ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 25

ராமரிடம் தூம்ராசன் மற்றும் வஜ்ரதம்ஷ்ட்ரன் என்ற இரண்டு வலிமை மிக்க ராட்சசர்கள் அனுமனாலும் அங்கதனாலும் கொல்லாப்பட்டார்கள் என்ற செய்தியை சொன்னார்கள். அதனால் மனம் மகிழ்ந்த ராமர் அனுமன் அங்கதன் இருவரின் வீரத்தையும் பாராட்டினார். வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு வந்து சேர்ந்தது. இந்திரனுக்கு நிகரான வீரன் வஜ்ரதம்ஷ்ட்ரன் அவனை சிறுவனான அங்கதன் கொன்றான் என்ற செய்தியை ராவணனால் நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சி அடைந்தான். பின்பு பிரஹஸ்தனை பார்த்த ராவணன் அஸ்திர சாஸ்திரத்திலும் யுத்தத்தில் நிபுணனாகிய அகம்பனை வரச்சொல் என்று உத்தரவிட்டான். அரசவைக்கு வந்த அகம்பனிடம் வலிமைமிக்க ராட்சச வீரர்களாக தேர்வு செய்து ஒரு சேனையை உருவாக்கிக் கொள். அவர்களுடன் சென்று ராமரையும் லட்சுமணனையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று கட்டளையிட்டான் ராவணன். மாயங்கள் தெரிந்த வலிமைமிக்க ராட்சச வீரர்களாக தேர்வு செய்த அகம்பன் யுத்தத்திற்கு கிளம்பினான். அப்போது அவனை சுற்றி அபசகுனங்களாக நிகழ்ந்தது. இதனை அகம்பனும் ராட்சச வீரர்களும் ஒரு பொருட்டாகவே கருதாமல் யுத்தத்திற்கு சென்றார்கள். ராட்சசர்கள் எழுப்பிய கர்ஜனை விண்ணை முட்டி எதிரொலித்தது.

ராமரை வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து சென்ற அகம்பனும் அவனது படை வீரர்களுக்கும் வானர படை வீரர்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இருதரப்பிலும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். யுத்தகளம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது. வானர வீரர்கள் கைகளையே ஆயுதமாக வைத்து பெரிய பாறைகளை தூக்கிப் போட்டும் மரங்களே வேரோடு பிடுங்கி எறிந்தும் ராட்சசர்களை குவியல் குவியலாக கொன்றார்கள். அதனால் கோபமடைந்த அகம்பனன் வாரன வீரர்களிடம் தனது மாய அஸ்திர வித்தைகளை காட்டி அழிக்க ஆரம்பித்தான். அகம்பனின் மாய அஸ்திரத்தை எதிர்க்க இயலாமல் வானர வீரர்கள் ஓடத் துவங்கினார்கள். இதனை கண்ட அனுமன் வானர வீரர்களுக்கு ஆதரவாக அங்கு வந்து அகம்பனை எதிர்த்து யுத்தம் செய்தார். அனுமனுக்கும் அகம்பனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. அகம்பன் தனது மாயத்தினால் ஒரே நேரத்தில் பதினான்கு அம்புகளை அனுமன் மீது எய்தான். அம்புகள் உடலை துளைக்க ரத்தத்தினால் அனுமனின் உடல் நனைந்தது. இதனால் கோபம் கொண்ட அனுமன் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டார். மிகப்பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அகம்பனின் தலையில் அடித்தார். அகம்பன் அங்கேயே இறந்தான். அகம்பன் இறந்து விட்டான் என்ற அறிந்த ராட்சச வீரர்கள் இலங்கை கோட்டைக்குள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அகம்பனை அழித்த அனுமனை வானர வீரர்கள் போற்றி வாழ்த்தி ஆரவாரம் செய்தார்கள். வெற்றிக்கு துணை நின்ற அனைத்து வானர வீரர்களையும் கௌரவப்படுத்திய அனுமன் பலத்த காயத்தினால் ஓய்வெடுக்க அமர்ந்தார். அனுமனின் உடம்பில் அகம்பனின் அம்புகள் தாக்கி ரத்தம் வழிந்த இடத்தில் எல்லாம் வானர வீரர்கள் துணியால் சுற்றினார்கள்.

ராமர் லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் அனைவரும் அனுமனின் அருகில் வந்து போற்றி வாழ்த்தினார்கள். தேவ கணங்களும் வானில் நின்று அனுமனுக்கு மலர் தூவி வாழ்த்தினார்கள். அகம்பன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிகவும் துக்கத்தை ஏற்படுத்தியது. கவலை கொண்ட ராவணன் தனது கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கோபத்துடன் கத்த ஆரம்பித்தான். ராட்சசர்களின் சத்தத்தை கேட்டாலே பயந்து ஓடும் இந்த வானரங்களுக்கு இத்தனை வலிமையா என்று தன் கோட்டையின் பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பார்ப்பதற்க்காக பிரஹஸ்தனுடன் கிளம்பி கோட்டையை சுற்றிப் பார்த்தான். அனைத்து பாதுகாப்புகளும் சரியாக உள்ளதில் திருப்தி அடைந்த ராவணன் இந்தப் பிரச்சணையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.