளைப்படி ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த பத்துப் பேரை திருடனின் ஜெயில் அறையில் வைத்தார். திருடனிடம் வந்த ஜெயிலர் இந்த அறையில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த அறைக்கு அருகில் ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு என்றார். திருடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். ஜெயிலர் மற்ற பத்து பேரைத் தனியாக அழைத்தார். திருடன் வேலை செய்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு சாப்பிட கேண்டின் செல்லும் வழியில் அவனிடம் உள்ள பணத்தை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினமும் இந்த வேலையைச் செய்யணும். யார் எப்ப எப்படி பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது என்றார். அவர்கள் ஜெயிலரின் கட்டளையை ஏற்றார்கள். முதல் நாளே திருடன் பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் உணவு தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் சிறிதளவு உணவு சாப்பிடக் கொடுத்தார்கள். அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டு பரிதாபப்பட்டாலும் வேறு வழியில்லை. அவனின் பணத்தை திருடா விட்டால் ஒன்பது பேருக்கும் உணவு கிடைக்காது. பத்து பேர் பட்டினியில் கிடப்பதை விட ஒருத்தன் பட்டினி கிடப்பது பரவாயில்லை என்று அனைவரும் அமைதியாக இருந்து விட்டார்கள். தினமும் இப்படியே நாள் கடந்தது. தினமும் அவர் எவ்வளவு வேலை பார்த்து சம்பாதித்தாலும் அவனுக்கு கிடைத்தது உயிர் வாழத் தேவையான ஒரு வேளை சிறிதளவு உணவு மட்டும். அவன் விடுதலை ஆகும் நாள் வந்தது.

நீதிபதி அன்று திருடன் இருக்குமிடம் வந்தார். நீ கேள்வி கேட்டபடி சட்டத்தையோ தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது? என்றார். ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு வினாடியில் திருடிக்கொண்டு செல்வது எவ்வளவு அக்கிரமம்னு இப்போது புரிகிறது. இனி திருட எனக்கு மனசு வராது என்றான் திருடன். மற்ற பத்து திருடர்களும் திருடன் பசியில துடிப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. செத்தாலும் இனிமேல் திருட மாட்டோம் என்றார்கள்

நீதிபதி திருமந்திரம் மற்றும் திருக்குறளில் வள்ளுவர் சொன்னதை இங்கு செய்தார்.

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.