ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -30

பரத்வாஜ முனிவர் சிரித்தார். பரதா உன் உள்ளம் எனக்கு தெரியும். ரகு வம்சத்தில் பிறந்த உன்னை நான் அறிவேன். ராமரிடத்தில் நீ வைத்துள்ள பக்தி அன்பு இன்று போல் என்றும் உறுதியாக உன் உள்ளத்தில் இருந்து உன் புகழ் வளர்ந்து ஓங்குவதற்காகவும் உன்னுடைய குணத்தை உலகிற்கு காட்டி உன் பெருமையை உலகம் அறிந்து கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டேன் வருத்தப்பட வேண்டாம். ராமர் சித்திரக்கூட மலையில் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செல்வதற்கான வழியை சொல்கின்றேன். இன்று இரவு இங்கு தங்கியிருந்து உன் களைப்பை தீர்த்துக்கொள். நாளை காலை இங்கிருந்து கிளம்பி ராமரை சந்திக்க செல் என்றார். அதற்கு பரதன் முனிவரே தாங்கள் எனக்கு இப்போது அளித்த வரவேற்பு விருந்தில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிட்டேன். மேலும் தங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை ஆகவே கிளம்புகின்றேன் என்றார்.

பரதா உன் பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரம் செய்ய கடமைபட்டிருக்கின்றேன். நீ இன்று இரவு இங்கேயே தங்க வேண்டும். நீ இன்று தங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். உன்னுடைய படை பரிவாரங்கள் ஏன் தூரத்திலேயே இருக்கின்றது. அவர்களை ஏன் உள்ளே அழைத்துவரவில்லை என்று கேட்டார். படைபரிவாரங்கள் ரிஷிகளின் ஆசிரமத்திற்கு அருகில் செல்லக்கூடாது என்ற நியமப்படி இங்கே அழைத்து வரவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இங்கு அழைத்து வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன் என்றான். அதற்கு பரத்வாஜ முனிவர் அனைவரையும் இங்கே அழைத்துவா என்று கேட்டுக்கொண்டார். பரதனும் அவ்வாறே உத்தரவிட்டான். அனைத்து படைகளும் ஆசிரமத்திற்குள் நுழைந்தது. பரத்வாஜ முனிவர் மந்திரங்களை சொல்லி மயன் வருணன் குபேரன் அக்னி முதலிய தேவர்களை வரவழைத்து பரதனின் படைகளுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வீர்களாக என்று கேட்டுக்கொண்டார்.

காட்டிற்குள் உடனடியாக அற்புதங்கள் நிகழ்ந்தது. எண்ணிலடங்காத செல்வத்தை வைத்திருக்கும் ஒரு மன்னன் மற்றோரு மன்னருக்கு விருந்தளிப்பது போல் காட்டிற்குள் ஒரு கணத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின. சந்தனம் புஷ்பம் வாசனை திரவியங்களுடன் அவரவர்களுக்கு தகுந்தார் போல் வீடுகள் அமைந்தது. அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் வந்தது. தெய்விக ரீதியில் சங்கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படை பரிவாரங்கள் தங்களை மறந்து அனைத்தையும் அனுபவித்தார்கள். இதற்கு மேல் நாம் காட்டிற்குள் செல்ல வேண்டாம். அயோத்திக்கும் செல்ல வேண்டாம். இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணினார்கள். தேவலோக நந்தவனத்தில் இருப்பதைப்பொன்று உணர்ந்தார்கள். எல்லைமீறி அனுபவித்தும் மெய்மறந்தும் தூங்கிவிட்டார்கள். காலை விடிந்ததும் இரவில் நடந்தது கனவு போல் அங்கிருந்த அனைத்தும் மறைந்து விட்டது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -29

குகன் கேள்வி கேட்ட பாவனையில் இருந்து அவன் ராமரின் மேல் வைத்திருக்கும் அன்பை உணர்ந்தான் பரதன். கைகேயி செய்த சூழ்ச்சியால் ராமருக்கு தான் விரோதி போல் அனைவராலும் பார்க்கப்படுவதை தெரிந்து கொண்டான். பரதனுடைய உடம்பெல்லாம் வியர்த்தது. தந்தை இறந்த துக்கத்துடனும் ராமர் பிரிந்த துக்கத்துடனும் இருந்த பரதன் குகனின் வார்த்தையால் மேலும் வேதனைப்பட்டு உடலெல்லாம் எரிவதை போன்று உணர்ந்தான். குகனே நீங்கள் சந்தேகப்படவேண்டாம். தந்தையை இழந்த எனக்கு மூத்தவரான ராமர் தந்தையாவார். அவரை எப்படியாவது அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றேன். தெய்வத்தின் மீது ஆணையாக சொல்கிறேன். என் உள்ளத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லை என்றான். ராமர் மேலிருந்த அன்பும் ராமரை பிரிந்த துக்கமும் பரதனின் முகத்திலும் பேச்சிலும் கண்ட குகன் உள்ளம் பூரித்தான். தானாக வந்த ராஜ்யத்தை வேண்டாம் என்று துறந்த தங்களை போன்ற மகானை பார்ப்பதில் பெருமை கொள்கிறேன். உங்களை சிரமம் இல்லாமல் அழைத்துச் செல்கிறேன் என்று கங்கை கரையை பரதனின் பெரும் படைகள் கடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான் குகன்.

கங்கை கரையை பெரும் படைகள் கடந்தது பெரிய படகுத் திருவிழாவைப் போல் இருந்தது. கரையை கடக்கும் போது ராமர் எங்கு சாப்பிட்டார். எங்கு தங்கினார் என்ன சொன்னார் என்று குகனிடம் கேட்டுக்கொண்டே பரதன் பயணித்தான். குகனும் ராமர் அமர்ந்த இடம் உணவருந்திய இடம். இரவு களைப்பாறிய இடம் என்று அனைத்தையும் காட்டிக்கொண்டே சென்றான். லட்சுமணனை பற்றி கேட்டான் பரதன். இரவு முழுவதும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலிருந்து லட்சுமணனும் தானும் பேசிக்கொண்டிருந்ததை விவரித்தான் குகன்.

காட்டின் நடுவே ரம்யமான சோலையும் மத்தியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் இருந்ததை கண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் என்பதை உறுதி செய்து கொண்டு தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு பரதன் வசிஷ்டர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்றனர். பரத்வாஜ முனிவரை பரதன் வணங்கினான். வந்தவர்கள் யார் என்பதை அறிந்த பரத்வாஜ முனிவர் வசிஷ்டருக்கும் பரதனுக்கும் செய்ய வேண்டிய வரவேற்பு உபசாரத்தை முறைப்படி செய்து முடித்து அவர்கள் ராமரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டார்.

பரத்வாஜ முனிவர் பரதனிடம் உன் பொறுப்பு அயோத்தியில் இருக்கின்றது அதை விட்டுவிட்டு நீ ஏன் இங்கு வந்திருக்கின்றாய். உனது தாயின் வரத்தின் படி தசரதர் ராமரை காட்டிற்கு அனுப்பிவிட்டார். அவருடன் சீதையும் லட்சுமணனும் இப்போது காட்டில் வசித்து வருகின்றார்கள். ராமரால் உன்னுடைய ராஜ்யத்திற்கு மேலும் ஏதாவது இடையூறு இருக்கின்றதா அதனை தீர்த்துக் கொள்ள அவரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றாயா என்று கேட்டார். இதனைக் கேட்ட பரதன் தாங்களும் என்னை சந்தேகப்பட்டு விட்டீர்களா? என்னைப் பெற்றவள் நான் இல்லாத போது என் சம்மதம் இல்லாமல் இக்காரியத்தை செய்துவிட்டாள். எப்படியாவது ராமரை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவரை அரசராக்கி என் ஆயுளுக்கும் அவருக்கு அடிமையாக இருந்து என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கிக் கொள்ளவே தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன் என் மீது குற்றம் சொல்லாதீர்கள் என்று கதறி அழுதான் பரதன்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -28

பரதன் தன்னுடன் வந்த கூட்டத்துடன் முதலில் கங்கை கரையை அடைந்தான். சுமந்திரன் பரதனிடம் இங்கு தான் ராமர் ரதத்தில் இருந்து இறங்கி என்னை அயோத்தி திரும்பி செல்லுமாறு உத்தரவிட்டார். கரைக்கு அப்பால் இருக்கும் பிரதேசத்தின் தலைவராக குகன் என்பவர் இருக்கின்றார். அவரிடம் கேட்டால் ராமர் செல்லும் பாதையை காட்டுவார் என்று கூறினான்.

கங்கை கரைக்கு எதிர்புறம் இருந்த குகன் அக்கரையில் பெரும்படை தங்கியிருப்பதை பார்த்தான். தன் அருகில் இருப்பவர்களிடம் பெரும் படை ஒன்று அக்கரையில் இருக்கிறது அவர்கள் இக்கரைக்கு வர முயற்சி செய்வது போல் தெரிகிறது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நம்முடன் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று உத்தரவிட்டான். குகனின் கண்களுக்கு அந்த கூட்டத்தின் கொடி தென்பட்டது. அக்கொடி அயோத்தி நாட்டின் கொடி என்பதை அறிந்த குகன் ராமருக்கு சொந்தமான ராஜ்யத்தை அடைந்தது மட்டுமல்லாமல் ராமரை கொல்லவும் பெரும் படையுடன் வந்திருக்கின்றான் பரதன் என்று அவன் மீது சந்தேகம் அடைந்தான் குகன். தன்னுடன் இருந்தவர்களிடம் நம்முடைய அனைத்து வீரர்களையும் ஆயுதங்களுடன் போருக்கு தாயார் நிலையில் இருக்க சொல்லுங்கள். நல்ல எண்ணத்துடன் இவர்கள் ராமரை தேடி வந்தால் கங்கை கரையை கடக்க இவர்களுக்கு உதவி செய்வோம். ராமரை கொல்லும் எண்ணத்துடன் வந்திருந்தால் இவர்கள் கங்கையை கடக்க விடக்கூடாது. இங்கேயே தடுத்துவிட வேண்டும் என்று தனது சகாக்களுக்கு உத்தரவிட்டான் குகன். பரதனின் மன நிலையை அறிந்து கொள்ள சிறிய படகில் குகன் பரிசுப்பொருட்களுடன் பரதனை சந்திக்க சென்றான்.

குகன் படகில் வருவதை பார்த்த சுமந்திரன் பரதனிடம் வருபவர் இப்பிரதேசத்தின் தலைவர். இவரது பெயர் குகன். ராமரிடம் நிறைய அன்பு வைத்திருப்பவர். நம்மை வரவேற்க வருகின்றார். இவருடைய குலத்தவர்களுக்கு அக்காட்டின் அனைத்து இடங்களும் மிகவும் நன்றாக தெரியும். ராமர் சென்ற இடத்தை இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவரின் ஆலோசனைப்படி சென்றால் விரைவாக நாம் ராமர் இருக்கும் இடம் சென்று அடையலாம் என்றான். நதியை தாண்டிய குகன் பரதனுக்கு வணக்கம் செலுத்தினான். எனது பொருள்கள் எல்லாம் உங்களுடையதாக பாவித்து என்ன வேண்டும் என்று கேளுங்கள். தங்களது தேவையை என்னால் இயன்ற வரை நிறைவேற்றுகின்றேன். ராமரின் தம்பியான தங்களுக்கு பணி செய்வது எனது பாக்கியம் என்றான் குகன். அதற்கு பரதன் ராமரை தேடி வந்திருக்கின்றோம். அவர் இருக்கும் இடத்திற்கு நாங்கள் அனைவரும் செல்ல வேண்டும். எங்களுக்கு கரையை கடக்க உதவி செய்து ராமர் தற்போது இருக்கும் இருப்பிடம் எங்கே இருக்கிறது. எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும் என்றான் குகனிடம்.

கங்கை கரையை கடக்க தங்களுக்கு உதவி செய்து ராமர் சென்ற பாதையை காட்டுகின்றோம். ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கின்றது. இவ்வளவு பெரிய படையுடன் ராமரை தேடி வந்திருக்கின்றீர்கள். எதற்காக இவ்வுளவு பெரிய படை என்ற சந்தேகத்தை தாங்கள் தீர்த்து வைத்தால் காலதாமதமின்றி இப்போதே தங்களுக்கு தேவையானதே செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -27

வசிஷ்டரும் மந்திரிகளும் அரச சபையை முறைப்படி கூட்டினார்கள். பரதனுக்கு தூது அனுப்பி பரதனை அரசவைக்கு வரவழைத்தார்கள். நாதம் சங்குகள் முழங்க பரதனை வரவேற்றார்கள். நிறுத்துங்கள் அனைத்தையும் என்று பரதன் கத்தினான். சத்ருக்கனனை பார்த்து ராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு என்னை ஏன் இவ்விதம் துன்புறுத்துகிறார்கள். தாய் செய்த சூழ்ச்சியால் இந்த நாடு நல்ல அரசரை இழந்து தவிக்கிறது இதில் எனக்கு இந்த வரவேற்பு தேவையா என்று சொல்லி துக்கப்பட்டான். வசிஷ்டர் பரதனிடம் நாடு அரசன் இல்லாமல் இருக்ககூடாது நாட்டிற்கு அது நல்லது இல்லை. ராமரும் லட்சுமணனும் தற்போது இல்லை. ஆகவே தாங்கள் அரச பட்டத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் அரசராக முடிசூட்டிக்கொள்ளுங்கள் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் தங்கள் தந்தை இருக்கும் போதே ராமருக்காக செய்து வைத்திருந்தார். இப்போது அந்த ஏற்பாட்டின் படி நீங்கள் பதவி ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை காப்பாற்றுங்கள் என்று கூறினார். சபையோர்கள் இதனை ஆமோதித்தார்கள். அனைத்தையும் கேட்ட பரதன் பட்டாபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாக குண்டம் மற்றும் யாக பொருட்களை வலம் வந்து அனைவரையும் வணங்கினான்.

சபையில் கூடியிருந்த அனைவருக்கும் ஒரு செய்தி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். நான் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன். இக்ஷ்வாகு வம்சத்தின் குலத்தின் பண்பாட்டை அறிந்து கொண்டவன். இந்த இக்ஷ்வாகு குல வழக்கப்படி மூத்தவரே அரசனாக மூடிசூடிக் கொள்ளவேண்டும். மூத்த குமாரனுக்கு உரிமையான ராஜ்யத்தை என்னை எற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துகின்றீர்கள். குல வழக்கத்திற்கு மாறாக நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உரிமையற்ற பதவியை நான் ஏற்க மாட்டேன். இந்த ராஜ்யத்தை ஏற்க தகுதியானவர் ராமர் ஒருவரே. இக்ஷ்வாகு குல மூதாதையர்களான தீலிபன் நகுஷன் போன்ற பலருக்கு சமமானவர் இவர். இக்ஷ்வாகு குலத்தின் மூத்தவரான ராமர் மற்றும் சீதை லட்சுமணன் இப்போது வனத்தில் இருக்கிறார்கள். இங்கிருந்தே வனத்திலிருக்கும் ராமரை வணங்குகின்றேன். ராமருக்கு வனத்திலேயே முடிசூட்டி அயோத்திக்கு அரசனாக்கி அரண்மனைக்குள் அழைத்துவரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். இதற்கு வேண்டிய பரிவாரங்களை திரட்டி வனத்திற்குள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள். இது உங்களுடைய கடமை. இதுவே என்னுடைய முடிவு என்று தீர்மானமாக சொன்னான். பரதன் கூறியதை கேட்ட அனைவரும் தங்களையும் அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

சுமந்திரனை பார்த்த பரதன் ராமர் சென்ற வனத்திற்கு செல்லும் ஏற்பாட்டை உடனே செய்வாயாக என்று கட்டளையிட்டான். பரதனுடைய யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை விரைவாக செய்ய ஆரம்பித்தார்கள். வனப்பிரதேசத்தை நன்கு அறிந்தவர்கள். காட்டு வழியில் மிருகங்களை தாண்டி செல்ல பயிற்சி பெற்றவர்கள். கரையை கடக்க படகு செய்யத்தெரிந்தவர்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக யாகம் செய்ய அந்தணர்கள். அனைத்து பொருட்களையும் சுமந்து செல்ல பணியாளர்கள் என்று பெரும் கூட்டத்துடன் பரதன் தலைமையில் புறப்பட்டார்கள். மக்கள் அனைவரும் ராமரை பரதன் எப்படியாவது அழைத்து வந்துவிடுவார் என்று நம்பினார்கள். ராமன் இப்போதே அயோத்திக்கு வந்துவிட்டதை போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -26

பரதன் வந்துவிட்டான் என்ற செய்தி அரண்மனை முழுவதும் பரவியது. பரதன் வந்து விட்டதை அளிந்த கௌசலை சுமத்ரையை அழைத்துக்கொண்டு பரதனை பார்க்க புறப்பட்டாள். அப்போது பரதனும் சத்ருக்கனனும் அங்கு வந்து சேர்ந்தான். ராஜ்ஜியம் தனக்கு எளிதில் கிடைத்துவிட்டது என்று எண்ணி பரதன் கேகய நாட்டில் இருந்து பட்டாபிஷேகம் செய்து அரசனாக முடிசூட்டிக்கொள்ள விரைந்து வந்துவிட்டான் என்று கௌசலை எண்ணினாள். கோபத்தில் பரதனிடம் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் உனக்கு அரச பதவியை கைகேயி பெற்றுக் கொடுத்துவிட்டாள். அதனை ஏற்றுக்கொண்டு சுகமாக வாழ்வாய். உனது தந்தையை எரியூட்டும் நெருப்பில் வீழ்ந்து நானும் அவருடன் மேலுலகம் சென்றுவிடுகிறேன். இங்கு நீயும் உனது தாயும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று புலம்பினாள்.

கௌசலையின் கொடிய விஷம் போன்ற பேச்சைக்கேட்ட பரதன் வேதனையில் கௌசலையின் காலைப்பிடித்தான். தாயே நான் கேகய நாட்டில் வெகு தூரத்தில் இருந்தது தங்களுக்கு தெரியும். இங்கு நடந்த கொடூரமான சூழ்ச்சி நான் அறியாமல் நடந்துவிட்டது. நான் அண்ணன் ராமர் மேல் நான் வைத்திருக்கும் அன்பை தாங்கள் அறிவீர்கள். இந்த பாவச்செயலில் எள் அளவிற்கு என் பங்கு இருந்தாலும் நான் பெற்ற சகல அறிவும் ஞானமும் என்னை விட்டுப்போகட்டும். இந்த உலகத்தில் யார் எந்த பாவம் செய்தாலும் அதனுடைய கர்ம்பலன் என்னேயே வந்து சேரட்டும். சத்தியம் செய்கிறேன் தாயே. நடந்தவைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பெற்ற தாய் செய்த சூழ்ச்சி எனக்கு தெரியாது. இந்த சூழ்ச்சிக்கு நான் உடன்பட மாட்டேன். அரச பதவியை ஏற்க மாட்டேன். அண்ணன் ராமரை மீண்டும் அழைத்து வந்து அவரையே அரசனாக்குவேன். ஒரு பாவமும் அறியாத என்னை துன்பப்படுத்தாதீர்கள் என்று சொல்லி மயக்கம் அடைந்தான்.

பரதனின் மயக்கத்தை தெளிவித்த கௌசலை பரதனின் உள்ளத்தை அறிந்தாள். பரதனைப்பற்றி தான் எண்ணியது தவறு என்பதையும் உணர்ந்தாள். பரதனைப்பார்த்து அன்புக்குரிய மகனே உன்னுடைய துக்கத்தை பார்த்து என் மனம் இரண்டு மடங்கு துக்கமடைகிறது. உன் எண்ணத்தை புரிந்து கொண்ட என்னுடைய துக்கம் எனக்கு சிறிதளவு குறைகிறது. நடந்தவைகளுக்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது. விதிக்கு வசப்பட்டவர்களாக இருக்கிறோம். புண்ணியவான்களுடைய பதவிகள் எல்லாம் உன்னை வந்து அடையட்டும் என்று ஆசிர்வதித்தாள்.

பரதன் வசிஷ்டரை சந்தித்து தன் தந்தைக்கான காரியங்களை விரைவில் செய்து முடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தசரதரின் இறுதிக்காரியத்தை மன்னனுக்குரிய முறைப்படி செய்து முடித்தார்கள். தந்தையை எண்ணி அழுது புலம்பிய பரதன் சத்ருக்கனனை வசிஷ்டர் மற்றும் பல அறிஞர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள்.

தொடரும்……..

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -25

பரதனுக்கு என்ன நடந்தது என்று இப்போது புரிந்துவிட்டது. கோபத்தில் கைகேயியை பார்த்து கர்ஜிக்க ஆரம்பித்தான். பொல்லாத பாதகியே உனக்குரிய வரங்களால் என்ன காரியத்தை செய்துள்ளாய் தெரியுமா? இக்ஷ்வாகு வம்சத்தில் மூத்த மகன் அரசனாக முடிசூட வேண்டும் என்பது நம்முடைய பரம்பரை பாரம்பரியமாகும். புனிதம் வாய்ந்த அந்த பாரம்பரியத்திற்கு கேட்டை வரவழைத்திருக்கிறாய். பதவி மோகம் உன்னுடைய அறிவை பாழ்படுத்திவிட்டது. உன்னை அன்புக்குரிய மனைவியாக்கி எனது தந்தை பெரும் தவறு செய்துவிட்டார். அவர் உன் மேல் வைத்த அன்பிற்கு கைமாறாக அவரை கொன்றுவிட்டாய். ராமன் தன் தாயை விட உன்னையே அதிகம் நேசித்தான். உனக்கு பல பணிவிடைகளை செய்திருக்கின்றான். ராமரும் உனக்கு செய்த பணிவிடைகளுக்கு கைமாறாக அவனை காட்டிற்கு அனுப்பிவிட்டாய்.

உன்னை தங்கை போல் பாவித்த கௌசலைக்கு மாபாதக கொடுமையை செய்திருக்கின்றாய். ஒரு மகனைப்பெற்ற அவளை அனாதையாக்கிவிட்டு நீ உன் மகனுடன் சுகவாசியாக வாழலாம் என்று எண்ணுகிறாயா? உன் எண்ணம் கனவிலும் நிறைவேறாது. நீ செய்த பாவச்செயலுக்கு தண்டனையாக உன்னை கொன்று தள்ளுவதே முறை. ஆனால் உன்னை கொல்வதை எனது அண்ணன் ராமர் ஆமோதிக்கமாட்டான். அதனை முன்னிட்டு உனக்கு உயிர் பிச்சை தருகிறேன். நீ நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவாதவள். கெட்ட வழியில் சென்று தருமத்தை கைவிட்டவள். என் தந்தை சென்ற சொர்க்கம் உனக்கு கிடைக்காது. உனக்கு நரகமே கிடைக்கும். நீ பெரும் துக்கத்தை அடைந்து மரணத்தை பெருவாய் இது நிச்சயம்.

இந்த உலகத்தை ஆள்வதற்கு மகா பராக்கிரமசாலியான என் தந்தை ராமர் மற்றும் லட்சுமணனையே தனது பக்க பலமாக கருதினார். அவர்களை காட்டிற்கு அனுப்பிவிட்டு என்னை அரசனாக சொல்கிறாயே. இவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆள என்னால் முடியுமா. உன் ஆசை ஒரு நாளும் நிறைவேறாது. அதை நிறைவேற்றவும் மாட்டேன். எனக்கு ராஜ்யத்தை பெற்றுக்கொடுத்து விட்டதாக இன்பத்தில் மிதக்கிறாய். உன் முன்னிலையில் சபதம் செய்கிறேன் கேட்டுக்கொள். ராமன் இல்லாத அயோத்தியில் பரதன் இருக்க மாட்டான். ராமன் அரச உடையை களைந்து தபஸ்விகளுக்கான உடையை அணிந்து கொண்டிருப்பதை போல் நானும் அதே உடையை அணிந்து கொள்வேன். தந்தைக்கான கடமையை செய்து முடித்துவிட்டு ராமரை தேடிக்கொண்டு காட்டிற்கு செல்வேன். ராமரை அழைத்து வந்து அரசனாக்கி இந்த ராஜ்யத்தை அவரிடம் ஒப்படைத்து அவருக்கு அடிமையாக இருந்து நீ எனக்கு தேடித்தந்த பழியை போக்கிக்கொள்வேன். ராட்சசியே உன்னுடைய மகன் பரதன் என்ற எண்ணத்தை இப்போதே மறந்துவிடு. இவ்வளவு பெரிய பாவச்செயல் புரிந்த உன்னை என் தாயாக நான் ஏற்க முடியாது. தாய் என்ற ஸ்தனத்தில் இருந்து நான் உன்னை துறந்துவிட்டேன். கௌசலையும் சுமத்ரையுமே என் தாய் அவர்களை பார்க்க நான் செல்கிறேன். என்னை இனி நீ பார்க்கமுடியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பரதன்.

தொடரும்…….

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -24

பரதன் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தன் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலேயே கைகேயி பதில் சொன்னாள். ராமனும் லட்சுமணனும் சீதையும் திரும்பி வருவதை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள். எனக்கு அந்த கொடுப்பனை இல்லை என்று ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் இரவு நேரத்தில் தூக்கத்திலேயே இறந்து விட்டார். யாருக்கும் கடைசி காலத்தில் எதுவும் சொல்லவில்லை என்றாள். பரதன் பதறினான் பரதனின் துக்கம் இருமடங்கானது. தந்தையின் இறுதி காலத்தில் அண்ணன் இல்லையா எங்கே சென்று விட்டார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று பதற்றத்துடன் கேட்டான். பரதனை சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தாள் கைகேயி.

ராமனும் லட்சுமணன் சீதை மூவரும் உன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தவம் செய்யும் பொருட்டு வனத்திற்கு பதினான்கு ஆண்டுகள் சென்றுவிட்டார்கள். பரதன் மேலும் பதற்றமடைந்தான். என்ன தவறு செய்தார் அண்ணன். நிரபராதிகள் யாருக்கும் தண்டனை கொடுத்துவிட்டாரா? பிராமணர்கள் சொத்துகள் ஏதேனும் அபகரித்துவிட்டாரா? அண்ணன் சத்தியத்தை கடைபிடிப்பவர் அவர் தவறு செய்திருக்க மாட்டார். எதற்கான வனவாசம் போகவேண்டும். வேறு யாரோ தவறு செய்திருக்கிறார்கள் ஏதோ சூழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த அக்கிரம காரியத்தை செய்ய வைத்தது யார்? என்ன நடந்தது சொல்லுங்கள் என்று பதறினான்.

அதற்கு கைகேயி ராமர் எந்த தவறும் செய்யவில்லை. உன் தந்தை ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்க முடிவு செய்தார். அதற்கான செயலிலும் விரைவாக ஈடுபட்டார். வசிஷ்டரிடம் ஆலோசனை செய்து பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். உன்னுடைய நலனை கருத்தில் கொண்டு உன்னை அரசனாக்க முடிவு செய்தேன். உன் தந்தை பல காலங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் அளித்திருந்தார். அந்த வரத்தை இப்போது நான் கேட்டு பெற்றுக்கொண்டேன். ஒரு வரத்தின்படி ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய நிர்ணயித்த தினத்தன்று உனக்கு பட்டாபிஷேகம் செய்து உன்னை அரசனாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதனால் உனக்கு ராமரினால் பாதிப்பு ஏதும் வந்து விடக்கூடாது என்று எண்ணி நாடு கடத்தும் முயற்சியாக இரண்டாவது வரமாக ராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கேட்டேன். இரண்டாவது சத்தியத்தை உனது தந்தை நிறைவேற்ற முடியாமல் தவித்தார். அதனை அறிந்த ராமர் தந்தை கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வனம் செல்ல முடிவு செய்தான். ராமரை தொடர்ந்து சீதையும் லட்சுமணனும் வனத்துக்கு சென்றுவிட்டார்கள்.

இவை அனைத்தையும் உனக்காகவே செய்தேன் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்து செயலபடு. துக்கப்படாதே மனதை நிலையாக வைத்துக்கொள். நீ சத்திரிய வீரன். தந்தை கையினால் ராஜ்யத்தை பெற்ற அரசகுமாரன் நீ. இந்த நாடும் ராஜ்யமும் இப்போது உன்னுடையது. வசிஷ்டரின் ஆலோசனை பெற்று உன் தந்தையின் இறுதி காரியத்தை செய்து முடித்துவிட்டு பட்டாபிஷேகம் செய்துகொண்டு அரச பதவியை பெற்று சுகங்களை அனுபவிப்பாய் என்றாள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -23

பரதனும் சத்ருக்கனனும் அயோத்திக்குள் நுழைந்ததும் கண்ட காட்சி அவர்களை பயம் கொள்ளச்செய்தது. எப்போதும் கலகலவென்று மகிழ்ச்சியுடன் மங்கள வாத்தியங்களுடன் இருக்கும் அயோத்தி நகரம் இப்போது துக்கத்துடன் அமைதியாக இருந்தது. பார்க்கும் அனைவரது முகங்கிளிலும் துக்கமே தென்பட்டது. கவலையை அடக்க முடியாமல் இருவரும் விரைவாக அரண்மனை கோட்டை வாயிலுக்குள் நுழைந்தார்கள். அரண்மனை அலங்காரமில்லாமலும் சரியாக மெழுகி கோலமிடாமலும் இருந்தது. அனைவரும் துக்கத்தில் சாப்பிடாமல் பட்டியினியில் இருந்தது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. நடக்கக்கூடாத விபரீதம் எதோ நடத்துவிட்டது என்பதை இருவரும் புரிந்து கொண்டார்கள். தசரதரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கு தசரதர் இல்லை. கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். பரதனைக்கண்டதும் கைகேயி ஒடிவந்து கட்டி அணைத்தாள். கைகேயியிடம் வீழ்ந்து வணங்கினான் பரதன்.

பரதனிடம் மகாராஜாவாக இருப்பாயாக என்று ஆசிர்வதித்தாள். என்ன ஆயிற்று இங்கு ஏன் அனைவரும் துக்கத்தில் இருக்கின்றார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தூதுவர்கள் அவசரமாக வர வேண்டும் இது வசிஷ்டர் ஆணை என்று சொன்னபடியால் விரைவாக வந்திருக்கின்றோம். அயோத்தி நகரம் முழுவதும் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது. தந்தையை சந்திக்க அவரது மாளிகைக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. அவருக்கு எனது வணக்கத்தை செலுத்த வேண்டும் அவர் எங்கிருக்கின்றார். என்ன நடந்தது. நடந்தவற்றை கூறுங்கள் என்று கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தான் பரதன்.

உன் தந்தை உலகத்தில் பிறப்பவர்கள் அடைய வேண்டிய சுகபோகங்களை அனைத்தையும் அனுபவித்துவிட்டார். பெரும் பாக்கியவானான அவர் பெரும் புகழை பெற்றார். செய்ய வேண்டிய பெரும் வேள்விகள் அனைத்தையும் செய்து முடித்தார். இந்த மண்ணுலகில் உடல் எடுப்பவர்கள் எல்லாம் இறுதியில் சென்று சேர வேண்டிய இடத்திற்கு உன் தந்தை சென்றுவிட்டார் என்றாள். தந்தை மடிந்தார் என்ற செய்தி கேட்டதும் குழந்தை போல் தரையில் வீழ்ந்து கதறிபதறி அழுதான் பரதன். அவனிடம் கைகேயி இந்த வையகத்தை ஆளும் அரசன் ஒருவன் இறந்தவர்களை எண்ணி இப்படி தரையில் விழுந்து புலம்ப கூடாது. அது அரசனுக்கு அழகில்லை. தருமமும் வேள்வியும் செய்யும் பதவியில் அமரப்போகிறாய். உன் முகம் சூரியனைப்போல் ஜோதியாக பிரகாசிக்கறது. உனக்கு ஒரு குறையும் இல்லை. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள ராஜ பதவியை ஏற்றுக்கொண்டு இந்நாட்டை ஆள்வாயாக. மனக்கலக்கத்தை விட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்து நில் என்றாள். பரதனுக்கு கைகேயி கூறியதன் பொருள் புரியவில்லை.

என்னுடைய சகோதரன் ராமருக்கு நான் வந்து விட்ட செய்தியை அனுப்புங்கள். அறம் அறிந்த அண்ணன் தந்தைக்கு சமமானவர். வணக்கத்திற்குறிய அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்றான். இனி எனக்கு அவர் தான் புகலிடம் என்றான். மேலும் நான் திரும்பி வருவதற்கு முன்பாகவே உயிர் போகும்படியாக என்ன நோய் தந்தையை பீடித்தது. அவர் இறப்பதற்கு முன்பாக ஏதேனும் ஆணையிட்டிருந்தால் சொல்லுங்கள். அதனை நான் செய்து முடிக்கிறேன் என்றான்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -22

தசரதர் கௌசலையிடம் நீ என் கண்களுக்கு தெரியவில்லை. மரணம் என்னை நெருங்குகிறது. ராமர் திரும்பி வரும் வரையில் என் உடம்பில் உயிர் இருக்காது. தபஸ்வியின் தந்தையிட்ட சாபத்திலிருந்து நான் தப்ப முடியாது. மார்பு அடைக்கிறது. கௌசலை சுமித்ரை ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இருந்த தசரதரின் வார்த்தைகள் அடங்கி மூச்சு நின்றது. அடிக்கடி தசரதர் மயக்கம் அடைவதும் பின்பு எழுவதுமாக இருந்தபடியால் அவர் உயிர் பிரிந்தது யாருக்கும் தெரியவில்லை. கௌசலையும் சுமித்ரையும் அந்தப்புரத்தில் ஓர் மூலையில் அழுதபடியே தூங்கிவிட்டனர். காலை விடிந்தது. அரண்மனை வழக்கப்படி அரசனை எழுப்ப அவரது அறைக்கு வெளியே ஊழியர்கள் இறை நாமத்தை பாடி வாத்தியங்கள் வாசித்தனர். நீண்ட நேரம் வாசித்து பாடியும் அரசன் எழுந்திருக்கவில்லை. அரசன் எழுந்ததும் அவரது தேவைக்கான பணிகளை செய்யும் பணியாட்கள் வெகுநேரம் காத்திருந்து விட்டு அரசனின் அறைக்குள் நூழைந்தனர். அரசன் உயிரற்று கிடப்பதை கண்டார்கள். அரண்மனை முழுவதும் செய்தி பரவியது. மூன்று மனைவியர்களும் துக்கம் தாங்காமல் அழுதார்கள். கௌசலை தசரதரின் கையை பிடித்துக்கொண்டு மகனும் பிரிந்து சென்றுவிட்டான். கணவரும் இறந்துவிட்டார். நான் இனி அனாதையாக உலகில் வாழதேவையில்லை ஆகவே தசரதருடன் உடன்கட்டை ஏறுவேன் என்று கதறினாள்.

ராமர் லட்சுமணனும் காட்டிற்கு சென்றுவிட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் தாத்தா வீட்டில் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அரசருடைய புதல்வர்கள் யாரும் அருகில் இல்லை. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. வசிஷ்டரிடம் செய்தியை சொல்லி அவரது கருத்துக்களை கேட்டார்கள். வசிஷ்டர் முதலில் விரைவாக செல்லும் குதிரை வீரனை பரதனிடம் அனுப்பி தசரதர் இறந்த செய்தியை சொல்லாமல் விரைவாக பரதனும் சத்ருக்கனனும் உடனே அயோத்திக்கு வரவேண்டும் இது வசிஷ்டர் உத்தரவு என்ற செய்தியை மட்டும் சொல்லுமாறு அனுப்பிவைத்தார். அடுத்து பரதனும் சத்ருக்கனனும் வரும் வரையில் தசரதரின் உடலை மூலிகை எண்ணை கொப்பரையில் போட்டு பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டார்.

அடுத்த நாள் அதிகாலையில் பரதனுக்கு சோகம் ததும்பிய கனவு ஒன்று கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். கனவைப்பற்றி மனக்குழப்பம் அடைந்தான். அதேநேரம் அயோத்தி குதிரை வீரனும் கைகய நாட்டிற்கு வந்து பரதனிடம் செய்தியை சொன்னான். கனவு கண்ட குழப்பத்தில் இருந்த பரதன் வசிஷ்டர் உத்தரவை ஏற்று சத்ருக்கனனை அழைத்துக்கொண்டு தாத்தாவிடமும் மாமாவிடமும் விடை பெறுவதற்கான நேரம் கூட இல்லாமல் உடனடியாக அயோத்திக்கு கிளம்பினார்கள். சகோதரர்கள் இருவரும் குதிரை சவாரியில் நிபுணர்கள். அயோத்திக்கு விரைந்தனர். கைகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வரும் வழியெல்லாம் சிந்தித்துக்கொண்டே இருவரும் வந்தார்கள். அயோத்தியில் எதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று இருவருக்கும் புரிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. குழப்பத்துடனேயே பயணம் செய்தனர். தந்தை தாய் அண்ணன் என்று அனைவரையும் பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமும் பயம் கலந்த குழப்பம் ஒரு புறமுமாக சிந்தித்துக்கொண்டே அயோத்தி எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -21

தசரதர் கௌசலையிடமும் சுமித்ரையிடமும் பல வருடங்களுக்கு முன்பு தான் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். சிறுவயதில் பலவகையான வில்வித்தைகளை கற்றேன். அதில் ஒன்று சத்தம் வரும் திசையை நோக்கி குறி பார்த்து அம்பு எய்வது. அதில் தேர்ச்சி பெற்றேன். ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றிருந்தேன். நீண்ட நேரம் வேட்டையாடியதில் இரவு வந்துவிட்டது. ஆற்றில் இரவு தண்ணீர் குடிக்க விலங்குகள் வரும். தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரின் சத்தத்தை வைத்து விலங்குகளை நோக்கி அம்பு செலுத்தி பரீட்சித்துப்பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஒரு யானை தண்ணீர் குடிக்கும் சத்தம் போல் கேட்டது. உடனே சத்தத்தை வைத்து குறிபார்த்து அம்பு எய்தேன். என்னுடைய அம்பு சரியான குறியை தாக்கியது. ஆஆஆ என்று ஒருவனின் சத்தம் கேட்டது. மனிதக்குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே தண்ணீர் எடுக்க வந்த என்னை கொன்று விட தீர்மானித்துவிட்டார்களே என்று பரிதாபக்குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.

அங்கு ஒரு தபஸ்வி உடல் முழுவதும் ரத்தம் படிந்த கரையோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து வீசிய ஒளி என்னை சுடும் போல் இருந்தது. என்னை யார் கொல்ல துணிந்தார்கள். நான் விரதவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது தந்தைக்கும் தாய்க்கும் கண் தெரியாது. நான் இறந்தவுடன் இனி எப்படி அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று புலம்பினான். அவர் முன்னிலையில் சென்றதும் பாவி நீயா என் மீது அம்பெய்தாய். உன்னால் நான் இறக்கப்போகிறேன். நான் தண்ணீர் கொண்டு வருவேன் என்று கண்ணில்லாத என்னுடைய தாய் தந்தையர் வீட்டில் எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். நான் இங்கே இறப்பதே என் தாய் தந்தைக்கு தெரியாமல் போய்விடும். தெரிந்தாலும் அவர்களால் இங்கு வர இயலாது. நீ யார் என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் யானை நீர் அருந்திக் கொண்டிருக்கின்றது என்று எண்ணி அம்பெய்தேன் இருட்டில் நீ தான் என்று தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்றேன். அதற்கு அவன் என்னுடைய தாய் தந்தையரிடம் சென்று அவர்களிடம் சரண்டைந்துவிடுங்கள். இல்லையென்றால் அவரின் கோபம் என்னை எரித்துவிடும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான்.

தருமப்படி அவர் சொல்வதே சரியானது என்று முடிவு செய்து அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்றேன். அவரின் பெற்றோர் மிகவும் வயோதிகர்களாகவும் நகர முடியாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் சாப பயத்தினால் மிகவும் தயங்கி அவர்களிடம் நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி உங்கள் திருஉள்ளம் எப்படியோ அதன்படி எனக்கு சாபம் கொடுங்கள் மகா பாதகத்தை செய்த நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். தந்தை பேச ஆரம்பித்தார். நீ செய்தது மிகப்பெரிய பாவம். ஆயினும் தெரியாமல் செய்தாய். தைரியமாக என்னிடம் வந்து சொல்லவும் செய்தாய். ஆகையால் பிழைத்தாய். எங்களை அங்கே அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களை அங்கே தூக்கிசென்றேன். மகனுக்குரிய சடங்குகளை செய்துவிட்டு சிதை முட்டினார்கள். நாங்கள் அனுபவிக்கும் புத்ர சோகத்தை நீயும் அனுபவிப்பாயாக என்று சொல்லிவிட்டு அவர்களும் சிதையில் இறங்கி உயிர் நீத்தார்கள். அவரின் சாபமே என்னை இந்த புத்ர சோகத்தில் தள்ளிவிட்டது. முதியவர்களுக்கு புத்ர சோகத்தை உண்டாக்கிய பாவம் இப்போது என்னை கொல்ல போகிறது என்று மயக்கமடைந்தார்.