64. சமணரைக் கழுவேற்றிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் அறுபத்தி நான்காவது படலமாகும்.

ஒரு சமயம் கடற்கரையின் அருகே இருந்த பட்டினம் ஒன்றில் வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இறைவனின் அருளால் பெண் குழந்தை பிறந்தது. அவ்வணிகருக்கு தங்கையின் மகன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கே தன்னுடைய மகளை மணம்முடிக்க இருப்பதாக வணிகர் கூறி வந்தார். சிறிது காலம் கழித்து வணிகரும் அவருடைய மனைவியும் இறைவனடி சேர்ந்தார்கள். ஆதலால் அவ்வணிகரின் மகள் தனித்து விடப்பட்டாள். வணிகர் மறைந்த சேதியானது வணிகரின் மருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவனும் மாமனின் ஊரினை அடைந்தான். சில நாட்கள் கழித்து மாமன் மகளையும் மாமனின் பொருட்களையும் எடுத்துக் கொண்டு என்னுடைய மாமன் மகளை உறவினர்கள் முன்னிலையில் மதுரையில் மணந்து கொள்வேன் என்று கூறி அழைத்துச் சென்றான். திருப்புறம்பியத்தை அடைந்த போது திருக்கோவிலின் அருகில் இருந்த வன்னி மரத்தின் அடியில் உணவு சமைத்து உண்டு உறங்கும் போது கொடிய நஞ்சுள்ள பாம்பு ஒன்று அவனைத் தீண்டியது. அவன் மாண்டான். தாய் தந்தையரை இழந்து அனாதையாகி நின்ற போது ஆதரவளித்தவன் மாண்டதைக் கண்ட இளம்பெண் கதறினாள். இளம்பெண்ணின் கதறலைக் கேட்டு அங்குதங்கியிருந்த திருஞானசம்பந்தர் அவளிடம் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். அப்பெண்ணும் தனக்கு நடந்தவைகளைக் கூறினாள்.

திருஞானசம்பந்தர் அப்பெண்ணின் மீது இரக்கம் கொண்டு இறைவனார் மீது பதிகங்கள் பாடி மனமுருக வழிபட்டார். இறைவனாரும் அப்பெண்ணின் துன்பத்தைப் போக்க அவ்வணிகனை உயிர்ப்பித்தார். அவ்வணிகனிடம் திருஞானசம்பந்தர் இப்பெண்ணை இங்கேயே திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். எம் உறவினர்களும் சாட்சிகளும் இல்லாது எவ்வாறு இவளை மணம் முடிப்பேன்? என்று கேட்டான். அதற்கு திருஞானசம்பந்தர் இங்குள்ள வன்னியும் கிணறும் லிங்கமும் சாட்சிகளாகும். உன் மாமனின் விருப்பப்படி இவளை நீ மணந்து கொள் என்று கூறினார். அதற்கு உடன்பட்ட வணிகன் வன்னி கிணறு லிங்கம் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு அவளை மணம் முடித்து மதுரைக்கு அழைத்துச் சென்றான். அவ்வணிகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. வணிகன் தன் இரு மனைவியருடனும் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் வணிகருக்கு இரு மனைவிகளின் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கு இடையே சண்டை வந்தது. அந்த சண்டை இருபெண்களுக்கு இடையே வாக்கு வாதத்தில் முடிந்தது. அப்போது மூத்தவள் இளையவளிடம் நீ என்னுடைய கணவனை அநியாயமாக திருமணம் செய்து விட்டாய்? யாரை சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்தாய்? என்று கேட்டாள். அதற்கு இளையவள் எங்களுடைய திருமணத்திற்கு வன்னி கிணறு லிங்கம் ஆகியவை சாட்சியாக இருந்தன என்று கூறினாள். உன்னுடைய சாட்சிகளை மதுரைக்கு அழைத்து வந்தால்தான் உன்னுடைய திருமணத்தை முறையானதாகக் கூறமுடியும் என்று கூறினாள். இதனைக் கேட்டதும் இளையவள் தன்னுடைய திருமணத்தின் சாட்சிகளை எவ்வாறு மதுரைக்கு அழைத்து வர இயலும் என்று எண்ணினாள். பின்னர் தனக்கு ஏற்பட்ட துயரத்தை போக்குமாறு வேண்டி சொக்கநாதரை மனமுருக வழிபட்டாள்.

இறைவனாரும் அவளின் துயரத்தை நீக்கும் பொருட்டு திருகோவிலின் வடகிழக்குப் பக்கத்தில் திருமணத்தின் சாட்சிகளான வன்னி கிணறு லிங்கம் ஆகியவற்றை தோன்றச் செய்தார். இதனைக் கண்டதும் மதுரை மக்கள் அதிசயித்தனர். இளையவள் இறைவனாரின் கருணை எண்ணி ஆனந்தம் கொண்டாள். தன்னுடைய திருமண சாட்சிகளை மதுரைக்கு வரவழைத்ததை மூத்தவளுக்கு காண்பித்தாள். அதனைக் கண்ட மூத்தவள் தன்னுடைய தவறினை உணர்ந்தாள். விவரம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த வணிகன் மூத்தவளிடம் கோபம் காட்டி அவளை விரட்டினான். இளையவள் அவனை சமாதானம் செய்து இருவரும் ஒற்றுமையுடன் வாழ உறுதி கொள்வதாகக் கூறினாள். பின்னர் அனைவரும் இனிது வாழ்ந்திருந்தனர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

உறுதியான மனதால் இறைவனை நம்பியவர்களை இறைவன் கைவிட மாட்டார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

63. சமணரைக் கழுவேற்றிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சமணரைக் கழுவேற்றிய படலம் அறுபத்தி மூன்றாவது படலமாகும்.

திருஞானசம்பந்தர் சொக்கநாதரின் திருவருளால் கூன்பாண்டியனின் வெப்புநோயையும் உடல் கூனினையும் போக்கியதைக் கண்டு மங்கையர்கரசியும் குலச்சிறையாரும் பெரிதும் மகிழ்ந்தனர். மதுரையில் மீண்டும் சைவத்தை தளிர்க்கச் செய்யுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர். திருஞானசம்பந்தரும் இறைவனின் திருவருளால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று அவர்களிடம் கூறி திருக்கோவிலை அடைந்து இறைவனை மனமார வழிபட்டார். திருஞானசம்பந்தர் இறைவனாரிடம் ஐயனே பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தோங்க அருள்புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டார். பாண்டியனின் வெப்புநோயை தீர்ப்பதில் தோல்வியுற்ற சமணர்கள் திருஞானசம்பந்தரை வாதிட்டு வெல்ல முடிவு செய்தனர். மன்னனிடம் இதனைத் தெரிவித்து அவரை வாதப்போருக்கு அழைத்தனர். மன்னனும் இதற்கு உடன்பட்டான். போட்டியின்படி மதுரை நகருக்கு வெளியே அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. சமணர்கள் தங்களின் பாடல்களை பனைஓலை சுவடியில் எழுதி குண்டத்தில் போட்டனர். திருஞானசம்பந்தரும் போகமார்த்த பூண்முலையாள் என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை அக்னியில் இட்டார்.

அக்னி குண்டம் எரிந்து முடிந்ததும் திருஞானசம்பந்தரின் திருநள்ளாற்றுப் பதிகம் எரியாமல் புதுப்பொலிவுடன் இருந்தது. சமணர்களின் பாடல் தீயில் கருகியது. ஆனால் சமணர்கள் சமாதானம் அடையாமல் புனல் வாதத்திற்கு திருஞானசம்பந்தரை அழைத்தனர். அப்போது பாண்டியன் குறுக்கிட்டு வாதத்தில் தோற்றவர்கள் கழுவேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இருவரும் ஒப்புக் கொண்டனர். வைகை ஆற்றில் சமணர்கள் பனை ஓலையில் எழுதிய தங்களின் பாடல்களை இட்டனர். அச்சுவடிகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திருஞானசம்பந்தர் தான் எழுதிய வாழ்க அந்தணர் வாழ்க ஆவினம் என்ற பதிகத்தை ஆற்றில் போட்டார். திருஞானசம்பந்தரின் ஏடானது வைகை ஆற்று நீரினை எதிர்த்து கிழித்து சென்று சற்று தூரத்தில் மறைந்தது. இதனைக் கண்ட அரசர் சமணர்களிடம் திருஞானசம்பந்தரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு சைவத்திற்கு மாறினால் கழுவில் ஏற வேண்டாம் என்றார். ஆனால் சமணர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு தாங்களாகவே கழுவில் ஏறி தங்களின் உயிரினைத் துறந்தனர்.

ஏடு மறைந்த இடத்தில் வில்வமரத்தின் அடியில் இறைவனார் சுயம்புவாய் தோன்றி இருந்தார். அதனைக் கண்டதும் அங்கிருந்தோர் அனைவரும் அவரை வழிபட்டனர். திருஞானசம்பந்தர் அப்போது வன்னியமும் மத்தமும் என்ற பதிகத்தைப் பாடி இறைவனாரை வழிபட்டார். அப்போது ஒரு முதியவர் வடிவில் இறைவனார் அவ்விடத்திற்கு வந்து திருஞானசம்பந்தரிடம் ஏடுகளை தந்து மறைந்தருளினார். பின்னர் சுந்திரபாண்டியன் அவ்விடத்தில் திருகோவில் ஒன்றினைக் கட்டி சிலகாலம் தங்கியிருந்து இறைவனாரை வழிபட்டான். அவ்விடம் தற்போது திருவேடகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து பல தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி மீண்டும் சோழ நாட்டிற்குச் சென்றார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறையருளை யாராலும் எதனாலும் வெற்றி கொள்ள முடியாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பாண்டியன் சுரம் தீர்த்த படலம் அறுபத்தி இரண்டாவது படலமாகும்.

அரிமர்த்த பாண்டியனுக்குப் பின்னர் அவனுடைய வழித்தோன்றலாக நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். கூன்பாண்டியன் போர்த்திறத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினான். அவன் முதுகிலிருந்த கூன் காரணமாக அவனது பெயர் மறைந்து காரணப் பெயராலேயே அழைக்கப்பட்டான். மூவேந்தர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். சோழ அரசனின் மகளான மங்கையர்கரசியாரை மணந்திருந்தான். இவனுக்கு குலச்சிறையார் என்ற சிவனடியார் நல்ல ஆலோசனைகளைக் கூறும் மந்திரியாக அமைந்திருந்தார். கூன்பாண்டியன் காலத்தில் சமண சமயம் மதுரையில் பரவத் தொடங்கியது. அரசனும் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டு மக்களையும் சமண சமயத்தைப் பின்பற்றச் செய்தான். இதனால் மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் பெரிதும் வருந்தினர். சொக்கநாதரிடம் சைவம் மீண்டும் தழைக்க அருள்புரிய வேண்டினர். அப்போது ஒருநாள் சோழநாட்டில் இருந்து வந்த வேதியர் ஒருவரை மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் சந்தித்தனர். சோழநாட்டில் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர் பதிகங்கள் பாடி சைவ சமயத்தை பரவச் செய்த செய்தியை அவ்வேதியரின் மூலம் அறிந்தனர். மேலும் அவர் மதுரையம்பதிக்கு வந்து சொக்கநாதரை வழிபட திட்டமிட்டு இருப்பதையும் தெரிந்து கொண்டனர். உடனே ஆளுடைய பிள்ளையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு விரைந்து வருமாறும் சைவ சமயத்தை மதுரையில் மீண்டும் தழைக்க செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து ஓலை எழுதி வேதியரிடம் கொடுத்து அனுப்பினர்.

வேதியரும் திருமறைக்காட்டில் திருநாவுக்கரசருடன் தங்கியிருந்த திருஞானசம்பந்தரிடம் அவ்வோலையைக் கொடுத்தார். அப்போது திருநாவுக்கரசர் தற்போது கோளும் நாளும் நன்றாக இல்லை. ஆதலால் சிறிது காலம் தாழ்த்தி மதுரையம்பதிக்கு செல்லுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு திருஞானசம்பந்தர் நமசிவாய மந்திரத்தை சொல்லும் சிவனடியார்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்னும் பொருள் கொண்ட கோளறு பதிகத்தைப் பாடி மதுரையம்பதிக்கு விரைந்தார். அங்கு வாகீச முனிவரின் மடத்தில் தங்கி இருந்தார். திருஞானசம்பந்தரின் வரவினை அறிந்த சமணர்கள் அபிசார வேள்வியைத் தொடங்கி கொடிய தீப்பிழம்பினை தோற்றுவித்து திருஞானசம்பந்தரை அழிக்குமாறு ஏவிவிட்டனர். அத்தீயானது திருஞானசம்பந்தர் வாட்டியது. உடனே தன்னுடைய இந்நிலைக்கு காரணம் பாண்டியன் சமணர்களை ஆதரித்ததே. ஆகையால் இத்தீயின் வெப்பமானது பாண்டியனை சென்று அடையுமாறு திருஆலவாய் மேவிய என்னும் பதிகத்தைப் பாடினார். உடனே தீயின் வெப்பமானது வெப்பு நோயாக மாறி பாண்டியனைச் சென்றடைந்து அவனை வாட்டியது. வெப்பு நோயால் வருத்தம் கொண்ட பாண்டியன் சமணர்களை அழைத்து தனக்கு உண்டான இக்கொடிய நோயினை போக்குமாறு வேண்டுகோள் விடுத்தான். சமணர்களும் மயிற்பீலிகளைக் கொண்டு விசிறியும் நீரினைத் தெளித்தும் வெப்புநோயை தீர்க்க முற்பட்டனர். ஆனால் பாண்டியனின் வெப்புநோய் மேலும் அதிகரித்தது.

மங்கையர்கரசியார் திருஞானசம்பந்தர் ஒருவரே உங்களின் வெப்புநோயை தீர்க்க வல்லவர் என்று கூன்பாண்டியனிடம் தெரிவித்தார். வெப்புநோயால் பாதிப்படைந்த கூன்பாண்டியன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் அழைப்பினை ஏற்று அரசனின் இருப்பிடத்திற்கு வந்தார். அங்கிருந்த சமணர்கள் பாண்டியனது வலப்புறத்து நோயை திருஞானசம்பந்தரும் இடப்புறத்து நோயை தாங்களும் போக்குவதாக அறிவித்தனர். உடனே திருஞானசம்பந்தர் தன்னிடமிருந்த திருநீற்றினை எடுத்தார். அதனைக் கண்டதும் சமணர்கள் இது மாயநீறு என்று கூறினர். இதனைக் கேட்டதும் சொக்கநாதரின் திருமடப்பள்ளியிலிருந்து சாம்பலை எடுத்து வரச்சொல்லி திருநீற்றுப்பதிகம் பாடி அச்சாம்பலை திருநீறாகக் கருதி கூன்பாண்டியனின் வலப்புறத்தில் தேய்த்தார். பாண்டியனைப் பற்றி இருந்த வலப்பக்க வெப்பு நோய் நீங்கியது. சமணர்கள் தங்களிடம் உள்ள மருந்தை இடது பக்கம் தேய்த்தனர். இப்போது கூன் பாண்டியனின் நோய் இன்னும் அதிகமானது. உடனே கூன்பாண்டியன் தன்னுடைய இடப்பக்க நோயை போக்குமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தான். திருஞானசம்பந்தரும் இடபுறமும் திருநீற்றினைத் தடவியதும் வெப்பு நோய் நீங்கியதோடு கூனும் நீங்கியது. பேரழகுடன் திகழ்ந்த அப்பாண்டியன் சுந்திரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். சுந்தர பாண்டியனும் திருஞானசம்பந்தருக்கு தக்க உபசரணைகள் மரியாதைகள் செய்து பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக மடத்தில் சேர்த்தான்.  மீனாட்சி சுந்தரேசர் கோயிலுக்கு ஏராளமான பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் வாகனங்கள் வெகுமதியாகக் கொடுத்தான். சமணர்களை ஊரை விட்டே விரட்டிவிட்டான். சுந்தர பாண்டியன் பெரும் சிவபக்தனாக மாறினான். பாண்டியனும் பாண்டிய நாட்டு மக்களும் சைவசமயத்தைத் தழுவினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சமண மதத்தில் உள்ள துஷ்டர்களை விரட்டியதையும் சைவத்தை நிலைநாட்டியதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

61. மண் சுமந்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மண் சுமந்த படலம் அறுபத்தி ஒன்றாவது படலமாகும்.

மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவனார் வைகையில் வெள்ளப் பெருக்கினை உண்டாக்கினார். வைகையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது. இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான். அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர். மக்களும் வைக்கோல் பசுந்தளை மண்வெட்டி கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும் கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர். அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வஞ்சி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள். அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள். வஞ்சி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வஞ்சியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள். கூலியாள் கிடைக்காததால் வஞ்சி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் ஐயனே நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை. ஆகையால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று வேண்டினாள்.

இறைவனார் வஞ்சிக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும் திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வஞ்சியின் இடத்தினை அடைந்தார். கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ என கூவிக்கொண்டு வஞ்சியை நெருங்கினார். உடனே வஞ்சி இறைவனாரிடம் என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா? என்று கேட்டாள். சரி அப்படியே செய்கிறேன். எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார். அதற்கு பாட்டி என்னிடம் பணம் இல்லை. நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன் என்று கூறினாள். இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்து நீ செய்யும் பிட்டில் உதிர்ந்த பிட்டுக்கள் அனைத்தையும் எனக்கு கொடுத்துவிடு. உதிராத பிட்டுக்கள் அன்னைத்தும் விற்பனைக்கு வைத்துக் கொள் சம்மதமா என்று கேட்டார். பாட்டியும் சம்மதித்தாள். பின்னர் வஞ்சியிடம் நான் தற்போது பசியால் மிகவும் சோர்வாக இருகிறேன். ஆகையால் நீ எனக்கு பிட்டை சாப்பிட கொடு நான் சாப்பிட்டு பசியாறிய பிறகு வைகையை அடைக்கிறேன் என்று கூறினார். வஞ்சியும் அதற்கு சம்மதித்து நான் பிட்டினை செய்கிறேன் நீ அதற்குள் வைகையின் கரையினை அடைக்க நான் வந்தியின் கூலியாள் என பதிவேட்டில் குறித்து வைத்துவிட்டு வா என்று சொல்லி பிட்டினை செய்ய ஆரம்பித்தாள். அன்று சமைத்த பிட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே போனது. விற்பனைக்கு பிட்டு இல்லையே என முகம் சுளிக்காமல் கொடுத்த வாக்கின் படி மகிழ்ச்சியோடு பிட்டை அள்ளி வைத்தாள். இறைவனார் பிட்டை சாப்பிட்டதும் கரையை அடைத்து விடப்பா எனப் பணிவுடன் கேட்டுக் கொண்டாள்.

இறைவனார் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும் மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும் மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வஞ்சியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார். கூலியாட்களின் மேற்பார்வையாளர் இறைவனாரை எழுப்பி விரட்டி விட மீண்டும் வந்தியிடம் சென்று பிட்டை வாங்கித் தின்றுவிட்டு வந்து மரநிழலில் படுத்துக்கொண்டார். கணக்கரிடம் காவலாளிகள் இதனைச் சொல்லும் போது அச்சமயத்தில் அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்தான். அனைத்தும் கேட்ட அரசன் தன்னிடம் உள்ள பிரம்பில் படுத்திருந்த இறைவனார் முதுகில் ஓங்கிப் அடித்தார். அந்த அடி உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியின் முதுகிலும் விழுந்தது. அடித்த அரசனும் ஆ வென அலறினான். வாதவூரரும் வந்தியும் முதுகைத் தடவிக் கொண்டனர். சிரித்துக் கொண்டே இறைவனார் ஒரு கூடை மண் எடுத்து வந்தியின் பங்கில் கொட்டி மறைந்தார். அடுத்த வினாடி வைகை வெள்ளம் அடங்கியது. பிட்டுக்கு மண் சுமக்க வந்தவர் பெருமானே என அனைவரும் உணர்ந்தனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

இறைவனார் அப்போது அசீரீரியாக பாண்டியனே தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது. ஆகையால் யாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வைகையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம். வஞ்சியின் கூலியாளாய் வந்து வஞ்சியிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக என்று திருவாக்கினைக் கூறினார். அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லை அம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக் கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார். இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வஞ்சியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தமக்கு விரையம் ஏற்பட்டாலும் துன்பப்படாமல் மகிழ்ச்சியுடன் கொடுத்த வாக்கை நிறை வேற்ற வேண்டும் அவ்வாறு செய்தால் இறைவன் சிவலோகத்தையும் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

60. பரி நரியாக்கிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பரி நரியாக்கிய படலம் அறுபதாவது படலமாகும்.

இறைவனே குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தார் என்பதை உணர்ந்த மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனை மனதார துதித்து வழிபட்டார். அன்று சூரியன் மறைந்ததால் பகல் முடிந்து இரவின் அடையாளமாக சந்திரன் தோன்றியது. நடு இரவில் இறைவனின் திருவருளால் குதிரைகளாக மாறிய நரிகள் எல்லாம் பழைய வடிவத்தை அடைந்தன. குதிரைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவைகள் எரிச்சல் அடைந்து ஊளையிட்டன. அரிமர்த்தனனின் குதிரை லாயத்தில் கட்டியிருந்த பழைய குதிரைகளை நரிகள் கடித்துக் குதறின. குதிரைகள் வலி தாங்க முடியால் அலறிச் சாய்ந்தன. இதனால் பேரிரைச்சல் ஏற்பட்டது. குதிரை லாயத்திற்கான பணியாட்கள் பேரிரைச்சலால் கண் விழித்து நடந்தவைகளைப் பார்த்து திகைத்தனர். அரிமர்த்தனனிடம் நடந்தவைகளை கூறச் சென்றனர். அந்நேரம் நரிகள் ஆத்திரத்தில் ஊளையிட்ட வண்ணம் காட்டை நோக்கி ஓடின. நடந்தவைகளை கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதினான். ஆத்திரத்தில் தண்டல்காரர்களிடம் அக்கொடியவன் அரச பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அதனை மறைக்கவே ஏதோ மாயங்கள் செய்து குதிரைகளைக் கொண்டு வந்து அவற்றை நரிகளாக மாற்றி ஏற்கனவே இருந்த குதிரைகளையும் கொல்லச் செய்து விட்டான். ஆதலால் அவனுக்கு சரியான தண்டனை அளித்து அரசப்பணத்தை மீட்டெடுங்கள் என்று கட்டளையிட்டான்.

மாணிக்கவாசகரின் மாளிகைக்கு அரசனின் ஆணையை செயல்படுத்த தண்டல்காரர்கள் சென்றனர். அவர் அங்கு தியானத்தில் இருந்தார். அவரை எழுப்பி நடந்தவைகளைக் கூறி அவரை அழைத்துச் சென்றனர். மாணிக்கவாசகரும் அவர்களுடன் ஏதும் கூறாமல் இறைவனை எண்ணியபடி நடந்து சென்றார். தண்டல்காரர்கள் அவருடைய கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வையை ஆற்று மண்ணில் படுக்கச் செய்தனர். மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார். இறைவா இது என்ன சோதனை? என்னைக் காப்பாற்றுங்கள் என்று உருகினார். மாணிக்கவாசகரின் குரல் கேட்டு உருகிய இறைவனார் அவருக்கு அருள் செய்யும் நோக்கம் கொண்டார். இறைவனாரின் திருவருளால் வைகையில் தண்ணீர் வரத் தொடங்கியது. மழை ஏதும் பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் வருவதைக் கண்டதும் தண்டல்காரர்கள் திகைத்தனர். நேரம் செல்லச் செல்ல வைகையில் தண்ணீர் வருவது அதிகரித்து வெள்ளமாக மாறியது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தில் மட்டும் வெள்ளம் வராமல் தண்ணீராக மட்டும் வைகை ஓடியது. நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இறைவனாரின் திருவிளையாடலை எண்ணியபடி இருந்தார். நேரம் ஆக ஆக வைகையையின் வெள்ளம் கரையை உடைக்கத் தொடங்கியது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அடியவர்களின் துன்பத்தினை இறைவனார் விரைந்து வந்து தீர்ப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

59. நரியை பரியாக்கிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நரியை பரியாக்கிய படலம் ஐம்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

இறைவனார் குதிரைகளை அழைத்து வருவதாகக் கூறிய வாக்குறுதியை எண்ணி மாணிக்கவாசகர் குதிரைகளின் வரவிற்காக மதுரையில் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் பொய் உரைப்பதாகக் கருதி அவரை தண்டித்து அரசாங்கப் பணத்தை அவரிடம் இருந்து பெறுமாறு தண்டல்காரர்களுக்கு உத்தரவிட்டான். அரசனின் ஆணையை ஏற்று தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரின் வீட்டிற்கு அவரை அழைப்பதற்காகச் சென்றனர். அவர் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். தண்டல்காரர்கள் அரச ஆணையை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் எல்லாம் இறைவனின் விருப்பப்படி நடக்கும் என்று எண்ணி அவர்களுடன் சென்றார். தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரிடம் அரசாங்கப் பணத்தை திரும்ப அளிக்கும்படி வலியுறுத்தி அவரின் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர். அவருக்கு அது பஞ்சுப் பொதி போல் தோன்றியது. மறுநாள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கினர். அதனையும் பொறுத்துக் கொண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம் தங்களுடைய திருவாக்கினை பொய்யாக்கமல் விரைவில் குதிரைகளுடன் மதுரைக்கு வாருங்கள் என மனமுருகி வழிபட்டார். இந்நிலையில் ஆடி முடித்து ஆவணி மாதம் பிறந்து விட்டது. இறைவனார் மாணிக்கவாசகருக்கு உதவ திருவுள்ளம் கொண்டார்.

இறைவனார் திருநந்தி தேவரிடம் மாணிக்கவாசகன் குதிரைகளை வாங்கித் தராத குற்றத்திற்காக பாண்டிய‌னின் சிறையில் அவதிப்படுகிறான். அவனுடைய துன்பத்தை போக்குவதற்காக நீயும் நம் பூதகணங்களும் காட்டில் உள்ள நரிகளை பரிகளாக்கி குதிரை வீரர்களாக மதுரையை நோக்கிச் செல்லுங்கள். மதுரைக்கு அருகில் செல்லும்போது யாம் குதிரை வீரனாக வந்து உங்களுடன் கலந்து கொள்வோம் என்று கூறினார். இறைவனின் ஆணையை ஏற்று நந்திதேவரும் பூதகணங்களும் நரிகளை குதிரைகளாக மாற்றி அதன்மீது அமர்ந்து மதுரையை நோக்கி விரைந்தனர். குதிரைகள் மதுரையை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை விடுவிக்கச் செய்தான். அவருக்கு பரிசுகள் பல வழங்கினான். குதிரைகளின் அணி வகுப்பினைக் காண மணிமண்டபத்திற்கு வந்தான். மக்கள் எல்லோரும் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.

பாண்டியனின் கண்களுக்கு மட்டும் குதிரைகள் புலப்படவில்லை. மாணிக்கவாசகர்தான் ஏதோ தந்திரம் செய்கிறார். ஆகையால்தான் தன் கண்களுக்கு குதிரைகள் புலப்படவில்லை என்று பாண்டியன் கருதி மாணிவாசகரை மீண்டும் சிறையில் அடைத்தான். சற்று நேரத்தில் குதிரை லாயத்தில் ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் குதிரை வீரர்கள் இருப்பதைக் கண்ட பாண்டியநாட்டு வீரர்கள் அரிமர்த்தனனிடம் விபரத்தைச் சொல்லினர். அங்கு வந்த பாண்டிய‌ன் குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அருகில் இருந்த குதிரை வீரனிடம் உங்கள் குதிரைப் படைக்கு தலைவன் யார்? என்று கேட்டான். அப்போது வேதமாகிய குதிரையில் அமர்ந்திருந்த இறைவனாரை சுட்டிக் காட்டி இவர்தாம் எம் தலைவர் என்று கூறினான். இறைவனாரைக் கண்டதும் பாண்டியன் அவனையும் அறியாமல் வணங்கினான். அப்போது இறைவனார் குதிரையின் கயிற்றினை பிடித்து பாண்டியனின் கையில் கொடுத்தார்.

சிங்கப் பாய்ச்சல் புலிப்பாய்ச்சல் முயல்பாய்ச்சல் குரங்குப் பாய்ச்சல் அம்புப்பாய்ச்சல் சர்ப்பப்பாய்ச்சல் வாயுப்பாய்ச்சல் என்று பலவகைப் பாய்ச்சல்களுள்ள குதிரைகளை பார்த்துப் பார்த்து வாங்கியதாலேயே தாமதமாகி விட்டது. குதிரை வரவில்லை என்று மந்திரியை தண்டித்தாய். அவரைத் துன்புறுத்தியது என்னை தண்டித்தது போல இருக்கிறது. அவசர புத்திக்காரனான நீ கேட்பார் பேச்சுக் கேட்டு செயல்படும் உனது சுபாவம் கீழ்மையானது. அவருடைய நல்ல குணத்திற்காகத் தான் குதிரையை ஒப்பந்தப்படி உன்னிடம் கொடுக்கிறேன். குதிரைகளை ஒப்படைத்ததாகி விட்டது. இனி குதிரைப் பற்றிக் கேட்கக் கூடாது. இதுவே குதிரை பரிமாற்றத்தில் கடைபிடிக்கப்படும் வழக்கம் என்று கூறினார். இறைவனாரின் கூற்றினை ஆமோதித்த அரிமர்த்தன பாண்டியன் இறைவனாருக்கு வெண்துண்டினைப் பரிசளித்தான். இறைவனாரும் தலையில் அதனைக் கட்டிக் கொண்டு அங்கிருந்து தம் பூதகணங்களோடு புறப்பட்டார். பின்னர் மாணிக்கவாசகருக்கு பரிசுகளை அரிமர்த்தன பாண்டியன் வழங்கி அவரை அவருடைய இல்லத்திற்கு வழி அனுப்பி வைத்தான். மாணிக்கவாசகரும் பாண்டியனின் பரிசுகளை தம் சுற்றத்தாருக்கு பகிர்ந்தளித்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன்னை நம்பியவர்களை மேலும் மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல இறைவன் அவர்களுக்கு பல சோதனைகளை வைப்பார். இறைவனின் சோதனையை பொறுமையுடம் ஏற்றுக் கொண்டால் அவர்களை மேல் நிலைக்கு அழைத்துச் செல்வதுடன் அவர்களின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் படி வெளி உலகிற்கு காட்டுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம் ஐம்பத்தி எட்டாவது படலமாகும்.

மதுரைக்கு அருகில் திருவாதவூர் என்றொரு திருத்தலம் உள்ளது. அவ்வூரில் இறைவனின் அருளால் சுந்தரநாதர் என்பவருக்கு திருவாதவூரர் என்ற புதல்வன் பிறந்தான். அவர் தன்னுடைய பதினாறு வயதினிலேயே ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தெளிந்தார். வாதவூரடிகளின் கல்வித் திறமையைக் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் வாதவூராரை தன்னுடைய அவைக்கு வரவழைத்து மந்திரியாக்கினான். நாளடைவில் தன் திறமையின் காரணமாக மந்திரிகளுக்கு எல்லாம் முதன்மை மந்திரியாக வாதவூரார் விளங்கினார். ஆயினும் அவர் இம்மை மறுமைகளில் வெறுப்புக் கொண்டு இவ்வுலக வாழ்வில் தன்னை உய்விக்க தகுந்த குருவினை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒருசமயம் அரிமர்த்தன பாண்டியன் தன்னுடைய படைகளின் பலத்தினைப் பற்றி அவையோரிடம் விவாதித்துக் கொண்டிருந்தான். குதிரைப் படையில் குதிரைகளின் எண்ணிக்கை குறைவாகவும் வயதான குதிரைகளாவும் இருப்பதைக் கண்ட அரசன் வாதவூராரிடம் கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு கடல்துறையில் வந்திறங்கும் குதிரைகளில் சிறந்தவைகளை வாங்கி வருமாறு கூறினான். வாதவூரடிகளும் அரனின் ஆணையை ஏற்று கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு அரசனிடம் விடை பெற்று குதிரைகளை வாங்கப் புறப்பட்டார்.

திருக்கோவிலில் சென்று இறைவனாரை வழிபட்டு தந்தையே இப்பொருட்கள் யாவும் சரியான வழியில் பயன்படும்படி தாங்கள் எனக்கு அருளல் வேண்டும் என்று மனமுருக வழிபாடு மேற்கொண்டார். பின்னர் குதிரைகளை வாங்க புறப்பட்டார். இந்நிலையில் இறைவனார் வாதவூரடிகளுக்கு ஞானத்தை உபதேசிக்க எண்ணினார். எனவே அவர் அந்தண வடிவில் குருவாகி பல மாணவர்களோடு திருப்பெருந்துறையில் வாதவூரடியாரை எதிர்நோக்கி இருந்தார். திருப்பெருந்துறையை நெருங்கியதும் வாதவூரடிகளின் உள்ளம் மகிழ்ச்சி கொண்டது.

சிவபெருமான் குருவடிவில் பல மாணவர்களுக்கு வேதத்தின் உட்பொருளை ஞான முத்திரையால் விளக்கிக் கொண்டிருந்தார். குருநாதரை பார்த்த வாதவூரர் பிரமித்து ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றுவிட்டார். தன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய அவரை நோக்கிச் சென்றார். குருவின் வடிவிலிருந்த சிவபெருமான் கடைக்கண்ணால் வாதவூரரைப் பார்த்தார். வாதவூரர் அருகே சென்று குருவை வணங்க எம்பெருமான் வாதவூரர் சிரசில் கை வைத்து உட்கார் என்றார். எம்பெருமான் கைபட்டதும் தன் குடும்பத்தை தன் அலுவல் வேலை தான் வந்த காரியம் தான் இருக்கும் இடம் அனைத்தையும் மறந்து தன்னையே மறந்த நிலையில் இருந்தார் வாதவூரர். சூட்சும பஞ்சாட்சரத்தையும் ஸ்தூல பஞ்சாட்சரத்தையும் வேதத்தின் பொருளையும் கற்பித்தார். இறைவனாரின் அருட்பார்வையால் வாதவூராரின் மும்மலங்களும் நீங்கின. பின்னர் வாதவூராருக்கு ஞானத்தை வழங்கினார்.

இறைவனின் திருவருளால் வாதவூரடிகள் செந்தமிழ் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டார். பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவனார் வாதவூரடிகளுக்கு மாணிக்கவாசகன் என்ற திருநாமத்தைச் சூட்டி நீ இங்கே சில காலம் தங்கி இருப்பாயாக. இங்கு நீ செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன என்று திருவாய் மலர்ந்தருளினார்.  பின்னர் அவ்விடத்தை விட்டு மறைந்தார். இறைவனார் குருவாகி வந்து தனக்கு ஞானத்தை வழங்கிய இடத்தில் திருக்கோவிலைக் கட்ட எண்ணிய மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருட்களை அதற்குப் பயன்படுத்த திட்டமிட்டார். பின்னர் அரிமர்த்தன பாண்டியனுக்கு ஆடி மாதத்தில் குதிரைகளுடன் வந்து சேர்வதாக ஓலை அனுப்பிவிட்டு தன்னுடன் வந்த படைகளையும் திருப்பி அனுப்பினார். தான் எண்ணியவாறே திருக்கோவிலைக் கட்டி திருப்பணிகளை முடித்தார். ஆடி மாதமும் வந்தது. குதிரைகள் வராததைக் கண்ட அரிமர்த்தன பாண்டியன் குதிரைகள் இன்னும் ஏன் மதுரையை அடையவில்லை? என்று கேள்வி எழுப்பி ஓலை அனுப்பினான். பாண்டியனின் ஓலையைக் கண்டதும்தான் மாணிக்கவாசகருக்கு குதிரையைப் பற்றிய எண்ணம் வந்தது.

இறைவனிடம் ஐயனே பாண்டியன் குதிரை வாங்க கொடுத்த பணத்தை எல்லாம் கோவில் திருப்பணிகளுக்கு செலவிட்டுவிட்டேன். இனி நான் என்ன செய்வேன் மனமுருகி வழிபட்டார். அப்போது குதிரைகள் வரும் என்று பாண்டியனுக்கு செய்தி அனுப்பு என்று திருவாக்கு கேட்டது. மாணிக்கவாசகரும் இறைவனின் ஆணையின்படி மாணிக்கவாசகர் பாண்டியனுக்கு ஓலை அனுப்பினார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து யாம் குதிரைகளைக் கொண்டு வருகிறோம். நீ முன்னே சென்று மதுரையில் காத்திரு என்று மாணிக்கவாசகரின் கனவில் இறைவனார் அறிவுறுத்தினார். மாணிக்கவாசகரும் மதுரை சென்று பாண்டியனைச் சந்தித்து குதிரைகள் பின்னே வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். இறைவனாரின் வரவினை எதிர்நோக்கி மதுரையில் காத்திருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அன்பும் பக்தியும் நிறைந்து தகுதி பெற்றால் இறைவனே குருவாக வந்து ஆட்கொண்டு மும்மலங்களையும் நீக்கி உபதேசம் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

57. வலை வீசின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வலை வீசின படலம் ஐம்பத்தி ஏழாவது படலமாகும்.

ஒரு சமயம் கையாலத்தில் சிவபெருமான் உமையம்மைக்கு வேதத்தின் உட்பொருளை விவரித்துக் கொண்டிருந்தார். இறைவனாரின் பாடத்தைக் கவனிக்காமல் வினாயகரையும் முருகனையும் கொஞ்சிக் கொண்டு உமையம்மை கனவக் குறைவாக இருந்தார். இதனை அறிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு உமையே நான் சொல்லிக் கொண்டிருக்கும் வேதத்தினை தெரிந்து கொள்ள ஆர்வமின்றி கவனக்குறைவாக இருந்ததால் நீ படிப்பறிவு இல்லாத மீனவப் பெண்ணாக மாறக் கடவாய் என்று சாபமிட்டார். இதனைக் கேட்டதும் ஐயனே தாங்கள் என்னுடைய பிழையைப் பொருந்தருளுங்கள். சாபத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினாள். இறைவனாரும் என்னுடைய பக்தனான பரதவன் என்னும் மீனவத் தலைவனின் விருப்பத்தை நிறைவேற்ற இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம். இறுதியில் உன்னை வந்து யாம் திருமணம் செய்து கொள்வோம். அஞ்ச வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இதனைப் பார்த்த முருகர் கோபம் கொண்டு உங்களது மாயையின் காரணத்தினால்தான் அன்னை கவனக்குறைவாய் இருந்தாள். இதற்கா சாபம் கொடுப்பீர்கள் என்று வெகுண்டு தந்தை கையிலிருந்த வேதப் புத்தகத்தை கிழித்தார். முருகனின் செயலைக் கண்ட சிவபெருமான் வேதப் புத்தகத்தைக் கிழித்ததினால் ஊமையாய்ப் பிறப்பாய் என்று சாபமிட்டார். முருகனும் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு சாப விமோசனம் கேட்டார். எப்போது போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை எப்போது கேட்டு கண்ணீர் வடிக்கின்றாயோ அப்போது உன் சாபம் நீங்கி எம்மிடம் வருவாய் என்றார். (முருகர் சாபத்தின்படி தனபதி தருமசாலினி என்ற தம்பதியினருக்கு ஊமை மகனாய் பிறந்து போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை கேட்டு கண்ணீர் வடித்து புலவர் வழக்கை தீர்த்து வைத்தார். 55ஆம் திருவிளையாடலில் இருக்கிறது.)

விநாயகர் ஓடிவந்து சாத்திரப் புத்தகங்கள் அனைத்தையும் துதிக்கையால் துக்கிக் கடலில் எறிந்து விட்டார்.  சிவன் சினமுற்று வினாயகருக்கு சாபம் கொடுக்கும் நேரம் நந்தி குறுக்கே வர நீ கடலில் மீனாய் பிறக்கக் கடவாய் என அவருக்குச் சாபமிட்டார். இதனைக் கேட்டதும் நந்திதேவர் ஐயனே உங்களையும் கையிலாயத்தையும் பிரிந்து என்னால் இருக்க இயலாது. தயவு கூர்ந்து என்னைக் காப்பாற்றி அருளுங்கள் என்றார். இறைவனார் நந்திதேவரிடம் மீனவப் பெண்ணான உமையம்மையை திருமணம் செய்ய யாம் வரும் போது உன்னுடைய சாபம் நீங்கும் என்று அருளினார்.

இறைவனாரின் சாபப்படி உமையம்மை மதுரைக்கு கீழ்த்திசையில் இருந்த பாக்கம் என்னும் மீனவ ஊரில் புன்னை மரத்துக்கு அடியில் குழந்தையாகக் கிடந்து அழுதார். அம்மையின் அழுகுரல் குழந்தைப் பாக்கியம் இல்லாத மீனவத் தலைவன் பரதவனின் காதில் விழுந்தது. மீனவத் தலைவன் அழுகுரலின் திசையில் சென்று குழந்தையைப் பார்த்ததும் இக்குழந்தை எனக்கு சொக்கநாதர் தந்த பரிசு என்று எண்ணி குழந்தையை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியிடம் கொடுத்து வளர்த்தான். நந்திதேவரும் சுறாமீனாகப் பிறந்து கடலில் வீசி எறியப்பட்ட வேதங்களை மீட்டு இறைவனாரிடம் தந்து விட்டு கடலில் திரிந்து கொண்டிருந்தார். அம்மையும் நாளடைவில் திருமணப் பருவத்தை எட்டிய குமரிப் பெண்ணானாள். கடலில் இருந்த சுறாவானது அங்கு மீன்பிடிக்க வரும் மீனவர்களின் வலையைக் கிழித்து படகுகளைக் கவிழ்த்து தொந்தரவு செய்து வந்தது. நாளுக்கு நாள் சுறாவின் தொந்தரவு அதிகமாகவே மீனவத் தலைவன் சுறாவினை அடங்கும் வீரனுக்கு தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து தருவதாக முரசு அறிவித்தான். தங்களுடைய உயிருக்குப் பயந்து யாரும் சுறாமீனை அடக்க முன்வரவில்லை.

இறைவனார் அழகான மீனவ இளைஞனாகத் தோன்றினார். மீனவத் தலைவன் முன் சென்று ஐயா எனது பெயர் சொக்கநாதன். என்னுடைய ஊர் மதுரையாகும். நான் வலை வீசி மீன்பிடிப்பதில் வல்லவன். நான் சுறாவினை அடக்கி தங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். இதனைக் கேட்டதும் மீனவத் தலைவன் தம்பி நீங்கள் கூறுவது போல் அது ஒன்றும் சாதாரண மீன் இல்லை. பல வலைகளைக் கிழித்தும் பல படகுகளைக் கவிழ்த்தும் உள்ளது அது. ஆகையால் அதனைப் பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை உன்னால் இயலாது என்றார். அதற்கு சொக்கநாதர் நான் வலைவீசினால் அதில் சிக்காத உயிர்களே கிடையாது. என்னுடைய வாலையைத் தூக்கக் கூட உங்களால் முடியாது தூக்கிப் பாருங்கள் என்றார். வலையை தூக்க மீனவர்கள் முயற்சி செய்தார்கள். எவராலும் வலையை அசைக்கக் கூட முடியவில்லை. சரி என்று மீனவத்தலைவன் அனுமதி கொடுத்தார்.

இறைவனார் சுறாமீனைப் பிடிக்கச் சென்றார். இறைவனார் வலையை வீசி சுறா மீனைப் பிடித்தார். பின்னர் கரைக்கு அதனை இழுத்து வந்து மீவனத் தலைவனிடம் காண்பித்தார். மீனவத் தலைவனும் ஒப்பந்தம் செய்தபடி தன்னுடைய பெண்ணை மீனவனான இறைவனாருக்கு திருமணம் செய்வித்தார். பின்னர் மணமக்கள் பார்வதி பரமேஸ்வராக மீனவர்களுக்குக் காட்சியளித்தனர். இதனைக் கண்ட பரதவனுக்கும் அவன் மனைவிக்கும் மோட்சத்தைக் கொடுத்து கைலைக்கு அனுப்பினார் இறைவன். சுறா மீனாக இருந்த நந்திதேவரும் சுயரூபம் பெற்று கையிலையை அடைந்தார். இறைவனார் சொக்கநாதராக மாறி மீனாட்சி அம்மனுடன் மதுரையம்பதியில் இனிது வீற்றிருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

நாம் செய்யும் செயலில் கவனக் குறைவாக இருந்தால் அது துன்பத்தை விளைவிக்கும் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் ஐம்பத்தி ஆறாவது படலமாகும்.

செண்பகப் பாண்டியனுக்குப் பின் அவனுடைய வழியில் பதினாறாவது தலைமுறையாக குலேச பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் தமிழின் இலக்கண இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்தவன். அவன் தன்னுடைய தமிழ் புலமையால் இறைவன் கொடுத்த சங்கப்பலகையில் அமரும் பாக்கியத்தைப் பெற்றான். குலேச பாண்டியனின் தமிழ் புலமையை கபிலரின் நண்பரான இடைக்காடன் அறிந்து தமிழ் பிரபந்தம் ஒன்றை இயற்றி குலேச பாண்டியனைக் காண விரைந்தார். குலேச பாண்டியனைச் சந்தித்து தாம் இயற்றிய பிரபந்தத்தை இடைக்காடன் பாடிக் காட்டினார். குலேச பாண்டியன் அப்பாடலின் சிறந்த பொருளையும் சொல் திறனையும் உணர்ந்தான். இருப்பினும் தன்னுடைய மனத்தில் உண்டான பொறாமைக் குணத்தால் இடைக்காடனின் பாடலுக்கு தலை அசைக்காமலும் முகத்தில் எந்தவித அசைவுகளை காண்பிக்காமலும் அவரை இகழ்ந்து பேசி அவருக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் அனுப்பி விட்டான். பாண்டியனின் செயலைக் கண்ட இடைக்காடன் வருத்தம் கொண்டு சொக்கநாதரை வழிபட திருக்கோவிலை அடைந்து அப்பனே தமிழை நன்கறிந்த குலேசபாண்டியன் நான் இயற்றிய பிரபந்தத்தை பாடும்போது அதனைக் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் எந்தவித அசைவின்றி இருந்து இகழ்ந்து பேசி விட்டான். பாண்டியனின் இச்செயல் தமிழின் சொல்லாகவும் பொருளாகவும் விளங்கும் உன்னையும் மீனாட்சி அம்மனையும் அவமதிப்பதாக உள்ளது. பாண்டியனின் பாடலை பிழை உள்ளதாக்கி அவனுக்கு சங்கப்பலகையில் இடம் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்று முறையிட்டுவிட்டு கோபத்துடன் வடக்கு நோக்கிச் சென்றார்.

சொக்கநாதர் இடைகாடனின் முறையீட்டினைக் கேட்டு பாண்டியனின் பொறாமை குணத்தை போக்க எண்ணினார். எனவே திருஆலவாய் கோவிலிலிருந்து தன்னுடைய லிங்க உருவத்தை மறைத்து திருஆலவாய் கோவிலுக்கு வடக்கே வைகை ஆற்றிற்கு தென்புறத்தில் அங்கையற்கண் அம்மையுடன் எழுந்தருளினார். சங்கப் புலவர்களும் சொக்கநாதரின் இருப்பிடத்தை அடைத்து அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் கோவிலில் இறைவனையும் இறைவியையும் காணாமல் அனைவரும் திகைத்தனர். குலேச பாண்டியனிடம் இறைவன் திருக்கோவிலில் இல்லாத செய்தியை எடுத்துரைத்தனர். இறைவனைக் காணாத செய்தியைக் கேட்ட குலேசபாண்டியன் அதிர்ச்சியுற்றான். திருக்கோவிலை அடைந்து செய்வதறியாது திகைத்தான். அப்போது சிலர் பாண்டியனிடம் ஓடி வந்து அரசே வைகை ஆற்றங்கரையின் தென்கரையில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளி கோவில் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த சங்கப்புலவர்களும் அங்கே சென்று விட்டார்கள் என்றார்கள். அதனைக் கேட்டதும் குலேசபாண்டியன் விரைந்து சொக்கநாதர் எழுந்தருளிய இடத்திற்கு விரைந்தான். அங்கு இறைவனைக் கண்டு வழிபட்டு ஐயனே தாங்கள் இங்கு எழுந்தருளிருக்கும் காரணம் யாது? அடியேனுடைய தவறு ஏதும் உண்டா? அடியேன் நிகழ்ந்தது அறியேன் என்று விண்ணப்பம் செய்து அழுது புலம்பி வேண்டி எமது தவறைச் சுட்டிக் காட்டி என்னை தடுத்தாட் கொள்ளாவிட்டால் இங்கேயே உயிர் துறப்பேன் என வாளை உருவினான்.

சொக்கநாதர் வாளைத் தடுத்து பாண்டியா என் அன்பனான இடைக்காடருக்கு நீ செய்த அவமானம் தமிழுக்கு செய்ததாகும். தமிழுக்கு செய்த அவமானம் எனக்குச் செய்ததேயாகும். இடைக்காடனின் பாடல்களை நீ அவமதித்ததால் யாம் இங்கு எழுந்தருளியுள்ளோம். நான் எங்குமிருப்பவன். உன் கண்ணிலிருந்து லிங்கம் மறைந்ததே தவிர அதே இடத்தில் தான் நானிருக்கிறேன். இம்மதுரை நகரில் ஏராளமான சுயம்பு லிங்கங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றை தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் ராட்சதர்களும் மனிதர்களும் வழிபட்டு நற்கதி அடைந்துள்ளனர். இவற்றில் 64 லிங்கங்கள் சிறந்தவை. அவற்றில் அட்டத்திக் பாலகர்கள் வழிபட்ட லிங்கங்கள் மேலானவை. வடகிழக்கு திசையின் அதிபதியான குபேரன் வழிபட்ட இந்த லிங்கத்துள் தற்போது எழுந்தருளியுள்ளேன். இன்று முதல் இது வடத்திருஆலவாய் என்று அழைக்கப்படும் என்று திருவாக்கு மலர்ந்தருளினார். உடனே குலேசபாண்டியன் ஐயனே என்னுடைய பிழையைப் பொறுத்தருளங்கள் எனது தவறை திருத்திக் கொள்கிறேன் என்று மனமுருகி வேண்டினான். இறைவனாரும் மனமிறங்கி மீனாட்சி அம்மனுடன் திருக்கோவிலில் எழுந்தருளினார். குலேசபாண்டியன் இடைக்காடனை அழைத்து வந்து பல உபசரணைகளும் மரியாதைகளும் செய்து அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டு சிறப்புகள் பல செய்து அவருடைய பாடலை முறைப்படி கேட்டு மகிழ்ந்தான். இடைக்காடனும் அரசனை மன்னித்து ஆசி வழங்கினார். இறைவன் இடைக்காருக்காக கோயில் கொண்ட இடமே வட ஆலவாய். மன்னனும் அது முதல் அகந்தை ஒழித்து புலவர்களுக்கான தக்க மரியாதைகளை செய்து அரசாண்டான். சொக்கநாதரின் அருளால் அவனுக்கு அரிமர்த்தனன் என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு முடிசூடிவிட்டு சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கல்வி கற்றவர்களையும் அறிவுடையோர்களையும் தகுதியுடையோர்களை இகழ்ந்தால் இறைவனின் அருள் கிடைக்காது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் ஐம்பத்தி ஐந்தாவது படலமாகும்.

அகத்தியரிடம் இலக்கணம் கற்ற நக்கீரரிடம் தமிழின் சந்தேகத்தை தீர்த்துக் கொண்ட சங்கப்புலவர்கள் பல்வேறு வகையான செந்தமிழ்ப் பாடல்களைப் பாடினர். நாளடைவில் புலவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்த பாடல்களே சிறந்தவை என்று எண்ணி மனதில் பெருமிதம் கொண்டனர். இப்பெருமிதத்தால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. தங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை நீக்க வல்லவர் சொக்கநாதர் ஒருவரே என்பதை அவர்கள் தீர்மானித்து திருக்கோவிலை அடைந்தனர். சொக்கநாதரை வணங்கி எம்பெருமானே எங்கள் பாடல்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் சிறந்தவற்றை அடையாளம் காட்டி எங்களின் ஐயத்தை தீர்க்க வேண்டும் என்று கூறி வழிபட்டனர்.

இறைவனார் சங்கப்புலவர்களின் கலகத்தைத் தீர்க்க அருளுள்ளம் கொண்டார். அதனால் புலவரின் வடிவில் அவர்கள் முன்னர் தோன்றிய இறைவனார் புலவர்களே இம்மதுரை மாநகரில் தனபதி என்னும் வணிகர் ஒருவர் உள்ளார். அவருடைய மனைவி பெயர் தரும சாலினி என்பதாகும். இத்தம்பதியினருக்கு முருகக் கடவுளை ஒத்த மகன் ஒருவன் உள்ளான். அவனுடைய பெயர் உருத்திர சருமன் என்பதாகும். உங்களின் பாடல்களை சரியானவை எவை என்பதை அவனே அறிவிக்க வல்லவன். ஆனால் அவன் ஊமை. அவனிடம் சென்று உங்களுடைய பாடல்களைச் சொல்லுங்கள். அவனுடைய புத்திக்கு இசைந்த பாடல் எதுவோ? அதுவே சிறந்த பாடல் என்று கூறினார். அதற்கு அவர்கள் புலவரே ஊமையன் எவ்வாறு எங்களின் பாடலின் தரத்தை அறிந்து அதனை சரியானது இது என்று எப்படி அறிவிப்பான்? என்று கேட்டனர். அதற்கு புலவரான இறைவனார் அவன் உங்கள் பாடலின் சொல்லாழத்தையம் பொருளாழத்தையும் உணர்ந்து அதற்கு ஏற்ப தலையசைப்பான். தோளினை உயர்த்தி மனம் மகிழ்வான். இதனைக் கொண்டு சிறந்தவற்றை அறிந்து உங்களுக்குள் உண்டான கலகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். (முருகனே இறைவனின் திருவிளையாடலில் உருத்திர சருமனாக பிறந்திருக்கிறார். இதனை 57 வது திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.)

சங்கப்புலவர்கள் அனைவரும் வணிககுலத்தைச் சார்ந்த ஊமையான உருத்திர சருமனை அவனுடைய வீட்டில் கண்டனர். பின்னர் அவனை அழைத்து வந்து தம் சங்கத்தில் இருத்தினர். அவனின் திருமுன்னர் அமர்ந்து தங்களுடைய பாடல்களைப் பாடினர். அதனைக் கேட்ட உருத்திர சருமன் சிலவற்றிற்கு தலையசைத்தான். பலவற்றிற்கு தோள்களை உலுக்கினான். நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோரின் பாடல்களைக் கேட்டதும் உடல் பூரித்து மெய்சிலிர்த்து கண்ணீர் பொழிந்து தலையசைத்து பெரும் மகிழ்ச்சி கொண்டான். ஊமைச் சிறுவனின் உணர்வினையே தராசாகக் கொண்டு புலவர்கள் அனைவரும் தமக்குள் உண்டான கலகத்தைப் போக்கி நட்புக் கொண்டனர். பின்னர் நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோரின் பாடல்கள் உலகில் பரவி சிறந்தோங்கியது. புலவர்கள் குற்றமற்ற நூல்களை ஆராய்ச்சி செய்து சிறப்புடன் விளங்கினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

உடல் குறைபாடு இருந்தாலும் அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.