61. மண் சுமந்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மண் சுமந்த படலம் அறுபத்தி ஒன்றாவது படலமாகும்.

மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவனார் வைகையில் வெள்ளப் பெருக்கினை உண்டாக்கினார். வைகையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது. இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான். அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர். மக்களும் வைக்கோல் பசுந்தளை மண்வெட்டி கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும் கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர். அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வஞ்சி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள். அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள். வஞ்சி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வஞ்சியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள். கூலியாள் கிடைக்காததால் வஞ்சி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் ஐயனே நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை. ஆகையால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று வேண்டினாள்.

இறைவனார் வஞ்சிக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும் திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வஞ்சியின் இடத்தினை அடைந்தார். கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ என கூவிக்கொண்டு வஞ்சியை நெருங்கினார். உடனே வஞ்சி இறைவனாரிடம் என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா? என்று கேட்டாள். சரி அப்படியே செய்கிறேன். எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார். அதற்கு பாட்டி என்னிடம் பணம் இல்லை. நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன் என்று கூறினாள். இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்து நீ செய்யும் பிட்டில் உதிர்ந்த பிட்டுக்கள் அனைத்தையும் எனக்கு கொடுத்துவிடு. உதிராத பிட்டுக்கள் அன்னைத்தும் விற்பனைக்கு வைத்துக் கொள் சம்மதமா என்று கேட்டார். பாட்டியும் சம்மதித்தாள். பின்னர் வஞ்சியிடம் நான் தற்போது பசியால் மிகவும் சோர்வாக இருகிறேன். ஆகையால் நீ எனக்கு பிட்டை சாப்பிட கொடு நான் சாப்பிட்டு பசியாறிய பிறகு வைகையை அடைக்கிறேன் என்று கூறினார். வஞ்சியும் அதற்கு சம்மதித்து நான் பிட்டினை செய்கிறேன் நீ அதற்குள் வைகையின் கரையினை அடைக்க நான் வந்தியின் கூலியாள் என பதிவேட்டில் குறித்து வைத்துவிட்டு வா என்று சொல்லி பிட்டினை செய்ய ஆரம்பித்தாள். அன்று சமைத்த பிட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே போனது. விற்பனைக்கு பிட்டு இல்லையே என முகம் சுளிக்காமல் கொடுத்த வாக்கின் படி மகிழ்ச்சியோடு பிட்டை அள்ளி வைத்தாள். இறைவனார் பிட்டை சாப்பிட்டதும் கரையை அடைத்து விடப்பா எனப் பணிவுடன் கேட்டுக் கொண்டாள்.

இறைவனார் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும் மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும் மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வஞ்சியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார். கூலியாட்களின் மேற்பார்வையாளர் இறைவனாரை எழுப்பி விரட்டி விட மீண்டும் வந்தியிடம் சென்று பிட்டை வாங்கித் தின்றுவிட்டு வந்து மரநிழலில் படுத்துக்கொண்டார். கணக்கரிடம் காவலாளிகள் இதனைச் சொல்லும் போது அச்சமயத்தில் அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்தான். அனைத்தும் கேட்ட அரசன் தன்னிடம் உள்ள பிரம்பில் படுத்திருந்த இறைவனார் முதுகில் ஓங்கிப் அடித்தார். அந்த அடி உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியின் முதுகிலும் விழுந்தது. அடித்த அரசனும் ஆ வென அலறினான். வாதவூரரும் வந்தியும் முதுகைத் தடவிக் கொண்டனர். சிரித்துக் கொண்டே இறைவனார் ஒரு கூடை மண் எடுத்து வந்தியின் பங்கில் கொட்டி மறைந்தார். அடுத்த வினாடி வைகை வெள்ளம் அடங்கியது. பிட்டுக்கு மண் சுமக்க வந்தவர் பெருமானே என அனைவரும் உணர்ந்தனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

இறைவனார் அப்போது அசீரீரியாக பாண்டியனே தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது. ஆகையால் யாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வைகையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம். வஞ்சியின் கூலியாளாய் வந்து வஞ்சியிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக என்று திருவாக்கினைக் கூறினார். அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லை அம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக் கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார். இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வஞ்சியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தமக்கு விரையம் ஏற்பட்டாலும் துன்பப்படாமல் மகிழ்ச்சியுடன் கொடுத்த வாக்கை நிறை வேற்ற வேண்டும் அவ்வாறு செய்தால் இறைவன் சிவலோகத்தையும் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.