54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் ஐம்பத்தி நான்காவது படலமாகும்.

இறைவனார் என்று தெரிந்தும் பாடல் பொருள் குற்றம் உடையது எனக் கூறிய நக்கீரரை இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். பின்னர் எல்லோருடைய வேண்டுதலின்படி நக்கீரர் மீது அருளுள்ளம் கொண்டு பொற்றாமரைக் குளத்திலிருந்து எழுந்தருளச் செய்தார். நக்கீரர் இறைவனின் மீது பேரன்பு கொண்டு தினமும் உள்ளம் உருக வழிபட்டு வந்தார். இறைவனாரும் நக்கீரருக்கு இலக்கணம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஆகையால்தான் அவன் இருமுறை தனது பாட்டில் குற்றம் கண்டு பிடித்தான். சொல்லழகு பொருளழகு மிக்க பாக்களைப் பிரிக்கும் இலக்கண அறிவுவை நக்கீரருக்கு கொடுக்க வேண்டும். ஆகையால் புலமைமிக்க ஒருவரைக் கொண்டு இலக்கணம் போதிக்க வேண்டும். யாரைக் கொண்டு இலக்கணம் போதிக்கலாம்? என்று சிந்திக்கலானார். இதனைக் கண்ட மீனாட்சி அம்மன் ஐயனே தங்களுடைய சிந்தனைக்கு விடைகூற எண்ணுகிறேன். முன்னொரு காலம் உலகில் உள்ள எல்லோரும் தேவர்களும் திருமால் பிரம்மா உள்ளிட்ட அனைவரும் தங்களை வழிபட கயிலாயத்திற்கு வருகை தந்தனர். இதனால் பூமியின் வடகிழக்குப் பகுதி தாழ்ந்தது. தென்மேற்குப் பகுதி உயர்ந்தது. அப்போது அகத்திய முனிவருக்கு தாங்கள் தமிழையும் இலக்கணத்தையும் முறையாக கற்றுத் தந்து தென்மேற்கு பகுதிக்குச் செல்லச் செய்து புவியை சமன் செய்தீர்கள். தற்போது அகத்திய முனிவர் தனது மனைவியான உலோபமுத்திரையுடன் பொதிகை மலையில் உள்ளார். அகத்தியரைக் கொண்டு நக்கீரருக்கு தமிழ் இலக்கணத்தை கற்பிக்கச் செய்யலாம் என்று கூறினார்.

இறைவனாரும் உள்ளம் மகிழ்ந்து தம் உள்ளத்தில் அகத்தியரை நினைத்தருளினார். இறைவனின் உள்ளக் குறிப்பை அறிந்ததும் அகத்தியர் தன் மனைவியுடன் மதுரைக்கு விரைந்து இறைவனாரை வழிபாடு செய்தார். அகத்தியரைக் கண்ட இறைவனார் அருந்தவச் செல்வனே நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் கற்பிப்பாய் என்று பணிந்தருளினார். அகத்தியர் இறைவனை வணங்கினார். அங்கு வந்து தம்மை வணங்கிய‌ நக்கீரனுக்குத் தமிழ் இலக்கணம் முழுவதையும் பிழையின்றிக் கற்பித்தார். நக்கீரனும் ஐயம் இன்றிக் கற்றார். அகத்தியரின் திறமை கண்டு மகிழ்ந்த இறைவர் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கணத்தைக் குற்றமற்றுக் கற்ற நக்கீரர் இப்போது தன் குற்றங்களை உணர்ந்து மனம் நொந்தார். தன் பாடல் எவ்வளவு இலக்கண பிழை இருந்திருக்கிறது.  இறைவனது பாக்கள் எவ்வளவு உயர்ந்தது என்று இலக்கணம் கற்ற பிறகே நக்கீரருக்குப் புரிந்தது. முன்னர் தம்மால் பாடப்பட்ட நூல்களில் உள்ள குறைகளை எல்லாம் நீக்கிக் கொண்டார். இறைவனின் பெருங்கருணையை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்து நான் அறியாமையால் தங்கள் பாடலுக்குச் சொல்லிய குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன் என்று வேண்டினார். பின்னர் நக்கீரர் அகத்தியரிடம் கற்ற இலக்கணத்தை மற்றைய புலவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து சொக்கநாதரின் திருவடிகளில் முதிர்ந்த பக்தியோடு இருந்தார். இப்படி வழிவழியாக வந்ததே தமிழ் இலக்கணம். மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் அகத்தியருக்கு இலக்கணம் போதித்த தாங்கள் ஏன் நக்கீரருக்குப் போதிக்கவில்லை? அகத்தியரை ஆசிரியராக்கிய காரணம் என்ன? எனக்கேட்டாள். சொக்கநாதர் புன்சிரிப்புடன் அகத்தியன் நிறை குடம். தமிழை கற்றுக் கொள்ள தகுதி உள்ள பொறாமையற்ற கீழ்படிதலுள்ள சொல்வதை அப்படியே கேட்கும் மாணவர்களுக்கே என் நேரடிப் பாடங்கள் கிடைக்கும் என்றார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எந்த அறிவாக இருந்தாலும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆசிரியரிடம் எதிர்த்து பேசாமல் அவர் சொல் கேட்க வேண்டும் என்பதையும் நமக்குத் தெரிந்த கல்வியை அறிவை தெரியாதவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

53. கீரனைக் கரையேற்றிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனைக் கரையேற்றிய படலம் ஐம்பத்தி மூன்றாவது படலமாகும்.

இறைவனான புலவனார் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியபோதும் இறைவனே ஆயினும் உமது பாடல் குற்றமுடையதே என்று வாதிட்ட நக்கீரனை சொக்கநாதர் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். வெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் சென்று அழுந்தினான். நக்கீரர் வெம்மை பொறுக்காமல் நீரில் மூழ்குவார். வெளியே வந்ததும் மீண்டும் எரிச்சல் தாளாமல் மறுபடி குளத்தில் மூழ்குவார். இப்படி இருந்தபடியால் தமிழ் சங்கத்துக்கு நக்கிரரால் வர இயலவில்லை. தமிழ் சங்கத்தில் நக்கீரர் இல்லாமல் ஏனைய சங்கப் புலவர்களும் செண்பகப் பாண்டியனும் துயரத்தில் ஆழ்ந்தனர். நக்கீரன் இல்லாத தமிழ் சபை அரசன் இல்லாத நாடு போன்றும் நடுநாயக மணி இல்லாத கண்டிகை போன்றும் ஞானம் இல்லாத கல்வி போன்றும் இருப்பதாக சங்கப் புலவர்கள் கருதினர். இறைவன் என்று தெரிந்தும் அவருடன் வாதிட்டதால் இந்நிகழ்வு நேர்ந்தோ? இதனை தீர்ப்பது எப்படி? என்று அவையோர் மனம் கலங்கினர். சொக்கநாதரைச் சரணடைந்தால் நக்கீரரை திரும்பப் பெறலாம் என்று எண்ணி அனைவரும் சொக்கநாதரை வழிபாடு செய்ய கோவிலுக்குச் சென்றனர்.

சொக்கநாதரை பலவாறு போற்றி வழிபாடு நடத்தினர். ஐயனே செருக்கினால் அறிவிழந்த நக்கீரனின் பிழையைப் பொறுத்தருளுக என்று வேண்டினர். சொக்கநாதர் மீனாட்சி அம்மனுடன் பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளினார். முன்னர் நெருப்பு கண்ணால் பார்த்த இறைவனார் தற்போது அருட்கண்ணால் பார்க்க நீரில் அழுந்திக் கிடந்த நக்கீரன் மீண்டு எழுந்தான். பின்னர் நக்கீரர் இறைவனார் மீது கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி பாடலைப் பாடினார். கோபப்பிரசாதம் மற்றும் திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளை இறைவனார் மீது பாடினார். ஏனைய புலவர்களும் இறைவனார் மீது கவிதாஞ்சலி பாடினர். இவற்றை எல்லாம் செவிமடுத்த இறைவனார் நக்கீரனை கைபிடித்து பொற்றாமரைக் குளத்தில் இருந்து கரையேற்றினார். நீ முன் போலவே புலவர் கூட்டத்திற்கு நடுவிலே தங்குவாயாக என்று கூறி மறைந்தருளினார். இறைவனின் அருள் பெற்ற தருமிக்கு மேலும் பல பரிசுகளை பாண்டியனைக் கொண்டு கொடுக்கச் செய்தனர். செண்பகப் பாண்டியன் நாள்தோறும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டுப் பல திருப்பணிகள் செய்து சிவமே பொருள் எனத் துணிந்த உள்ளன்பினோடு இனிது வாழ்ந்து நல்லாட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் சோதனை செய்து இருக்கும் குறைகளைப் போக்கி தகுதியை கொடுத்து இறுதியில் சாதனையாளனாக மிளிரச் செய்வார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் ஐம்பத்தி இரண்டாவது படலமாகும்.

வங்கிசூடாமணிப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த போது நந்தவனம் அமைத்து இறை வழிபாட்டிற்காக அதில் மலரும் பூக்களைப் பயன்படுத்தினான். அந்த நந்தவனத்தில் வண்டுகள் மொய்க்காத செண்பக மலர்களும் இருந்தன. வங்கிசூடாமணிப் பாண்டியன் செண்பக மலர்களை சொக்கநாருக்கு அணிவித்து வழிபாடு நடந்தினான். ஆதலால் சொக்கநாதர் செண்பக சுந்தரேசர் என்ற பெயரினையும் பெற்றார். வங்கிசேகர பாண்டியனும் செண்பகப் பாண்டியன் என்று சிறப்பாக அழைக்கப்பட்டான். வசந்த காலத்தில் ஒருநாள் செண்பகப் பாண்டியன் தன்னுடைய மனைவியுடன் நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது ஒரு நறுமணம் வருதை உணர்ந்தான். காற்றிற்கு இயற்கையில் மணம் இல்லை. ஒருவேளை அரசியின் கூந்தலிருந்து இம்மணம் வருகிறதா? என்று எண்ணினான். பின்னர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா? அல்லது பூக்கள் மற்றும் நறுமணப் பொருட்களை பூசிக்கொள்வதால் மணம் உண்டாகிறதா? என்ற சந்தேகம் வந்தது. தன்னுடைய சந்தேகத்தை அரசியிடம் கேட்டான். அதற்கு அரசி தங்களின் சந்தேகத்தை சங்கப் புலவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினாள். பாண்டியனும் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை சங்கமண்டபத்தின் முன்னர் கட்டித் தொங்க விட்டான். என்னுடைய சந்தேகத்தை பாடல்கள் மூலம் தீர்ப்பவருக்கு இப்பொற்கிழி பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்தான்.

பாண்டியனின் அவையில் இருந்த புலவர்கள் பலரும் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்க முடியாமல் திணறினர். அப்போது மதுரையில் ஆதி சைவர் மரபில் தோன்றி தருமி என்பவன் அரசனின் அறிவிப்பினை அறிந்தான். சொக்கநாதரிடம் பேரன்பு கொண்ட அவனுக்கு தாய் தந்தை மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. ஆனால் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்ட தருமி ஒருவேளை உணவிற்கு மிகவும் திண்டாடினான். ஆகையால் அவனுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. சொக்கநாதர் முன்னர் சென்று அப்பனே பாண்டியன் தன்னுடைய சந்தேகத்தைப் போக்கும் பாடலை அளிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக அறிவித்து உள்ளான். எனக்கோ பாடல் ஏதும் எழுதத் தெரியாது. ஆனால் ஆயிரம் பொன் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொண்டு சுற்றத்தாரோடு இனிது வாழ்வேன். ஆகையால் எனக்கு ஆயிரம் பொற்காசுகளை கிடைக்க அருள வேண்டும் என்று மனமுருகி வேண்டினான். அப்போது இறைவனார் புலவரின் வடிவத்தில் வந்து பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை தருமிக்கு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட தருமி நேராக செண்பகப் பாண்டியனைச் சந்தித்து அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். பாண்டியனும் அப்பாடலை வாசிக்கச் சொன்னான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியிற்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்று தருமி இறைவன் அளித்த பாடலை வாசித்தான். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதாக அமைந்த பாடலின் உட்கருத்தை அறிந்த செண்பகப் பாண்டியன் மகிழ்ச்சி அடைந்து தருமிக்கு பரிசளிக்க உத்தரவிட்டான். இதனைக் கேட்டதும் தருமி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சங்கமண்டத்திற்கு முன்னே கட்டியிருந்த பொற்கிழியை தருமி எடுக்கச் செல்கையில் நக்கீரர் பொற்கிழியை எடுக்க விடாமல் தடுத்தார். அங்கே வந்த செண்பகப் பாண்டியனிடம் இப்பாடலில் சொல் குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் பொருள் குற்றம் உள்ளது. இதற்கு தாங்கள் பரிசளிப்பது ஆச்சரியமாக உள்ளது என்று கூறி தருமியிடம் பாடலைத் திருப்பிக் கொடுத்தார். தருமி நேரே சொக்கநாதரின் சந்ததிக்குச் சென்றார். பொருள் வேண்டும் என்ற ஆசையில் உன்னைக் கூட மறந்து பாடலை அரசரிடம் எடுத்துச் சென்றேன். அப்பாடலில் பிழை இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டனர். குறையுள்ள பாடலை என்னிடம் கிடைக்கச் செய்ததேன்? என்று புலம்பினான். அப்போது மீண்டும் புலவர் வடிவில் தோன்றிய சொக்கநாதர் தருமியிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்து நேரே சங்கமண்டபத்துக்குச் சென்றார்.

சொக்கநாதர் வடிவில் இருந்த புலவர் அங்கிருந்தோரிடம் யார் என்னுடைய பாட்டில் குற்றம் இருப்பதாகச் சொன்னது என்று சிங்கம் போல் கர்ஜித்தார். அப்போது நக்கீரர் உங்களுடைய பாட்டில் சொல் குற்றம் இல்லை. பொருளில்தான் குற்றம் உள்ளது என்றார். அதாவது பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதானே உங்கள் பாடலின் கருத்து அதுதான் குற்றம். பெண்கள் நறுமலர்கள் மற்றும் திரவியங்களைப் பூசிக் கொள்ளுதல் போன்ற செயல்களால்தான் அவர்களின் கூந்தலுக்கு மணம் உணடாகிறது. இயற்கையில் அவர்களின் கூந்தலுக்கு மணம் இல்லை என்று கூறினார் நக்கீரர். அதனைக் கேட்டதும் இறைவனார் கற்புக்கரசிகள் தேவலோகத்துப் பெண்கள் ஆகியோரின் கூந்தலுக்குக் கூட இயற்கையில் மணம் இல்லையா? என்று வெகுசினத்துடன் கேட்டார். அதற்கு நக்கீரர் நான் தினந்தோறும் வணங்கும் திருகாளத்தியப்பரின் இடப்பாகத்தில் இடம்பெற்ற ஞானப் பூங்கோதையாகிய உமையம்மையின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் கிடையாது என்று வாதிட்டார். இறுதியில் இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணினை திறந்து காட்டினார். வந்திருப்பது இறைவனார் என்று தெரிந்தும் நக்கீரர் நீர் இந்திரன் போல் உடல் முழுவதும் கண்களாக்கிச் சுட்டாலும் உம்பாடல் குற்றமுடையதே என்று கூறினார்.

சொக்கநாதர் நக்கீரா எமது தேவியின் கூந்தலின் வாசத்தை நானே அறிவேன். நீ எல்லாமறிந்தவன் போல எதிலும் குற்றம் காண்பது உன் செருக்கையே குறிக்கின்றது. பூங்குழலி எனப் பெயர்பெற்ற சக்தியின் கூந்தல் வாசனையை அடைய விரும்பி அமராவதியிலுள்ள நந்தவனத்தில் உள்ள செடிகளின் புஷ்பங்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உமையின் கேசத்தில் குடி இருக்கின்றன. தேவி சூடிக் கொள்வதால் புஷ்பங்களுக்குத் தான் பெருமை கூடுகிறது. துவாதச ஆதித்தர்களும் அம்பிகையின் கூந்தலின் வாசனைக்காக கூந்தலுக்கருகில் இருந்து சேவிக்க ஆசை கொண்டு அம்பிகையின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களாக  இருக்கிறார்கள். ஈஸ்வரியின் கரிய கேசம் அதை தியானிக்கும் அடியார்களின் மன இருளைப் போக்குகின்றது. மலிவான வாசனைகளை நீக்கி சத் வாசனை அளிக்கிறது. அப்பேற்பட்ட தேவியின் கூந்தலின் மணத்தை வீம்புக்காக புறக்கணித்து வாதம் செய்கின்றாய். அதனால் சக்தி உன்னை விட்டு விலகுகின்றாள் எனக் கூறினார். உடனே இறைவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த தீப்பொறியானது நக்கீரரைச் சுட்டது. பொறாமையுற்ற நக்கீரர் ஈசனின் நெற்றிக்கண் வெப்பம் தாங்காமல் தண்ணீருக்கு அழுந்தி பொற்றாமரைக் குளத்தில் அழுந்தினார். சொக்கநாதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து அருளினார். சொக்கநாதரின் கூற்றை மற்றையப் புலவர்களும் பாண்டியனும் ஆமோதித்துப் பொற்கிழியை இறைவன் அருள் பெற்ற சுந்தரநாதனுக்குக் கொடுத்தனர். சுந்தரநாதன் நல்ல குலத்தில் பிறந்த மங்கையை மணமுடித்து நற்புதல்வனை அடைந்து தெய்வத் தொண்டு புரிந்து வாழ்ந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

நடுநிலை வகிப்பவர்கள் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை மாறக் கூடாது என்பதையும் தனக்கே அனைத்தும் தெரியும் என்ற செருக்கு இருக்க கூடாது என்பதையும் தகுதியுடையவர்களுக்கு செல்வத்தை கொடுத்து இறைவன் அருள்வார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

51. சங்கப்பலகை கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சங்கப்பலகை கொடுத்த படலம் ஐம்பத்தி ஒன்றாவது படலமாகும்.

வங்கிசேகர பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்த போது பிரும்மதேவன் தன் மனைவியரான காயத்ரி சாவித்திரி சரஸ்வதியுடன் காசிக்கு யாகம் செய்ய வந்தார். லிங்கப் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கம் பிதாமகேஸ்வர லிங்கம் என பெயர் பெற்றது. குளமொன்றை அங்கு வெட்டினார். அக்குளத்திற்கு தசாச்வமேத தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. அங்கு ஒன்பது அசுவமேத யாகம் செய்து முடித்தார். ஒவ்வொரு யாக முடிவிலும் மூன்று தேவியருடன் நீராடினார். பத்தாவது யாக முடிவில் நீராட செல்லும் போது விஞ்ஞை மாது என்ற கந்தர்வ கன்னி ஒருத்தி யாழினை மீட்டி பாடிக் கொண்டிருந்தாள். அப்பாடலால் ஈர்க்கப்பட்ட சரஸ்வதி அங்கே நின்று விட்டாள். இதனால் பிரம்ம தேவர் மற்ற இருவருடன் கங்கையில் நீராடி வெளியேறினார். அங்கே வந்த சரஸ்வதி பிரம்ம தேவரிடம் என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் நீராட வந்தது ஏன்? என்று கேட்டாள். அதனைக் கேட்ட பிரம்ம தேவர் நீ உன்னிலை மறந்து இசையில் மூழ்கிவிட்டாய். தவறு உன் மீது இருக்க நீ எங்களைக் கோபிப்பது முறையல்ல. குற்றம் புரிந்த நீ மானிடப் பிறவி எடுத்து அக்குற்றத்தைப் போக்கிக் கொள் என்று கூறினார். இதனைக் கேட்டதும் அதிர்ந்த சரஸ்வதி உங்களின் உயிரான நான் அழியும் மானிடப் பிறவி எடுக்க வேண்டுமா? என்று கேட்டாள். அப்போது பிரம்மதேவர் உனது வடிவமாகிய நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதரிப்பார்கள். அவர்களுக்கு தலைமைப் புலவராய் சொக்கநாதர் தோன்றி அவர்களுக்கு அறிவைத் தோற்றுவித்து அவர்களின் புலமையைக் காப்பார். அவர்கள் ஏட்டுச் சுவடிகளாக பாடல்கள் எழுதிக் குவிக்கையில் உன் சாபம் நீங்கி என் நாவில் உறைவாய் என சாப விமோசனமளித்தார்.

பிரம்மதேவரின் கூற்றுப்படி நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதாரம் செய்தனர். சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று புலமையில் வென்று மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சொக்கநாதர் தானும் புலவர் வடிவில் அவர்களின் எதிரே வந்து அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து திருக்கோயிலை அடைந்து மறைந்தருளினார். அப்புலவர்கள் புலவராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்து பல பாடல்களைப் பாடி அவரை வழிபட்டனர். பின்னர் வங்கிசேகர பாண்டியனைக் கண்டு வாழ்த்துக் கூறினர். பாண்டியனும் அவர்களுக்கு பல பரிசுகள் கொடுத்து திருக்கோயிலுக்கு வடமேற்கு திசையில் சங்க மண்டபம் அமைத்து அதில் அவர்களை இருத்தி வைத்தான். ஆதலால் அவர்கள் சங்கப் புலவர்கள் என்று அழைக்கப்பட்டனர். சங்க மண்டபத்தில் வீற்றிருந்த சங்கப் புலவர்கள் வடநாட்டுப் புலவர்களையும் பாண்டிய நாட்டின் முதன்மைப் புலவர்களையும் வாதாடி வென்றனர். இதைக் கண்டு பல திறமையற்ற புலவர்கள் பொறாமை கொண்டவர். இதனை அறிந்த புலவர்கள் ஆலயம் சென்று இறைவனிடம் உண்மைப் புலவர்களை கண்டு பிடிக்கவும் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் புலவர்களின் புலமையை உள்ளபடி சீர்தூக்கி அறிய அளக்கும் கருவியாக ஒரு சங்கப் பலகையைத் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

சொக்கநாதர் புலவர் வடிவம் தாங்கி ஒரு பலகையுடன் வந்தார் வந்தார். புலவர்களைப் பார்த்து புலவர்களே இப்பலகை பார்ப்பதற்கு குறுகியது ஆனால் மந்திரத் தன்மை உடையது. ஒரு புலவர் தனது பாடலுடன் இந்தப் பலகையில் அமரலாம். பாடல் சரியாக இருந்தால் மட்டும் இது அவர்களுக்கு இடம் கொடுக்கும். அடுத்த புலவர் சரியான பாடலுடன் வந்தால் இப்பலகை சிறிது நீண்டு அவருக்கு இடம் கொடுக்கும். நீங்கள் அனைவரும் சரியான பாடலுடன் வந்தால் நாற்பத்து எட்டு பேருக்கும் வளர்ந்து இடம் கொடுக்கும். நீங்கள் மற்றவருடன் வாதத்தில் ஈடுபடும் போது உங்கள் பாடல் சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள இது ஒரு தராசு போல் உதவும் என்று கூறி மறைந்தருளினார். அப்பலகையை வித்யாபீடம் சரஸ்வதிபீடம் ஞானபீடம் மாத்ருகாபீடம் வியாக்யான பீடம் எனப் பலபெயர்கள் சூட்டி மகிழ்ந்தனர். சங்கப்பலகை என அதற்குப் பெயர் ஏற்பட்டது. சங்கப் புலவர்கள் அப்பலகையை திருக்கோயிலில் வைத்து வழிபட்டனர். ஒரு முழத்திற்கும் குறைவான அப்பலகையில் முதலில் நக்கீரர் சரியான பாடலுடன் அமர்ந்தார். உடனே இன்னொருவர் அமரும் அளவு பலகை நீண்டது. பின்பு கபிலர் அமர மறுபடியும் நீண்டது. இவ்வாறு புலவர்கள் அமர அமர பலகை விரிவடைந்தது. போலிப் புலவர் அமர்ந்தால் பலகை நீளாமல் அப்படியே இருந்தது. அவர் எழுந்தால் மட்டுமே நீண்டது. நாற்பத்து எட்டு புலவர்களும் சரியான பாடலைக் கொண்டு சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்தனர். அதன்மேல் அமர்ந்த புலவர்கள் எழுதிப் போட்ட ஏடுகளால் சங்கமண்டபம் நிரம்பி வழிந்தது. யாருடையது எங்கே இருக்கிறது என்று பகுத்து எடுக்க முடியாத அளவு கலந்து கிடந்தது. தங்களுடையது எது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொக்கநாதர் அவர்களின் முன்னால் புலவர் வடிவத்தில் தோன்றி அவர்களின் பாடல்களை ஆராய்ந்து பொருளினை கூறி அவரவர் பாடல்களை அவரவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். புலவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புலவர்களின் நடுவில் நடுநாயகமாக அமர்ந்து பாடல் ஒன்றை இயற்றினார் இறைவன். புலவர்களில் நக்கீரர் மட்டும் அதில் குற்றம் சொன்னார். சொல்லழகும் பொருளழகும் பண்ணழகும் மிக்கப் பாக்களை இயற்றினார் இறைவன். அதற்கும் குற்றம் சொன்னார் நக்கீரன். அப்போது ஆகாயத்தில் அசீரீரியாக புலவர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை தீர்க்கப் புலவர் வடிவில் வந்திருப்பது சொக்கநாதர். தானே பெரியவன் என்னும் அகந்தையில் வாது செய்யாதே நக்கீரா எனக் குரல் கேட்டது. நக்கீரர் தனது அகந்தையை நீக்கி வணங்கினார். மற்ற புலவர்களும் எம்பெருமானை வணங்க அனைவருக்கும் ஆசிகூறி மறைந்தார் சொக்கநாதர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சங்கப் புலவர்களுக்கு தமிழ் பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதையும் இறைவனார் எங்கும் நடுநிலைமை வகிப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

50. சுந்தரப் பேரன் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சுந்தரப் பேரன் செய்த படலம் ஐம்பதாவது படலமாகும்.

வங்கிசேகரப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது விக்கிரம சோழன் என்ற சோழ அரசன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனுக்கு உதவியாக வடநாட்டு அரசர்கள் பலர் பாண்டிய நாட்டினை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தனர். சோழனின் படைகள் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து நீர் நிலைகளை உடைத்தும் பசுக்களைக் கவர்ந்தும் வியாபாரிகளிடம் கொள்ளை அடித்தும் தாக்குதல் நடத்தினர். இச்செய்தியை வீரர்கள் மூலம் அறிந்த வங்கிசேகர பாண்டியன் பாண்டிய நாட்டினை சொக்கநாதரை தவிர யாராலும் காப்பாற்ற இயலாது என்று எண்ணி அவரைச் சரணடைந்தான். திருகோவிலுள் நுழைந்த பாண்டியன் எம் தந்தையே விக்கிரம சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். என்னிடமோ சோழனை எதிர்க்கும் அளவுக்கு படை வலிமை இல்லை. ஆதலால் தாங்கள்தான் பாண்டிய நாட்டினையும் என்னையும் காத்தருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது இறைவனார் வானத்தினின்றும் பாண்டியனே நீ முதலில் சென்று சோழனை எதிர்கொள். யாம் பின்னால் வந்து வெற்றியை உமதாக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

சொக்கநாதரின் திருவாக்கினைக் கேட்டதும் வங்கிசேகர பாண்டியன் தெளிவடைந்து சோழனை எதிர்க்கப் புறப்பட்டான். போர்க் களத்தில் பாண்டிய மற்றும் சோழப் படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிட்டன. அப்போது சோழனுக்கு உதவியாக வடநாட்டுப் படைகள் போர்க்களத்தை அடைந்தன. இதனால் பாண்டியனின் படைகள் சோழனின் படைகளை எதிர்க்க முடியாமல் சிதறி ஓடின. சோழன் போரில் வெற்றி பெற்றோம் என்று எண்ணி சங்கை முழங்கினான். அப்போது சொக்கநாதர் வேடுவ வடிவம் கொண்டு பாண்டியனின் சேனைக்கு தலைவராக சுந்தரேசன் என்ற திருப்பெயருடன் போர்க் களத்திற்கு வந்தார். தம்முடைய கணைகளை சோழனின் படைகளின் மீது எய்தார். அவர் விட்ட ஒவ்வொரு அம்பும் சோழப்படையில் பதினாறாயிரம் வீரர்களைக் கொன்றது. சோழப்படைகளின் எண்ணிக்கை குவியல் குவியலாக குறைந்தது. இதனைக் கண்ட சோழன் ஐயமுற்று இந்த அம்புகளுக்கு இவ்வளவு வலிமை எப்படி வந்தது என்று எண்ணி அம்பினை ஆராய்ந்த போது அம்பில் சுந்தரேசன் என்ற பெயர் பொறித்திருந்ததைக் கண்டான். வேடுவ வடிவில் உள்ளவர் சொக்கநாதர் பாண்டியனுக்கு துணையாக வந்துள்ளார் என்பதை உணர்ந்தான் விக்கிரம சோழன். மற்ற அரசர்களை அழைத்து இந்த அம்பை எறிந்தவர் சொக்கநாதர். அவர் போர் முனைக்கு வந்திருக்கிறார். தெய்வ பலத்தை மனித சக்தியால் வெல்ல முடியாது. அதனால் யுத்தத்தை நிறுத்தி ஊருக்குப் போகலாம் என்றான். சிலர் சம்மதித்தனர். சிலர் சண்டையிட்டு மாண்டார்கள். சோழன் போர்க் களத்தை விட்டு வெளியேறி சோழநாட்டிற்கு பயணமானான்.

வங்கிசேகர பாண்டியன் போரில் வெற்றி பெற்றான். இறைவனார் பாண்டியனின் வெற்றிப் புன்னகையைப் பார்த்து அருள்நகை புரிந்து மறைந்தருளினார். வெற்றி பெற்ற திருக்கோயிலுக்குச் சென்று வங்கிசேகர பாண்டியன் இரத்தினத்தால் செய்த வில்லும் சுந்தரர் என்று பேர் எழுதிய அம்பும் செய்து சாற்றி வணங்கினான். பின்னர் நீதிதவறாமல் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எவ்வளவு பெரிய வலிமையானவனாக எதிரி இருந்தாலும் தன்னை சரணடைந்தவர்களை இறைவன் காப்பாற்றுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

49. திருவால வாயான் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருவால வாயான் படலம் நாற்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

சுகுண பாண்டியனின் மரபில் அவனுக்குப் பின் சித்திநாதன் சித்தி பூஷணன் சித்திரத்வஜன் சித்திரவர்மன் சித்திரசேனன் சித்திரவிக்ரமன் ராஜமார்த்தாண்டன் ராஜசூடாமணி ராஜ சார்த்தூலன் ராஜ குஞ்சரன் சத்ருஞ்சரன் பீமரதன் பீமபராக்கிரமன் பிரதாப மார்த்தாண்டன் விக்கிரம கஞ்சுகன் யுத்த கோலகன் அதுலவிக்கிரமன் அதுலகீர்த்தி கீர்த்திவிபூஷணன் முதலானோர் வம்ச வழியாக வெகுகாலம் நீதி நெறி தவறாமல் அரசாண்டனர். இந்த இருபத்தோரு மன்னர்கள் வெகு காலம் நெறிதவறாது அரசு புரிந்ததும் ஒரு மனுவின் காலம் முடிந்துவிட்டது. மனுவின் காலம் முடிந்தபடியால் ஊழிக் காலம் எனப்படும் பிரளயம் உண்டானது. கடல் நீர் பொங்கியதால் உலகில் உள்ளவை அழியத் தொடங்கின. அப்பிரளயத்திலிருந்து மீனாட்சி அம்மன் திருக்கோவில் திருக்கோவிலின் இந்திர விமானம் பொற்றாமரைத் தீர்த்தம் பசுமலை பன்றிமலை நாகமலை இடபமலை யானைமலை ஆகியவை அழியாதிருந்தன. பிரளயக் காலம் முடிந்ததும் இறைவனார் உலகத்தையும் உயிர்களையும் படைத்தார். சூரியனிடமிருந்தும் சந்திரனிடமிருந்தும் மன்னர்கள் தோன்றினர். சேர சோழ பாண்டிய நாடுகள் பிரிந்தன. அப்போது பாண்டிய மரபில் வங்கிசேகரப் பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்தவனாய் விளங்கினான். அவன் மீனாட்சி அம்மன் திருக்கோவிலைச் சுற்றிலும் சிறிய நகரத்தை உண்டாக்கி ஆட்சி செய்து வந்தான். நாளடைவில் அவனின் நல்லாட்சியின் விளைவால் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆதலால் வங்கிசேகரப் பாண்டியன் நகர எல்லையை விரிவாக்க எண்ணினான். எனவே அவன் திருக்கோவிலை அடைந்து எம் பெருமானே உன் அருளினால் நான் இந்நாட்டை ஆண்டு வருகிறேன். இப்போது என்னுடைய குறை ஒன்றை போக்கி அருள வேண்டும். என்னுடைய குடிமக்கள் வசிக்க ஒரு நகரம் அமைக்க வேண்டும். இந்நகரத்திற்கு ஆதியில் வரையறுக்கப்பட்ட எல்லையை வரையறுத்துக் காட்டி அருளுங்கள் என்று வேண்டினான்.

வங்கிசேகரப் பாண்டியனின் வேண்டுதலை ஏற்ற இறைவனார் சித்தர் வடிவம் கொண்டு மகாமண்டபத்தின் அருகே வந்து நின்றார். தமது திருக்கரத்தில் கங்கணமாகக் கட்டி இருந்த பாம்பினைப் பார்த்து நீ இப்பாண்டியனுக்கு இந்நகரத்தின் எல்லையை வரையறை செய்து காட்டுவாயாக என்று ஆணை இட்டார். உடனே அப்பாம்பு எம்பெருமானே இந்நகரம் எனது பெயரினால் விளக்க அருள்புரிவாயாக என்று வேண்டுகோள் விடுத்தது. இறைவனாரும் அவ்வாறே ஆகுக என்று அருளினார். உடனே பாம்பு விரைந்து சென்று கிழக்கு திசையில் சென்று வாலை நீட்டியது. நகருக்கு வலமாக தரையில் படிந்து உடலை வளைத்து வாலைத் தன் வாயில் பிடித்து பழைய நகரின் எல்லையைக் காட்டியது. பின்னர் கங்கணமாக மாறி இறைவனாரின் திருக்கரத்தில் மீண்டும் அமர்ந்தது. பாண்டியனை ஆசீர்வதித்து சித்தர் மறைந்தார். சர்ப்பம் காட்டிய எல்லைப்படி நகரை அமைத்து ஆலவாய் எனப் பெயரிட்டான் வமிசசேகரன். நான்கு பக்கமும் எல்லை வகுத்ததால் நான்மாடக் கூடல் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. பாம்பு வரையறுத்த எல்லையின் படி வங்கிசேகரப் பாண்டியன் சக்கர வாளகிரி என்னும் மதிலைக் கட்டுவித்தான். அந்நகருக்கு தெற்கு வாயிலுக்கு திருப்பரங்குன்றமும் வடக்கு வாயிலுக்கு இடபமலையும் மேற்கு வாயிலுக்கு திருஏடகமும் கிழக்கு வாயிலுக்கு திருப்பூவணமும் எல்லையாக அமைந்தன. அப்பெரிய மதிலை ஆலவாய் மதில் என்றும் அந்நகரை ஆலவாய் என்றும் அழைக்கத் தொடங்கினர். பாம்பு வரையறுத்த எல்லையில் வங்கிசேகரப் பாண்டியன் நகரினை விரிவு செய்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பிரளயத்தில் உலகமே அழிந்தாலும் அழியாத பெருமை பெற்ற மதுரையின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளவும் மதுரை திருஆலவாய் என்ற பெயர் அழைக்கப்படும் காரணத்தையும் வழி தெரியாமல் இறைவனை சரணடைபவர்களை இறைவனார் காப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் நாற்பத்தி எட்டாவது படலமாகும்.

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அந்த குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது. அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் குளம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது. அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அக்குளத்தை அச்சோதீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது. முனிவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடும் போது மீன்கள் அவர்களின் மீதும் அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது என்று எண்ணியது. தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியதவர் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும் சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மீனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மறைந்தது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது.

மதுரையம்பதியை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது. பதினாறாம் நாள் நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும் போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது. குளத்திற்குள் தனது காலை வைத்ததும் சொக்கநாதரின் சிந்தனை தலை தூக்கியது. சொக்கநாத்தரின் குளத்தில் உள்ள மீனை உண்ணக் கூடாது என்று அவர் மீது கொண்ட அன்பினால் மீனினை உண்ணாமல் பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது. நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி என் இனிய நாரையே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாரை ஐயனே இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத்தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால் அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இறைவனாரும் அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். பின்னர் நாரை நான்கு தோள்களும் மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது. நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போனது. சுகுண பாண்டியன் சிலகாலம் ஆட்சி செய்து பின்னர் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனைப் பற்றிய தூய சிந்தனையும் அவரின் செய்திகளையும் உணர்ந்து கேட்கும் போது பிற உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்கும் எண்ணம் அழிந்து விடும் என்பதையும் பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் நாற்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான். அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன் சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக் குருவியாக பிறந்தான். அக்கரிக் குருவியை காகம் உள்ளிட்ட பெரிய பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக் குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக் குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை. எனவே கரிக் குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக் குருவி அமர்ந்திருந்தது. அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்து சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தார்கள். சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி இறைவனைப் பற்றி பேச ஆரம்பித்தார். தலம் தீர்த்தம் மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார். என்று மதுரையின் சிறப்பையும் சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார். சிவபக்தர் கூறியதைக் கேட்ட கரிக் குருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அக்கரிக் குருவி மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.

மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறை வழிபாடு செய்தது. கரிக்குருவியின் செயலினைக் கண்டதும் மீனாட்சி அம்மன் இறைவனாரிடம் ஐயனே இக்கரிக் குருவி வழிபடும் காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு இறைவனார் கரிக் குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் குருவியாக பிறந்தது. முற்பிறவியில் செய்த நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியையும் பொற்றாமறைக் குளத்தையும் இறைவனைப் பற்றியும் தெரிந்து கொண்டது. இத்தலத்தில் தனக்கு பிறவித் துன்பம் நீங்கும் என்று முழுமையாக நம்பிக்கையுடன் தனது வழிபாட்டை செய்து கொண்டிருக்கிறது. அதன் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் உரிய பலன் அதற்கு கிடைக்கும் என்று சொல்லி கரிக்குருவிக்கு ஆயுள் பலத்தையும் பிறவித் துன்பத்தையும் போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது. பின்னர் இறைவனாரிடம் ஐயனே எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன என்றது. அதனைக் கேட்ட இறைவனார் அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலிமையுள்ளவன் ஆவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இந்த வலிமையானது எமது மரபில் உள்ள அனைத்து பறவைகளுக்கும் கிடைக்கப் பெற்று விளங்க வேண்டும் எமக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி அனைத்து பறவைகளும் உய்ய அருள வேண்டும் என்று வேண்டியது. சொக்கநாதர் அவ்வாறே ஆகுக என்று கூறியருளினார். உடனே அக்குருவியும் அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலிமை பெற்றது. அதனால் அந்தப் பறவைகள் அனைத்தும் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை உணர்ந்த சான்றோர்கள் இறைவனை அடையச் சொல்லும் வழிகளை நம்பிக்கையுடன் கடைபிடித்து இறைவனை வழிபட்டு வந்தால் உறுதியாக வீடு பேறு பெறலாம் என்பதையும் தீமைகள் செய்தால் தீமைகள் வந்து சேரும் எனபதையும் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பன்றிக் குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம் நாற்பத்தி ஆறாவது படலமாகும்.

சொக்கநாதரிடம் பால் அருந்திய பன்றிக் குட்டிகள் பன்றி முகமும் மனித உடலும் கொண்ட பன்றி குமாரர்களாக மாறினர். அவர்கள் பல கலைகளிலும் வல்லவர்களாக பன்றி மலையில் வசித்து வந்தனர். அப்போது ஒருநாள் மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் எம்பெருமானே இழிந்த பிறவியான பன்றிக் குட்டிகளுக்கு தாங்கள் பாலூட்டி அவைகளின் அறியாமையை போக்கியது ஏன்? என்று கேட்டார். அதற்கு சொக்கநாதர் உலகில் உள்ள சகல உயிர்களும் எமக்கு ஒரே தன்மையை உடையவையே. உலக உயிர்களிடம் எந்த பேதமையும் எமக்கு கிடையாது. ஆகையால்தான் எம்மை சகல ஜீவ தயாபரன் (எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையை அருளுபவன்) என்று அழைக்கின்றனர். ஆதரவின்றி தவித்த பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டி அவற்றின் அறியாமையை நீக்கினோம். இனி அப்பன்றி குமாரர்களை பாண்டியனுக்கு மந்திரியாக்கி இறுதியில் அவர்களை சிவகணங்களாக்குவோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இராசராச பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் அரசனே பன்றி மலையில் அறிவில் சிறந்த பன்னிரெண்டு பன்றி குமாரர்கள் இருக்கிறார்கள். நீ அவர்களை மந்திரியாக்கி நன்மைகளைப் பெறுவாயாக என்று கூறினார். சொக்கநாதரின் ஆணையைக் கேட்ட இராசராசபாண்டியன் விழித்து எழுந்தான். காலையில் தன்னுடைய ஆட்களை பன்றி மலைக்கு அனுப்பி பன்றி குமாரர்களை அழைத்து வரச்செய்தான். பன்றி குமாரர்களுக்கும் அரசனின் அழைப்பினை ஏற்று மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் மதுரையை அடையும் போது அவர்களை எதிர்கொண்டு அழைத்து பரிசுகள் பல அளித்து அவர்களை மந்திரிகளாக ஆக்கிக் கொண்டான். பழைய அமைச்சர்களின் பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்வித்தான். அப்பன்றி குமாரர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து பாண்டியனுக்கு நல்லோசனைகள் கூறி நல்ல நெறிகளைச் செயல்படுத்தினர். சிலகாலம் சென்றபின் சிவலோகத்தை அடைந்து சிவகணங்களாக மாறும் பேறு பெற்றனர். இராசராச பாண்டியனும் தேவலோகம் அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம். தகுதி பெறும் உயிர்களுக்கு உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து இறுதியில் அருளையும் கொடுத்து தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

45. பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம் நாற்பத்தி ஐந்தாவது படலமாகும்.

ராசராச பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் மதுரை நகரில் வைகை ஆற்றின் கரைக்குத் தெற்கே குருவிருந்த துறை என்ற ஊர் ஒன்று இருந்தது. தற்போது அவ்வூர் குருவித்துறை என்றழைக்கப்படுகிறது. அவ்வூரில் சுகலன் என்ற ஒரு வேளாளன் வசித்து வந்தான். அவனுடைய மனைவி சுகலை ஆவாள். அவர்கள் பொருட் செல்வமும் மக்கள் செல்வமும் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அதாவது அத்தம்பதியினருக்கு பன்னிரெண்டு ஆண்மக்கள் இருந்தனர். சில ஆண்டுகளில் சுகலன் இறந்து விட்டான். தந்தையை இழந்த சுகலனின் ஆண்மக்கள் உணவிற்காக வேடர்களோடு இணைந்து காட்டிற்கு சென்று வேட்டையாடி வந்தனர். அப்போது ஒரு சமயம் காட்டில் தவம் செய்து கொண்டிருந்த தேவர்களின் குருவான குரு பகவானைக் கண்டனர். அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த குரு பகவானை கேலி செய்தனர். பின்னர் அவர் மேல் கல்லையும் மண்ணையும் வாரி இறைத்தனர். இதனால் கோபம் கொண்ட தேவகுரு அவர்களை பன்றிக் குட்டிகளாகப் பிறந்து தாய் தந்தையரை இழந்து உணவுக்காக அலைவீர்கள் என்று சாபம் இட்டார். தேவகுருவின் சாபத்தால் அதிர்ச்சியடைந்த சுகலனின் பிள்ளைகள் எங்கள் சாபம் நீங்க வழி கூறுங்கள் என்று கதறினர். அவர்களிடம் இரக்கம் கொண்ட தேவகுரு மதுரைச் சொக்கநாதர் உங்களுக்கு தாயாய் வந்து பாலூட்டி உங்களின் பசித் துன்பத்தைப் போக்குவார். பின்னர் அவர் பாண்டியனுக்கு உங்களை மந்திரியாக்கி இறுதியில் உங்களுக்கு முக்தியையும் கொடுப்பார் என்று கூறினார்.

ரங்க வித்யாதாரன் என்பவன் புலத்தியரின் தவத்திற்கு இடையூராக யாழிசைத்து பாடினான். இதனால் புலத்தியர் கோபத்தில் பன்றியாகப் போகும்படி சபித்தார். வருந்திய அவன் புலத்தியரிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கேட்டான். அதற்கு புலத்தியர் இராசராச பாண்டியனுடனான போரின் போது மடிந்து மீண்டும் பழைய நிலையை அடைவாய் என்று புலத்தியர் சாபம் நிவர்த்தி கூறினார். அச்சாபத்தினால் ரங்க வித்யாதரன் அரச பன்றியாய் பிறந்தான்.

சுகலனின் பிள்ளைகள் அக்காட்டில் இருந்த அரச பன்றிக்கு மகன்களாக அரசி பன்றியின் வயிற்றில் தோன்றினர். அச்சமயம் ராசராச பாண்டியன் காட்டிற்கு பெரும் படையுடன் வந்து தொல்லை தந்த விலங்குகளை வேட்டையாட எண்ணினான். அதன்படி காட்டிற்கு சிறந்த வேட்டையாடுபவர்களுடன் வந்தான். இராசராச பாண்டியனின் வருகையை அரசபன்றி அறிந்தது. பின்னர் அரசி பன்றியிடம் நீ இங்கேயே பத்திரமாக நம் குழந்தைகளை கவனித்துக் கொண்டிரு. நான் பாண்டியனை எதிர்த்து போராடச் செல்கிறேன். நான் உயிருடன் திரும்பி வருவேனா? இல்லை மடிவேனா? என்று தெரியவில்லை என்றது. அதனைக் கேட்ட அரசி பன்றி நானும் உங்களுடன் வந்து பாண்டியனை எதிர்ப்பேன். வெற்றி பெற்றால் நாம் மீள்வோம். இல்லையேல் நாம் அங்கேயே மடிவோம் என்று கூறியது. பன்றிகள் பாண்டியனை எதிர்த்து போரிடப் புறப்பட்டன. இதனால் பன்றிக் குட்டிகள் தனிமை அடைந்தன. அரச பன்றி இராசராச பாண்டியனை எதிர்த்து போரிட்டு மடிந்தது. அரசி பன்றி சருச்சான் என்பவனுடன் போரிட்டு மடிந்தது. இராசராச பாண்டியனால் கொல்லப்பட்டு ரங்க வித்யாதரன் பழைய வடிவம் அடைந்தான். பன்றிகள் மடிந்த இடம் இன்றும் பன்றிமலை என்று அழைக்கப்படுகிறது. அம்மலையில் சித்தர் மற்றும் யோகிகள் வீடு பேற்றிற்காக தவம் செய்வதாக கருதப்படுகிறது.

பன்றிக் குட்டிகள் தாயையும் தந்தையையும் இழந்து உணவிற்காக அலைந்து திரிந்தன. பன்றிக் குட்டிகளிடம் இரக்கம் கொண்ட சொக்கநாதர் தாய் பன்றியாக உருமாறி பன்றிக் குட்டிகளின் முன் தோன்றினார். தம் தாயைக் கண்ட பன்றிக்குட்டிகள் ஆவலாய் தாயிடம் சென்றன. சொக்கநாதர் பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டினார். சொக்கநாதரின் பாலை உண்ட பன்றிக்குட்டிகள் வலிமையையும் ஞானத்தையும் நற்குணங்களையும் பெற்றன. பின்னர் இறைவனார் அக்குட்டிகளுக்கு முகத்தை மட்டும் பன்றியாக வைத்து உடலினை மனித வடிவமாக மாற்றினார். பின்னர் சொக்கநாதர் அங்கிருந்து மறைந்து அருளினார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பெரியோர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் துன்பத்தை ஏற்படுத்தினாலோ அவர்களின் செயல்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ கேலி செய்தாலோ இழிவான நிலையே ஏற்படும் என்பதையும் இழிந்த நிலை உயிரினங்களாக இருந்தலும் தாயும் தந்தையுமாக இருந்து இறைவன் காப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.